சனி, மார்ச் 31, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். (314)

பொருள்: தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தல் என்பது அத்துன்பம் செய்தவர் தாமே வெட்கப்படுமாறு அவருக்கு நன்மை செய்து, அவர் செய்த தீமையையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுதலேயாகும். 

இன்றைய சிந்தனைக்கு

டெமாஸ்தனீஸ்

அறியாமையின் முதிர்ச்சிதான் கோபம்.
சிந்தனையின் முதிர்ச்சிதான் ஞானம்.

தாரமும் குருவும் பகுதி - 6.9

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 6.9
ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் பள்ளியில் படித்தால், முதலிரு பிள்ளைகள் மட்டுமே வசதிக் கட்டணம் செலுத்த வேண்டும். மூன்றாவது பிள்ளை கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இருப்பினும் மேற்படி இரண்டு பிள்ளைகளுக்கும் கூட கட்டணம் செலுத்த முடியாத வறுமையில் வாடிய பெற்றோர்களும் இருந்தனர். இத்தகைய பெற்றோர்களால் மேற்படி வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் வாத்தியாரிடம், குறிப்பாகப் பாடசாலை அதிபரிடம் பல தடவைகள் 'பிரம்படி' வாங்க வேண்டிய சூழ்நிலையும் எமது கிராமத்தில் 1980 களில் நிலவியது என்பது மறக்க முடியாத சோகம்.
ஆனால் நான் முன்பு குறிப்பிட்ட சம்பத்திரிசியார் கல்லூரியில் நிலைமை வேறு விதமாக இருந்தது. இங்கு கல்வி கற்பதற்கு பணக்காரர்களின் பிள்ளைகளுக்கு மட்டுமே அனுமதிக் கதவுகள் திறந்திருந்தன.இது ஆண்கள் மட்டுமே கல்வி கற்ற பாடசாலை. இங்கு கல்வி கற்ற மாணாக்கர்களில் பெரும்பாலானவர்களின் பெற்றோர்கள் பணக்காரர்கள். சிலர் மருத்துவர்கள், சிலர் பொறியியலாளர்கள், சிலர் ஆசிரியர்கள், சிலர் உயர்ந்த அரச உத்தியோகத்தர்கள். நான் இந்தக் கல்லூரியில் படித்த காலத்தில் யாழ் மாவட்டத்தின் அரசாங்க அதிபரின் மகனும், எங்கள் வகுப்பில், ஆனால் வேறு பிரிவில் படித்தான். அவனை ஒரு சில ஆசிரியர்களும், பல மாணவர்களும் சேந்து ஆகா! ஓகோ! என்று பாராட்டி தலையில் வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள். கிராமத்துப் பள்ளிக்கூடத்திலிருந்து அப்போதுதான் பட்டணத்திற்குப் படிக்கப் போயிருந்த 'பட்டிக்காட்டான்' ஆகிய எனக்கு இது பெரும் வேடிக்கையாக இருந்தது. ஆனாலும் நான் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நான் வளர்ந்து பெரியவன் ஆன பின்னரே அத்தகைய 'துதிபாடல்கள்' அல்லது 'தனி மனித வழிபாடுகளில்' உள்ள சூட்சுமங்கள் புரிய ஆரம்பித்தது. நீங்கள் என்னிடம் கேட்கலாம் அப்படியானால் இங்கு பணக்கார்கள், உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் மட்டும்தானா படித்தார்கள்? என்று. ஆம், இங்கு ஒரு மாணவன் கல்வி கற்க வேண்டுமாயின் அவனுக்கு இருக்க வேண்டிய முதலாவது தகுதியே 'பணக்கார வீட்டுப் பிள்ளை' எனும் தகுதிதான். ஏனைய தகுதிகள் எல்லாம் அடுத்த பட்சம்தான். ஒரு மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் இங்கு படிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம் அந்த மாணவனின் தந்தையார் பத்துப் படகுகளை வைத்துக் கூலியாட்களையும் வைத்துக் கடற்றொழில்(மீன்பிடி) செய்கின்ற ஒரு 'சம்மாட்டி'(*மீனவர் தலைவனை இலங்கைத் தமிழில் இவ்வாறு அழைப்பர்) ஆக இருப்பார். இங்கு ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் கல்வி கற்கிறான் என்று வைத்துக் கொள்வோம் அந்த மாணவனின் தந்தையார் பத்துக் கூலியாட்களை வைத்து விவசாயம் செய்யும் நிலச் சுவான்தாராக இருப்பார். ஆகவே 'பணம்' என்ற ஒன்றே இப்பள்ளியில் படிப்பதற்கான 'அடையாள அட்டை' என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். அதே பள்ளியில் என் போன்ற ஒரு சில நடுத்தர வர்க்கத்துப் பிள்ளைகளும் படித்தார்கள் அவர்களின் எண்ணிக்கை மொத்தம் 25 கூட வராது. நான் குறிப்பிடும் இப்பாடசாலையின் மாணவர் தொகை என்ன தெரியுமா? மொத்தம் 2,500 மாணவர்கள். இவர்களில் நான் குறிப்பிடும் நடுத்தர வர்க்கத்து மாணவர்களுக்கும் 'பண உதவி' செய்வதற்கு கொஞ்சம் வசதி கூடிய யாரோ ஒரு கனவான்/சீமாட்டி இருந்தார். இவ்வாறு எனக்குப் பண உதவி செய்தவர் எனது தாய் மாமா என்பதை முன்பு ஒரு அத்தியாயத்தில் குறிப்பிட்டு இருந்தேன். அவரும் நான் படித்த அதே பாடசாலையில் கணக்காளராக பதவி வகித்தார்.அவர் தனது சம்பளத்தில் பெரும்பகுதியை எனது கல்விக்காக செலவிட நேர்ந்தது. ஏனெனில் சம்பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்பதற்கு மாதாந்தக் கட்டணம் 120 ரூபாய்.(தற்போதைய நிலையில் பன்னிரெண்டாயிரம் ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள்) இந்தத் தொகையை மாணவர்களிடம் இருந்து பள்ளி நிர்வாகம் ஏன் வசூலித்தது என்றால். பாடசாலையில் பணிபுரிந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை மட்டும் 64 பேர்.


உங்கள் கருத்துகளும் வரவேற்கப் படுகின்றன.
தொடரும் 

வெள்ளி, மார்ச் 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் 
உய்யா விழுமம் தரும். (313)

பொருள்: காரணம் இல்லாமல் தீங்கு இழைப்பவர்களுக்கும், பதிலுக்குத் தீங்கு செய்யாதிருத்தல் நலம். இல்லையேல் என்றுமே துயரம்தான் கிட்டும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

மனம் நல்லதாகவும், தூய்மையாகவும் இருந்தால் அதில் ஒரு சௌகரியம் இருக்கிறது. அது யாதெனில் "வீண் பயங்கள் வராது"

ஆன்மீகம் - 8


தஞ்சைப் பெரிய கோயில்…..

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்


நெஞ்சை உயர்த்தி நிற்கும்
விஞ்சும் இந்தியப் பெருமை
தஞ்சைப் பெரிய கோவில்.
இராஐராஐனின் உருவாக்கம்.
கட்டிடக் கலையின், தொழில்
நுட்ப அறிவின் வியப்பு!…..
அடுக்கடுக்காகப் பாறைகள் சேர்த்து
அடுக்கிய உருவகம் கோயிலாம்.
யிரத்து நான்கில் ஆரம்பம்.
ஆயிரத்துப்பத்து வரை கட்டிய
ஆறுவருட அளப்பரிய சாதனை.
கட்டுமானத் தலைமைப் பொறியியலாளராய்
கட்டியவர் குஞ்சரமல்லராம்.
தெய்வபக்தியுடை மனிதசக்திகளால்
செய்திட்ட தமிழின் உன்னதம்.
சோழப் பேரரசின் முத்திரை.
மூன்றடி உயர லிங்கபீடம்
ஐம்பத்தைந்து அடி சுற்றளவாம்.
ஆறு அடி கோமுகத்துடன்
ஒரே கல்லில் உருவாக்கியதாம்(?)
இருநூற்றிப்பதினாறடி உயர
கோயில் விமானமாம். ஆயிரம்
வருட இந்திய ஓவியங்களின்
சேகரிப்புக் குவியல்கள் உள்ளேயாம்.
ந்தியாவின் நெற்றிப்பட்டமாக இது
குந்தியிருப்பதிது தஞ்சாவூரில்.
இரண்டாயிரத்தப் பத்தாம் வருடம்
ஆயிரமாம் பிறந்தநாள் நிறைவு.
பிரகதீஸ்வலர் ஆலயம் என்பர்.
உலக மரபுச் சின்னமென்பது
யுனெஸ்கோவின் அங்கீகாரமாம்.
தஞ்சைப்பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே!

வியாழன், மார்ச் 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். (312) 

பொருள்: பகையினால் தீங்கு இழைப்பவனுக்கும் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தல், நல்லோர்களின் பண்பாகும்.

இன்றைய பழமொழி

ஜெர்மானியப் பழமொழி

தன்னை அறிவது அறிவு, தன்னை மறப்பது மடமை.

புதன், மார்ச் 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். (311)  

பொருள்: சிறப்பைத் தருகின்ற பெருஞ்செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

கோபப்பட்டுத் தாக்குவதற்கும், எதிர்ப்பதற்கும் ஒரு பலம் தேவை என்றால், அமைதியாக இருப்பதற்கும், தாக்காமல் இருப்பதற்கும் இன்னொரு பலம் தேவை. அதன் பெயர் 'மனோபலம்'.

செவ்வாய், மார்ச் 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்  

 

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் 
துறந்தார் துறந்தார் துணை. (310)

பொருள்: கோபத்திற்கு இலக்கானவர்கள் உயிர் வாழ்ந்தும் இறந்தவரேயாவர். கோபத்தை வென்றவர்கள் முற்றும் துறந்த முனிவர்களுக்கு ஒப்பாவர்.

இன்றைய பழமொழி

இங்கிலாந்துப் பழமொழி 



பண்பான மனிதனுக்கு பெரும்பகையே செல்வம்தான். பணம் மனிதப் பண்புகளை மழுங்கடித்து விடுகிறது.

பலவீனம் நீக்கும் ஏலக்காய்


வாசனை பொருட்களின் அரசி என்று அழைக்கப்படும் ஏழக்காய் சமையலின் போது வாசனைக்காக பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கியமான ஒன்று. அசைவ உணவில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனிதான் செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டுவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வாசனைப் பொருளாக பயன்படுத்தப்படும் ஏலக்காயில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் கனியும் விதைகளும் மருத்துவப் பயன் கொண்டவை.


நாற்பது ஆண்டுகால ஆய்வுகள் ஏலக்காயில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய்களின் மருத்துவத்தை உறுதி செய்கின்றன. நறுமணம் கொண்ட விதைகள் வயிற்று வலியினை சரிசெய்கின்றன.

ஜீரணத்தை தூண்டுபவை. உடலின் வெப்பத்தை கூட்டி ஜீரணத்தினைத் அதிகப்படுத்தும். இது தசை சுரிப்பு கோளாறுகளுக்கு எதிரானது.

பலவீனம் நீக்கும் ஏலக்காய்

ஏலக்காயில் பல எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன: போர்னியோல்,கேம்ஃபர், பைனின், ஹீயமுலீன்,கெரியோஃபில்லென், கார்வோன்,

யூகேலிப்டோல், டெர்பினின்,சேபினின், இவை இதன் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாகும். இந்திய மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி, சிறுநீராகத்தின் கல், நரம்பு தளர்ச்சி, மற்றும் பலவீனம் நீக்க பயன்படுத்தப்படுகிறது. சீன மருத்துவத்தில் சிறுநீர்ப் போக்குகட்டுப்பாடின்மையினைப் போக்கவும் வலுவேற்றியாகவும் உதவுகிறது. வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காய்

பயன்படுத்தப்படுகிறது; பாலுணர்வு தூண்டும் பொருளாகவும் உள்ளது.

மன அழுத்தத்திற்கு ஏலக்காய் டீ

மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் 

திங்கள், மார்ச் 26, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்  

 

உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் 
உள்ளான் வெகுளி எனின். (309) 

பொருள்: ஒருவன் கோபத்தைத் தன் மனத்தில் கொள்ளாதிருந்தால், நினைத்த நன்மைகளையெல்லாம் அவன் விரைந்து பெறுவான்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

ஒருவன் எத்தனை பேருடன் நட்பு வைத்துக் கொள்கிறான் என்பது முக்கியம் அல்ல. எப்படி நட்பைக் காப்பாற்றிக் கொள்கிறான் என்பதுதான் முக்கியம்.


ஞாயிறு, மார்ச் 25, 2012

எம்மிடமிருந்து விடைபெற்ற வானொலிக் குயில்

இலங்கை வானொலியில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக சிறந்த அறிவிப்பாளராகவும், வானொலி நாடக நடிகையாகவும், பல வருடங்களாக நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றிய 'கலாபூசணம்' திருமதி.ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் கடந்த 23.03.2012 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் தனது 74 ஆவது வயதில் காலமானார் என்பதை ஆழ்ந்த மன வருத்தத்துடன் அறியத் தருகிறோம்.
இலங்கை வானொலியில் புகழின் உச்சியில் கொடிகட்டிப் பறந்த அறிவிப்பாளர் இவர் என்றால் மிகையாகாது. சிறுவர் முதல் பெரியவர் விரும்பி ரசித்த இலங்கை வானொலியின் பல சிறப்பான நிகழ்ச்சிகளில் தனது மதுரக் குரலின் மூலம் ஒரு முத்திரை பதித்திருந்தார். திரைப்படப் பாடகி எஸ்.ஜானகி அவர்களை நேரிலோ, புகைப்படத்திலோ பார்த்து அறியாதவர்கள் ஜானகி அவர்களை ஒரு சிறுமி எனவும், இளம் யுவதி எனவும் கற்பனை செய்து வைத்திருந்ததைப் போல், திருமதி ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் தேன் மதுரக் குரலை வான் அலை வழியே கேட்டவர்களும் அவரை ஒரு இளம் யுவதி என்றே நினைத்தனர். இவரது தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பினாலும், இனிமையான, மனதைக் கொள்ளை கொள்ளும் குரலினாலும், இலங்கையின் பல லட்சம் ரசிகர்களை மட்டுமன்றி, தமிழகத்தின் கோடிக்கணக்கான வானொலி ரசிகர்களின் உள்ளங்களையும் வான் அலை வழியே கொள்ளை கொண்டார். இலங்கை வானொலியில் இவர் தனது முத்திரையைப் பதித்த இசைச் சித்திரம், பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி, வீட்டுக்கு வீடு, இசையும் கதையும், வானொலி மலர், ஒலி மஞ்சரி போன்ற நிகழ்ச்சிகளும் இவரைப் போன்ற ஒரு அறிவிப்பாளரை இனிக் காணப் போவதில்லை. தொலைக்காட்சிகள் அறிமுகம் ஆகாத காலத்தில் வானொலி நாடகங்கள் தமிழ் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட காலத்தில் தனது 'யாழ்ப்பாணத் தமிழில்' பேசி அசத்திய வானொலிக் குயில் திருமதி.ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் பூர்வீகம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் என்பதை அறிந்தால் யார்தான் வியந்து போக மாட்டார்கள்?
உலக அறிவிப்பாளர்களில் கோடான கோடி ரசிகர்களைக் கொண்டிருந்த ஒரு சில அறிவிப்பாளர்களில் ராஜேஷ் அக்காவின் பெயர் முதலிடத்தில் இருக்கிறது. "மீண்டும் சந்திக்கும் வரை அன்பு வணக்கம் கூறி விடைபெற்றுக் கொள்பவர் ராஜேஸ்வரி சண்முகம்" என்று ஒவ்வொரு நிகழ்ச்சியின் பின்னரும் எம்மிடமிருந்து விடைபெற்ற ராஜேஷ் அக்கா அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இப்பூவுலகில் இருந்து நிரந்தரமாக விடை பெற்றார். அவரது ஈமக் கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை(25.03.2012) கொழும்பில் நடைபெற்றது. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எம்மோடு வான் அலை வழியே இணைந்திருந்த வானொலிக் குயிலின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அன்னாரின் மறைவிற்கு அந்திமாலை இணையம் தனது இதய அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக. அவரது பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆசிரியபீடம் 
அந்திமாலை 
www.anthimaalai.dk

ஒரு பிரபலத்தின் மறைவு


மறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம் - கலாபூசணம் 


“ ஈராயிரமாண்டு இலக்கிய வரலாறு கொண்ட நம் தமிழ் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் எப்படியெல்லாம் புதிய நரம்புகளுக்கு ரத்தம் பாய்சுகின்றதென்பதைத் திளைத்துத் திளைத்து - சுவைத்துச் சுவைத்து - மகிழ்ந்து மகிழ்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து புல்லரிக்கும் உச்சரிப்பில் நீங்கள் சொல்லெடுத்துச் சொன்னபோது நாம் மீண்டும் ஒரு கல்லூரி மாணவனாய்க் கற்கத் தொடங்கினேன். எந்திர உலகத்திற்குத் தமிழைக் கொண்டு சேர்த்த மந்திரநிகழ்ச்சி உங்கள் பொதிகைத் தென்றல். காலங் காலமாய்த் தமிழ்க்காத்த கவிஞர் பரம்பரையின் கடைக்குட்டி என்ற முறையில் உங்களுக்கு நான் நாத்தழுதழுக்க நன்றிசொல்கின்றேன்.

வீசும் திசைகளை வைத்தே காற்றுக்குப் பெயரிட்டான் தமிழன்

    வடக்கே இருந்து வருவது வாடைக்காற்று.
    மேற்கே இருந்து வருவது கோடைக்காற்று
    கிழக்கே இருந்து வருவது கொண்டல்காற்று
    தெற்கே இருந்து வருவது தென்றல் காற்று


எங்களுக்குத் தெற்கேயிருந்து வீசுகின்ற நீங்கள் தென்றலாகத் தான் இருக்க முடியும்! இது அர்த்தமுள்ள தென்றல்: ஆனந்தத் தென்றல். பருவம் கடந்துவீசும் பைந்தமிழ் தென்றல்...'' கவிஞர் வைரமுத்து மேலும் 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
  
 

இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும் 
புணரின் வெகுளாமை நன்று. (308)

பொருள்: பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் அவன்பால் கோபப்படாமல் இருப்பது நல்லது. 

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
 

குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளையும், துன்பங்களையும் மனம் புண்படாதபடி மாற்றிக் காட்டுவதிலேயே ஒரு கணவனின்/மனைவியின் வெற்றி தீர்மானிக்கப் படுகிறது.

பொங்கல் சபதம்

ஆக்கம்:மனுவேல் மகன், பிரான்ஸ்.
இந்த முறை சரஸ்வதி பூசை எங்கள் வீட்டில் தடல் புடலாய் நடந்தது. சரஸ்வதி கடாட்சம் எங்கள் குடும்பத்திற்கு அதிகமாகவே இருப்பதாய் என் மனைவி அட்டகாசப் படுத்தி விட்டார்.பொங்கல் என்ன, சுண்டல் என்ன, அவல் என்ன என்ன?? நானும் "சுந்தரவதனி சுகுண மனோகரி" என ஓம் சக்தி ஓம் பாடி, மனைவி எனக்குப் படைத்த ஒரு பெரியசட்டி பிரசாதத்தை ஒரு கை பார்த்தேன்.
ஒரு வேதக்காரன் இப்படிச்செய்தது ஆரோக்கியமாதாவுக்கு கோபத்தைத் தரும்தானே? இரவு நெஞ்சு முட்டி, மூச்செடுக்க இயலாமல் டொக்டரிடம் போனதில் கைக்கிற மருந்துகளும், மூன்று நாள் ஓய்வும் தண்டனையாகக் கிடைத்தன. அந்த ஓய்விலும் மருந்திலும் பல பழைய கதைகள் நினைவுக்கு வந்தன.
அப்பா!
குடும்பத்துக்கொரு சுவாமியையும் சிஸ்ரரையும் கொண்டிருக்கிற, கரம்பொன் கத்தோலிக்க வேதக்காரன்.
அம்மா!!
செபமாலைக் கன்னியர் சபையின் இரண்டாவது" மதர்ஜெனரல்" ஆய் இருந்த "சிஸ்ரர் "இன் சிறிய மகள்.
அப்பிடியாக்கொத்த குடும்பத்தில் பிறந்த, வருங்காலச் சுவாமியாகிய நான்; 'பொங்கல்' ஆல் திசை மாறிய கதை இது.
எங்கள் வீட்டைச்சுற்றி சொந்தங்கள் சூழ்ந்திருந்தாலும் தெற்குத் திசையில் மட்டும் சைவக்காரக் குடும்பமாய்  மகேஸ் மாமி குடும்பம் இருந்தது. சூழ்ந்திருந்த எல்லாச் சொந்தங்களையும்விட மாமி வீட்டு உறவு, அம்மாவுக்கு நெருக்கமானதாயும்,மதிப்புமிக்கதாயும் இருந்தது .'அக்கார வடிசல்' என்று இந்தியர்களால் அழைக்கப்படும் சர்க்கரைப் பொங்கல், ஒரு தைப்பொங்கல் நன்னாளில் மகேஸ் மாமியால் எனக்கு அறிமுகம் ஆகியது.
மாமி போனபின்,அம்மா பொங்கல் மீது சிலுவை அடையாளமிட்டு அதை புனிதப் படுத்த செபம்செய்த பின்னரே எங்களுக்குப் பங்கிட்டளித்தார். நான் முதன் முதலில் பொங்கலைச்சுவைத்தேன். அதன் சுவை என் நாவை விட்டு அகலப் பல நாள் ஆகியது." எப்ப அம்மா தைப்பொங்கல் வரும்" என்று அம்மாவை நச்சரிக்கத் தொடங்கினேன் . அம்மா "சும்மா இரடா" என்று வெருட்டிப் பார்த்தா. "போசனப்பிரியம் சாவான பாவம்" என்று அறிவுரை சொன்னா. ஒண்டுக்கும் அடங்காத எனக்கு, அப்பாவின் சிபாரிசில் அம்மா பொங்கல் செய்து தந்தா. பார்க்கப் பொங்கல் மாதிரியே இருந்தது."தமிழ்ப் பொம்பிளைகளின்(சைவக்காரப் பெண்கள்) கைப் பக்குவம் வேதக்காரப் பொம்பிளைகளுக்கு வராது." என்ற அப்பாவின் கொமேன்றிற்கு, அம்மா ஒரு கிழமை அப்பாவோடு பனிப்போர் நடத்தினது இப்பவும் நினைவிருக்கிறது.
கடைசியாய் "இப்ப கிட்டடியில் சரஸ்வதி பூசை வரும். மாமி வீட்டிலிருந்து பொங்கலும் வரும்" என்று அம்மா என்னை ஆறுதல் படுத்தினா. நான் சரஸ்வதி பூசைக்காய் காத்திருந்தேன்.
பள்ளிக்குப் போகத்தொடங்கியபோது ஆலு ரீச்சரால் 'தைத்திருநாள் இல்லமெல்லாம்பாட்டு சொல்லித்தரப்பட, "வெண்ணிறப் பால் பொங்கிவர வெடி சுடுவோம் நாங்கள்" என்ற வரி என்னைப் பிடித்துக் கொண்டது.ஆலு ரீச்சரின் விமர்சிப்பில் என் மனக்கண் முன்னால் எங்கள் வீட்டில் ஒரு பொங்கலே கொண்டாடி முடித்தேன். எனக்கு வகுப்பு நேரத்திலேயே அழுகை வந்தது. குடும்ப நண்பராகிய ஆலு ரீச்சர், அப்பாவிடம் நான் அழுதகதையச் சொல்ல; அப்பா அடுத்த தைப்பொங்கலில் இருந்து பொங்கலுக்கு சரவெடி வாங்கத் தொடங்கினார்.பொங்கலன்று காலையில் நாங்களும் குளித்து முழுகி, நத்தாருக்கு எடுத்த புது உடுப்புகள் போட்டு, சரவெடியை மாமரத்தில் கட்டி விட்டு மகேஸ் மாமிக்காய் காத்திருப்போம். மாமி கொண்டுவரும் பொங்கல் கிண்ணம் அம்மாவிடம் கைமாறும்போது அண்ணா அம்மாவையும் மாமியையும் அப்படியே அசையாமல் நிக்கச்சொல்லிவிட்டு சரவெடியைக் கொளுத்துவான். நாங்கள் எல்லோரும் "பொங்கலோ பொங்கல், மகேஸ் மாமிவீட்டுப் பொங்கலோ பொங்கல் "என்று கோஷமிடுவோம்.மாமி சிரித்துக் கொண்டே போவார். அம்மா சீ......... இதென்ன வெக்கக் கேடு என்று கடிந்து கொள்ளுவார்.
பள்ளி நாட்களில் எனக்கு கருப்பையா, ரம்புட்டான், விசுக்கோத்து, பிரக்கிராசி என்ற பட்டப் பெயர்களையுடைய, சைவக்கார நண்பர்கள் நாலு பேர் இருந்தார்கள். (இப்போது இவர்கள், என்னால் பிடிக்க முடியாத உச்சத்தில் இருப்பது அது தனிக் கதை.)
மாலை நேரங்களில்  முருகன் கோயிலடியில்தான் நாங்கள் கிளித்தட்டு, வட்டக்கோடு, அல்லது 'ஆஸ்பெயில்' விளையாடிக்கொண்டிருப்போம். கூச்சலும் கும்மாளமுமாய் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வெள்ளிக்கிழமை மாலை கருப்பையா திடீரெனப் பக்திமானாய் ஆனான். விளையாட்டைப் பாதியில் நிறுத்திவிட்டு "நான் கோயிலுக்குப் போகப்போறன் " என்று கால் முகம் கழுவ வீட்டுக்குப் புறப்பட்டான்.
ஒவ்வொரு வெள்ளியும்  முருகன் கோவிலில் மாலைப் பூசை விமரிசையாய் நடக்கும். மற்ற நண்பர்களும் கோயிலுக்குப் போக முடிவுசெய்து விளையாட்டை நிறுத்தினர். என்னையும் வரச்சொன்னார்கள். நான் மறுத்து விட்டேன்.
ஒரு வேதக்காரப் பொடியன் சைவக்கோயிலுக்குப் போவது முப்புறத் தாக்குதலைத் தரும். கோயிலுக்குப் போனதைக் கண்ட உறவினர்கள் யாராவது பிறடியில் அடிக்கலாம், நான் போகமுதல் விசயம் வீட்ட போயிரும். அம்மாவோ அப்பாவோ பூவரசம் தடி முறியும்வரை காலில் அடிக்கலாம், அடுத்த ஞாயிற்றுக்கிழமை  பூசை முடிய சுவாமி காதைப் பிச்செடுக்கலாம். இந்தப் பயத்தோடும் 'ஒரே சர்வேஸ்வரனை விசுவசிக்கிறேன்' என்ற பக்தியோடும், "நீ சுவாமியாய்ப் போக வேணும்" என்ற அம்மாவின் ஆசையோடும்  நான் மறுக்க, நண்பர்கள் வற்புறுத்த, இதைப் பார்த்த 'ஆலு ரீச்சர்' சும்மா கோயிலுக்குப் போனாப் பிழை இல்லை நாங்களெல்லாம் மாதாங்கோயிலுக்குப் போறம்தானே" என்று சமாளிக்க, நான் முதல் முறையாக  முருகன் கோயிலுக்குப் போனேன்.
பூசை முடிய பிரசாதமாய் பொங்கல் தரப் பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு வெள்ளியும் கோயில்தான். ஆலு ரீச்சரின் பெயர், அப்பாவிடம் இருந்து என்னைக் காப்பாற்ற மற்றப் பக்கத்துத் தாக்குதல்கள் நடந்தது. சொந்தமெல்லாம் நக்கலடிக்க, சுவாமி தலையில் அடிக்க, அண்ணன் கலைச்சுக் கலைச்சு அடிக்க எனக்கு வேதக்காரரிலேயே கோவம் வந்தது. அம்மாவின் சுவாமியாய்ப் போற ஆசையைத் தூக்கி எறிஞ்சேன். பள்ளியில் சைவ பரிபாலன சபை சோதனை எழுதினேன்.தேவாரப் போட்டிக்குப் போனேன். நல்லை ஆதீனத்துக்குப் பேச்சுப் போட்டிக்குப் போனேன். ஆனால் ஞாயிற்றுக் கிழமைப் பூசைக்கு மெல்ல மெல்லப் போகாமல் விட்டேன்.
சப்பாத்து, மேஸ் போட்டு அமைதியாய் "உன்னதங்களிலே ஓசான்னா " பாடுவதை விடமார்கழிக் குளிரில் விடிகாலை எழுந்து, வரிந்து கட்டிய சாரத்துடன் நண்பர்களுடன்  "எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே" என ஊரைச்சுற்றி பாடி வருவது மகிழ்வைத் தந்தது. இப்படி ஒரு மார்கழி மாதத்தில் நான் திருவெம்பாவை பாடி முடித்து கோவில் பிரசாதத்துடன் வீடு திரும்ப, அண்ணன் வாசலிலேயே காவல் நின்றான்.முதல் நாள்தான் மார்கழி விடுமுறைக்காய் பள்ளியிலிருந்து வந்திருந்தான். பொங்கல் சாப்பிடவே இப்படி வீட்டுமானம்போக, நான் ஊர்  சுற்றுவதாய் கூச்சலிட்டு அடி பின்னிஎடுத்தான். அம்மாவுடன் சேர்ந்து அயலவர்களான  மச்சாள் ,சித்தி, பெரியம்மா, சின்னமாமி என எல்லோரும் "நல்லாக்குடடா இனி இவன் சைவக் கோயில் பக்கம் தலை வைக்கக் கூடாது " என அண்ணனை சப்போட் பண்ண அவன் 'வைரவர்கலை' வந்த 'மூத்தாம்பியர்' மாதிரி வெளுத்து வாங்கினான்.
உறவெல்லாம் வன்மம் தீர்க்க, பின்வேலி பாஞ்சு மகேஸ்மாமி வீட்டில் தஞ்சம் புகுந்தேன். மாமிதான் எனக்கு ஆறுதல் சொல்லி அடிகாயத்துக்கு நல்லெண்ணெய் போட்டா .அப்ப எனக்கு இந்த வேதக்காரரின் குணம் அறவே பிடிக்காமல் போக, நான் சைவக்காரனாய் மாற சபதம் பண்ணினேன்.
 எப்படி மாறுவது? மறுநாள் நண்பர்களுடன் ஆலோசனை நடத்தியதில், ஒரு சைவக் காரப் பிள்ளையை  சைட் அடித்து கல்யாணம் பண்ணுவது. என்று ஒரு நண்பன்  ஒரு ஐடியா சொன்னான்நண்பர்கள் எனக்கேற்ற ஊர்ப் பிள்ளை யார்? என்று விவாதம் நடத்தத் தொடங்கினார்கள் .எனக்கு அப்பாவின் விறைத்த கையும், வீட்டுக்கூரைக்குள் செருகியிருக்கும் செப்புப் பிடி போட்ட வாளும் ஞாபகம் வர, நண்பர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனேன்.
 பத்தாவது பாஸ் பண்ணி, உயர்தரம் படிக்க பட்டணம் போனேன்.அப்ப சைவக் கோயில், பொங்கல் ,மதமாற்றம் எல்லாம் மறந்து படிப்பில் மூழ்கிப் போனேன். என்னையும் அறியாமல் என் சபதம் என்னைத் தொடர்ந்து வந்தது . அது கடல் கடந்து, நாடுகள் கடந்து, ஒரு தசாப்தம் கடந்து, என்னளவில் மதம் கடவுள் என்பவற்றுக்கான இலக்கணங்கள் மாறிய பின்னும், நான் 'எந்தமதமும் அற்றவன்' என்று ஆன பின்னும் தொடர்ந்தது. நிறைவேறியதுஇப்ப எங்கள் வீடு சைவக்கார வீடு(ம்)ஆகிப் போச்சு.
பின் குறிப்பு:-  சில நாட்களுக்கு முன் இருபத்தைந்து வருடங்கள் கழித்து  என்னைச் சந்தித்த என் பால்ய நண்பன் "கடைசியாய் என்ர ஐடியாதான் வேலை செய்திருக்குது" என நக்கலாய் சிரித்தான்.