ஆக்கம்:சிவமேனகை, சுவிட்சர்லாந்து.
இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படுகின்றது
.இந்த சிறு தீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும்
திகழ்கின்றது .இந்த முத்தான இலங்கைத் தீவு எப்பொழுது தீவாக உருவாகியது என்பது
பற்றிய ஒரு தெளிவான உறுதிப்படுத்தும் கருத்து நான் அறிந்த வரையில் இதுவரை
எந்த ஒரு வரலாற்று ஆசிரியர்களாலும் முன்வைக்கபடவில்லை .ஆனால் பல வரலாற்று
ஆசிரியர்கள் கடல் அழிவினால் இந்தியாவில் இருந்து பிரிந்தது என்ற கருத்தையும்
,கடல் அழிவால் குமரிக்கண்ட அழிவின் பின்னர் தீவானது இலங்கை என்ற கருத்தும்
பலரால் முன்வைக்கபடுகின்றது .நானும் கடல் அழிவால் இலங்கை தனி தீவாக
பிரிந்தது என்ற கருத்தை ஏற்றுகொள்ளும் அதே வேளை அது எப்பொழுது நடந்து
இருக்கலாம் என்ற ஒரு ஆதார சிறு குறிப்பை உங்கள் முன் வைத்து இந்த கட்டுரையை
தொடர்கின்றேன் .
அத்திலாந்து சமுத்திரம் எழுதியவரின் கருத்தின் படி எனது கணிப்பு இன்றைக்கு/2013/ ,,,11596 வருடங்களுக்கு முன்னம் அந்த கடல் அழிவு வந்ததாயின் அதுவே இன்றைக்கு சர்சைக்கு உரிய விடயமாக இருக்கும் முற்காலத்தில் இருந்ததாக பல ஆய்வாளர்கள் உறுதிபடுத்தும் இரு பெரும் கண்டங்களான அத்லாந்திக் மற்றும் குமரிகண்ட கடல் அழிவாக கருத இடமுண்டு.இந்த கடல் அழிவில் இந்த கண்டங்களில் பெரும் பகுதி கடலில் மூழ்கி போக உலகில் பல புதிய சிறிய நாடுகள் தோன்றியதாக கூறப்படுகின்றது.அவ்வாறே இலங்கையும் இந்தியாவும் குமரி கண்டத்தில் இருந்து தனியாக பிரிந்தது என்று கருதலாம் .அதாவது கி மு 9583 இல் இலங்கையும் இந்தியாவும் குமரி கண்ட பகுதிகளின் அழிவின் பின்னர் பிரிந்தது என்று ஒரு கருத்தை முன்வைக்கலாம் .
இதுவே புராணங்கள் கூறும் ஊழி காலத்தில் ஏற்பட்ட பெரும் கடல் அழிவு என்றும் நாம் கூறலாம்.இன்றைய யதார்த்தவாதிகளும் ஆன்மீக கருத்துக்களை எதிர்பவர்களும் புராணங்கள் இதிகாசங்கள் முழுமையான புனைவுகள் என்று கடினமான எதிர்கருத்துக்களை முன்வைக்கும் அதே வேளை நாசா விஞ்ஞானிகளும் மேலைத்தேச ஆய்வாளர்களும் புராணங்களை தங்கள் மொழிகளில் மொழி பெயர்த்து அதில் உள்ள கருத்துக்களை ஆய்வு செய்கின்றார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
புராண வரலாற்றில் முன்னொரு காலத்தில் வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் சண்டை நடந்ததாகவும் அதில் மேரு மலையின் சிகரம் வாயுபகவானால் பெயர்க்கபட்டு கடலில் வீசப்பட்டதாகவும் கடலில் வீசப்பட்ட இடத்தில் இலங்கை தோன்றியதாகவும் புராணம் கூறுகின்றது.பெளத்தறிவு ரீதியாக எனது பார்வையில் சிந்தித்து பார்கையில் வாயு பகவான் காற்றோடு சம்பந்த பட்டவர் ,ஆதி சேஷன் நாகலோகத்து கடலோடு சம்பந்தபட்டவர் .எனவே காற்றும் கடலும் அகோர தாண்டவம் ஆடி குமரி கண்டத்தில் இருந்த மகாமேரு மலை பெயர்க்கப்பட்டு தண்ணீரில் மூழ்கிய பகுதியின் மிச்சம் இலங்கையாக இருக்கலாம்.மகேந்திர மலை ,மணி மலை என்பன மிகப்பெரிய மகா மேரு மலையின் தொடர் மலையின் சிகரங்களாக இருக்கலாம்.புராணங்கள் கூறும் தென் கைலாயம் என்பதும் இலங்கை தான் என்பது பல வரலாற்று ஆசிரியர்களின் கூற்று.எனவே இந்த நிகழ்வு நடந்தது ஆய்வாளர்கள் குறிப்பிடும் கூற்றுப்படி எனது /2013/கணிப்பில் இன்றைக்கு கி மு 9583 வருடங்களுக்கு முன் நடந்து இருக்கலாம்.
கி மு 9583 இல் உருவாகி சூரன் ராவணன் ஆண்ட இலங்கையில் சிறு தீவுகள் இருந்ததாக வரலாற்று குறிப்புக்கள் இல்லை .இலங்கையின் வரலாற்றை முதல் முதலில் கந்த புராண வரலாற்று குறிப்பில் தான் அறியப்படுகின்றது .பலர் இவை கற்பனை என்று வாதிட்டாலும் .கந்த புராணத்தை ஆய்வு செய்து விளக்கவுரைகள் எழுதிய தமிழ் பண்டிதர்கள் அந்த கதையில் பல உண்மைகள் இருப்பதாகவே இதுவரை கருத்து கூறி இருக்கின்றார்கள் .அந்தவகையில் அவர்கள் கருத்துபடி கந்த புராண வரலாறு நடந்ததாக கருதப்படும் காலம் அண்ணளவாக .கி மு 9000 ஆக இருக்கலாம் என்று பண்டிதமணி சின்னதம்பி ,பண்டிதமணி கணபதிபிள்ளை ,பண்டிதர் ஸ்ரீலஸ்ரீ செந்திநாதையர் ,போன்றவர்கள் தங்கள் வரலாற்று குறிப்புக்களில் கூறி இருக்கின்றார்கள் .இலங்கை என்று ஒரு தனி நாடும் முதன் முதலில் கந்த புராண வரலாறு நடந்ததாக கூறப்படும் காலத்தில் தான் வருகின்றது .சூரன் அரசாண்டதாக கூறப்படும் இலங்கையின் தலை நகராக மகேந்திர மலை தான் குறிப்பிடப்படுகின்றது.
சூரனுடைய மனைவியாக வரும் பதும கோமளை, மணிமலை நாகர்குல இளவரசி என்றே கூறப்படுகின்றது. மணி மலை வடகடலில் மூழ்கிய ஒரு மலையாக வரலாற்றில் கருதப்படுகின்றது அப்படியானால் ஈழத்தில் வட பகுதியை நாகர்கள் ஆண்டார்கள் என்ற கருத்தும் இங்கே
முன்வைக்கபடுகின்றது .ஆனால் இந்த மகேந்திர மலை இன்று இல்லை அது அம்பாந்தோட்டைக்கு கீழ் கடலில் மூழ்கிவிட்டதாக கருதப்படுகின்றது .மணி மலை என்ற ஒரு மலை இன்றைய கீரி மலை சார்ந்த பிரதேசம் என்று சிலர் கருத்து கூறி இருக்கின்றார்கள் .உண்மையில் மணி மலையின் எச்சமாக கீரிமலை இருக்கலாம்.அதேவேளை இன்றைய நயினாதீவின் தென் கிழக்கு முனையின் உயரமான நிலப்பகுதி பகுதி மலை அடி என்றே காலம் காலமாக அழைக்கப்பட்டு வருகின்றது.அதை அண்மித்த காட்டு பகுதி மலையன்காடு என்ற பெயரிலும் அழைக்கபடுகின்றது.இதையும் ஒரு சிறு குறிப்பாகமுன்வைக்கின்றேன்.அத்தோடு இந்த மலை அடியை அண்மித்த அடுத்த தீவான புங்குடுதீவை கந்த புராணத்தில் கிரவுஞ்சம் என்ற பெயரில் அழைகின்றார்கள் அதுவும் மலை சம்பந்தபட்ட ஒரு பெயராகும். எனவே மணிமலையும் நீண்டதொரு மலை தொடராக நாகநாட்டில் இருந்து இருக்கலாம்.அடுத்து சங்ககால வரலாறுகளில் யாழ் குடாநாடு மணிபல்லவம் என்று அழைக்கப்பட்டது என்று கருத்துக்கள் இருக்கிறது.மணிபல்லவம் என்பதற்கு சங்க கால வியாபாரிகளுக்கு நவ மணிகள் கிடைத்த இடம் என்பதும் ஒரு காரண பெயர் என்றும் குறிப்பிடுகின்றார்கள்.அதேவேளை மணிமேகலை காப்பியம் சொல்லும் மணிபல்லவம் நயினாதீவு தான் என்பதில் பல உறுதியான ஆதாரங்கள் இருக்கிறது.அதை இந்த கட்டுரையில் யாழ் தீவுகள் பிரிந்ததாக நான் முன்வைக்க போகும் கால்பகுதி மேலும் நிரூபிகின்றது.அதனால் தீவுகள் பிரிந்த பின்னர் எழுந்த இலக்கியங்களில் வரும் மணிபல்லவம் நயினாதீவு என்று கொள்ளலாம். ஆனால் நாகதீபம் என்று நாகர்கள் ஆண்ட இடம் ஈழத்தின் வடபகுதி முழுவதையும் குறிக்கும்.,தீவுகள் பிரிவதற்கு முன்னர் எங்காவது இலக்கியத்தில் மணிபல்லவம் என்று குறிப்பிட்டு எழுதப்பட்டு இருந்தால் அந்த முழுமையான வரலாறும் இன்றைய நயினாதீவுக்கு சொந்தமானது அல்ல .ஆனால் தீவுகள் பிரிந்ததாக நான் மேற்கோள் காட்டப்படும் காலத்துக்கு பின்னரான இலக்கியங்களில் தான் அனேகமாக மணிபல்லவம் என்ற சொல் பாவிக்க பட்டு இருக்கிறது என்பது இதுவரை அறிந்த குறிப்புகள் மூலம் உறுதியாகின்றது.
கந்தபுராண காலத்திற்கு முற்பட்ட காலத்தில் நாகலோகத்தொடு இணைந்த இலங்கையை ஆதிஷேசன்,வாசுகி, கார்த்த வீரியார்சுணன் ஆண்ட நாடும் கந்த புராண காலத்தில் ,சூரன் மற்றும் அவன் தம்பிமார் ,முருகன் ஆண்ட இலங்கையும் ,அதற்கு பிற்பட்ட காலத்தில் விஸ்வகர்மா,மயன் ,சுமாலி ,குபேரன் ,இராவணன் ,வீடணன் ஆண்ட இலங்கையும் ,இன்றைய இலங்கையை விட மிக பெரிய நிலப்பரப்பையும் பல்வேறு மலைகளையும் ,நதிகளையும் கொண்ட இலங்கை என்று சொல்லபடுகின்றது.இந்திய வடநாட்டில் பாய்ந்தோடும் நதிகள் கூட ஈழ நாடுவரை நீண்டு ஓடி வந்து கலந்ததாக வரலாறுகள் இருக்கிறது.இலங்கையின் பூகோள அமைப்பையும் சமுத்திரங்களால் தாக்கங்கள் ஏற்பட கூடிய நிலையில் அமைந்து இருப்பதையும் பின்வந்த கடல்கோள்கள் அவற்றை உறுதி படுத்துவதையும் வைத்து அன்றைய இலங்கை மிகபெரியது என்பதை உண்மை என்று நம்பலாம் .இந்த வரலாற்று காலங்களிலும் இலங்கையில் வடபகுதியில் இருந்த சிறு தீவுகள் பற்றிய குறிப்புக்கள் எங்கும் இல்லை .அதனால் அந்த காலத்தில் இன்றைய வடபகுதி சப்த தீவுகளும் ஏனைய சிறு தீவுகளும் யாழ்ப்பாண நகரோடு இணைந்து பெரு நகரங்களாக இருந்து இருக்கிறது என்றே கருதப்படுகின்றது .
இதற்கு ஆதாரமாக கந்த புராணத்தில் சப்த தீவுகளுக்கும் தீவுகள் என்ற பெயர் இல்லாமல் அந்த தீவு இருக்கின்ற இடங்களுக்கு நகரத்துக்கு உரிய சிறப்பு பெயர்களே சூட்டபட்டுள்ளது .அந்தவகையில் ,இன்றைய வேலணை தீவு ,சூசை என்றும் புங்குடுதீவு ,கிரவுஞ்சம் ,என்றும் நயினாதீவு ,சம்பு என்றும் ,காரைதீவு ,சாகம் என்றும் ,நெடும்தீவு புட்கரம் என்றும் ,அனலை தீவு கோமேதகம் ,என்றும் ,எழுவை தீவு ,இலவு என்றும் கூறப்பட்டு உள்ளது ,ஏனைய மண்டைதீவு ,கச்சைதீவு ,பற்றிய இடங்களுக்கு எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை.
நயினை நாகபூஷணி அம்மன் ஆலயம் படம் நன்றி:தமிழ்நெட் |
இந்த கடல் அழிவின் போது யாழ் தீவுகள் யாழில் இருந்து பிரிந்திருக்குமா என்று பல்வேறு வழிகளில் சிந்தித்து பார்த்தால் இது ஒரு மிகப்பெரிய ஆபத்தான சமுத்திரங்கள் இணைந்து கோர தாண்டவம் ஆடிய மிக பெரும் கடல் அழிவாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள் .பெரும் மலைகள் கூட பெயர்த்து எடுத்த கடல் அழிவு இந்த அழிவில் சிறுதீவுகள் சார்ந்த இடப்பரப்பு உருவாக்கி இருக்குமா .. என்ற சந்தேகம் எழும் அதேவேளை ,அதற்கு பின் வந்த வரலாற்று நிகழ்வுகளிலும் குறிப்புக்களிலும் இந்த தீவுகள் தனித்தனி தனித்துவமான தீவுகளாக வரலாறுகளில் இல்லை .
நயினை நாகபூஷணி ஆலயம் படம் நன்றி:தமிழ்நெட் |
இதே சமகாலத்தில் கி மு 2387 இல் தென்னிந்தியாவையும் ஈழத்தையும் உலுப்பிய இன்னொரு கடல் அழிவு ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இந்த கடல் அழிவின் போது தான் தென்மதுரையும் கபாட புரமும் அழிந்ததாக கூறுகின்றார்கள். கபாட புரத்தையும் ஈழத்தையும் இந்து சமுத்திர நீர் பிரித்ததாகவும் சொல்கின்றார்கள் .இதில் கபாட புரம் முழுமையாக அழிந்ததாக கூறப்படுகின்றது.இங்கு இயங்கிய தமிழ் சங்கத்தில் ஈழத்தவர்களும் பங்கு கொண்டார்கள் என்ற கருத்துக்களும் இருக்கிறது ,அதனால் ஈழத்துக்கும் கபாட புரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் என்று கருதப்படுகின்றது .இந்த கடல் அழிவில் தான் ஈழத்தின் வடபகுதி தீவுகள் யாழில் இருந்து பிரிந்து இருக்குமா என்று சிந்திக்கவே தோன்றுகின்றது .கபாடபுரம் ஈழத்துக்கும் இந்தியாவுக்கும் நடுவில் இருந்து இருக்கலாம்.இது இன்னும் பல்வேறு பட்ட ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய விடயமாகவே நான் கருதுகின்றேன் .வரலாற்று மாணவர்கள் புதிய ஆய்வாளர்கள் இதற்கான தகுந்த நிறுவுதலை ஆதாரங்களை முன்வைத்தால் அந்த கருத்தை ஏற்றுகொள்ளலாம் .கபாட புர தமிழ் சங்கத்தில் ஈழத்தவர்கள் பலர் புலவர்களாய் இருந்து தமிழ் வளர்த்ததாக வரலாறுகள் கூறுகின்றது .கபாடபுரத்தில் சங்கம் வளர்த்த புலவர்கள் எழுதிய பாடல்கள் குறிப்புக்களிலும் அவர்களுக்கு பின்வந்த கடை சங்க ஆரம்ப கால புலவர்கள் குறிப்புக்களிலும் யாழ் வடபகுதி தீவுகள் யாழ்பாணதோடு இணைந்த வரலாற்று குறிப்புக்களையே காணக்கூடியதாக இருக்கிறது.
அடுத்த மிக பெரிய கடல் கோளாக கருதப்படுவது கி மு 300 /400 அளவில் தொண்டமான் இளம்திரையன் சிறுவனாய் ஈழ நாட்டில் இருந்து சோழநாட்டுக்கு புறப்பட்டு சென்ற பொழுது ஏற்பட்டதாக கருதப்படுகின்றது.இந்த கடல் அழிவு தேவநம்பிய தீசன் ஆட்சி இறுதி காலத்தில் நடந்ததாக பல புனைவுகள் அடங்கிய மகாவம்சமும் குறிப்பிடுகின்றது.இந்த கடல் அழிவு பெரும் பாலும் ஈழத்தையே தாக்கியது இந்த கடல் கோளின் பின்தான் தொண்டமானாறு என்ற பெயர் வந்ததாகவும் வரலாறு இருக்கிறது.இந்த கடல் கொள் யாழை பெரிதும் தாக்கி அதன் பெரும் இடப்பரப்பை கடல் ஆட்கொண்டதாகவும் வரலாறுகள் வருகின்றது.இந்த கடல் அழிவில் புகழ் பெற்று இருந்த துறைமுக நகரமாய் விளங்கிய சம்பு மாநகர் சிதைந்து அதன் துறைமுகம் பெரிதும் அழிவடைந்து தீவாகி மணிபல்லவ தீவு என்ற பெயரானது என்பதையும் முன்வைகின்றேன்.
ஆங்கிலேயரின் வெளிச்ச வீடு நெடுந்தீவு |
நான் இந்த கட்டுரையில் முன்வைத்து இருக்கும் கருத்துக்களை எதிர்காலத்தில் தகுந்த ஆதாரங்களுடன் நிறுவி வரலாற்று மாணவர்கள் ஆய்வாளர்கள் உறுதி படுத்துவார்கள் ஆனால் அதற்கு நான் தலை வணங்குவேன் என்பதையும் இன்றே எழுதி வைக்கின்றேன்.,,,நன்றி வணக்கம்.
1 கருத்து:
சிறந்த ஆய்வுப் பகிர்வு
கருத்துரையிடுக