செவ்வாய், ஜனவரி 31, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தினல்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் 
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல். (256)

பொருள்: புலாலைத் தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தார் கொல்லாதிருந்தால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.


இன்றைய பொன்மொழி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 

உண்மையான எந்த மாற்றமும் வெறுமனே விவாதிப்பதாலும், பேசிக்கொண்டிருப்பதாலும் உருவானதாக சரித்திரம் இல்லை.

நாடுகாண் பயணம் - எரித்திரியா

நாட்டின் பெயர்:
எரித்திரியா(Eritrea)

வேறு பெயர்கள்:
எரித்திரிய நாடு 
*தமிழில் எரித்திரேயா என உச்சரிப்போரும் உள்ளனர்.
*எரித்ரியா என்றால் கிரேக்க மொழியில் 'சிவப்பு நாடு' என்று பொருள்.

எல்லைகள்:
மேற்கு - சூடான் 
தெற்கு - எத்தியோப்பியா 
தென்கிழக்கு - டிஜிபோத்தி(சிபூட்டி)
கிழக்கு மற்றும் வடகிழக்கு - செங்கடல் 
கடலுக்கு அப்பால் உள்ள நாடுகளாக யேமன்(ஏமன்) மற்றும் சவுதி அரேபியாவைக் கூறலாம். 

தலைநகரம்:
அஸ்மாரா(Asmara)

அலுவலக மொழிகள்:
அரபி மொழி, ஆங்கிலம், திக்ரின்யா(Tigrinya)

ஏனைய மொழிகள்:
திக்ரெ(Tigre), சாஹோ(Saho), பிலென்(Bilen), அபார்(Afar), குனமா(Kunama), நாரா(Nara), ஹிதாரெப்(Hedareb) மற்றும் இத்தாலிய மொழி. 


இனங்கள்:
திக்ரின்யா(Tigrinya) 55%
திக்ரெ(Tigre) 30%
சாஹோ(Saho) 4%
குனமா(Kunama) 2%
ரசைடா(Rashaida) 2%
பிலென்(Bilen) 2%
ஏனையோர்(அபார், பெனி, அமீர், நாரா) 5%


சமயங்கள்:
கிறீஸ்தவர் 62%
சுன்னி முஸ்லீம்கள் 36% 
*மிகச் சிறிய தொகையில் ஜெகோவாவின் சாட்சிகள்(Jehovah's Witnesses), ஏழாம் நாள் திருச்சபை(The seventh day Adventist church), மற்றும் பஹாய் சமயத்தினர்(Bahai faith). இருப்பினும் இச்சிறுபான்மைச் சமயத்தினருக்குப் 'பகிரங்கமாக' வழிபாடு நடத்தும் உரிமை மறுக்கப் பட்டுள்ளது.

கல்வியறிவு:
58%
*சமுதாயத்தின் அரைப் பங்கிற்கு மேற்பட்ட பெண்கள் 4 ஆம் வகுப்பையும், ஆண்கள் 5 ஆம் வகுப்பையும் தாண்டுவதில்லை.

ஆயுட்காலம்:
ஆண்கள் 60 வருடங்கள் 
பெண்கள் 64 வருடங்கள் 

ஆட்சிமுறை:
ஒற்றை ஆட்சியுடன் கூடிய மாகாண ஆட்சி 

ஜனாதிபதி:
இசையாஸ் அவ்வேர்கி(Isaias Afewerki)
*இது 31.01.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.

இத்தாலியிடம் இருந்து சுதந்திரம்:
நவம்பர் 1941


ஐ.நாவின் மத்தியஸ்தத்துடன் ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை:
1951

எத்தியோப்பியாவிடமிருந்து விடுதலை:
24.05.1993


பரப்பளவு:
117,600 சதுர கிலோ மீட்டர்கள் 

சனத்தொகை:
5,824,000 (2011 மதிப்பீடு)


நாணயம்:
நக்வ்பா(Nakfa / ERN)

இணையத் தளக் குறியீடு:
.er

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 291 

விவசாய உற்பத்திகள்:
இறுங்கு(கம்பு), பருப்பு வகைகள், காய்கறிகள், சோளம், பருத்தி, புகையிலை, கால்நடைகள், மீன்.

தொழில்கள், தொழிற்சாலைகள், வருமானம் தரும் உற்பத்திகள்:
உணவு பதனிடல், மதுபான உற்பத்தி, துணிவகைகள், ஆடைகள் தயாரிப்பு, சிறு கைத்தொழில் உற்பத்திகள், உப்பு, சீமெந்து.

ஏற்றுமதிகள்:
கால்நடைகள்(ஆடு), இறுங்கு(கம்பு), துணிவகைகள், உணவுகள், சிறு கைத்தொழில் உற்பத்திகள்.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • எத்தியோப்பியாவிடமிருந்து 30 வருட கால சுதந்திரப் போரின் பின்னர் 1991 ஆம் ஆண்டில் விடுதலை அடைந்தது.
  • 30 வருட கால உள்நாட்டுப் போரில் பலத்த உயிர்ச் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டது.
  • இந்நாட்டின் பொருளாதாரத்தில் 80% விவசாயத்திலேயே தங்கியுள்ளது. 
  • பணவீக்கம் வருடாந்தம் 18% ஆக அதிகரித்துச் செல்கிறது. இந்நாட்டில் வெளிநாட்டுப் பணத்தை உபயோகித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • நாட்டு மக்களில் 50% மேற்பட்டோர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
  • ஊடகச் சுதந்திரம் சிறிதும் இல்லாத, ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகளின் வரிசையில் முதலாம் இடத்தில் உள்ளது. ஊடகங்கள் முழுக்க முழுக்க அரசினால் இயக்கப்படும் வட கொரியாவை விடவும் இந்நாடு மோசமான இடத்தில் உள்ளது.சில சர்வதேச நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் வட கொரியாவிற்கு 177 ஆவது இடமும், எரித்திரியாவிற்கு 178 ஆவது இடமும் கிடைத்துள்ளது. ஆபிரிக்கக் கண்டத்தில் தனியார் ஊடகங்கள் இல்லாத ஒரேயொரு நாடு எரித்திரியா ஆகும்.
  • அரசிற்கு எதிராகப் பேசுவோர், இராணுவப் பயிற்சிக்கு தயங்குவோர், நாட்டை விட்டுத் தப்பியோட முனைவோர், சிறு குற்றங்களில் ஈடுபடுவோர் அனைவரும் சிறையில் தள்ளப் படுவர். சிறையில் தள்ளப் படுவோர் பல ஆண்டுகள் நீதி விசாரணை ஏதும் இன்றிச் சிறையில் தள்ளப் படுவர். பழுதடைந்த வாகனங்களின் கண்டெயினர்களே சிறைக் கூடங்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. மக்களின் கருத்துச் சுதந்திரம் மிகவும் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. மனித உரிமை நிறுவனங்கள் இந்நாட்டில் இயங்குவதற்கு அனுமதி இல்லை.
  • இந்நாட்டிலிருந்து வேலைகளுக்காக குழந்தைத் தொழிலாளர்களும், பாலியல் தொழிலுக்காகப் பெண்களும் கடத்தப்படுகின்றனர்.
  • இந்நாட்டில் 824 பாடசாலைகளும், 2 பல்கலைக் கழகங்களும்(University of Asmara, Institute of Science and Technology) உள்ளன. 
  • முப்பது வருட சுதந்திரப் போரின் விளைவாக யாவற்றையும் இழந்து வெறுங்கையுடன் நிற்கும் எரித்திரியாவானது வறுமை, வேலை வாய்ப்பின்மை, தொழில் திறமையின்மை, வெளிநாட்டு முதலீடின்மை ஆகியவற்றால் நொந்து நூலாகி ஆபிரிக்காவின் மிக வறிய நாடுகளில் ஒன்றாகக் காட்சி தருகிறது.எரித்திரிய மக்களுக்குச் சுதந்திரம் தந்த பரிசு 'வறுமை' மட்டுமே. 

திங்கள், ஜனவரி 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊண்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. (255)

பொருள்: புலால் உண்ணும் பழக்கம் பெருகிக் கொண்டே போனால் பிராணிகள் உயிரோடு வாழும் நிலையே அரிதாகி விடும். ஊன் உண்டால் நரகம் அவனை வெளியே விடாது.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

குறிக்கோள் அற்ற மனிதன் குரங்கைப் போன்றவன். அவனால் தனக்கோ, தான் சார்ந்த சமூகத்திற்கோ ஓர் நன்மையையோ, வெற்றியையோ தேடிக் கொள்ள முடியாது.

ஞாயிறு, ஜனவரி 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல்
பொருள்அல்லது அவ்வூன் தினல். (254)   

பொருள்: கொல்லாமையே அருள் ஆகும். ஓர் உயிரைக் கொல்லுதல் அருள் இல்லாத தன்மையாகும். அதன் ஊனைத் தின்னுதல் அறம் இல்லாத செயலாகும்.

இன்றைய பொன்மொழி

மகாத்மா காந்தி 

மனிதத்தின் மீதான நம்பிக்கையை மட்டும் விட்டு விடாதீர்கள். மனிதம் எனபது சமுத்திரம் போன்றது. சில துளிகள் அழுக்காக இருக்கின்றன என்பதற்காக பெருங்கடல் ஒருபோதும் அழுக்காகி விடாது.

சனி, ஜனவரி 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


படைகொண்டார் நெஞ்சம்போல் நன்று ஊக்காது ஒன்றன் 
உடல்சுவை உண்டார் மனம். (253) 

பொருள்: ஓர் உயிரின் உடலைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக் கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் இரக்கமற்றுக் காணப்படும்.

இன்றைய சிந்தனைக்கு

ரஷ்யப் பழமொழி 

மலர்கள் இல்லாத நேரத்தில் முள் தன் பெயரைப் பூ என்று சொல்லிக் கொள்ளுமாம்.

தாரமும் குருவும் பகுதி - 6.0

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 6.0 
அல்லைப்பிட்டி 1977
மாலைதீவு விமான நிலையத்தில் தரித்து நிற்கும் விமானம்
மாலைதீவு கடலில் மூழ்கினால் அக்கால கட்டத்தில் மாலைதீவின் சொத்துக்களை வேறு நாடுகளுக்கு பாதுகாப்பாக எவ்வாறு நகர்த்துவது? என்பன போன்ற திட்டங்கள் பற்றி அரசு இப்போதே சிந்திக்க ஆரம்பித்து விட்டது. மாலைதீவு ஒரு இஸ்லாமிய நாடு என்பதால் அரபு நாடுகளுடன் நல்லுறவைப் பேணி வரும் ஒரு நாடு. மாலைதீவு எதிர்காலத்தில் தனது முதலீடுகளை அரபு நாடுகளில் மேற்கொள்வதற்கும் சிந்தித்து வருகிறது. நாட்டை விட்டு மக்கள் வெளியேறும் நிலை ஏற்படும் போது ஒவ்வொரு வெளிநாட்டிலும் தனது மக்களில் எத்தனை பேரைக் குடியேற்றுவது என்பது சம்பந்தமாகவும் மாலைதீவு அரசு சிந்தித்து வருகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் 'மாலைதீவு' பற்றிய எனது பதிவினை நிறுத்தியிருந்தேன். மாலைதீவைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு ஏராளமான தகவல்கள் இருப்பினும், உரிய தருணம் வரும்போது அந்திமாலையில் 'நாடுகாண் பயணம்' பகுதியில் மாலைதீவும் இடம்பெறும் என்பதால் விரிவான தகவலகளைத் தவிர்த்து விட்டு, ஒரு சில பொது அறிவுத் தகவல்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
******************************
மாலைதீவு திவேஹி இனச் சிறுமி
மாலைதீவு ஒரு இஸ்லாமிய நாடு என்பது உங்களில் பலருக்கும் தெரியும். ஆனால் அவர்களின் மொழியைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா? அவர்களின் மொழியின் பெயர் 'திவேஹி'(Dhivehi) என்பதாகும். இம்மொழி உலகில் வேறெந்த நாட்டிலும் பேசப்படுவதில்லை. ஆனால் இம்மொழி 'பாலி' மொழியிலிருந்து உருவாகியது என்பதால் இதனை 'சிங்களத்தின் கிளை மொழி' என்று அழைப்பர். இவர்கள் பேசுவது சிங்கள மக்களுக்கு ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்நாட்டில் ஆரம்ப காலங்களில்(வரலாற்றுக் காலத்தில்)  குடியேறியவர்கள் சேர நாட்டவர்கள். சேர நாடு 'தமிழ்த் தேசம்' என்பதுடன் கடந்த 500 வருடங்களுக்கு முன்னர் அத் தேசம் கேரள தேசமாக மாறியதுடன், அங்கு பேசப்பட்ட தமிழ் மொழியும், திரிபடைந்து 'மலையாள' மொழியாக மாறியது. இதனாலேயே மலையாளத்தில் பேசினால் தமிழர்களும், தமிழில் பேசினால் மலையாளிகளும் இலகுவில் புரிந்து கொள்கின்றனர். மலையாள மொழியின் எழுத்து வடிவம் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியின் கலப்பு ஆகும். எழுத்து வடிவம் மாறியுள்ளதே தவிர அவர்கள்(மலையாளிகள்) 'முன்னாள் தமிழர்கள்' என்பதே வரலாறு. அல்லைப்பிட்டியைப் பற்றிப் பேச ஆரம்பித்து, பின்னர் அதை விடுத்து 'மாலைதீவைப்' பற்றிப் பேச ஆரம்பித்த நான் இறுதியில் தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் 'முல்லைப் பெரியாறு அணை' விவகாரத்தால் உறவு 'கொதிநிலை' அடைந்திருக்கும் இந்தத் தருணத்தில் மலையாள மொழியைப் பற்றியும், மலையாளிகளின் வரலாறு பற்றியும் ஆய்வு செய்வது பொருத்தமான செயலாக இருக்காது என்பதால் அதை அப்படியே விட்டுவிட்டு மீண்டும் 'மாலை தீவைப்' பற்றிப் பேசுவோம். நான் மேலே குறிப்பிட்டபடி சேர நாட்டில் இருந்தும், ஆபிரிக்காவில் குறிப்பாக 'மடகஸ்கார்' தீவில் இருந்தும் குடியேறியவர்களே மாலைதீவு மக்களின் 'மூதாதையர்கள்' எனக் கருதப் படுகிறது. இவர்கள் தமது சிறிய நிலப் பரப்பில் 
'திவேஹி'(Dhivehi) எழுத்து வடிவம்
ஒரு சில நூற்றாண்டுகள் வரை சுதந்திரமாக எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஆட்சி செய்து வந்தனர். அதன் பின்னர் அடுத்தடுத்துத் தமிழ் மன்னர்களும், இலங்கையின் சிங்கள மன்னர்களும் இச் சிறிய நாட்டின் மீது படையெடுத்து இந்நாட்டைக் கைப்பற்றி ஆண்டனர். இந்நாட்டைக் குறுகிய காலங்கள் சோழ மன்னனாகிய 'இராஜ ராஜ சோழனும்' அதிக காலங்கள் இலங்கையின் சிங்கள மன்னனாகிய 'மகா பராக்கிரம பாகுவும்' ஆண்டனர். பராக்கிரம பாகுவின் ஆட்சிக் காலத்தில் இந்நாட்டில் பௌத்த ஆலயங்கள் கட்டப் பட்டன என இலங்கையின் 'மகா வம்சம்' கூறுகிறது. இலங்கையின் பராக்கிரம பாகுவின் ஆட்சி, இந்நாட்டை 'அராபியர்கள்' கைப்பற்றியவுடன் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாகவே இவர்களது 'திவேஹி மொழி' உச்சரிப்பு சிங்கள மொழியை ஒத்ததாக இருப்பினும் எழுத்து வடிவம் அராபிய எழுத்துக்களுடன் ஒத்துப் போகிறது. மேற்படி தீவுகள் ஒரு பூமாலையில் பல பூக்கள் தொடுக்கப் பட்டது போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால் 'மாலை தீவுகள்' எனப் பெயர் பெற்றது. இவ்வாறு நாட்டின் பெயர் 'மாலைதீவு' என முழுக்க முழுக்க தமிழ்ப் பெயர் ஆக இருந்து பின்னர் அராபியர்களின் ஆட்சிக் காலத்தில் 'திவேஹி' மொழியில் 'திவேஹி ராஜ்யஹே ஜும்ஹூரியா'(தமிழில் மாலைதீவுக் குடியரசு) என மாற்றம் பெற்றது.
(தொடரும்)

வெள்ளி, ஜனவரி 27, 2012

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்குப் பணம் தேவையில்லை.மற்றவர்களின் பணத்தைப் பயன்படுத்தியே முன்னுக்கு வரமுடியும்.ஆனால் நேர்மை, துணிவு, கடின உழைப்பு ஆகிய மூன்றும் உங்களிடம் இருக்க வேண்டும்.

வாழ்வியல் குறள் -18

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்


செயல் உறுதி

ஞ்சலாடும் மனமும், உடைந்த மனமும்
உறுதியான செயலை உருவாக்காது.
ன உறுதியும், மனத் துணிவுமே
செயலின் உறுதிக்கு உரம்.
ட்டிடத்திற்கு அத்திவாரம் போன்று நல்ல
திட்டமிடல் செயலை உறுதியாக்கும்
டம், பொருள், ஏவல், காலம்
அறிந்த செயலே உறுதியாகும்.
டலுறுதியால் மனவுறுதி, செயலுறுதிக்கு
இயல்பாகக் கடத்தப் படுகிறது.
முயல் போன்று வேகம் இல்லாவிடிலும்
செயலுறுதி சாதனைக்கு உயர்த்தும்.
ன்னம்பிக்கை கொண்ட செயலுறுதியின் ஆதாரத்திற்கு
நம்பிக்கை ஏணி துணை.
நேர்மை ஒரு கர்ம சிரத்தையான
செயலிற்கு உறுதி தரும்.
நேர்மையற்ற செயலைச் செய்யும் போது
கூர்மையான மனவுறுதி வழுகிடும்.
கூட்டுறவும் ஒருவிதமாக வீரிய செயலுறுதிக்குக்
காட்டுகிறது தன் பங்கை.
சொல் வேறு செயல் வேறென்றால்
செயல் உறுதி குறையும்.
சொற் பந்தலுரம் போன்று உறுதியான
செயற் பந்தலும் தேவை.

வியாழன், ஜனவரி 26, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. (252)   

பொருள்: பொருளுடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றாதவருக்கு இல்லை. அவ்வாறே அருள் உடையவராகும் தகுதி ஊனைத்(மாமிசம்) தின்பவருக்கு இல்லை.

இன்றைய பொன்மொழி

கவியரசு கண்ணதாசன்

அனுபவம் என்பது புது மாதிரியான வாத்தியார். அது பாடங்களைக் கற்றுத் தந்தபின் பரீட்சை வைப்பதில்லை. பரீட்சைகளின் மூலம்தான் பாடங்களைக் கற்றுத் தருகிறது.

புதன், ஜனவரி 25, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். (251) 

பொருள்: தன் உடலைப் பெரிதாய் வளர்ப்பதற்காகத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன் எவ்வாறு இரக்கமுள்ளவனாக இருக்க முடியும்?

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

நாள் முழுக்கச் சேமித்து வைத்த சந்தோஷங்களை ஒரே ஒரு கோபமான வார்த்தை, அல்லது பரிகாசமான வார்த்தை ஒன்றுமே இல்லாமல் செய்து விடுகிறது.

செவ்வாய், ஜனவரி 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின் 
மெலியார்மேல் செல்லும் இடத்து. (250) 

பொருள்: அருள் இல்லாத ஒருவன் தன்னைவிட வலிமையில் குறைந்தவர்களைத் துன்புறுத்தச் செல்லும் போது, தன்னைக் காட்டிலும் வலியவர் முன்பு தான் அஞ்சி நிற்கும் நிலையை நினைத்துக் கொள்ள நேரிடும்.

இன்றைய சிந்தனைக்கு

இங்கிலாந்துப் பழமொழி 

எந்தச் செயலும் உங்கள் கைகளின் கட்டுப்பாட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முன்னால் கூலியைக் கொடுத்துவிட்டால் மிகத் தாமதமாகத்தான் வேலை நடக்கும்.

நாடுகாண் பயணம் - ஈக்குவடோரியல் கினிய

நாட்டின் பெயர்:
ஈக்குவடோரியல் கினிய(Equatorial Guinea)

வேறு பெயர்கள்:
எக்குவடோரியல் கினி குடியரசு(Republic of Equatorial Guinea) *ஈக்குவடோரியல் கினியா/எக்குவடோரியல் கினி  எனத் தமிழில் உச்சரிப்போரும் உள்ளனர்.

அமைவிடம்:
கிழக்கு ஆபிரிக்கா 

எல்லைகள்:
வடக்கில் - கமரூன்  
தெற்கு மற்றும் கிழக்கு  - கபூன் 
மேற்கில் - கினியா வளைகுடா 

தலைநகரம்:
மலபோ(Malabo)

பெரிய நகரம்:
பாட்டா(Bata)

அலுவலக மொழிகள்:
ஸ்பானிஷ், பிரெஞ்சு, போர்த்துக்கேய மொழி.

அங்கீகரிக்கப்பட்ட ஏனைய மொழிகள்:
வ்பாங்(Fang), புபே(Bube), அன்னோபோனேசே(Annobonese) 


இனங்கள்:
வ்பாங்(Fang) 85,7%
புபி(Bubi) 6,5%
டோவே(Mdowe) 3,6%
அன்னோபொன் 1,6%
புஜேபா 1,1%
ஸ்பானியர்கள் 1,4


சமயங்கள்:
கிறீஸ்தவர் 93%
இஸ்லாமியர் 1%
ஏனையோர்(இயற்கைச் சமயம், பஹாய் உட்பட) 6%

கல்வியறிவு:
87% 
*ஆபிரிக்க நாடுகளில் கல்வியறிவு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று.

ஆயுட்காலம்:
ஆண்கள் 61 வருடங்கள் 
பெண்கள் 63 வருடங்கள் 

ஆட்சிமுறை:
ஜனாதிபதி தலைமையிலான கூட்டாட்சிக் குடியரசு 

ஜனாதிபதி:
தியோடோரோ ஒபியாங் (Teodoro Obiang) *இது 24.01.2012 அன்று உள்ள நிலவரமாகும்.

பிரதமர்:
இக்னாசியோ மிலாம்(Ignacio Milam)*இது 24.01.2012 அன்று உள்ள நிலவரமாகும்.

ஸ்பெயின் நாட்டிடமிருந்து விடுதலை:
12.10.1968

பரப்பளவு:
28,050 சதுர கிலோ மீட்டர்கள். 
*பரப்பளவில் சிறிய நாடு என்பதால் உலக நாடுகளின் பரப்பளவு வரிசையில் 144 ஆவது இடத்திலும், ஆபிரிக்காவின் சிறிய நாடுகள் வரிசையில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

சனத்தொகை:
676,000(2009 மதிப்பீடு) *சனத்தொகை குறைந்த நாடு என்பதால் உலக நாடுகளில் சனத்தொகை அடிப்படையில் 166 இடத்தில் உள்ளது.

நாணயம்:
மத்திய ஆபிரிக்க பிராங்(Central African CFA franc)


இணையத் தளக் குறியீடு:
.gq

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 240

இயற்கை வளங்கள்:
பெற்றோலியம், இயற்கை எரிவாயு, மரம், சிறிய அளவில் தங்கம், மங்கனீஸ், யுரேனியம்.

விவசாய உற்பத்திகள்:
காப்பி, கொக்கோ, அரிசி, கிழங்குவகைகள்(மரவள்ளிக் கிழங்கு உட்பட), வாழைப்பழம், எண்ணெய் வித்துக்கள், மர எண்ணெய்(பாமாயில்), கால்நடைகள், மரங்கள்.

தொழில்கள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள்:
பெற்றோலியம், இயற்கை எரிவாயு, மர அறுவை ஆலைகள்(பலகை தயாரிக்கும் ஆலைகள்)

ஏற்றுமதிகள்:
பெட்ரோலியப் பொருட்கள், மரம்.

வேலை இல்லாத் திண்டாட்டம்:
22%


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள சிறிய நாடுகளில் மூன்றாவது சிறிய நாடு.
  • நாட்டு மக்களின் ஆள்வீத மொத்தத் தேசிய வருமானம் அதிகமாக இருப்பினும் சுமாராக 70% மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
  • உலகில் வருடாந்தம் அதிக அளவில் மனித உரிமை மீறல்கள் பதிவாகும்  நாடுகளில் ஒன்று.
  • சகாராப் பிராந்தியத்தில் ஊடகச் சுதந்திரம் மிகவும் மோசமான நிலையில் உள்ள நாடுகளில் ஒன்று.
  • இந்நாட்டின் தலைநகரம் அமைந்துள்ள Bioko தீவு 15 ஆம் நூற்றாண்டு வரை வெளி உலகத் தொடர்பு இல்லாமல் இருந்தது. கொலம்பஸ்சைப் போன்று இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய போர்த்துக்கேய மாலுமியாகிய Fernao do Po என்பவர் 1472 ஆம் ஆண்டில் இத் தீவைக் கண்டுபிடித்து இதற்கு Formosa(போர்த்துகேய மொழியில் அழகு என்று பொருள்) பெயரிட்டார்.
  • 1970 ஆம் அண்டு தொடக்கம் 1979 ஆம் ஆண்டு வரை பல உள்நாட்டுப் போர்களையும், ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகளையும் சந்தித்த நாடு. உள்நாட்டுப் போரில் 80,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
  • ஏனைய ஆபிரிக்க நாடுகளைப் போலவே ஏழை நாடாக இருந்த இந்நாட்டில் திடீரென 'பெற்றோலியம்' கண்டுபிடிக்கப் பட்டதால் பணக்கார நாடாக மாறியுள்ளது.
  • இந்நாட்டில் மருத்துவப் பட்டப் படிப்பு உட்பட ஏனைய பட்டப் படிப்பை வழங்குகின்ற ஒரேயொரு பல்கலைக் கழகம் உள்ளது.(Univesidad Nacional de Guinea Ecuatorial) இப் பல்கலைக் கழகம் கியூபா நாட்டின் ஆதரவுடன் இயங்கி வருகிறது என்பதுடன் இப் பல்கலைக் கழகத்தின் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் கியூபா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

திங்கள், ஜனவரி 23, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டு அற்றால் தேரின் 
அருளாதான் செய்யும் அறம். (249)

பொருள்: அருள் இல்லாதவன் மெய்ந்நூல்களைப் பயின்றும் மெய்யுணர்வைப் பெற மாட்டான். அவ்வாறே அருளற்றவன் நல்வினை செய்தாலும் நற்பயனைப் பெற மாட்டான். 

இன்றைய பொன்மொழி

நடிகர் திலகம் 

கலைஞனுக்குத் தாழ்வு மனப்பான்மை கூடாது. தான் என்ற கர்வமும், தன்னம்பிக்கையும் நிச்சயம் வேண்டும்.

தொலைத்தவை எத்தனையோ - 5


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
திறமையறிந்து கதாநாயகன் வேடம் தரப்பட்டதை என் குழந்தை மனம் அறியவில்லை.
இங்கும் அவர்கள் (குவீனி- தாமரை) இணை பிரியாத நண்பர்கள் தானா? நான் தனியாகக் கோவலனா!… என்று என் மனம் இரகசியமாக விசும்பியது, புழுங்கியது. (நான் மௌனமாகத் திரிந்தாலும் அவர்கள் என்னை ஒதுக்கியது என் மனதை வெகுவாகப் புண்ணாக்கியுள்ளது – என்பது இப்போது புரிகிறது)

ஒத்திகைகள் நன்கு நடந்தது. எமது வரிகள் எல்லாம் மனப்பாடமும் செய்தாகிவிட்டது. சிவராத்திரிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் போது, நான் நாடகத்தில் பங்கு பெறமாட்டேன் என்று மறுக்கத் தொடங்கினேன்.
ஆசிரியை, அவரது தங்கை, பக்கத்து வீட்டு அண்ணை (அவரும் நித்திரை விழிக்க வர இருந்தவர். கெந்திப் பிடித்து விளையாடும் போது சூரப்புலியாகக் கெந்துவார். நீண்ட கால்கள்) எல்லோரும் ” ஏன் என்ன காரணம்?” என்று தூண்டித் துருவி கேட்டனர். நான் பயங்கர மௌனம். முடியாது முடியாது தான் பதில்.
ஆசிரியரின் தங்கை கேட்டா ” உமக்கு நல்ல பாத்திரம் தானே தந்துள்ளோம்” என்று. வரமாட்டேன் வரவில்லை என்பது தான் என் பதில். தாமரையின் அக்கா சுகி தான் தாமரைக்கு நடனம் பழக்கியது. அவ கூட தனது திறமையைக் காட்ட முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் ” ஏனாம் பேபி வரமாட்டுதாம்? என்ன காரணம்?;” என்றாவாம்.
சிவராத்திரியும் முடிந்தது. 
நித்திரை விழித்தார்களாம், நான் போகவில்லை. நாடகம் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தில், (அண்ணனிடம்) நடக்கவில்லையா என்று விசாரித்தேன். ” பேபி முடியாது என்று விட்டதே” அதனால் நாடகம் நடக்கவில்லை என்று பக்கத்து வீட்டு அண்ணை கூறினார். அதைப் பற்றி எனக்கு சாதக, பாதக சிந்தனையே தோன்றவில்லை. செய்தியாகக் கேட்டது போல இருந்தது.
அவ்வளவு தான். இது என் மனக் கணனியில் ஒரு மறந்த சொத்தாகிவிட்டது.
பின்பு ஒரு காலத்தில் இவைகளை எண்ணிய போது ஏன் இப்படி நடந்தேன் என்றால் 
என் சின்ன மனம் அவர்களை, கத்தியின்றி, இரத்தமின்றிப் பழி வாங்கியுள்ளது. யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை இது நானாக எடுத்த செயல். யாருடனும் எதுவும் பேசாது மௌனமாக நடத்திய போர். இது வீட்டாருக்கும் தெரிய வரவில்லை. நான் கூறவும் இல்லை. என்னுள் இருந்தவை, இன்று எழுத்தில்.
பாருங்களேன் மனம்!…..அது கண்ணாடி! ..கீறலும், நொறுங்குதலும்!… செயல் தாக்கமும் பிரதி நடவடிக்கையும்!…எத்தனை விசித்திரமானது! எப்படி இயங்குகிறது…..யாருக்குமே… தெரியாது… இது சரியா..பிழையா..எப்படி நடந்தது என்று…..

இன்று வரை இரண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் நானறிந்த வரை மிகக் கவனமாக அவர்கள் மனதைக் கையாளுகிறேன். பிள்ளைகளை ஒதுக்குதல், வேற்றுமை காட்டுதல் என்பது மாபெரும் கொடுமை என்பதற்கு இது நல்ல உதாரண அனுபவம்.
வன்முறைகள் உலகில் மலிவதற்கும் நல்ல அடிப்படைக் காரணங்கள் உண்டு. காரணங்களைத் தேடிக் களையாது தண்டனையை நிறைவேற்றவே உலகு துடிக்கிறது.
எனது தமிழ் இந்தளவு வளர்ந்ததற்கு பாக்கியம் ஆசிரியர் அடிப்படைக் காரணமாகிறார். பிழை விட்டால் குட்டு, பென்சிலோடு காதைப் பிடித்து பல்லைக் கடித்தபடி திருகுவார். அழுததும் உண்டு.
ஒரு தடவை ஐந்தாம் வகுப்பில் உங்களுக்கு என்ன மிருகமாகப் பிறக்க ஆசை என்று முழு வகுப்பையும் கேட்டார். திகைப்பு! என்ன பதில் கூறுவது!…மிருகங்களின் ராஜா சிங்கம், எனக்கு சிங்கமாகப் பிறக்க பிடிக்கும் என்றேன். ஏன் இப்படிக் கூறினேன்! எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இன்று கேட்டால் சிங்கம் பற்றிய எந்த எண்ணமும் ஆர்வமுமே இல்லை. மானாகப் பிறக்க ஆசை என்பேன், மான் அழகு என்பதால்.
அக் காலத்தில் வகுப்பில் நான் தான் முதல், இக்காலத்தில் தான் ஸ்கொலசிப் பரீட்சையிலும் சித்தி பெற்றதும், ஸ்ரான்லிக் கல்லூரிக்கு ஆறாம் வகுப்பிற்கு மாறியதும்.
முதுமை வந்து பாக்கியம் ஆசிரியர் காலமாகி விட்டார். நான் மூன்று நூல்கள் செய்தும் அவரிடம் ஒரு முன்னுரை பெற முடியவில்லை என்பது எனக்குப் பெரிய குறை தான்.
தாமரை – செல் விழுந்து இறந்து விட்டார். குவீனிக்கு நல்ல வாழ்வு இல்லை, பிள்ளைகள் இல்லை, உறவுகளோடு வாழ்கிறார். (இவர்கள் பெயரை மாற்றியுள்ளேன். இவர்கள் உறவு எப்போதுமே என்னுடன் இப்படித் தான்.)
படிக்கப் போனவீடு ஊரில் கல் வீடாகிக் காட்சி மாறிவிட்டது.  அன்று போல எதுவுமே இல்லை.
அம்மா, அப்பா, சகோதரர்களோடு வாழ்ந்த வாழ்வு, அத்தனையும், அத்தனையும்…
தொலைத்தவை எத்தனையோ!…..
துன்ப அகராதி துடைத்தழிக்க
நண்பனாக்கிய அழகுத் தமிழ்.
என்னைக் கவலைகள் தின்னத்தகாதென
கன்னற் தமிழைச் சரணடைந்தேன்.