ஞாயிறு, பிப்ரவரி 01, 2015

நவீன புத்தர்

ஓஷோ சொன்ன குட்டிக் கதைகள்:-

அறிவுரைக்கான தகுதி  

ஒரு பெண் தனது குழந்தையினால்
மிகவும் தொந்தரவுக்குள்ளானாள். அவளுக்கு ஒரே ஒரு குழந்தை. அவளது கணவன் இறந்துவிட்டான். அவள் பெரும் பணக்காரிதான். ஆனால் அவளுக்கு வாழ்வில் மிகவும் சலிப்பாகிவிட்டது. அவள் தனது குழந்தைக்காகத்தான் வாழ்ந்தாள். சில சந்தர்ப்பங்களில்

குழந்தைகள் மிகவும் தொந்தரவாகி விடுவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த பையன் இனிப்பைத் தவிர வேறு எதுவும் சாப்பிடுவதில்லை. டாக்டர்கள் இது மிகவும் தவறான பழக்கம். அவனது உடல்நிலை
கெட்டுவிடும் எனக் கூறி விட்டனர். ஆனால் அந்த குழந்தை கேட்பதேயில்லை.

அவள் ஒரு சூஃபி ஞானியிடம்
அடிக்கடி செல்வாள். ஒருநாள் அவள் தனக்குள் இவ்வாறு சிந்தித்தாள் "இவன் நான் சொல்வதை கேட்பதேயில்லை, அவர் அவருக்கு அருகில் வரும் அனைத்து மக்களையும் ஈர்க்கும் சக்தியுடையவராக இருக்கிறார். அதனால்
இவன் அவர் சொன்னால் கேட்கக் கூடும்". என்று நினைத்தாள்.

அதனால் அவள் அந்த குழந்தையை அந்த
ஞானியிடம் கூட்டி சென்று, "இவன் இனிப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதேயில்லை.
நானும் ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.  கேட்க மாட்டேன் என்கிறான். அதற்கு பதிலாக
பட்டினி கூட கிடக்கிறான். டாக்டர்கள் உடல்நிலை கெட்டுவிடும் என்கிறார்கள். அவன் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். எனது கணவர் இறந்துவிட்டார். இவன் எனது
ஒரே குழந்தை இவனுக்காகத்தான் இருக்கிறேன். என்னால் இவன் பசியாக இருப்பதை பார்க்க
முடியாது, அதனால் இவனுக்கு இனிப்பு கொடுக்க வேண்டி வருகிறது. இனிப்பு இவனுக்கு
'விஷம்' என்று தெரிந்தே கொடுக்க வேண்டி வருகிறது. சர்க்கரை 'வெள்ளை விஷம்'. அதனால்
நான் இவனை இங்கே கூட்டி வந்தேன். இவனுக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள். நீங்கள்
மனிதரில் தெய்வம். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு பலன் இருக்கக் கூடும்" என்றாள்.

அந்த ஞானி குழந்தையை பார்த்தார்.
அவர், "என்னால் இந்த குழந்தைக்கு இப்போது அறிவுரை கூற முடியாது. ஏனெனில் இப்போது நானே இனிப்பை மிகவும் விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு
வாரங்கள் கழித்து வாருங்கள். அதற்குள் இந்த இரண்டு வாரங்களும் நான் இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறேன். இதை என்னால் செய்ய முடிந்தால் பிறகு என்னால் அறிவுரை கூற
முடியும். இல்லாவிடில் இந்த அறிவுரை கூற சரியான ஆள் நானல்ல" என்றார்.

அந்த பெண்மணியால் நம்பவே முடியவில்லை. அவர் கூறிய பதில்  இன்னும் அபாயகரமானது என்று அப்பெண் நினைத்தாள். ஆனால் அந்தக் குழந்தை மிகவும் ஈர்ப்படைந்தான்.
அவன் அந்த ஞானியின் காலில் விழுந்தான். அவன், "என் அம்மா பல பேரிடம் என்னை அழைத்து
சென்றிருக்கிறாள். அத்தனை பேரும் உடனே எனக்கு அறிவுரை கூறினர். ஆனால் நேர்மையான முதல் ஆள் நீங்கள்தான். இரண்டு வாரங்கள் கழித்து வருகிறேன். நீங்கள் என்ன
சொன்னாலும் செய்கிறேன். நான் உங்களை நம்புகிறேன்" என்று கூறினான்.

குழந்தையின் முன் தனது தவறை ஒத்துக் கொண்ட ஒரு வளர்ந்த மனிதன், "நானே இப்போது இனிப்பு விரும்பி சாப்பிட்டுக்
கொண்டிருக்கிறேன், அதனால் இப்போது அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை. அதனால்
இரண்டு வாரங்களில் இந்த அறிவுரையை நானே கடைபிடித்து பார்க்கிறேன். நான்
தோற்றுவிட்டால், என்னை மன்னித்துவிடு. என்னால் அறிவுரை கூற முடியாது. நான்
வென்றுவிட்டால் அப்போது அறிவுரை கூறுவேன். ஒரு வயதான மனிதன் நானே வென்றுவிடும்போது
உனக்கு இள வயது, அதிக ஆற்றலுடன், அதிக புத்திசாலித்தனமாக இருக்கிறாய். உன்னாலும்
வெற்றியடைய முடியும். அதனால் ஒரு முயற்சி செய்து பார் என்று கூற முடியும்" என்றார்.

அந்த தாய் மிகவும் அதிர்ச்சியடைந்தாள். அந்த ஞானி கூறிய இரண்டு வாரங்களில் அவரால் அதைக் கடைப்பிடிக்க
முடியாவிட்டால் எல்லாமும் முடிந்தது. பின் அந்த குழந்தையைக் கூட்டிச் செல்ல வேறு எந்த இடமும் இல்லை எனத் திகைத்தாள்.

இரண்டு வாரங்கள் சென்றபின் அவர்கள் திரும்பி வந்தனர். ஞானி அந்த குழந்தையிடம், "மகனே, அது கடினம்தான். ஆனால்
இயலாதது அல்ல. இந்த இரண்டு வாரங்களும் இனிப்பு சாப்பிடாமல் என்னால் சமாளிக்க
முடிந்தது. நான் இனி என் வாழ்வு முழுவதும் இனிப்பு சாப்பிடப் போவதேயில்லை என உனக்கு உறுதியளிக்கிறேன். இப்போது உனக்கு அறிவுரை கூற எனக்குத் தகுதி இருக்கிறது என நீ
நினைக்கிறாயா?  எனக்கு நீ  அனுமதியளித்தால்
என்னால் உனக்கு அறிவுரை கூற முடியும்" என்றார்.

அந்த பையன், "எதுவும் கூற வேண்டிய
தேவையில்லை. எனக்கு புரிந்துவிட்டது. உங்களுக்கு எனது நன்றிகள். உங்களை போன்ற ஒருவர் எனக்கு அறிவுரை கூறுவதற்காகத் தனது வாழ்நாள் பூராவும் இனிப்பு சாப்பிடாமல்
இருப்பது, தானே ஒரு உதாரணமாக, வழிகாட்டியாக இருப்பது என்பது 'நம்பிக்கையுணர்வு' வைக்க தகுதியானதே. நான்
உங்கள் மேல் நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். இந்த வினாடியிலிருந்து இனிமேல்
நானும் இனிப்பு சாப்பிடப் போவதில்லை என உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்றான்.

நன்றி:ஓஷோ சாஸ்வதம், அவினாசி, திருப்பூர், தமிழ்நாடு.