புதன், ஆகஸ்ட் 31, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

உண்மையான நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை.

வியட்நாமில் மதுரை வீரன் - பகுதி 3

ஆக்கம்: ஜோ மில்டன், சிங்கப்பூர்
வியட்நாமின் வர்த்தக நகரான ஹோசிமின் சிட்டி -யில் பரவலாக காணப்படும் ,குறிப்பாக தமிழர்களால் கட்டப்பட்ட இந்துக் கோவில்களைப் பற்றி முன்னர் பாகம் -1 , பாகம் -2 -ல் குறிப்பிட்டிருந்தேன்.

இம்முறை அவ்விரு கோவில்களுக்கு மிக அருகிலேயே ,நகரின் மிக முக்கிய பகுதியில் அமைந்துள்ள தமிழருக்கே உரிய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை காண முடிந்தது.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

கோவில் திறந்திருந்தாலும் ,தேடித் தேடிப் பார்த்தும் யாரும் கோவிலுக்குள் இல்லை .ஆனால் தமிழில் அச்சிடப்பட்டுள்ள நாட்காட்டி, தொடர்ந்து யாரோ சில தமிழர்களே கோவிலை பராமரித்து வருவதைக் காட்டியது.

Photobucket - Video and Image Hosting

தமிழிலேயே ஒரு கல்வெட்டும் காணக்கிடைத்தது .அதன் படி பாதரக்குடி மகாஸ்ரீஸ்ரீ பாபுராஜா பி.ஏ.சொக்கலிங்கம் பிள்ளை- யின் குமாரன் கடம்பவன சுந்தரம் பிள்ளை
1928 - ல் உபயம் செய்தது என அறிய முடிகிறது .பாதரக்குடி என்பது ஊரின் பெயரா ? தமிழகத்தில் அவ்வூர் எங்குள்ளது ?

Photobucket - Video and Image Hosting

(கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட படங்களின் தரத்துக்கு பொறுத்தருளுக!)



(நிறைவு பெற்றது) 

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

நாடுகாண் பயணம் - குக் தீவுகள்

நாட்டின் பெயர்:
குக் தீவுகள் (Cook Islands)

அமைவிடம்:
தெற்குப் பசுபிக் சமுத்திரம். (ஓசியானியா அல்லது நியூசிலாந்திற்குக் கிழக்குப் பக்கம்)

அரசியல் தகுதி:
நியூசிலாந்தின் இறைமைக்குக் கட்டுப்பட்ட ஆனால் சுயாட்சியுள்ள நிலப் பரப்பு.

எல்லைகள்:
தீவுகள் என்பதால் நான்கு பக்கமும் பசுபிக் சமுத்திரத்தினாற் சூழப்பட்ட மொத்தம் பதினைந்து தீவுகள். இருப்பினும் அண்டை நாடுகளாக நியூசிலாந்தையும், அவுஸ்திரேலியாவையும் கொள்ளலாம்.


தலைநகரம்:
அவருவ (Avarua) 

அலுவலக மொழி:
ஆங்கிலம் மற்றும் குக் தீவுகளின் 'மௌரி'(Maori) மொழி.

இனங்கள்:
மௌரி 87,7 % , மௌரிக் கலப்பு 5,8 %, ஏனையோர் 6,5 %


சமயங்கள்:
கலப்புக் கிறீஸ்தவர் 65%, கத்தோலிக்கர் 15%, மற்றும் ஏழாம் நாள் திருச் சபையினர், கடவுளின் திருச்சபையினர், புனிதர்களின் திருச்சபையினர், பஹாய்.


கல்வியறிவு:
95 %

ஆயுட்காலம்:
ஆண்கள் 71 வருடங்கள் 
பெண்கள் 77 வருடங்கள் 


ஆட்சிமுறை:
சம்பிரதாயபூர்வமான அரசியின் ஆட்சிக்குட்பட்ட சிறிய சுயாட்சிப் பிரதேசம், மற்றும் பாராளுமன்ற ஜனநாயகம்.

நாட்டின் தலைவி:
இரண்டாவது எலிசபெத் (இங்கிலாந்து இராணி)

அரசியின் பிரதிநிதி:
சேர் பிரெடெரிக் டுட்டு குட்வின் (Sir Frederik Tutu Goodwin) *இது 30.08.2011 அன்று உள்ள நிலவரமாகும்.

பிரதமர்:
ஹென்றி புனா (Henry Puna) *இது 30.08.2011 அன்று உள்ள நிலவரமாகும்.

நியூசிலாந்து நாட்டுடன் சுய விருப்பத்தின் பேரில் இணைந்துகொண்ட தேதி:
4.08.1965

ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கை ஆரம்பித்த ஆண்டு:
1992

பரப்பளவு:
240 சதுர கிலோ மீட்டர்கள்.

சனத்தொகை:
11,124 (2011 மதிப்பீடு)

நாணயம்:
நியூசிலாந்து டாலர் (NZD) மற்றும் குக் தீவுகளின் டாலரும் புழக்கத்தில் உள்ளது.

இணையத் தளக் குறியீடு:
.ck

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00+682


விவசாய உற்பத்திகள்:
தேங்காய் (கொப்பரை), புளிப்பான பழங்கள், அன்னாசி, தக்காளி, அவரையினங்கள், பப்பாளிப் பழம், வாழை, கிழங்குகள், காப்பி, அத்திப் பழம், கோழிப் பண்ணைகள்.

தொழில்கள்:
பழங்கள் பதனிடல், சுற்றுலாத் துறை, மீன்பிடி, துணிகள் உற்பத்தி, கைவினைப் பொருட்கள் உற்பத்தி.

ஏற்றுமதிகள்:
கொப்பரை, பப்பாளி, தகரத்தில் அடைக்கப்பட்ட புளிப்பான பழங்கள், காப்பி, மீன், முத்துக்கள், சிப்பிகள், துணிகள், 
Air Rarotonga

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

ஒரே சிந்தனையுடன் இருக்கும் இரண்டு உடல்கள் தான் நட்பு. 

தாய்லாந்துப் பயணம் - 16


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
1432ல் தாய்லாந்து அங்கோர் சமஸ்தானத்தைக் கைப்பற்றிய போது, அதாவது கம்போடிய அங்கோர் சமஸ்தானத்தைக் கைப்பற்றிய போது  புத்தர் சிலையையும் தம்மோடு தாய்லாந்து அயோத்தியாவிற்கு எடுத்து வந்தனர். இப்படியே காலத்திற்குக் காலம் அரசரும் இராசதானிகளும் மாறமாற இச் சிலையும் இடங்கள் மாறி, இன்று நிரந்தரமாக எமரெல்ட் (மரகதம், பச்சை) புத்தாவென இங்கு வைக்கப்பட்டுள்ளது.
வெப்பம், மழை, குளிர் காலங்களிற்கென 3வகை தங்க ஆடைகள் இச் சிலைக்கு உள்ளதாகவும் விழாக்காலங்களில் இதைப் பாவிப்பதாகக் கூறப்படுகிறது.                                                                        
ஏமரெல்ட் புத்த கோயில் பார்த்த பின்பு சிறிது தூரம் வாகனத்தில் பயணித்தோம் 
மாபிள் பலஸ் எனும் இடம் வந்தோம். ” வாற் பெஞ்சமாபோபிற் டுசிற்வனராம் ” என்பது இந்த இடத்துத் தாய்லாந்து மொழிப் பெயா.
இத்தாலி  Floranc carrera marble  கொண்டு வந்து இந்தக் கட்டிடம்  1899ல் கட்ட ஆரம்பித்து 10 வருடத்தில் கட்டப்பட்டதாம். கிங் சுலாலொங் கோண் அதாவது ராம் 5 இதைக் கட்டினாராம். இராசகுமாரன் நாறீஸ் எனும் பிரபல கலைஞர் கிங் ராம் 4ன் மகன் இதை வரைந்தாராம், அதாவது டிசைன் பண்ணினாராம். இக் கட்டிடத்தில் சுற்றிவர உள்ள சாலையில் 53 புத்த உருவங்கள் உலகின் பல் வேறு இடங்களிலுமுள்ள அல்லது ஆசியாவில் உள்ள முழு உருவங்களும் இங்கு வைத்துள்ளனர்.
பிரதான சாலையில் 2.5 தொன் நிறையுள்ள வெண்கல புத்தர் சிலை உள்ளது. நீலநிற பின்னணி ஒளியில் இது துல்லிய அழகுடன் விளங்குகிறது.
வாசற் பகுதியில் வெள்ளை நிற மாபிளில்  சிங்க உருவம் காவலுக்கு உள்ளது. அருகில் உள்ள நீரோடையில் அழகிய பாலம் என்று அனைத்தும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
பாதணிகளைக் கழற்றி வெளியே வைத்துத் தான் கோயில் உள்ளே போக முடியும். உள்ளே மலர் அலங்காரம், மின்னொளி என்று  மிக ஆடம்பரமாக இருந்தது. மக்கள் வந்து அமைதியாக இருந்து மௌனமாக தியானித்துத் செல்கின்றனர். நாமும் அப்படியே சிறிது நேரம் நிலக் கம்பளத்தில் அமைதியாக அமர்ந்திருந்து திரும்பினோம்.                                    
மொழி பெயர்ப்பாளர் இறுதியாக எங்களை  ஜெம் பலஸ்க்குக் கூட்டிப் போனார்.
அங்குள்ள உத்தியோகத்தர்கள் எமக்குக் குளிர் பானம் தந்து இரண்டிரண்டு பேராக எம்மை தமது கண்காணிப்பில் உள்ளே அழைத்துச் சென்று காட்டினார்கள்.                             
சொல்லவே தேவையில்லை. கண்கள் பறிக்கும் வண்ண வண்ண இரத்தினக் கல் நகைகள். வாங்கு வாங்கு என்று எம் தலையில் கட்டுவதிலேயே எம்மை அழைத்துச் சென்ற பெண்மணி குறியாக இருந்தார்.
இறுதியில் கல் வைத்த சுத்த வெள்ளி மோதிரம் ஒன்றை நான் வாங்கினேன். 600 பாத்., அதாவது 100 குரோணர்கள் தான். கணவரோ ‘இங்கு வந்த ஞாபகமாய் ஒரு வைர மோதிரம் வாங்கேன்!’ என்று மிகவும் வற்புறுத்தினார். எனக்கோ தங்க நகைகளில் உள்ள ஆசை விட்டுப் போய் விட்டது. “”மினுங்கும் வெள்ளைக் கற்கள் வைத்த இந்த வெள்ளி மோதிரம் வாங்குகிறேன். இதை மகள் பார்த்து விரும்பினால் அவளுக்கே கொடுத்திடுவேன், சம்மதமா ”"  என்று கணவரிடம் கேட்டுத் தான் வாங்கினேன்.
இளையவர்களுக்கு தங்க நகையிலும் பார்க்க வெள்ளி தானே மிகவும் பிடிக்கும்! அதே போல இங்கு வர மகள் அதைப் பார்த்ததும் ஆசைப்பட்டாள். ‘ இந்தா உனக்குத்தானம்மா!’ என்று அவளுக்கே கொடுத்து விட்டேன்.
அன்றைய நாள் பயணம் முடிந்தது. மாலை 6 மணிக்கு அறைக்குத் திரும்பினோம்.                                            
அங்கு நினைத்தவுடன் மழை வரும். யாரைப் பார்த்தாலும் குடையும் கையுமாகத்தான் செல்வார்கள்.
ஒரு நாள் சாமான்கள வாங்கி வரும் போது நல்ல மழை வந்தது. கடைகளில் ஒதுங்கி நின்று விட்டு மழை விட நடக்கத் தொடங்கினோம்.
சிறிது தூரம் வர முழங்காலளவு வெள்ளம் வழியில் நின்றது. செருப்பைக் கழற்றி கையில் எடுத்துக் கொண்டு, கால்சட்டையையும் முழங்காலுக்கு மேல் சுருட்டிக் கொண்டார் கணவர். நான் பாவாடை கட்டியதால் தப்பித்தேன். மாற்றி மாற்றி தெருக்களைச் சுற்றிச் சுழன்று ஆடைகளும், ஏன் நாமும் கூட நனையாது அறைக்கு வந்து சேர்ந்தோம்.
சிரி சிரியென்று சிரித்தபடி நல்ல ஜாலியாக அனுபவித்து வந்தோம். அறைக்குள் வர நல்ல இதமான சூடு சொகுசாக இருந்தது.     
(மேலே உள்ள படத்தில் நிறங்கள் பலவான வாடகை வண்டிகளை (ரக்சி) பார்க்கிறீர்கள் இது அரச மாளிகைக் கட்டிடங்கள்.)
—பயணம் தொடரும்—-

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

வாசகர்களின் கவனத்திற்கு

இன்று காலை (28.08.2011) அந்திமாலையில் வெளியாகிய 'வியட்நாமில் மதுரை வீரன்' எனும் சிறு பயணக் கட்டுரைத் தொடரின் இறுதியில் 'தொடரும்' எனும் வாசகத்திற்குப் பதிலாக 'நிறைவு பெற்றது' எனும் வாசகம் தவறுதலாக இடம்பெற்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதன் இறுதிப் பகுதி எதிர்வரும் புதன்கிழமை (31.08.2011) இடம்பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாசகர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துகிறோம்.

ஆசிரியபீடம் 
அந்திமாலை 

வியட்நாமில் மதுரை வீரன் - பகுதி 2

ஆக்கம்: ஜோ மில்டன், சிங்கப்பூர்
சென்ற முறை வியட்நாமில் மதுரை வீரன் பதிவு போட்டிருந்த போது, நண்பர் அன்பு அவர்கள் "ஹோசிமின் சிட்டியில் இட்லி, தோசை, வடை கிடைக்குமா? என கேட்டிருந்தார். அதற்கான தேடலில் கடைசியில் இட்லி, தோசை, வடையோடு தமிழர் ஒருவர் நடத்தும் 'ஊர்வசி' என்ற உணவகத்தின் முகவரி கிடைக்க, நேற்று அங்கு சென்றிருந்தேன்.

தொலைக்காட்சியில் ஜெயா டிவி நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டே நம்மூர் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விட்டு, வெளியில் இறங்கி நடந்தால், முந்தைய மாரியம்மன் கோவிலைவிட பெரிய இந்து கோவில் ஒன்று கண்ணில் பட்டது. இம்முறை 'ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில்'.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

மாரியம்மன் கோவில் மாதிரியே இங்கேயும்,உள்ளே நுழைந்ததும் அமுதத் தமிழ் செவியில் நுழைந்தது .'காக்க காக்க ..கனகவேல் காக்க' - என்ற மயக்கும் பாடல், கொஞ்ச நேரம் அப்படியே கேட்டுக்கொண்டு நின்றிருந்தேன். பின்னர் மிதியடிகளை அவிழ்த்து விட்டு பிரகாரம் அருகில் நுழைந்தால், உள்ளிருந்து இந்தியரா, வியட்நாமியரா என்று குழப்பம் தருகிற தோற்றத்தோடு ஒருவர் வெளியே வந்து என்னைக் கண்டு கைகூப்பி வரவேற்றார் .பதில் வணக்கம் தெரிவித்து, அவரிடம் பின்னர் பேசலாம் என்று நோட்டம் விட ஆரம்பித்தேன்.

Image hosted by Photobucket.com

மிகவும் விசாலமான இடவசதி இருந்தது கோவிலில், பிரகாரத்தை சுற்றி நிறைய சாமிப் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. 'காக்க காக்க " பாடலை கேட்டுக்கொண்டே ஒரு முறை சுற்றி வந்தது இனிமையாக இருந்தது. மதிய நேரம் என்பதால் எண்ணைய், பூக்கள் விற்றுக்கொண்டிருந்த இரு வியட்நாம் பெண்கள் தவிர யாருமில்லை. முதலில் பார்த்த நபரை பேசலாமே என்று தேடினால், ஆளை காணவில்லை .

Image hosted by Photobucket.com

சரி கிளம்பலாம் என்று நினைக்கும் போது கோவிலின் உள்ளே சுவர்களில் மாட்டப்பட்டிருந்த சில இந்திய தலைவர்கள், அறிஞர்களின் பெரிய படங்கள் கவனத்தை ஈர்த்தன. அதில் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் தந்தது, இளம் விவேகானந்தருக்கு அருகில் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் படம்.

Image hosted by Photobucket.com

ஒரு இந்துக் கோவிலுக்குள், ஒரு இஸ்லாமியரின் படத்தைக் கண்டு, ஒரு கிறிஸ்தவன் மகிழ்வது தான் நமது தனிச்சிறப்போ?


(தொடரும்)

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

வியட்நாமில் மதுரை வீரன் - பகுதி 1

ஆக்கம்: ஜோ மில்டன், சிங்கப்பூர்
என்னடா இவன் ஊர் ஊரா போறானேண்ணு பாக்குறீங்களா? என்ன செய்யுறது நமக்கு அமைந்த வேலை அப்படி. இதோ இந்த நட்சத்திர வாரத்துலயும் வியட்நாமில இருக்க வேண்டிய சூழ்நிலை. அதுக்காக வியட்நாமில் மதுரை வீரன் -னா நான் மதுரை வீரன் இல்லீங்க. வெறும் உலகம் சுற்றும் வாலிபன் தான்.(தருமி தான் சொன்னாரு..ஹி..ஹி)

ஹோ சி மின் சிட்டி-ல நிஜமாவே நான் தங்கியிருக்கிற இடத்துக்கு பக்கத்துல மதுரை வீரன் இருக்காரு. அதாங்க ஒரு மாரியம்மன் கோவில், அதுல மதுரை வீரனுக்கு ஒரு பிரகாரம்(சரி தானே?). மெதுவான சத்தத்துல தமிழ் பாட்டு பாடிட்டிருக்கு.

Image hosted by Photobucket.com

இதுல என்னங்க விசேஷம் அப்படீன்னு கேக்குறீங்களா? பொதுவா வெளிநாடுகள்ல இருக்கிற இந்தியர்களின் வசதிக்கு தான் கோவில்கள் இருக்கும் .மற்றவர்கள் வேடிக்கை பார்க்கத்தான் வருவார்கள். ஆனா இங்க கும்பிட வர்றவங்க கிட்டதட்ட எல்லோருமே வியட்நாமியர்கள் தாம். ஆனா இங்க இங்குள்ள வியட்நாம் மக்கள் இந்துக்கள் இல்லைன்னாலும் பய பக்தியா வந்து சாமி கும்பிடுறாங்க. அதுவும் கொத்தா சாம்பிராணி திரிகளை கையில வச்சுகிட்டு சீன கோவில்கள்ல தலைக்கு மேல தூக்கி கும்பிடுவாங்களே அது போல இங்க மாரியம்மனுக்கும், மதுரை வீரனுக்கும்
கும்பிடு.

Image hosted by Photobucket.com

உள்ளால ஒரு தமிழர் (பூர்வீகம் மதுரையாம்) சாமி பக்கத்துல நின்னுட்டிருக்காரு. மக்களுக்கு பிரசாதம் குடுக்குறாரு. அவர் கிட்ட பேச்சு குடுத்தா அவருக்கு தமிழ் அவ்வளவா தெரியாதாம். பிறந்ததிலிருந்தே இங்க தான் இருக்காராம். வியட்நாம் போருக்கு முன்னால இங்க நிறைய
இந்தியர்கள் இருந்தாங்களாம். போர் நடக்கும் போது கிட்ட தட்ட எல்லோரும் ஊருக்கு போயிட்டாங்களாம். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு தான் இப்போ இந்தியர்கள் இருக்காங்களாம்.

Image hosted by Photobucket.com

வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஆச்சுண்ணா டிராபிக் ஜாம் ஆகுற மாதிரி கூட்டம் .எல்லாம் லோக்கல் மக்கள் தான்.பாதி பேருக்கு இது இந்து கோவில்-னே தெரியல்ல. கேட்டா 'கம்போடியா கோவில்'-ன்னு சொல்லுறாங்க.அடப் பாவிகளா!


(கைத்தொலைபேசியில அவசரமா எடுத்ததால போட்டோ தரமானதாக இல்லை. பொறுத்துக்குங்க மக்களே!)



(தொடரும்)

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

வாழ்வியல் குறள் - 9


ஆக்கம்: வேதா இலங்காதிலகம்.
டென்மார்க்.

பிறர்க்கு உதவல் 
பிறர்க்கு உதவல் என்பது மனிதனிற்கு 
பிறவியிலேயே வரும் குணம்.
தவுகிறவனை நன்றி யுணர்வு இன்றி
உதாசீனம் செய்யுமுலகு இது.
திமிர், செருக்குடையோன் தான் பெற்ற 
உதவியை நிமிர்ந்தும் நினைக்கான்.
தவுவோன் உள்ளம் திறந்தது. எந்தக்
கதவும் போட்டு மூடாதது.
யன் கருதாது உதவும் மனமும்
பயணிப்பது மரபணுவோடு எனலாம்.
ற்ற தருணத்தில் செய்யும் உதவி
மாற்றில்லாத் தங்கத்திற்கு ஈடாகும்.
தவி செய்தவனைப் பின்னங்காலால் மறந்தும்
உதைப்பவன் மாக்களுள் ஒருவன்.
தவு! முடிந்தளவு உதவு! சொர்க்கத்தின்
கதவு தானாகத் திறக்கும்.
ன மகிழ்வோடு உதவு! கனதியற்ற
மனத்திருப்தியும், நிறைவும் பெறலாம்.
பெற்ற உதவியை நினைத்து நன்றி 
பேணுமுணர்வு எல்லோருக்கும் வராது.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே 
புறன்அழீஇப் பொய்த்து நகை. (182) 

பொருள்: ஒருவனைக் காணாத இடத்தில் இகழ்ந்து பேசிக், கண்ட இடத்து அன்புடையோர் போலப் பொய்யாக நடித்துச் சிரித்துப் பழகுதல் அறத்தை அழித்துப் பாவச் செயல்களைச் செய்தலினும் தீமையானது.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

புதன், ஆகஸ்ட் 24, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் 
புறம்கூறான் என்றல் இனிது. (181)

பொருள்: அறநெறிகளைப் போற்றாதவனாகவும், அறச் செயல்களைச் செய்யாதவனாகவும் இருந்தாலும் புறம் கூறாதவன் என்று வாழ்வது நல்லது.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்தக் காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

நாடுகாண் பயணம் - கொங்கோ ஜனநாயகக் குடியரசு


வாசகர்களின் கவனத்திற்கு: உலகில் 'கொங்கோ குடியரசு', 'கொங்கோ ஜனநாயகக் குடியரசு' என இரு வேறுபட்ட இறைமையுள்ள நாடுகள் ஆபிரிக்கக் கண்டத்தில்  இருப்பதால் கடந்த வாரம் 'நாடுகாண் பயணத்தில்' கொங்கோ  குடியரசு' இடம்பெற்றது. இவ்வாரம் 'கொங்கோ ஜனநாயகக் குடியரசு' இடம்பெறுகிறது. திரும்பத் திரும்ப ஒரே நாடு இடம்பெறுகிறது என யாரும் குழப்பமடைய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
-ஆசிரியர்-

நாட்டின் பெயர்:
கொங்கோ ஜனநாயகக் குடியரசு (Democratic Republic of the Congo)

வேறு பெயர்கள்:
DR கொங்கோ மற்றும் DRC (இவைகள் கொங்கோ ஜனநாயகக் குடியரசு என்பதன் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும்)
அல்லது RDC(இது கொங்கோ ஜனநாயகக் குடியரசு என்பதன் பிரெஞ்சுப் பெயராகிய Republique Democratique du Congo என்பதன் சுருக்கமாகும்)
அல்லது கொங்கோ கின்ஷாசா(Congo - Kinshasa இது இந்நாட்டின் தலைநகரம் கின்ஷாசா என்பதாலும், அண்டைநாட்டின் பெயரும் 'கொங்கோ' என்பதாலும் குழப்பத்தைத் தவிர்க்கும் முகமாக இவ்வாறு அழைக்கப் படுகிறது.


எல்லைகள்:
வடக்கு - மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் தெற்கு சூடான்.
மேற்கு - கொங்கோ குடியரசு மற்றும் அந்திலாந்திக் சமுத்திரம்.(இந்நாடு நான்கு பக்கமும் நிலப் பரப்பால் சூழப்பட்ட மத்திய ஆபிரிக்காவில் அமைந்திருந்தாலும்,சுமார் 9 கிலோ மீட்டர்கள் அகலம் கொண்ட மிகச்சிறிய நிலப் பரப்பு அத்திலாந்திக் கடற்கரையை தொட்டு நிற்கிறது / அண்மித்ததாக உள்ளது.)
கிழக்கு:உகண்டா, ருவாண்டா, புருண்டி.
தெற்கு: ஸம்பியா, அங்கோலா.

தலைநகரம்:
கின்ஷாசா (Kinshasa)

அலுவலக மொழி:
பிரெஞ்சு 

அங்கீகரிக்கப்பட்ட ஏனைய மொழிகள்:
லிங்கலா (Lingala), கிகொங்கோ(Kikongo), ஸ்வஹிலி(Swahili), சிலுபா(Tshiluba). 

ஆட்சிமுறை:
இலங்கை போன்ற நாடுகளைப் போல் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருக்குமே அதிகாரங்கள் உள்ள ஜனாதிபதி ஆட்சிக் குடியரசு.

ஜனாதிபதி:
ஜோசப் கபிலா (Joseph Kabila) *இது 23.08.2011 அன்று உள்ள நிலவரமாகும்.

பிரதமர்:
அடொல்ப் முசிட்டோ (Adolph Muzito) *இது 23.08.2011 அன்று உள்ள நிலவரமாகும்.

பெல்ஜியம் நாட்டிடமிருந்து விடுதலை:
30.06.1960


பரப்பளவு:
2,345,409 சதுர கிலோ மீட்டர்கள்.(உலகில் 11 ஆவது பெரிய நாடு)

சனத்தொகை:
71,712,867 (2011 மதிப்பீடு) *சனத்தொகை அடிப்படையில் உலகில் 19 ஆவது பெரிய நாடு.

நாணயம்:
கொங்கோலியன் பிராங் (Congolese franc / CDF)

இணையத் தளக் குறியீடு:
.cd

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00+243

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு (180)

பொருள்: பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்பினால் அக்கருத்து அவனுக்கு அழிவைத் தரும். விரும்பாமை என்னும் எண்ணம் அவனுக்கு வெற்றியைத் தரும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.

தாய்லாந்துப் பயணம் - 15


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
சைனா ரவுணைத் தாண்டியதும் அருகிலேயே flower market  பூக்களின் சந்தை வந்தது.  இதை pak khlong talat என்று கூறுவர்.
60பது வருடமாக இச் சந்தை நடக்கிறதாம். தெருவின் வலது இடது பகுதியில் மிகப் பரந்த நீண்ட தூரத்திற்கு பூக்கடைச் சந்தையாகவே இருந்தது. சியாங்மய், சியாங்றய் என்ற குளிரான பிரதேசங்களில், சுற்று வட்ட மாநிலங்களில் இருந்தும் எல்லா விதமான பூக்கள் அதிகாலையில், படகிலும், பேருந்துகளிலும் இங்கு வருகிறதாம். மிக ஆச்சரியமாகவே இருந்தது. இங்கும் வாய் பிளந்து அம்மாடியோவ்! என்றேன்.
இப்போது புரிந்தது முதலாவது வாடி வீட்டில் கட்டிலில் பூவும் மேசையில் பூவும் எப்படி வந்தது என்று. பெரிய வாடிவீடுகளுக்கு பதிவு செய்து அதாவது  order  பண்ணி பூக்களை இங்கிருந்த தான் எடுப்பிக்கிறார்கள் என்பது புரிந்தது.    
தெருவில் வாகனம் மெதுவாகப் போனாலே தரிப்பு இடத்திற்கு ஓடி வந்து மல்லிகைப் பூமாலையை விற்பனைக்கு நீட்டுகிறார்கள். காரணம் இறை பக்தி தான். இல்லாவிடில் இந்தியா மாதிரி மனைவிக்குப் பூக் கொண்டு போக இருக்காதல்லவா? 
அரச மாளிகை அனைவரும் பார்க்க வேண்டியதும் முக்கியமான சுற்றுலா இடமுமாகும். காணக் கண் கோடி வேண்டும்! அத்தனை அழகிய கட்டிடங்கள், தொழில் நுட்ப, கலைத் திறமைகள் கொண்டவை.
றோயல் கிறாண்ட் பலஸ் 218,000 சதுர மீட்டர் இடத்தில், சாயோ பிறையா நதி தீரத்தில் பாங்கொக்கில் உள்ளது. சக்ரி பரம்பரையில் ராமா ஒன்று அரசுக்கு வந்த போது அன்று மறுகரையில் தோண்புரியிலிருந்து இக் கரைக்கு அரசினை மாற்றினார்கள். மந்திரிகள் காரியாலயம், பாதுகாப்பு அமைச்சு, அரசர் குடியிருக்கும் மாளிகை என பல காரியாலயக் கட்டிடங்களுடன், சுற்றி வர வெள்ளை மதிலுக்குள் அமைந்த மாளிகை இது.
1783ல் மதில் சுவர்கள் கட்டப்பட்டது. 3 பிரதானமான அழகிய கோபுரங்களுடன்
வேறும் பல சிறு கோபுரங்களுடன் அமைந்த மாளிகை இது. தங்க நிறக் கோபுரம் இலங்கைப் பாணியிலும், மற்ற இரண்டும் தாய்லாந்து கம்போடியா மாதிரியிலும் அமைந்துள்ளது.  கோபுரங்கள் மினுங்கும் கற்கள், கண்ணாடிக் கற்கள், தங்கநிற பீங்கான் கற்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. 10 துர்த்தேவதைகள், குரங்குகள், காவலர்கள், உருவங்களும் சுவர்களில் செதுக்கியுள்ளது.
முன்பு 158 வருடங்களாக அரசர்கள் இங்கு வசித்து வந்தனர். 20ம், நூற்றாண்டிலிருந்து இங்கு அரசர்கள் வாழ்வதை நிறுத்திக் கொண்டனர். முழுக்க முழுக்க உல்லாசப் பயணிகளுக்காக 3 சாலைகள் திறந்துவிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய – தாய்லாந்து தொழில் நுட்பத்தில் கட்டிடம் வித்தியாசமான கூரையுடன் உள்ளது. இந்த வெள்ளை மதிலுக்குள்ளே தான் அரச தேவாலயமான Emareld புத்தர் கோயிலும் உள்ளது. இக் கட்டிடங்களும் இந்திய சினிமாவில் காதல் காட்சிகளில் வந்துள்ளது. இங்கு மரியாதையான ஆடைகளுடன் தான் போக முடியும். மிகவும் கட்டையான ஆடைகளுடன் போக முடியாது. இதைக் கண்காணிக்க உத்தியோகத்தர் உள்ளனர்.
இந்த அரசமாளிகை ரட்னா கோசின் தீவு அயோத்தியா மாளிகைகளின் மாதிரியில் கட்டப்பட்டுள்ளது. முழுவதுமான தாய்லாந்தின் பிரபலமான, மிகப் பரந்த தங்க நகரமான பாங்கொக்கின் அடையாளம் (சிம்போல்) இந்த றோயல் அரச மாளிகையாகும். புத்த மத மேன்மையுடைய தாய்லாந்து மக்களுக்கு, நான்கு சுவருக்குள் உள்ள, இந்த எமரல்ட் புத்த கோயில் மெக்காவாக உள்ளது. 45 செ.மீ நீளமான புத்தர் சிலை பச்சை நிற  jade ல், பச்சை ரா கல்லில் ஆனது. இதற்கு தங்கத்தில் 3 காலநிலைக்குரிய ஆடைகளுடன் தேவாலயத்தில் நல்ல பீடங்கள் அமைத்துப் பத்திரப் படுத்தியுள்ளனர்.
எமரெல்ட் புத்த கோயிலுக்கு ஒரு சரித்திரம் உண்டு. பழைய கட்டுக் கதையின் படி 43ம் நூற்றாண்டு கி.முன்னர் பாடலிபுரத்தில் நாகசேனா எனும் இடத்தில் இச் சிலை உருவாக்கப்பட்டது. பாடலிபுரம் இன்று பாட்னா (Patna) என்று கூறப்படுகிறது. பாடலிபுரத்தில் 300 வருடம் இச் சிலை இருந்த பின் ஒரு பொது யுத்தம் வந்த போது சிலையைப் பாதுகாக்க இச் சிலை சிறீலங்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 457ம் ஆண்டு பர்மிய அரசன் அனுருத் ஒரு தூதுக் குழுவை இலங்கைக்கு அனுப்பி தனது நாட்டில் புத்த சமயத்தை உருவாக்க, மத நூல்களும், எமரெல்ட் புத்த சிலையையும் தனக்குத் தரும்படியாகக் கேட்டானாம். இந்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கப்பலில் இதை எடுத்துச் செல்லும் போது புயல் ஏற்பட்டு, கப்பல் பாதையைத் தொலைத்து, கம்போடியாவில் கப்பல் நிலையூன்றியதாம். 1432ல் தாய்லாந்து அங்கோர் சமஸ்தானத்தைக் கைப்பற்றிய போது இந்த புத்தர் சிலையையும் தம்மோடு தாய்லாந்தின் அயோத்தியா நகரத்துக்கு எடுத்துச் சென்றனர்
.—பயணம் தொடரும்– —–