வியாழன், பிப்ரவரி 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 65 சொல் வன்மை
 
இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது 
உணர விரித்துரையா தார். (650) 
 
பொருள்: தாம் கற்ற நூற்பொருளைப் பிறரும் அறியும்படியாக விளக்கிச் சொல்லத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் பரப்பாத மலரைப் போன்றவர்களாவர்.
 

இன்றைய பழமொழி

இங்கிலாந்துப் பழமொழி 

எத்தனையோ அநீதிகள் பழக்கத்தாலும், மக்களின் அறியாமையாலும் நீதிகளாகத் தோன்றுகின்றன.

உருளைக்கிழங்கு சாப்பிடுங்க! இதயநோய் வராது !!

நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு. நாம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.

இதனிடையே தினந்தோறும் இருமுறை உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தநோய் குறையும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதனால் இதயநோய் பாதிப்பும் ஏற்படாது என்றும் உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உருளைக்கிழங்கை வெண்ணெய் அல்லது எண்ணெய் போட்டு சாப்பிடுவதை விட வேக வைத்து உண்ணவேண்டும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் இந்த ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டனர். ஆய்வின் போது மதிய உணவு நேரத்தில் தினமும் 100 கிராம் அளவு உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது. அதேபோன்று இரவு நேரத்திலும் கொடுக்கப்பட்டது. ஒருமாதம் தொடர்ந்து உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவர்களின் உயர்ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. அவர்களின் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.

உடல் எடை அதிகரிக்காதது மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறைந்தது உள்ளிட்ட காரணங்களினால் உருளைக்கிழங்கானது உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
 
நன்றி: medicalandmixednews.blogspot.com 

புதன், பிப்ரவரி 27, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 65 சொல் வன்மை
 
பலசொல்லக் காமுறுவர் மன்றமாக அற்ற 
சிலசொல்லல் தேற்றா தவர். (649)

பொருள்: குற்றம் இல்லாத சொற்களாகச் சிலவற்றைப் பேசத் தெரியாதவரே, நீண்ட நேரம் பல சொற்களைப் பேச ஆசைப்படுவர்.   

இன்றைய பழமொழி

தமிழ்நாட்டுப் பழமொழி 

"எல்லாம் எனக்குத் தெரியும்" என்ற இறுமாப்பு வேண்டாம். ஆனானப்பட்ட ஔயாருக்கே சுட்ட பழம் பற்றிச் சொன்னவன் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன்தான்.

செவ்வாய், பிப்ரவரி 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 65 சொல் வன்மை

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்; நிரந்துஇனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். (648) 
பொருள்: சொல்லும் காரியங்களை வரிசைப்படக் கோர்த்து இனிமையாக எடுத்துக் கூற வல்லவரைப் பெற்றால், இவ்வுலகம் விரைந்து அவற்றை ஏற்றுக் கொள்ளும்.

இன்றைய சிந்தனைக்கு

மக்ஸிம் கார்க்கி 
மன மகிழ்ச்சிக்காக உழைக்கும்போது வாழ்க்கை இனிமை பெறுகிறது. வேலை கடமையாகும்போது வாழ்க்கை அடிமைத்தனமாகிறது .

ராகு, கேது யார்?

ராகு, கேது இரு கிரகங்களும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படக் காரணமான கிரகங்களாகும். ஒன்பது கிரகங்களில் இந்த இரு கிரகங்களும் சாயாக் கிரகங்கள் எனப்படும். வானவெளியில் இதற்கென மண்டலங்கள் கொடுக்கப்படவில்லை. வானவெளியில் சூரியனது வட்டப் பாதையும் சந்திரனது வட்டப் பாதையும் வெட்டும் புள்ளிகளே ராகு, கேது என அழைக்கப் படுகிறது. சூரியனுடைய வட்டப் பாதையை சந்திரன் 5 பாகை 9 கலை தூரத்தில் தெற்கு வடக்காக சாய்ந்து நின்று இரண்டு இடங்களில் கடந்து செல்கிறார். சூரியனின் பாதையை சந்திரன் இருமுறை கடந்து செல்லும் இந்த இடமே ராகு, கேது என அழைக்கப்படுகிறது.

சூரிய வட்டப்பாதையை சந்திரன் கடக்கும் இடமானது ஒவ்வொரு நாளும் வெவ்வேறாக இருக்கும். சந்திரன் இன்று கடக்கும் இடத்தில் நாளை கடப்பதில்லை. நாளை கடக்கும் இடத்தில் மறுநாள் கடப்பதில்லை. சந்திரன் கடக்கும் இந்த இடமானது ஒரு நாளைக்கு 33 விகலை வீதம் தள்ளிக் கொண்டே வரும். இப்புள்ளியானது ஒரு மாதத்திற்கு 1 பாகை 40 கலை தூரத்திற்கு நகரும். பதினெட்டு மாதத்தில் இது 30 பாகை சென்று விடும். 30 பாகை கொண்டது ஒரு ராசி ஆகும். இதனால்தான் ராகு, கேதுக்களானது ஒரு ராசியைக் கடக்க 18 மாதங்களாகின்றது. அதாவது 1 1/2 ஆண்டுகளாகின்றது. பன்னிரெண்டு ராசிகளையும் ராகு, கேது என்ற வெட்டும் புள்ளி சுற்றிவர பதினெட்டு வருடங்களாகின்றது.


நன்றி: neerkondar.blogspot.com 

திங்கள், பிப்ரவரி 25, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 65 சொல் வன்மை

சொலல்வல்லன், சோர்வுஇலன், அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. (647) 
பொருள்: சொல்வன்மை உடையனாயும், சொற்சோர்வு இல்லாதவனாயும் சபைக்கு அஞ்சாதவனாயும் உள்ள ஒருவனை வெல்லுதல் எவருக்கும் முடியாது.

இன்றைய பொன்மொழி

ஹென்றி போர்ட் 

நாம் தவறுகளை செய்யாமல் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதில்லை. அதே தவறுகளை இரண்டாவது தடவையும் செய்யாமல் இருந்தால் அதுவே போதும் வெற்றி கிடைத்துவிடும். ஒரு செயலைச் செய்யும்போது தவறு நேர்ந்தால் அதில் இழிவு இல்லை. மாறாக தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி அச்செயலை செய்யாமல் பின் வாங்குவதுதான் இழிவாகும்.

கணவன் – மனைவி உறவு என்பது வெறும் கடமையா?

ஒருசிலர் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல தோன்றும்.
அதே சமயம் ஒருசிலர் எப்போது பேசி முடிப்பார் என்று இருக்கும்.
மனிதர்களிடையே உறவை வளர்ப்பதிலும், பிரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது பேச்சு.
குறிப்பாக ஆண் – பெண் காதல் உறவில் அன்பை பெருக்குவது மட்டுமல்ல… வெறுப்பை அடர்த்தியாக்குவதும் அதே பேச்சுதான்.
ஒருவரை ‘விமர்சனம் செய்யும்போது அதை அவரது மனம் புண்படாதவாறு இனிமையுடன் கூறவேண்டும் என்பதையே வள்ளுவர் ‘கடிதோச்சி மெல்ல எறிக’ என்று கூறியுள்ளார்.
இனிய உறவுகளுக்கான தாரக மந்திரமாகவும் இதைச் சொல்லலாம்.
கனி போல இருக்கும் இனிய சொற்களை விடுத்து காய்போல பேச்சுக்களை பேசுவதாலே திசைக்கொருவராக சிதைந்து கடைசியில் யாருமற்றவர்களாக நிற்க நேரிடுகிறது.
அன்பை விதைக்கலாம் 
பேச்சு என்பது உறவுகளுக்குள் அன்பை விதைக்க வேண்டும். ஆனால் ஒருசில குடும்பங்களில் உறவை சிதைக்கிறது.
எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, குதர்க்கமாகப் பேசுவது, குத்திக்காட்டுவது, எரிச்சல் வரவழைக்கும்படி பேசுவது என்பது பல தம்பதிகளுக்கு இயல்பான குணமாக இருக்கிறது.
அதுவும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட பல ஆண்களுக்கு, ‘பெண்கள் நம் அடிமைகள்’ என்கிற நினைப்பு இருப்பதால்…
பெண்களிடம் கனிவுடனோ, அன்புடனோ பேசுவதே இல்லை. இத்தகையோரிடம் பெண்களுக்கு பயம் ஏற்படுமே தவிர…
உன்னதமான அன்பு இருக்கவே முடியாது!
பெண்களும் இதற்கு விதி விலக்கு இல்லை முள் குத்துவது போல் பேசும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்கள் அன்பின் ரகசியம் அறியாதவர்கள். காதலின் மகத்துவம் தெரியாதவர்கள். இயந்திரம் போல் வாழ்க்கை நடத்தும் ஜீவன்கள் இவர்கள்.
இதயங்கள் பேசவேண்டும்
இதயங்கள் பேசிக் கொள்ளாமல் வெறும் உதடுகள் மட்டும் பேசிக் கொண்டால்… விளைவுகள் மோசமாகத்தானே இருக்கும்! பொதுவாகவே கணவன்-மனைவி இருவரிடையேயான உரையாடல்கள், ஆண்டுகள் செல்லச் செல்லக் குறைகின்றன என்றுதான் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
பேச வேண்டிய எல்லாவற்றையுமே முதல் சில ஆண்டுகளிலேயே பேசி முடித்து விடுகிறார் களாம்.
அதற்குப் பின் பேசுவதற்கு பொதுவாக ஏதுமில்லாமல் போகிறது.
குடும்பப் பொறுப்புகள், குழந்தைகள் கடமை, சொத்து வாங்குவது, உறவினர்களுடன் பழகுவது, விழாக்களில் கலந்து கொள்வது, முதலீடுகளில் ஈடுபடுவது என்று நடுத்தரப் பருவத்தில் வாழ்க்கை இயந்திரமயமாகிப் போகிறது.
அதற்குப் பின் வெறும் பாதுகாப்புக்காகவே இணைந்து வாழ்வதாகச் சொல்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.
சுவாரஸ்யமான உரையாடல்கள்தான் தம்பதியர்களுக்கிடையே நாளுக்கு நாள் உறவை செம்மைப்படுத்துகின்றன.
வீடு, குடும்பம் இவற்றைத் தவிர பிற உலக நடப்புகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தால் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் கிடைக்கும்.
இசை, இலக்கியம், சினிமா, அரசியல், விளையாட்டு, சமூகம் என்று ஆயிரம் விஷயங்கள் பேசுவதற்கு இருக்கின்றன. ஆனால், அதைப் பற்றி எல்லாம் பேச பெரும்பாலானோருக்கு விருப்பம் இல்லை.
இன்கிரிமென்ட் பற்றியும், நகை வாங்குவது பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டு, பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பேச்சுவார்த்தை என்பதே நாளடைவில் போரடித்துப் போகிறது.
அன்பை புரியவைக்கும் பேச்சு
அளவுக்கு மீறின அன்பு தான் எப்போதும் சந்தேகங்களை உருவாக்கும்.
எனவே சந்தேக விதை உருவாகாமல் தடுப்பது இருவரின் கடமை.
அலுவலகத்தில் இருக்கும் நட்பு வட்டாரத்தை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்வது சிறந்தது.
இல்லையென்றால் சாதாரண தொலைபேசி உரையாடல் கூட இருவரின் பிரிவுக்கு காரணமாக அமைந்துவிடும்.
புரிதலின்மையால் தோன்றும் சிக்கல்
புரிதல் என்பது தம்பதியருக்கிடையே இருக்கக் கூடிய மிக முக்கியமான ஒன்று.
ஒருவருக்கொருவர் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்போது பேச்சின் விபரங்களை சரியாக புரிந்து கொண்டாலே பாதி பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம்.
இன்றைய சூழலில் எதையுமே அரைகுறையாக புரிந்து கொண்டு விடுவதே பிரிவினைக்கு காரணமாகிறது.
வாழ்க்கை இப்படித்தான் செல்ல வேண்டுமா? கணவன் – மனைவி உறவு என்பது வெறும் கடமை போல் ஏன் குறுகி ஒரு கட்டத்தில் அது முறிந்து விடுகிறது.
எனவே மனம் விட்டு பேசுவோம். வீண் மன உளைச்சல்களையும், கண்ணீரையும் தவிர்ப்போம்
நன்றி:tamilcinematv.com

ஞாயிறு, பிப்ரவரி 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 65 சொல் வன்மை
  
வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் 
மாட்சியின் மாசுஅற்றார் கோள். (646)
பொருள்: பிறர் விரும்பும்படியாகத் தாம் சொல்லி, பிறர் சொல்லும்போது அச்சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் குற்றமற்றவரது கொள்கையாகும்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
  

சில நேரங்களில் மௌனம் என்பது மன்னிப்பு.
சில நேரங்களில் மௌனம் என்பது தண்டனை.
ஆனால் புன்னகை என்பது அனைத்திற்கும் 'மருந்து'.

நம்மவர் செய்திகள்

ஜெர்மன் மொழியில்:Von Matthias Bode
தமிழில்: பிருந்தா பியா இராமலிங்கம் 

"நீங்கள் எங்களில்  ஒருவர்"

புகைப்படம்: www.plz-postleitzahl.de
ஜெர்மனியில் உள்ள ஒரு மாநிலம்தான் நீடர்சக்க்ஷேன்(Niedersachsen). இம்மாநிலத்தில் உள்ள ஒரு நகரத்தின் பெயர் ஹில்டஸ்ஹெய்ம்(Hildesheim). இந்நகரத்தில் இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்டு ஜெர்மனியில் தஞ்சம் புகுந்த சுமார் 20 வரையான இலங்கைத் தமிழ்க் குடும்பங்கள் வாழ்கிறார்கள்.இவர்கள் கரித்தாஸ்(Caritas) தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் ஹில்டஸ்ஹெய்மில் அமைந்திருக்கும் மரியாள் முதியோர் இல்லத்தில்(Pflegeheim Magdalenenhof) வாராந்தம் சந்தித்துத் தமது மொழி, கலைகள், கலாச்சாரம் போன்றவற்றை வளர்த்து வருகிறார்கள். "இவர்கள் மேற்படி முதியோர் இல்லத்தில் எத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை அறிய அங்கு சென்றிருந்தோம். அங்கு எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் விபரிக்க முடியாதைவை.
எங்கள் ஐரோப்பியக் காதுகளுக்கும், கண்களுக்கும் அது புதிய ரசனையைத் தந்தது. நீளமான மஞ்சள் நிற ஆடைகளை அணிந்த சில தமிழ்ச் சிறுமிகள் ஐரோப்பிய இசையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு இசைக்கு ஏற்பத் தமது கால்களையும், கைகளையும் மட்டுமே கருவிகளாகக் கொண்டு அழகாக அபிநயம் பிடித்து நடனம் ஆடினர். இந்தக் குழந்தைகள் கீழைத்தேய நாடுகளில் இருந்து ஜெர்மனிக்கு வந்து சேர்ந்த பெற்றோர்களின் பிள்ளைகளாக இருந்த போதிலும் தமது கலைகளை மறக்காதவர்களாக வாழ்கிறார்கள் என்பதைக் காணக் கூடியதாக இருந்தது. இங்கு வாழும் தமிழ்க் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் தமது தாய் மொழியாகிய தமிழைப் பேசக் கூடியவர்களாக உள்ளனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தமிழை எழுதக் கூடியவர்களாக உள்ளனர்".
ஜெர்மனியில் தமிழர்கள் வாழும் நகரங்களில் வாரம் ஒரு முறை தமிழில் ஆராதனைகள் நடைபெறும் வசதிகள் கூட உள்ளன. ஆனால் இவர்கள் தங்கள் கலை, கலாச்சாரம் போன்றவைகளை வளர்ப்தற்கான வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன எனக் கூறுகிறார்கள். எனவே பாடல், நடனம் இவைகளை விடவும் தமது மொழியை வளர்ப்பதற்கு உதவிகள் வேண்டும் என்கின்றனர். தாய்மொழியில் குழந்தை புலமை பெற்றால் அது அந்தக் குழந்தையின் குடும்பத்திற்கும், அக்குழந்தை வாழும் நாட்டிற்கும் மிகுந்த நன்மை பயக்கும் என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. இவர்களின் தாய்மொழியைக் கற்பதும் அவ்வளவு எளிதான விடயமல்ல ஏனென்றால் இவர்களது தாய் மொழியில் மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன.
நாங்கள் இவர்களைச் சந்திப்பதற்காக சென்றபோது பார்வையாளர்கள் வரிசையில் அமர்வதற்காக தனது நடை வண்டியோடு உள்ளே நுழைந்த 77 வயதான ஜெர்மன் முதியவர் திரு. ரெய்ன்ஹோல்ட் மான்ஹொப் (Reinhold Mahnkopp) அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர் மௌடலேனன்ஹொவ் (Magdalenenhof) முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார். அத்துடன் மேற்படி முதியோர் இல்லத்தின் நிர்வாகக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். இவர் கூறுகிறார் "எனது ஆர்வம் முழுவதும் இவர்களுடன்தான்; இவர்களின் விளையாட்டுக்கள், நடனம் போன்றவற்றை ரசிப்பதுதான் எனது பொழுபோக்கு. தற்போதும் இவர்களின் நடனத்தை ரசிப்பதற்குத்தான் இங்கு வந்துள்ளேன்" என்றார். 
இதேபோல் பார்வையாளர்கள் வரிசையில் இருந்த மரியாள் முதியோர் இல்லத்தின் இயக்குனர் மைக்கல் சக்மான்(Michael Sackmann) அவர்களிடம் பேசியபோது அவர் கூறினார் "ஒரு முதியோர் இல்லம் கூட சமுதாயப் பணிகளை முன்னெடுக்க முடியும். தமிழ்ப் பிள்ளைகள் தமது கலை மற்றும் கலாச்சரத்தை வளர்ப்பதற்கு எமது முதியோர் இல்லமும் உதவ முடியும். விருந்தினர்கள் வராத வீடும் ஒரு வீடா? ஒரு வீடு என்பது எப்போதும் விருந்தினர்களின் வருகையை எதிர்பார்த்துத் திறந்தே இருக்க வேண்டும். விருந்தினர்கள் சந்திப்பால் வீட்டில் இருப்பவர்களுக்கும் விருந்தினருக்கும் இடையில் நட்புப் பிணைப்பும், புன்னகை அலையும் ஏற்படுகிறது. இவ்வாறு இருக்கையில் விருந்தாளிகளாக வரும் குழந்தைகளை யாராவது வரவேண்டாம் எனக் கூறுவார்களா? எனக் கேள்வி எழுப்பினார். 
இங்கு வருகை தந்த பெற்றோர்களில் இலங்கையில் இருந்து வன்முறைகளால் பாதிக்கப்பட்டு ஜெர்மனியில் அகதியாக அடைக்கலம் புகுந்த செல்லத்தம்பி சிவகுமார் என்பவரிடம் பேசினோம். தான் எத்தகைய சூழ்நிலையில், எவ்வாறு ஜேர்மனியில் தஞ்சம் புக வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை விபரித்த சிவகுமார் தான் இந்து சமயத்தைச் சேர்ந்தவர் என்றும் தனது மனைவியும் 3 பிள்ளைகளும் கத்தோலிக்கர் என 'வித்தியாசமான கலவை' கொண்டது தன் குடும்பம் என்றும் கூறினார். அவர் வசித்து வரும் ஹில்டெஸ்ஹைம்(Hildesheim) நகரத்தில் 20 தமிழ்க் குடுமபங்கள் வசித்து வருவதாகவும் அவர்களில் ஆறு குடும்பங்கள் மட்டுமே கத்தோலிக்கர் எனவும் ஏனையோர் இந்துக்களாக இருப்பினும் கிருஸ்துமஸ், ஆங்கிலப் புதுவருடம் போன்றவற்றை இரு சமயத்தவரும் பொதுவாகக் கொண்டாடி மகிழ்வதாகவும் கூறுகிறார்.
மேலும் இங்கு வாழும் கிறீஸ்தவ தமிழ் மக்களுக்காக மாதத்தில் ஒரு தடவை தமிழில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப் படுகிறது என்றும் கூறினார். அவரது வீட்டிற்கும் சென்றோம். அங்கு அவரது மனைவி கத்தரின் அவர்கள் வழிபாடு நடத்துவதற்காக ஒரு மரியாள் பலிபீடத்தை அமைத்திருப்பதைக் கண்டோம். அப்பலிபீடத்தில் கன்னி மரியாள் ஒரு சில மலர்களாலும், சில மெழுகு வர்த்திகளாலும் அழகுற அலங்கரிக்கப் பட்டிருந்தார். இந்து மதக் கோயில்களையும், வழிபாட்டு முறைகளையும் அக்காட்சி எமக்கு நினைவூட்டியது.


இவரது குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் மகன் என மூன்று பிள்ளைகள். மகனின் பெயர் கௌசிகன் மற்றும் பெண் பிள்ளைகளின் பெயர்கள் முறையே கரீனா மற்றும் கவீனா ஆகும். ஒரு பெண் கதீட்ரல் பாடகர் குழுவில் பாடிக்கொண்டிருக்கிறார். மகன் கௌசிகன் சிவகுமார் என்பவர் அகஸ்டின் கத்தோலிக்க பள்ளியில் திறமையாகப் பயின்று வருவது தந்தைக்குப் பெருமை ஆகும். அவர் இல்லையெனில் சமூகத்தில் ஒருங்கிணைவது சிரமமாக இருந்திருக்கும் எனப் பெற்றோர் நம்புகின்றனர்.  இலங்கையில் ஒரு பயிற்றப்பட்ட தாதியாகப் பணி புரிந்த சிவகுமார் ஜெர்மனியில் தற்போது ஒரு 'சமையலறை உதவியாளர்'.இருப்பினும் "வாழ்க்கை நன்றாகவே உள்ளது" என்கிறார். "எனது தகுதி இந்நாட்டில் அங்கீகரிக்கப் பட்டிருந்தால் நான் இன்னும் வாழ்வில் உயர்ந்திருப்பேன்" என்று கூறும் அவரது பேச்சில் இனம்புரியாத ஏக்கம் சூழ்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.அவரது குழந்தைகள் மிகவும் சரளமாக ஜெர்மன் மொழியைப் பேசுகின்றனர். அவரால் எம்மோடு ஜெர்மன் மொழியைச் சரளமாகப் பேச முடியவில்லை. அவரது முன்னேற்றத்திற்கு மொழி ஒரு பெரும் தடையாக உள்ளதை உணர முடிகிறது.
அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவப் பணியில் உள்ள திருமதி. எரிக்கா முல்லர் (Erika Müller) என்பவருடனும் பேசினோம். "இவர்கள் வர்ணத் தோல் கொண்டவர்கள் தான் ஆனால் எனது விருப்பத்திற்குரிய மக்கள்". "உங்கள் நிறம் எதுவாகவும் இருக்கட்டும். ஆனால் நீங்கள் எங்களில் ஒருவர்" என்றார் மிகுந்த வாஞ்சையுடன்.
"இப்போது தமிழர்கள் தாய் நாட்டிற்கு உதவ வேண்டும்"  
எவரும் தங்கள் தாயகத்தை மறக்கக் கூடாது. இலங்கையில் துப்பாக்கிகளின் சத்தம் ஓய்ந்து, உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளே ஆகின்றன.  போரின்  விளைவுகளை தமிழர் பகுதிகளில் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.. இலங்கை வடகிழக்கு பகுதியில் வறுமை நிலவுகிறது, யுத்தத்தின் போது பெற்றோர்களை இழந்த குழந்தைகள்ஏராளம், பல பேர் காயமுற்றனர்.பலர் கொல்லப் பட்டனர்.போரின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை.
"இப்போது ஹில்டஸ்ஹெய்ம்
(Hildesheim) நகரத்தில் வாழும் தமிழர்கள் இலங்கையில் உள்ள தங்கள் நாட்டு மக்களுக்கு குறிப்பாகஆதரவு அற்ற  குழந்தைகளுக்கு உதவ விரும்புகின்றனர்" என்கிறார் உதவும் குழுவின் தொடர்பு அதிகாரியாகிய எரிக்கா முல்லர்(Erika Müller) என்பவர். இலங்கையில் நிலைமை மாறியுள்ளது. இலங்கையில் துன்பப் படுபவர்களுக்கு இங்குள்ள தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவுவதற்கு ஒரு தமிழ் கலாச்சார சங்கம் உருவாக்க நாங்கள் முயல்கிறோம் என்றார். இதற்குரிய கட்டமைப்பை நாங்கள் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்படுத்தப்படும் அமைப்பு ஜெர்மானியச் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இருக்க வேண்டும் அத்துடன் அது கணக்கு, வழக்குகளை திறமையாகப் பேணும் திறமை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இயங்கும் ஒரு அமைப்பு மிகவும் சிறப்பாக இலங்கை மக்களுக்கு உதவ முடியும் எனத் தனது நம்பிக்கையினை வெளியிட்டார்.
நன்றி:KirchenZeitung 20. januar 2013

சனி, பிப்ரவரி 23, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 

அதிகாரம் 65 சொல் வன்மை

சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல், அச்சொல்லை 
வெல்லும் சொல் இன்மை அறிந்து. (645) 
பொருள்: ஒருவர் தாம் சொல்லும் சொல்லை வெல்லக்கூடிய மற்றொரு சொல் இல்லாத வகையில் ஆராய்ந்து அறிந்து அச்சொல்லைச் சொல்ல வேண்டும். அதுவே சிறந்த சொல்வன்மையாகும்.

இன்றைய சிந்தனைக்கு

மகாகவி பாரதியார் 

ஊருக்கு உழைத்திடல் யோகம்
பிறர் நலம் ஓங்கிடுமாறு தன்னை 
வருத்துதல் யாகம்;
போருக்கு நின்றிடும் போதும் - உள்ளம் 
பொங்குதல் இல்லாத அமைதி மெய்ஞானம்(வீரம் ).

பொருள்: யோகம் எனப்படுவது யாதெனில் ஊருக்காக உழைப்பது ஆகும். யாகம் எனப்படுவது யாதெனில் அடுத்தவர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை வருத்திக் கொள்வது ஆகும். உண்மையான வீரனும் மெய்ஞானம் பொருந்தியவனும் யார் எனக் கேட்டால் போர்க்களத்தில் நின்றபோதும் தனது கோபத்தையும், உணர்ச்சிக் கொந்தளிப்பையும் கட்டிக் காத்து, அமைதியாக இருப்பவனே உண்மையான வீரன்.


கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! அதிரை ஏ.எம். ஃபாரூக்

அனுப்பி  மகிழச் செய்தவர்: முதுவை ஹிதாயத்
அல்லாஹ்வின் திருப்பெயரால்….


கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் !


அல்லாஹ் கூறுகிறான்:
(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் தவறு)களை மன்னிப்பார்கள். அல்குர்ஆன் 3: 134

அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கோபம் கொள்ளாதே ! எனக் கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் உபதேசம் செய்யுங்கள் எனக்கூறவே, மீண்டும் கோபம் கொள்ளாதே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி

அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
வீரன் என்பவன் கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான் என நபி ( ஸல் ) அவர்கள் அருளினார்கள். நூல்கள் : புகாரி , முஸ்லிம்

பொதுவாகவே ஷைத்தான் மனிதனை ஆக்கிரமிப்பதற்கு அவனுடைய தலைவாயிலே மனிதனுக்கு கோபத்தை சீண்டி விடுவதுதான் தேவையில்லாத விஷயத்திற்கு ஒருவர் கோபப்பட்டால் அவரிடம் ஷைத்தான் குடி கொண்டிருக்கிறான் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். எதிரில் யார் நிற்கிறார் என்று கூடத் தெரியாத அளவுக்கு பேசித் தீர்த்து விடுவார். சிலவேளை அதையும் கடந்து சட்டை கையை மடக்கி முழங்கைக்கு மேல் உயர்த்திக் கொண்டு பாய்வதற்கும் தயாராகி விடுவார். இதைத் தான் ஷைத்தான் அதிகம் விரும்புகிறான். இருவர் அடித்துக் கொண்டு உருள ஆரம்பித்து விட்டால் அதற்குப் பிறகு ஷைத்தான் அங்கிருந்து இடம் பெயர்ந்து விடுவான்.

மேலும் ஒருவன் தன்னை வீரன் என்று காட்டுவதற்காகவும் கோபத்தைக் காட்டுவான். "அவர் பெரிய கோபக்காரர் அவருக்கு கோபம் வந்தால் அவரை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது" என்றெல்லாம் கோபம் கொள்பவர்களை சிலாஹித்து ஒரு சிலர் கூறி அவரை வாழ்நாள் முழுவதும் கோபக்காரராக்கி விடுவார்கள். அதற்கு தகுந்தாற் போல் அவரும் தன்னை ஆக்கிக்கொள்வார். தேவையில்லாததற்கெல்லாம் கோபப்படுவார். இவருக்கு சமுதாயம் 'வீரன்' என்று பட்டம் சூட்டி விடும். கோபம் மனிதனுக்கு தேவை தான், தேவை இல்லை என்று கூறிட முடியாது. ஆனால் அதை தேவைக்கேற்ப பிரயோகிக்க வேண்டும்.

அன்புள்ள சகோதரர்களே புனித ரமளான் மாதத்தில் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நற்செயல் ரமளானுக்குப் பிறகும் உங்களிடம் தொடர்ந்து கொள்ளும். இன்ஷா அல்லாஹ்.

கெட்ட வார்த்தைகள் பேசக் கூடாது.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
கெட்ட வார்த்தைகளை பேசுபவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் அருளினார்கள். நூல் : அஹ்மத் , இப்னு ஹிப்பான்

அல்லாஹ்வையும் , மறுமை நாளையும் நம்பியவர்கள் நல்லதை சொல்லட்டும், அல்லது (தீயவைகளை) பேசாமலிருக்கட்டும். என அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி , முஸ்லிம் , அபூதாவூத்.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டப்படி தேவையில்லாத விஷயத்திற்கு ஒருவர் கோபப்பட்டால் அவருடைய வாயிலிருந்து முதலில் வெளியாவது கெட்ட வார்த்தை தான். இதைத்தான் ஷைத்தான் விரும்புகிறான். ஏன் என்றால் இது அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்துகிற செயல் என்று ஷைத்தானுக்குத் தெரியும். அதனால் மனிதர்களுக்கு மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி, கெட்ட வார்த்தைகளை பேச வைத்து அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாக்கி, அவர்களை வழி பிறழச்செய்து விடுகிறான் என்பதை பெரும்பாலான மக்கள் விளங்கிக் கொள்ள மறுத்து விடுகின்றனர்.

இன்று மனித சமுதாயத்தில் மிகச் சாதாரணமாக புழக்கத்தில் இருப்பவைகள் தான் நாகூசாமல் பேசப்படும் கெட்ட வார்த்தைகள். அதிலும் முஸ்லிம் சமுதாயத்தில் மிகஅதிகம் என்றால் மிகையாகாது. அவர்கள் மிகவும் இலேசாக எண்ணிப் பேசுவது அருவருக்கத்தக்க அசிங்கமான வார்த்தைகள் ஆகும். "இதற்கு மேல் பேசுவதற்கு வேறு அசிங்கமான வார்த்தைகள் எதுவுமே கிடையாது" என்று கூறுமளவுக்கு கீழான வார்த்தைகளை சாதாரணமாக பேசுவார்கள். இதை அல்லாஹ் தடைசெய்வதுடன் இவ்வாறு பேசக்கூடியவர்களை அல்லாஹ்வின் தூதரவர்கள் கீழ்காணுமாறு தரம் பிரிக்கவும் செய்துள்ளனர். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பியவர்கள் யார்? முஸ்லீம்கள்! நம்பாதவர்கள் யார்? ஓரிறை மறுப்பாளர்கள்! இதிலிருந்து நாம் எந்த அந்தஸ்தில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஆகவே அன்புள்ள முஸ்லிம் சகோதரர்களே ! எந்தளவுக்கு கடுமையான வார்த்தைகளை அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் கெட்ட வார்த்தைகள் பேசுவபர்கள் மீது பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும். மேலும் அப்படிப் பேசுபவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்வதாகவும் கூறுகிறார்கள். அல்லாஹ்வின் கோபம் நம் மீது இறங்கினால் நாம் என்னவாகுவோம் என்பதை சிந்தித்துக்கொண்டு உங்களில் எடுத்ததற்கெல்லாம் கெட்டவார்த்தைகள் பேசும் பழக்கமுடையவர்கள் இருந்தால் இப்புனித ரமளான் மாதத்தில் அவைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். இந்த நற்செயல் இன்ஷா அல்லாஹ் ரமளானுக்குப் பின்பும் உங்களைப் பின் தொடரும்

எதேச்சையானப் பேச்சுக்கள்

"ஒரு அடியான் எதையும் சிந்திக்காமல் (சில) வார்த்தைகளை பேசுகிறான்.(இதனால்)கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உள்ள தூரமளவுக்கு நரகத்தின் உள்ளே விழுந்து விடுகிறான்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, முஅத்தா

எவனைப் பற்றியாவது எதையாவது தீர விசாரிக்காமல் சில வார்த்தைகளை மிக சாதாரணமாகப் பேசிவிடுவது இறுதியில் அவ்வார்த்தைகள் சம்பந்தப்பட்டவனை வெகுவாக பாதித்து விடும். அதனால் அவன் மாபெரும் இழப்பை அடைய நேரிட்டு விடும் . அதன் பிறகு இவன் வருந்துவான் அல்லது ஒன்றும் அறியாதவனைப்போல் சமாளிப்பான். ஆனால் மறுமையில் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உள்ள தூரமளவுக்கு நரகத்தின் உள்ளே விழுந்து விடுகிறான் அதனால் நிதானமாகப் பேசுவதே சாலச்சிறந்தது என்று அண்ணலார் கூறுகிறார்கள்

அடியான் அல்லாஹ்வுக்கு திருப்தியளிக்கும் பேச்சை பேசுகிறான் அதன்மூலம் அல்லாஹ் அவனை பல அந்தஸ்த்துகளுக்கு உயர்த்துகிறான். மற்றொரு அடியான் எதையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வுக்கு கோபம் ஏற்படுத்தும் வார்த்தைகளை பேசுகிறான். அதனால் அல்லாஹ் அவனை நரகத்தில் வீசி எறிகிறான். என அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நூல் : புகாரி

அல்லாஹ்வுக்கு திருப்தியளிக்கும் பேச்சுக்கள் எங்கு நடைபெறுமோ (மார்க்க நிகழ்ச்சி அமர்வுகளில்) அங்கு நாம் அமர்ந்து கொள்ள வேண்டும். அங்கு நடைபெறும் நல்ல பேச்சுக்களில் நாம் கலந்து கொள்ள வேண்டும். அங்கு நாம் செவியுற்ற நல்ல விஷயங்களை பிறருக்கும் அறிவிக்க வேண்டும். அதன்மூலம் அல்லாஹ் அவனை பல அந்தஸ்த்துகளுக்கு உயர்த்துகிறான்.

வெறுக்கத்தக்க சபைகளில் அமர்ந்து கொள்வதும் (மார்க்கத்தைப் பேணாதவர்களுடைய பொழுது போக்கு இடங்களில்) அங்கு உரையாடப்படுகிறவைகளை செவியுறுவதும் அவைகளை தாமதமின்றி பிறருக்கும் பரப்புவதும் கூடாது. அதனால் அல்லாஹ் அவனை நரகத்தில் வீசி எறிகிறான்.

குறிப்பு: கடந்த வருட நோன்பு மாதத்தில் அனுப்பப்பட்டது போல் தலைப்புகள் இருந்தாலும் விளக்கங்கள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் தாங்கள் படிப்பதுடன், தங்களோடு தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் தவறாமல் மின்னஞ்சலில் அனுப்பி அவர்களையும் பயன் பெறச் செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி: chittarkottai.com

வெள்ளி, பிப்ரவரி 22, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 65 சொல் வன்மை

திறன்அறிந்து சொல்லுக சொல்லை; அறனும் 
பொருளும் அதனின்ஊங்கு இல். (644) 
 
பொருள்: சொல்லின் திறத்தை அறிந்து சொல்லைச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வதைவிட மேலான அறமும் பொருளும் இல்லை.

இன்றைய பொன்மொழி

ராமகிருஷ்ண பரமஹம்சர் 


இரவு நேரத்தில் ஆகாயத்தில் நட்சத்திரங்களைப் பார்க்கிறோம். ஆனால் அவை பகலில் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதனால் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்ல முடியுமா? அஞ்ஞானத்தால்(அறியாமையால்) உன்னால் இறைவனைக் காண முடியவில்லை என்றால் அதற்காக இறைவனே இல்லை என்று சொல்லி விடாதே.

பப்பாளி பழத்தின் அற்புதம் !!!

17'ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.
பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது.

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

மருத்துவக் குணங்கள்:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே பழுத்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் ‘சி’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.

அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.

வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்கவேண்டும்.இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும்

பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

நன்றி:  neerkondar.blogspot.com 

வியாழன், பிப்ரவரி 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 65 சொல் வன்மை
 
 
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். (643)
 
பொருள்: கேட்பவர் உள்ளத்தைக் கவரும் தன்மை கொண்டதாகவும், கேளாதவரும் கேட்பதற்கு விருப்பப்படும் வகையிலும் சொல்லப்படுவதே சிறந்த சொல்வன்மை ஆகும்.

இன்றைய பழமொழி

சீனப் பழமொழி 

ஓராயிரம் மைல்களுக்கு அப்பாலும் அன்பு ஒன்று மட்டுமே அழுத்தமாய்ப் பதிகிறது, ஆளுகிறது. கண்டிப்பு அல்லவே அல்ல.

புதன், பிப்ரவரி 20, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 65 சொல் வன்மை

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு. (642) 
 
பொருள்: ஒருவருக்கு நன்மையும் அழிவும் தம் சொற்களால் ஏற்படும். ஆதலால் அத்தகைய சொற்களைச் சொல்லுமாறு சோர்வு நேராதவாறு போற்றிக் காக்க வேண்டும்.

இன்றைய பொன்மொழி

இரவீந்திரநாத் தாகூர் 

அன்பில் நம்பிக்கை வை. அது துயரில் கொண்டு போய் விட்டாலும் பரவாயில்லை. இதயக் கதவுகளை மட்டும் மூடி விடாதே.

தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா ??

ஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-

1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.

** கட்டி உடைய தேனைப்பூசு **

2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.

** காயங்கள் ஆற தேனைத்தடவு **

3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.

** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **

4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.


** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **

5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.

** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **

தேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,

‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. 

 
நன்றி: B.R.Viswanadhan
 www.thagavalthalam.com