திங்கள், அக்டோபர் 31, 2011

இசைஞானியின் துணைவியார் காலமானார் !

கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் திரை இசையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் இசைஞானி இளையராஜா அவர்களின் துணைவியார் திருமதி.ஜீவா இளையராஜா அவர்கள் இன்றைய தினம்(31.10.2011 திங்கட்கிழமை)  சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60.
கடந்த சில மாதங்களாக இருதய நோய் காரணமாக அவதிப்பட்ட திருமதி.ஜீவா இளையராஜா அவர்கள் இன்றைய தினம் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
அவர்தம் மறைவிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இழப்பால் துயருறும் 'இசைஞானியின்' குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆசிரிய பீடம் 
அந்திமாலை 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி 
நட்பாடல் தேற்றா தவர் (187)

பொருள்: பிறர், மகிழுமாறு இன்பமாகப் பேசி அவரோடு நட்புச் செய்தலை அறியாதவர்கள், நண்பராய் இருப்பவரைப் பற்றியும் புறங்கூறிப் பிரித்து விடுவர்.

இன்றைய பொன்மொழி

ஜேம்ஸ் அலன் 

ஒரு அழகிய கனவை, உயரிய கொள்கையைத் தன் இதயத்தில் ஏந்திய ஒருவன் ஒருநாள் அது உண்மையாவதைக் காண்பான்.



ஞாயிறு, அக்டோபர் 30, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

எந்த ஒரு முட்டாளும் துப்பாக்கியால் சுடலாம்.
ஒரு அறிவாளிக்குத்தான் தெரியும் எப்போது துப்பாக்கியால் சுடவேண்டும் என்பது.

சனி, அக்டோபர் 29, 2011

அந்திமாலையில் அறிமுகம்

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே,
இன்றைய தினம் உங்கள் 'அந்திமாலை'  ஒரு புதிய படைப்பாளியை உங்கள் முன்னால் அறிமுகம் செய்கிறது. அவர் கடந்த பல மாதங்களாக அந்திமாலையின் முகநூல் நண்பராக (Facebook) இருந்துவரும் திரு.சஞ்சயன் செல்வ மாணிக்கம் ஆவார். புலம்பெயர் மண்ணில் நோர்வேயின் தலைநகரமாகிய ஒஸ்லோவில்(Oslo) கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் இவர் தமிழின்மீதும், எழுத்துத் துறையின்மீதும் அடங்காத பற்றுக் கொண்ட, வளர்ந்துவரும் ஒரு எழுத்தாளர் ஆவார்.
ஆரம்ப காலங்களில் நோர்வேயிலிருந்து வெளியாகிய 'சுவடுகள்' எனும் இதழில் எழுதி தனது எழுத்துப் பயணத்தை ஆரம்பித்த இவர் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து "சாதாரணமானவனின் மனது" (visaran.blogspot.com) எனும் பெயருடைய ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து, அதில் தொடர்ந்து தனது எண்ணங்களை அழகு தமிழில் எழுதி வருகிறார்.
இலங்கையில் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், இவரது பெற்றோர்கள் அரச உத்தியோகத்தர்களாக பணியாற்றிய காரணத்தால், அவர்களுக்குப்  பணியில் பல ஊர்களுக்கும் 'மாறுதல்' கிடைத்தபோதெல்லாம் அவர்களுடனே பல ஊர்களிலும் வாழ நேர்ந்தது. அந்த வகையில் தனது இளமைக் காலங்களில் கொழும்பு, மட்டக்களப்பு, ஏறாவூர், அக்கரைப் பற்று, பதுளை, பிபிலை எனப் பல பகுதிகளிலும் வாழ்ந்ததாகக் குறிப்பிடும் இவர், தனது உயர் தரக் கல்வியைக் கற்ற மட்டக்களப்பு மெதடிஸ்த பாடசாலையே தனக்கு தமிழ் மொழியின்மீதும், எழுத்தின்மீதும் தீராத 'காதலை' ஏற்படுத்தியதாகக் கூறுகிறார்.
தனது பள்ளிக் காலத்தில் தனக்கு தமிழின்மீது தீராத ஆர்வம் ஏற்படக் காரணமானவர்கள் எனத் தனது தாயாரையும், 'சர்மா' என்ற ஆசிரியரையும், 'விஜயரட்ணம்' எனும் ஆசிரியரையும் குறிப்பிடும் திரு. சஞ்சயன் அவர்கள் புலம்பெயர்ந்து 1987 ஆம் ஆண்டு தொடக்கம் நோர்வே நாட்டில் வாழ்ந்து வருகிறார். அந்நாட்டில் 'கணனித் துறையில்' மேற்படிப்பை நிறைவு செய்து, கடந்த பல ஆண்டுகளாக நோர்வேயின் வெளி நாட்டு அமைச்சு அலுவலகத்தில் 'கணனித்துறை அறிவுரையாளராக' கடமையாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். "எனது வாழ்க்கை எனும் தென்றலில் அசைந்தாடும் இரண்டு அழகுத் தோரணங்கள் அவர்கள்" எனத் தனது பிள்ளைகளைப் பற்றிக் கருத்துரைக்கிறார்.
வாசிப்பின்மீது தனக்கு இருக்கும் அளவு கடந்த ஈடுபாடு பற்றிக் குறிப்பிடும் இவர், "எழுத்தாளர்களான திரு. ராமகிருஷ்ணன், திரு. அ.முத்துலிங்கம் ஆகியோரின் 'பரம விசிறி' நான், அவர்களது 'ஏகலைவனாக' இருப்பதையே நான் விரும்புகிறேன்" என்கிறார்.
'எழுத்தைப் பற்றி' என்ன கருதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு "எழுத்து என்பது வாசகனின் மனதை அசைக்க வேண்டும், அவனது அடி மனதைச் சென்றடைய வேண்டும் என்பது எனது அவா" எனக் குறிப்பிடும் திரு.சஞ்சயன் அவர்கள் "எனக்கு எழுத்துலகின் விதிமுறைகள், நுட்பங்கள் என்று எதுவுமே தெரியாது, என் மனது எப்படி எழுதச் சொல்கிறதோ, அதையே எழுதி வருகிறேன்" என்கிறார் மிகவும் தன்னடக்கத்துடன். இன்றைய தினம் உங்கள் 'அந்திமாலையில்' இவரது ஆக்கங்களுள் ஒன்றாகிய "நினைவுக் கடலின் முத்துக்கள்" எனும் படைப்பு இடம்பெறுகிறது.
அந்திமாலையின் தளத்திற்குப் புதிய படைப்பாளியாக வருகை தந்திருக்கும் திரு.சஞ்சயன் செல்வமாணிக்கம் அவர்களை நல்வரவு கூறி வரவேற்பதில் பெருமையடைகிறோம்.

ஆசிரிய பீடம் 
அந்திமாலை.

நினைவுக் கடலின் முத்துக்கள்

ஆக்கம்: செ.சஞ்சயன், நோர்வே.
ஏறத்தாள 33 - 34 வருடங்களுக்கு முன்னான நினைவுச் சிப்பிக்குள் முத்தாய் ஒளிந்திருந்த கதை இது. ஏனோ இன்று நினைவில் கரை தட்டியது.

காலம் 1976 -77 கள். மட்டக்களப்பு மாவட்டத்தின்  பிரபல்யமான பாடசாலையாகிய மெதடிஸ்த மத்திய கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற  கனாக்காலம்.

என்னுடன் பதுளையில் சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் படித்த நண்பனும் அவனின் இரு சகோதரர்களும் என்னுடன் விடுதியில் தங்கியிருந்தார்கள். ஆரம்ப காலங்களில், மட்டக்களப்பு மண்ணின் புழுதி, மனத்தையும் உடலையும் ஆட்கொள்ள முதல் எனக்கு நண்பனாக ப‌ழைய பதுளை நண்பன் மட்டுமே இருந்தான்.

இவர்களின் 'பதுளைத் தமிழ்' மட்டக்களப்புத் தமிழுக்கு புதிதாய் இருந்ததால் இவர்களின் தமிழ் வேடிக்கையாய் இருந்தது பலருக்கு. நக்கலுக்கும், கிண்டலுக்கும் உட்பட்டார்கள்.  காலப் போக்கில் மொழிவேறுபாடுகள் மறைந்து போயின. விடுதி வாழ்க்கை என்பது ஒரு வித இயந்திரத் தன்மையான வாழ்க்கை. நேரம் தவறாமால் எல்லாமே நடக்கும். சூரியன் உதித்து மறைவது போல.

காலையில் எழும்பி மாலையில் மயங்கும் வரை எல்லாமே அட்டவணையிடப்பட்டிருக்கும். மாணவ தலைவர்களின் மிரட்டல்களுக்கும், ஆசிரியர்களின் கண்டிப்புக்கும், இவ்றையெல்லாம் மீறி ”முற்றும் உணர்ந்த” எங்கள் அதிபர் பிரின்ஸ் காசிநாதரின் ”கழுகுக் கண்களையும்” மீறி எம்மால் எதையும் செய்ய முடியாதிருந்த காலம் அது.

காலையில் மேற் பக்கம் கருகியிருக்கும் ஒரு றாத்தல் பாண் மூன்றாக வெட்டப்பட்டு சம்பலுடன் பரிமாறப்படும். அன்றைய காலையுணவுக்கு பொறுப்பானவர்கள் எமது நண்பர்கள் எனின் மூன்றில் ஒன்று என்னும் விதி யாருக்கும் தெரியாமல் மீறப்பட்டு, எம்மிலும் சிறியவன் ஒருவனுக்கு காலையுணவு ஏறக்குறைய இல்லாது போயிருக்கும்.  பசியின் முன் நியாயம் அடிபட்டுப்போகும் என்பதை முதன் முதலில் உணர்த்திய இடம் எமது உணவுச்சாலையே.

அப்போதெல்லாம் பாடசாலை இரு நேரங்கள் நடைபெற்றது. மதிய இடைவேளை நீண்டிருக்கும். வெட்டி எடுத்த தண்டவாளத்தில் இரும்புத் துண்டால் அடித்து சாப்பாட்டு நேரம் அறிவிக்கப்பட்டதும் உணவுச் சாலையின் கதவுக்கருகில் வரிசையில் நின்று மாணவர் தலைவர்களின் கட்டளைப்படி உட்புகுந்து எனக்கு என்று வழங்கப்பட்ட இடத்தில் எனது அலுமீனிய தட்டில் இடப்பட்டிருக்கம் சோற்றின் அளவையும் கறிகளின் அளவையும் கண்கள் அளவெடுக்கும் வரை மனம் பெரும் பாடு படும். அன்று உணவு பரிமாறுவது எமது நண்பர்களில் ஒருவராக இருந்தால் எமது பாடு கொண்டாட்டம் தான். இல்லையேல் திண்டாட்டம். கொண்டாட்டமும் திண்டாட்டமும் . இரவையும் பகலையும் போல் மாறிக் கொண்டேயிருந்தது.

மாதத்தில் ஒரு நாள் அதாவது முழு நிலவன்று இரவு கல்வி நேரம் இல்லாதிருக்கும். விளையாட்டுகள் களைகட்டும். மகிழ்ச்சியின் உச்சத்தில் கண்ணயரும் வரை கொண்டாட்டமாய் கழியும் ஒரே ஒரு இரவு, அந்த முழு நிலவின் இரவொன்றே. இந்த ஒரு நாளுக்காவே வாழ்ந்திருந்த காலங்கள் அவை.

இவ்வாறு நானும் எனது பதுளை நண்பர்களும் விடுதி வாழ்க்கைக்கு இசைவாக்கம் அடைந்திருந்தோம். எனது வகுப்புத் தோழனும் இன்றைய காலத்தில் பாரீஸ் நகரத்தில் வசிப்பவருமாகிய நண்பர் ராஜேந்திரன் என்பவரும் எம்முடன் விடுதியில் தங்கியிருந்தா(ன்)ர்.

எங்களின் பெற்றோர்கள் விரும்பியதை நாம் பாடசாலையில் செய்தோமோ நானறியேன். ஆனால் நாம் விரும்பியதை தேவைக்கதிகமாகவே செய்தோம். நானும், எனது பதுளை நண்பர்கள் இந்துக்கள். இந்த ராஜேந்திரன் ரோமன் கத்தோலிக்கவர். பகலில் உயிர் நண்பர்களாய் இருந்த நாம் அதிகாலையில் மட்டும் எலியும் பூனையுமாய் இருக்க வேண்டிய காலம் எமக்குத் தெரியாமலே எம்மை சூழ்ந்து கொண்டது.

இந்துக்களின் சுவாமியறை ஒரு மண்டபத்தின் வலது கோடியிலும், ரோமன் கத்தோலிக்கத்தவரின் ஜெபி்க்கும் அறை இடது கோடியுலும் இருந்தது. இந்து மாணவதலைவர்கள் என்னிடம் தினமும் பூப்பறித்து சுவாமிப்படங்களை அலங்கரிக்கும் பொறுப்பை தந்த போது ரோமன் கதோலிக்கத்து பூஜையறையை மலர்களால் அலங்கரிக்கும் பொறுப்பு ராஜேந்திரனிடம் கொடுக்கப்பட்டது.

தினமும் யார் முதலில் பூப்பறிப்பது என்று பெரும் போட்டி ஆரம்பமாயிற்று. சிவனே என்று மணியடிக்கும்வரை தூங்கும் 'கும்பகர்ணனின் தம்பி' நான்.  நான் எழும்பும் போது பூக்கள் எல்லாம் ரோமன் கத்தோலிக்க ஜெபமண்டபத்தில் யேசுநாதரையும், புனித மரியாளையும் அலங்கரித்துக்கொண்டிருக்கும். முருகனும், சிவபெருமானும் பூக்கள் இன்றி பரிதாபமாய் இருப்பார்கள். இந்த சரித்திர தோல்வியை இந்து மாணவதலைவர்களால் தாங்க முடியாதுபோயிற்று. 

என்னிடம் இருந்த பொறுப்பு பறிக்கப்பட்டு பதுளை நண்பர்களிடம் கொடுக்கப்பட்டது. அடுத்த நாள் காலை யேசுவுக்கும், புனித மரியாளுக்கும் பூ இருக்கவில்லை. முருகனில் இருந்து சரஸ்வதி வரை என்று எல்லோரும் பூவினால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள்.

எங்கள் கடவுளின் மானம் காப்பாற்றிய வீரர்களாக எனது பதுளை நண்பனும் அவனின் சகோதரர்களும் அடையாளம் காணப்பட்டு பாராட்டப் பட்டார்கள். அவர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டோடியது.

இந்தத் தோல்வியை ரோமன் கத்தோலிக்க பக்கத்தில் ஈடு செய்ய நண்பன் ராஜேந்திரன் பணிக்கப்பட்டான். அன்றில் இருந்து  தொடங்கியது 'பெரும் யுத்தம்'. யார் முதலில் எழும்புகிறானோ அவன் எல்லா பூக்களையும் பறித்து தனது கடவுளுக்கு படைத்தான். மற்றவன் பூக்கள் தேடி விடுதியை விட்டு அலைய  வெளியே செல்ல வேண்டியேற்பட்டது.

5.30 க்கு எழும்பி பூ பறிக்கும் இவர்களின் போட்டியால் இவர்கள் எழும்பும் நேரம் காலை 5 மணியாகி, பின்பு 4 மணியாகி, அதன் பின்பு 3 மணியாகி இறுதியில்  சாமமாகியது. சாமத்தில் பூக்கள் பூக்காது என்பதால் இவர்கள் பூக்களின் மொட்டுக்களைப் பிடுங்கி தண்ணீரில் போட்டு சாமியறையில் வைக்கத் தொடங்கினார்கள். இதுவே நாளைடைவில் இரவு 10மணிக்கே பாடசாலை எல்லைக்குள் இருந்த நாளை பூக்க வேண்டிய சகல மொட்டுக்களும் பறிக்கப்பட்டு தண்ணீரில் இடப்பட்டு மறுநாள் கடவுள்களுக்கு படைக்கப்பட்டது.

பூக்கள் தேவைப்படாத இஸ்லாமிய நண்பர்களை இருபகுதியினரும் சமமாகப் பிரித்து எடுத்து "நீ எங்களுக்கு பூ பறித்து தர வேண்டும்" என்ற கூத்தும் சில காலம் நடந்தது. அவர்களும் அதிகாலையில் தொழுகைக்கு சென்று வரும் போதெல்லாம் இரு பகுதியினருக்கும் பூக்களை வெளியில் இருந்து கொண்டு வந்தது தந்தனர். 'மத ஒற்றுமையின்' உச்சம் அது.

நான்  மாணவர் தலைவராகி, பின்பு சிரேஸ்ட மாணவ தலைவராக வந்த பின்பும் இதே கூத்து தொடர்ந்தது. நானும் ரோமன் கத்தோலிக்க மாணவர்களை கட்டுப்படுத்தி என் பங்குக்கு என் தெய்வங்களுக்கு பூ பறிக்க வசதிசெய்து கொடுத்‌து "புண்ணியம்" தேடிக் கொண்டேன்.

ஏறத்தாள 33 வருடங்களின் பின் ஓர் நாள் எனது கல்லூரிக்குள் நுழைந்து எங்கள் கால்களின் தடங்களை தேடி நடந்து கொண்டிருந்தேன். மனம் காற்றிலும் கடுகி 33 வருடங்களைத் தேடி ஓட ஒவ்வொரு இடமும் ஆயிரம் கதை சொல்லிற்று.

மேசையில் சப்பாணி போட்டு இருந்து சங்கீதம் கற்பித்த மகாலிங்கம் மாஸ்டரின் வகுப்பறை, அதனருகே தண்ணீர்ப் பைப், பழைய கன்டீன். கன்டீனின் அருகே ‌அதே பழைய மணியடிக்கும் தண்டவாளத் துண்டு. அதற்கங்கால் விடுதியின்  உணவுச்சாலை, அதற்கப்பால் விடுதியாசிரியர் சுந்திரலிங்கம் அண்ணணின் அறையும், புகை படிந்து கரிய நிறத்திலிருக்கும் குசினி, கழிவு நீர் தேங்கி நிற்கும் கான். அதற்குப் பின்னால் குளிக்கும்  தண்ணீர்த் தொட்டிகள்,  தண்ணீர் டாங்க், கிணறு.

இப்படி எல்லா இடங்களையும் மனதால் நுகர்ந்து திரிகிறேன். என்னைக் கடந்தோடும் இன்றைய மாணவர்கள். அவர்களிடமும் ‌ எம்மிடமிருந்த அதே குறும்பு, குசும்பு, சேட்டைகள். விடுதியின் சுண்ணாம்புச் சுவற்றை தடவி சுகம் காணும் என்னை குறும்புக்கண்களால் அளவெடுத்துப் போகிறார்கள் சிலர். இங்கே படித்தீர்களா? Old boy?  என்று குசலம் விசாரித்தவனின் தலைகோதி புன்னகைத்து தலையாட்டினேன் வார்த்தைகள் ஏனோ வர மறுத்தன.

கெதியில இங்க ”புது பில்டிங்” வருது. பழைய hostel (மாணவர் தங்கும் விடுதி) ஐ உடைக்கப்போறாங்களாம் என்றான் அவன். புன்னகைத்து ”தெரியுமய்யா” என்றேன். 

அதிபரின் 'கந்தோர்' கதவினருகே நின்ற போது என்னையறியாது கழுத்து வரை மேற்சட்டை பொத்தான்களை கை தன்னிச்சையாக பூட்டிய பின்பே நான் என்ன செய்கிறேன் என்பது புரிந்து. பாடசாலை நாட்களில் மேற்சட்டை பொத்தான்கள் இன்றி இந்தக் 'கந்தோருக்குள்' உட்புகுவது தற்கொலைக்குச் சமம். அவ்வளவு கடுமையான அதிபர் எமது 'பிரின்ஸ் சேர்'. இன்றோ நிலமை வேறு. இருப்பினும்  தன்னிச்சையாக பூட்டப்பட்ட பொத்தான்களை களட்ட விரும்பமின்றி உட்புகுந்தேன்.

கண்ணாடிப் பெட்டியினுள் எமது காலத்துப் ”பெரு மண்டபத்தின்” இரு அத்திவாரக் கற்கள் ஞாபக சின்னங்களாய் இருக்க, இன்றைய அதிபர், பெருமையாய் தன் காலத்தில் கட்டப்பட்ட புதிய மண்டபத்தைப் பற்றி விபரித்தார். மகிழ்ச்சியாய் இருந்தாலும் எதையோ இழந்தது போலிருந்தது எனக்கு. 

அங்கிருந்து வெளியேறிய போது, போட்டி போட்டு பூப்பறித்த செம்பரத்தை, மல்லிகை, நந்தியாவட்டைப் பூ மரங்களை கண்கள் தேடின. புதிது புதிதாய் பூத்திருந்த சீமெந்துப் பூக்களின் சுவர்களின் மத்தியில் எங்களின் நட்பூக்கள் எமது எதையும் காணக்கிடைக்கவில்லை.

கடந்து ஓடிய மாணவர்களின் வேகத்தில் கிளம்பிய புழுதி மட்டும் பாடசாலையின் வாசனையுடன் இருந்தது.

...........

பூப்பறிப்பதில் கில்லாடியும், அதற்குப் பின்னான காலங்களில் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட ”பதுளை நண்பன்”  ஒருவனுக்கு இது சமர்ப்பணம்.

வெள்ளி, அக்டோபர் 28, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

பலர் உங்கள் வாழ்வில் 'பாடமாக' அமைந்து விடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே உங்கள் வாழ்வின் 'வரமாக' வந்து சேர்கிறார்கள்.

வியாழன், அக்டோபர் 27, 2011

வாழ்வியல் குறள் - 15

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க் 

வாய்மை

பார்த்ததை, கேட்டதை அப்படியே கூறும்
வார்த்தை வாய்மை ஆகிறது.
வாய்மை பேசுவோன் மிகச் சிறந்;த
தூய்மையாளன் பெயரைப் பெறுகிறான்.
ண்மையொளி உள்ளத்தில் பிறந்தால் ஒருவன்
பண்ணும் செயலிலுமது பிரதிபலிக்கும்.
ள்ளத்தில் தூய்மை, பேச்சில் வாய்மை
கள்ளமற்ற வாழ்வுப் பாதையாகும்.
வாய்மை பேசினால் என்றும் நன்மை
வாய்த்தல் என்பது வாய்மையல்ல.
வாய்மை பேசாதவன் மனச்சாட்சி அவனை
ஓய்ந்து அமைதியடைய விடாது.
ரிச்சந்திரனியல் எல்லோரிடமும் வாய்ப்பது என்பது
அரிதான ஒரு செயல்.
வாய்மையாளனை வாயார வாழ்த்தாத பலர் 
வாழும் உலகம் இது.
வாய்மை தேய்மையற்ற முதன்மை வழி.
சாய்மையின்றி நேர் வழியேகலாம்.
வாய்மையால் உலகாள முடியாது என்று 
பொய்மையாளர்  நிரூபிக்கிறார் இன்று.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

இந்த உலகமே உன்னைக் கைவிட்டாலும், அங்கு தோன்றி உனக்குக் கைகொடுப்பான் உன் உண்மை நண்பன்.

புதன், அக்டோபர் 26, 2011

தீபாவளி வாழ்த்து

ஆக்கம்: மனுவேல் மகன்,  பிரான்ஸ்


நான் முதலாம் வகுப்புப் படிக்கும்போதுதான்  முதன் முதலாய் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அது ஒரு சாதாரண போஸ்ட் கார்ட்டில் அழகான ஓவியம் வரைந்த ஒரு தீபாவளி வாழ்த்து. அதை என் பால்ய நண்பன் அனுப்பியிருந்தான். அந்த ஓவியத்தை ஆலு மாமா வரைந்திருந்தார். அது ஒரு கடற்கரையோர மாலைகாட்சியாக இருந்தது. சாய்ந்த தென்னை, மறையும் சூரியன், அலையாடி நிற்கும் படகு,;வானத்தில் பறக்கும் பறவைகள் என மிக சிரத்தையோடு வரையப் பட்ட ஓவியமாய் இருந்தது.
எனக்கோ கொள்ளை மகிழ்ச்சி.முதல் கடிதம் அதுவும் ஒரு வாழ்த்து எனக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் இது பொறுக்காத என் சகோதரன் தன் வேலையைக் காட்டினான். "இப்பிடி வாழ்த்து அனுப்பினால் அதுபோலவே நாங்களும் கீறி அனுப்பவேணும்.இல்லாட்டிப் படிப்பு வராது" என்று என்னை மிரட்டினான். எனக்குப் பிடிக்காத பாடம் சித்திரம். ஏனென்றால் எப்பிடி உயிரக் குடுத்து மாங்காய் கீறினாலும் அது தேங்காய் மாதிரித்தான் வரும். (இப்பவரைக்கும் செவ்வரத்தம்பூ மட்டுமே ஒழுங்காய்க் கீறத்தெரியும். அதுவும்  'சுப்பிரமணியம் சேர்' இன்  புண்ணியத்தில்.)

அந்த வெருட்டில் பயந்து போய் அண்ணனைப் படம் வரைந்து தரும்படி கெஞ்சினேன். ஏனென்றால் அவன் ஒரு 'இட்டுக்கட்டிக் கதை சொல்லும் விண்ணன்' என்பதை விட, சிறந்த ஓவியனாய் அன்று எனக்குத்தெரிந்தான். ஆனால் என் கெஞ்சலை சற்றும் காதில் வாங்காத அவன், மழை பெய்து ஈரமாய் இருந்த எங்கள் வீட்டு முற்றத்தில் M .G .R . படம் வரைந்து கொண்டிருந்தான். வந்த கோவத்தில் பக்கத்தில் கிடந்த மரக் குற்றியால் விட்டேன் ஒரு எறி. ஏபிரகாம் வார்ட்டில் ரெண்டு தையல் போட்டான். ஆஸ்பத்திரியால் அண்ணனைக் கூட்டிக் கொண்டுவந்த அப்பா, நேரே பூவரசில் ஒரு பெரிய தடி முறித்து வந்தார். நான் குய்யோ முறையோ எனக் கத்திக் குளறி என் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க, உண்மை விழங்கிய அப்பா, மறுநாள் முருகன், சரஸ்வதி, பிள்ளையார் என சாமிப் படங்களுடன் அச்சான தீபாவளி வாழ்த்து அட்டைகள் பல வாங்கி வந்து எனக்கும் என் அண்ணனுக்கும் கொடுத்தார் .

அதுவே நான் பார்த்த முதல் வாழ்த்து அட்டை. தொடர்ந்து பொங்கல், கிறிஸ்மஸ், புதுவருடம் என வாழ்த்து அட்டைகள் மூலம் அன்பைப் பரிமாறி வந்தோம். ஆனால் கைத் தொலைபேசி வந்ததும் எல்லாம் முடிந்து போனது .இப்போது யாராவது எனக்கு வாழ்த்து அட்டை அனுப்புவார்களா? எனக் காத்திருக்கிறேன். காத்துக்கொண்டே இருக்கிறேன். என் மகன் கேட்டால், கீறிக் கொடுக்கசெவ்வரத்தம்பூவும்  நானும் தயாராய் இருக்கிறோம். அவனோ தொலை பேசியில் "ஹாப்பி தீபாவளி, bonne fête " என வாழ்த்திக் கொண்டு திரியிறான்.
நன்றி:manuvelmahan.blogspot.com

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 



உன் மனம் வலிக்கும்போது சிரி,
பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை.


செவ்வாய், அக்டோபர் 25, 2011

நாடுகாண் பயணம் - செக் குடியரசு

நாட்டின் பெயர்:
செக் குடியரசு (Czech republic)

அமைவிடம்:
மத்திய ஐரோப்பா 

எல்லைகள்:
வட கிழக்கு - போலந்து 
கிழக்கு - சுலோவாக்கியா 
தெற்கு - ஒஸ்திரியா 
மேற்கு, வட மேற்கு - ஜேர்மனி


தலைநகரம்:
பிராக் அல்லது பிரகா (Prague / Praha)

அலுவலக மொழிகள்:
செக் மற்றும் சுலோவாக் 

அங்கீகரிக்கப்பட்ட ஏனைய மொழிகள்:
பல்கேரியன், குரோசியன், ஜெர்மன், கிரேக்க மொழி, ஹங்கேரியன், பொலிஷ், ரோமானி, ரஷ்யன், ருசின், செர்பியன், மற்றும் உக்ரேனியன்.

இனப் பிரிவுகள்:
ஷெக்ஸ் 90.5 %
மோராவியன்ஸ் 3.7 %
சுலோவாக்ஸ் 1.9 %
ஏனையோர்  3.7 %


சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கம் 26,8 %
புரட்டஸ்தாந்துகள் 2,1 %
ஏனையோர் 3,3 %
வகைப்படுத்த முடியாதவர் 8,8 %
நாத்தீகர் 59 %

கல்வியறிவு:
99 % *(ஐரோப்பாவிலேயே கல்வியறிவு அதிகம் உள்ள நாடுகளுள் ஒன்று)

ஆயுட்காலம்:
ஆண்கள் 73,9 வருடங்கள் 
பெண்கள் 80,6 வருடங்கள் 

அரசாங்க முறை:
பாராளுமன்ற ஜனநாயகக் குடியரசு 

ஜனாதிபதி:
வக்ளவ் கிளாவ்ஸ் (Vaclav Klaus) *இது 25.10.2011 அன்று உள்ள நிலவரமாகும்.


பிரதமர்:
பெற் நிகோஸ் (Petr Necas) *இது 25.10.2011 அன்று உள்ள நிலவரமாகும்.

செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து செக் குடியரசாகப் பிரிந்த தேதி:
1.1.1993

பரப்பளவு:
78,866 சதுர கிலோ மீட்டர்கள்.


சனத்தொகை:
10,535,811 (2011 மதிப்பீடு)

நாணயம்:
செக் கொருனா(Czech koruna / CZK)

இணையத் தளக் குறியீடு:
.cz

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 420


விவசாய உற்பத்திகள்:
கோதுமை, உருளைக்கிழங்கு, இனிப்பு(சீனி)கிழங்கு, பழங்கள், பூக்கள், பன்றி மற்றும் பன்றி இறைச்சி சம்பந்தமான பொருட்கள், கோழி இறைச்சி, கோழி முட்டை.

தொழில் மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள்:
வாகனங்கள், உலோகங்கள் தயாரிப்பு, இயந்திரங்கள், மின்சார உபகரணங்கள், கண்ணாடி, இராணுவத் தளபாடங்கள்(ஆயுதங்கள்)

ஏற்றுமதிகள்:
இயந்திரங்கள், வாகன உதிரிப் பாகங்கள், எரிபொருட்கள், இரசாயனப் பொருட்கள்.

இயற்கை வளங்கள்:
நிலக்கரி, மரம், லிக்னைட், யுரேனியம், மக்னசிட்

நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • கடந்த 2004 ஆம் ஆண்டுவரை கிழக்கு ஐரோப்பியப் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த மேற்படி நாடு 2004 ஆம் ஆண்டு தொடக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் ஆன போதிலும் 'யூரோ' நாணயத்தில் இணையவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
  • ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் கல்வியறிவிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் உயர்ந்து நிற்கும் நாடு.
  • வருடம் ஒன்றிற்கு பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மகிழுந்துகளை(கார்களை) தயாரிக்கும் நாடு.

திங்கள், அக்டோபர் 24, 2011

தாரமும் குருவும் . பகுதி - 4.9


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)

பகுதி 4.9

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)


சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டால்தான் நல்ல பாப்பா 
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா 

தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா?
சிலுக்குச் சட்டை சீனாப் பொம்மை பலூன் வேணுமா?
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரணுமா?
கலகலன்னு சிரிச்சுக் கிட்டு என்னைப் பாரம்மா...
(சின்னப் பாப்பா)
கோபம் தீர்ந்த அப்பா உன்னைக் கூப்பிடுவாரு-நீ 
கொஞ்சிக் கொஞ்சிப் பேசினால்தான் சாப்பிடுவாரு 
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகிவிடாது-உனக்குக் 
கொய்யாப்பழம் பறித்துத் தாரேன் அழவும் கூடாது.
(சின்னப் பாப்பா)
################################################


மேலேயுள்ள பாடலை எங்கோ கேட்ட ஞாபகம் வருகிறதா? உங்களுக்கு எங்கு, எச்சந்தர்ப்பத்தில் என்பது நினைவில் இல்லாவிட்டால், இப்பாடல் உங்கள் மனதில் பசுமையான நினைவு எதனையும் விதைக்கவில்லை என்று பொருள். ஆனால் எனக்கு இந்தப் பாடலை எங்கு கேட்க நேர்ந்தாலும் அடுத்த கணம் நான் அல்லைப்பிட்டியில் பாலர் வகுப்புப் படித்த அந்தக் கட்டிடமும்(அது கட்டிடம் அல்ல, அது தனியார் ஒருவருக்குச் சொந்தமான வீடு), எங்கள் அழகே உருவான 'கமலினி' டீச்சரும் நினைவுக்கு வருவார்கள். ஒரு தனியார் வீட்டில் பாலர் பாடசாலை என்று குறிப்பிட்டேன் அல்லவா? அது இந்து சமயத்தின்மீதும், தமிழின்மீதும் தீராத பற்றுக் கொண்ட ஒருவரின் வீடு. அந்த வீட்டின் ஒரு பகுதியே எங்கள் பாலர் பாடசாலை. அந்த வீட்டின் மேற்படி பகுதியை நான் மேலே குறிப்பிட்ட அந்தப் பெரிய மனிதர் வாடகை ஏதும் வாங்காமல் 'பாலர் பள்ளிக்காக' பகல் நேரங்களில் கொடுத்து உதவியிருந்தார் என்பது எனது நம்பிக்கை. மேற்படி பெரியவர் பார்ப்பதற்கு அசப்பில் 'திருநாவுக்கரசு நாயனார்' போல இருப்பார். இந்து சமயத்தவர் தவிர்ந்த ஏனைய வாசகர்கள் இவ்விடத்தில் தலையில் முடி அதிகம் இல்லாத, நெற்றியில் எப்போதும் திருநீற்றுக் குறியுடன் காணப்படும், வேட்டி கட்டிய 'சைவப் பழம்' போன்ற ஒரு மனிதரைக் கற்பனை செய்து பாருங்கள். மேற்படி பெரியவர் தனது வீட்டின் ஒரு பகுதியைப் பாலர் பள்ளிக்குக் கொடுத்து உதவியதற்கு 'வாடகை' வசூலித்தார் என்று இதை வாசிக்கும் யாருக்காவது தெரிந்திருந்தால்(அறிந்து வைத்திருந்தால்) 'தவறான தகவலை தந்ததற்காக' என்னை மன்னியுங்கள். எல்லோருக்கும் மரணம் வருவது உறுதி. ஆனால் அந்த வீட்டிலிருந்த மேற்படி தாத்தாவுக்கு 'சாவு' வராது என்பது எனது உறுதியான நம்பிக்கையாக இருந்தது. ஆனாலும் கிணறுகள் நிறைந்து கிடக்கும் ஒரு மார்கழி மாதத்தில் அந்தத் தாத்தா ஒரு கிணற்றுக்குள் தவறுதலாக வீழ்ந்து இறந்து போனார். அவர் இறக்கும்போது நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அவரது 'இறப்பு' எமது கிராமத்தை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேபோல் என்னையும் மிகவும் அதிர்ச்சி கொள்ளச் செய்தது. எனக்கு எந்த வகையிலும் உறவு முறை அல்லாத அந்தத் தாத்தா இறந்தபோது எங்கள் 'குடும்ப' உறவினர் ஒருவரை இழந்தது போன்ற துக்கத்தை அடைந்தேன். அதற்கான காரணம் எனக்கு இன்றுவரை புரியவில்லை.
மேலேயுள்ள பாடலையும் 'கமலினி' டீச்சரையும் தொடர்பு படுத்திய நான், திடீரென்று உங்களை வேறு திசையில் அழைத்துச் சென்று விட்டேன். பாலர் வகுப்பில் ஆசிரியைகள் ஆத்தி சூடியையும், கொன்றை வேந்தனையும்,பாரதியார் பாடல்களையும், குருவிகள் பற்றிய பாடலையும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில் எங்கள் கமலினி டீச்சர் மேற்படி 'சினிமாப் பாடலை' எங்கள் பாடத் திட்டத்தில்???(Syllabus) துணிந்து சேர்த்ததுமல்லாமல் அதை அன்றைய என்னையொத்த தலைமுறையினரின் மனங்களில் மிகவும் ஆழமாக பதியவும் செய்திருக்கிறார் என்பதை நினைந்து வியக்கிறேன். மேற்படி பாடல் ஒரு சினிமாப் பாடல் என்பதை அறிந்து கொள்ளும்போது எனக்கு இருபது வயது ஆகியிருந்தது. என்னோடு பாலர் வகுப்பில் ஒன்றாகப் படித்த நண்பர்/நண்பிகளில்  ஒருவராவது இத்தொடரை வாசித்து, நாங்கள் கமலினி டீச்சருடன் சேர்ந்து இப்பாடலைப் பாடும்போது என்ன செய்தோம் என்பதை மனக்கண்முன் கொண்டு வந்தால் எனக்கு மகிழ்ச்சியே.
எனது ஊகத்தின்படி இலங்கையில் பாலர் பாடசாலைக்கு என்று பெரிதாக பாடத்திட்டம் (Syllabus) எதுவும் இருக்காது. ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாடல்களையும், கதைகளையும், ஒன்று, இரண்டு, மூன்று எனத் தொடக்கி நூறு வரையும் அ, ஆ தொடக்கி வரையும் சொல்லிக் கொடுப்பர்.நான் சொல்வது இலங்கையில் 1970 களில் நிலவிய சூழல் ஆகும். அதன் பின்னர் 1980 களின் தொடக்கத்தில் ஒவ்வொரு அரசாங்கப் பாடசாலையிலும் பாலர் வகுப்பு என்பது கட்டாயமாக்கப் பட்ட பின்னர், பாலர் வகுப்பிற்கென்று ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டபின்னர் பாலர் வகுப்புப் பிள்ளைகளுக்கென்று பாடப் புத்தகமும், பாடத் திட்டமும் அரசினால்  தயாரிக்கப் பட்டு விட்டது.
"ஓடி விளையாடு பாப்பாவை" எங்களுக்குக் கற்றுக் கொடுத்த அதே கமலினி டீச்சர் மேற்படி 'சினிமாப் பாடலையும்' எங்கள் மனங்களில் பதிய வைத்த விந்தையை இப்போது நினைக்கும்போதும் ஆச்சரியமாக உள்ளது. என்னோடு பாலர் வகுப்பில் படித்த மாணாக்கர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பல்வேறு நாடுகளில் வாழ்கின்றனர். அவர்களில் முக்கால்வாசிப் பேருக்கும் மேற்பட்டோர் இப்பாடலை நினைவில் வைத்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. "இளமையில் கல்வி சிலையில் எழுத்து" அல்லவா?
இப்பாடலை எங்கள் கமலினி டீச்சர் கற்றுக் கொடுத்த விதமே சற்று வித்தியாசமானது என்று கூறினேன் அல்லவா? அதை அறிந்து கொள்ள இரண்டு வாரங்கள் பொறுத்திருங்கள்.

பாடலின் காணொளியை இங்கே பார்வையிடுங்கள்:

காணொளி உதவிக்கு நன்றி:MMK Chakravarthi மற்றும் Real Music
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

ஞாயிறு, அக்டோபர் 23, 2011

வசூலிப்பு

ஆக்கம்: தர்மினி, பிரான்ஸ் 
வெய்யிலைக் கண்டால் தான் வெளியிலே சென்று இதமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. கடந்த இரு மாதங்களாகக் குளிருக்குப் பயமில்லாமல் வீட்டை விட்டு எங்காவது போய்வர விருப்பமாயிருந்தது. பாரீஸில் அப்படியும் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்கிறது .இது கூட மனசுக்கு இதமான காலநிலையாகவே இருக்கிறது.இப்படியாக வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பார்த்து இந்தக் கோடைகால விடுமுறையில் பூங்காக்களைத் தேடிச் சென்று சுத்தமான காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.எமது சுற்றாடலில் வசிப்பவர்களும் அங்கு வருவார்கள்.அப்போது தான் அயலவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து கதைக்க நேரம் கிடைத்தது போலிருக்கும்.
அங்கிருந்து உரையாடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் தன் மகளுக்குக் கட்டாயம் பருவமடைந்ததற்கான சடங்கைச் செய்ய வேண்டும் என்றார்.அந்தச் சிறுமிக்கு பதினொரு வயது.அது நடந்து ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்ட போதும் அவரது கவலையெல்லாம் மகளுடைய சாமத்தியச்சடங்கை ஒரு கொண்டாட்டமாகத் தாங்கள் செய்யாமல் விட்டால் , மற்றவர்கள் தங்களை மதிக்க மாட்டார்கள் என்பதாக இருந்தது.அடுத்த வருடத்திலாவது அக் கொண்டாட்டத்தை நடத்தியே தீருவது என்பதே அவர் பேச்சாயிருந்தது.
எதற்கு அந்த அநாவசிய வேலை?அது  உடலில்  இயற்கையாக நடக்கும் ஒரு செயற்பாடு.அப்படியான சடங்கொன்றைச் செய்ய ஏன் கஷ்ரப்பட வேண்டும்? எங்கள் பழக்கவழக்கம் , கலாச்சாரம் எனும் சாட்டுப்போக்குகள் நமக்கு இப்போது என்ன அவசியத்துக்கு? என்று நான்  அவருடன் கதைத்ததை  அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘அது எப்பிடிச் செய்யாமல் இருக்கிறது?” என்பது தான் அவரது அழுத்தமான கேள்வி.
அது பற்றி மகளுக்குத் தெளிவு ஏற்படுத்துவதும் பயப்பிட எதுவுமில்லை என்று உரையாடவதும் தானே தாய் செய்ய வேண்டியது.அசெளகரியமாக உணர்ந்து கொள்ளும் மகளை ஆதரவாக அரவணைப்பதும் அது பற்றிப் பேசுவதுமல்லவா செய்ய வேண்டியது.ஆனால் பெற்றோர் உடனடியாக பெரும் எடுப்பில் ஒரு கொண்டாட்டம் செய்வது தான் பிரதான வேலை என்று ஓடித்திரிவார்கள்.
பலரும் இந்த நீராட்டுவிழா பற்றிப் பேசிவிட்டார்கள்.ஆனாலும் வெகுசனம் மத்தியில் அது மாற்றப்படாத எண்ணம் தான். புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரும்  சனி ,ஞாயிறு என்றால்  கிலி கொள்கிறார்கள்.அவை ஓய்வெடுக்க வேண்டி விடுமுறை நாட்களாயிருந்தாலும் எம் மக்கள் ஏதாவதொரு சாட்டுச் சொல்லிக் கொண்டாட்டங்களைச் செய்யத் தொடங்கிவிடுவார்கள். நல்ல குளிர் காலத்தில் தான் இந்தப் பிரச்சனைகள் சற்று ஓய்ந்திருக்கும்.ஒரே நாளில் இரண்டு மூன்று விழாக்களுக்குச் சுற்றிச் சுழன்றோடுபவர்களெல்லாம் இருக்கிறார்கள்.
நேரம் விரயமாவது ஒருபுறமெனில் அதற்கான ஆடை ,அணிகலன்கள் வாங்குவது , அன்பளிப்புச் செய்யப் பணம் ஒதுக்குவது என்று சிரமங்களை அடைகிறார்கள். கோபிப்பார்கள், குறைநினைப்பார்கள் என்று எல்லாக் கொண்டாட்டத்திலும் தலைகாட்டுவதே கடமை எனப் பலர் துன்புறுகின்றனர். ஆயினும் நெருக்கமானவர்களின் வைபவங்களில் உளமாரப் பங்கெடுப்பதென்பது வேறு.ஆனால் புறுபுறுத்துக் கொண்டே சென்று வருபவர்கள் தான் பலரும்.ஆனாலும் அதே துயரத்தை விரைவில் மற்றவர்களுக்கும் அவர்கள் வழங்கத் தயாராகிவிடுவர்.ஒரு மகிழ்ச்சி தரும் கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதை இனிய அனுபவமாக உணராமல் அதுவொரு துன்பமாக மற்றவர்களால் நினைக்கப்படுகிறது. அதற்குக் காரணங்கள் அவை வெறும் பணச்சடங்குகளாகப் இருக்கின்றன. அவரவர் பவிசும் பவரும் காட்ட இக்கொண்டாட்டங்களை நடாத்துகின்றனர்.
வருடாவருடம் வந்து கொண்டிருக்கும் பிறந்த நாளை மண்டபம் வாடகைக்கு எடுத்துச் செய்கின்றனர்.அதுவும் நாற்பது ,ஐம்பது ,அறுபது, வயதான கொண்டாட்டங்கள் நடாத்தப்படுவதும் நடக்கின்றது.கத்தோலிக்கரென்றால் ஞானஸ்நானம், முதல்நன்மை என்று இன்னும் நீள்கிறது.திருமணங்கள் போட்டி போட்டுப் பெரும் எடுப்புகளுடன் கடன்பட்டு நடத்தப்படுகின்றன.
தங்கள் பெண்பிள்ளைகள் பருவமடைந்தால் அது ஒன்றிரண்டு வருடங்களாகத் திட்டம் போடப்பட்டு நடத்தும் விழாவாகிவிடுகிறது.தற்போதைய உணவுகளால் பெண்கள் சிறுவயதிலேயே தம் முதல்மாதவிடாயை அடைந்துவிடுகின்றனர்.பத்துப் பதினொரு வயதுச் சிறுமிகள் இச்சடங்கிற்கான காரணம் என்ன என்ற கேள்வியையே யோசிக்க முடியாமல் இருக்கின்றனர்.அவர்கள் சிறுவயதிலிருந்து சென்று வரும் விழாக்கள் அது வழமை தானே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.தமது உறவுச் சிறுமிகள், தமிழ் நண்பிகள் அலங்கரிக்கப்பட்டு அந்நிகழ்வின் கதாநாயகியாக நிற்பது கவர்ந்திருக்கலாம்.விதம் விதமாகப் போட்டோவும் வீடியோவும் எடுப்பது பிடித்திருக்கலாம்.பெற்றோர் செய்வது சரியென்று நம்பலாம்.ஆனால் அக்குழந்தைகளின் பெற்றோர் எல்லாம் அறிந்தும்  அக்கொண்டாட்டத்தைச் செய்கின்றனர்.பல ஆண்டுகளாக உறவினர்களதும் நண்பர்களதும் விழாக்களுக்குச் சென்று அன்பளிப்பாகக் கொடுத்ததை வசூலிக்க இது ஒரு வாய்ப்பென்று கணக்குப் போடுகின்றனர்..பல மாதங்களாக மண்டபம் தேடி அலைகின்றனர். அழைப்பிதழ்களை அச்சடிக்கின்றனர். தமது பெண் குழந்தையை சில நூறு பேர் முன்னிலையில அலங்கரித்து க் காட்சிக்கு நிறுத்துகின்றனர்.இவை போதாதென்று பார்ப்பனனை அழைத்து விளங்காத மந்திரங்களைச் சொல்ல வைத்து காசும் கொடுத்துவிடுகின்றனர்.அச்சிறுமியை மண்டபத்தின் நடுவில் நிறுத்தி தமக்கான வரவுகளை வசூலித்துக் கொள்கின்றனர்.இதைத் தவிர வேறென்ன உண்டு?
பலரும் சொல்லும் காரணம் இது தான், ‘உறவுகள், ஊரவர்கள் ஒன்று சேர்வது’.நண்பர்களை உறவுகளைச் சந்திக்க ஒன்றாக உணவருந்திக் களிக்க ஒரு நாளைத் தீர்மானித்து ஒன்று சேரலாமே.அவ்வாறான உறவுகளும் நட்புகளும் மகிழ்ச்சியாக ஒன்று சேரத் தயாராவதில்லை.அவரவர்கள் தாம் கொடுத்த பணத்தை வாங்குவதற்குக் கணக்குப் போட்டபடியே தான் காசை மடித்து என்பலப்பில் வைக்கிறார்கள்.சனங்கள் தமக்குள் அப்படித் தான் கதைத்துக் கொள்கிறார்கள். இத்தனை வருடங்களாகக் கஸ்ரப்பட்டு உழைத்துக் கொண்டு போய்க் கொடுத்த காசை திரும்ப வாங்க வேண்டுமென்கிறார்கள்.
இன்னும் அதிக வேதனையைத் தருவது தமது பெண்குழந்தைகளைக் காட்சிப் பொருளாக்கிக் காசை வசூலிப்பது தான். புலம்பெயர்ந்து வந்த பின்னர் கூட தேவையற்ற இச்சடங்கை ஏன் செய்ய வேண்டுமென்று பிள்ளைகளே சிந்திக்க முடியாதளவு இதெல்லாம் நம் கலாச்சாரம் என்று சொல்லிச் சொல்லி அவர்களைச் சுயமாகச் சிந்திக்க முடியாதவாறு தான் வளர்த்து வருகின்றனர்.
இங்கு கொண்டாட்டங்கள் என்பது வெறும் கொடுக்கல் வாங்கல்களை வைத்துச் செய்யப்படும் வியாபாரங்களாகி விட்டன.தமது பகட்டைக்காட்டும் அளவு கோல்களாக்குகின்றனர்.