செவ்வாய், ஜூலை 29, 2014

'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்

ஆக்கம்:ம.திருவள்ளுவர், தேவகோட்டை, சிவகங்கை, தமிழ்நாடு
பாகம் 4.(கடந்த 22.07.2014 அன்று உங்கள் அந்திமாலையில் வெளியாகிய பதிவின் தொடர்ச்சி)
வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் அவர்களெல்லாம் சதுரம் – 4 மற்றும் சதுரம் 3 இரண்டையும் புறக்கணித்து விட்டவர்களாகவும், சதுரம் – 1ஐ ஏறிட்டும் பார்க்க வேண்டிய அவசியமில்லாத வர்களாகவும் திகழ்வார்கள்.
காரணம் என்னவெனில் அவர்களின் கவனமும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் சதுரம் -2 லேயே குவிந்திருக்கும்.
அவர்களுக்கு “எது அவசியம்” – என்பது புரிந்திருக்கும். அதுமட்டுமல்ல அவசரமானாலும் கூட அவசியமற்றதென்றால் அவர்கள் அதனைப் 
புறக்கணித்துவிடத் தயங்காத உறுதியான உள்ளம் படைத்தவர்களாகவும் திகழ்வார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் எல்லாம் தங்களுக்கென சில இலக்குகளை முன்வைத்து இயங்கிக் கொண்டிருப்பதால் அவசியமில்லாமல் பிறரின் செயல்பாடுகளில் மூக்கை நுழைத்து தமது காலத்தை வீணடிக்கும் தவறான காரியத்தைச் செய்யமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  
என்ன? – இனி நாமும் நமது அன்றாடச் செயல்களை மேற்கண்ட நான்கு சதுரங்களாக வரையறுத்து – இரண்டாம் சதுரத்தில் நமது மனதை ஒருமுகப்படுத்தி வெற்றி காண்போமா?
அணியணியாய் இணைய உதவும் அழகிய சதுரங்கம்

நான்காவது சதுரம் நம்மைப் பிணைக்கும் சதுரம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுதலின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் ஒற்றுமைச் சதுரம்.

கீழ்காணும் சதுரத்தை உற்று நோக்கிடுங்கள். அது என்ன சொல்கிறது என்பது நமக்குப் பிடிபடும். அந்தச் சதுரத்தின் கிடைக்கோடு நமது தைரியத்தைக் குறிப்பதாகக் கொள்வோம். செங்குத்துக் கோடு நமது கருணையைக் குறிப்பதாக கொள்வோம். இந்த இரண்டு கோடுகளை அடிப்படையாகக் கொண்டுஅமையும் நான்கு சதுரங்களை நன்கு கவனிப்போம்.

முதலில் “வெல்ல …. தோற்க….” – என்னும் முதலாம் சதுரத்தை எடுத்துக்கொள்வோம். இதன் பொருள் என்னவெனில் “நான் வெல்வேன்…. நீ தோற்பாய்” -என்கிற அடிப்படையில் தொடங்கப்படும் முயற்சியை அல்லது நடவடிக்கையைக் குறிக்கும். இத்தகைய மனோபாவம் – விளையாட்டின் போதும், போரின் போதும் காணப்படக் கூடியதாகும். வாழ்க்கைக்கோ, வர்த்தகத்துக்கோ, உறவுமுறைக்கோ ஒத்துவராததாகும். “நான் வெல்ல வேண்டும் நீ தோற்க வேண்டும்” – என்று முனைகிறபோது, அவரிடம் தைரியம் அதிகமாகவும் கருணை மிகவும் குறைவாகவும் உள்ளதென்று பொருள். அதாவது முரட்டுத் தனம் மிகுந்து காணப்படும். வேகம் இருக்கும். ஆனால் விவேகம் இருக்காது. – இத்தகைய நிலை வாழ்க்கையை வசப்படுத்தவும் தலைமை தாங்கவும் உதவாது. “வெட்டு ஒன்று துண்டு ரெண்டு” என நடந்து கொள்ளும் இவர்களைப் பெரும்பாலானோர்க்குப் பிடிக்காமற்போகும். அவரது பேச்சில் பக்குவம் இருக்காது. இவர்களது செயலில் நிதானம் இருக்காது.. இதனால் உறவுகள் இனிமையாய் இருக்காது. இது அதிகாரம் தொனிக்கும் நிலைமையைக் குறிக்கும். “தானே முக்கியமானவன்” – என்னும் தன்மை தொனிக்கும்.

இரண்டாம் சதுரம்: “நான் தோற்கிறேன் நீ வெல்ல” என்பதாகும். அதாவது, “நான் விட்டுக் கொடுக்கிறேன் நீ வெல்ல” – என்னும் மனோபாவத்தைக் குறிக்கும் சதுரமாகும். இப்படிப்பட்ட மனோபாவம் யாருக்கு வாய்க்கும் எனப் பார்த்தால் – யாரிடம் தைரியம் குறைவாகவும் கருணை அதிகமாகவும் இருக்குமோ – அவர்களால் மட்டுமே இப்படித் தன்னைத்தானே விட்டுக்கொடுத்து பிறர் வெல்ல – ஏதுவாக இருக்க முடியும். இது ஒருவரது பலவீனத்தைக் காட்டும் தன்மையாகும். இந்த நிலையில் உறவு ஆரம்பத்தில் இனிப்பது போலத் தோன்றினாலும், நாளாக ஆக, இப்படிப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுவர். இவர்களின் மதிப்புக் குறைய நேரும். பிறகு யாருமே கவனிக்கவில்லை, எனக்கென்று யாருமில்லை, என்னால் முன்னேற முடியவில்லை எனப் புலம்ப நேரிடும்.
மேற்கண்ட இரண்டு சதுரங்களையும் சற்றே உற்று நோக்கினால் ஒரு விபரீதம் புரியும். உறவில் சம்பந்தப்பட்ட இருவருள் ஒருவர் – முதல் சதுரத்துக்குச் சொந்தக்காரராகவும், மற்றவர் இரண்டாம் சதுரத்திற்குச் சொந்தக்காரராகவும் இருந்தால் – நடப்பதை யூகித்துப் பாருங்கள்….. அவர், “நான் வெல்வேன்…. நீ தோற்பாய்” என்று களத்தில் இறங்குவார். இவர், “நான் தோற்பேன்…. நீ வெல்வாய்” என்று களத்தில் இருப்பார்.விளைவு என்னாகும்? எந்த வித சுவாரசியமும் இல்லாமல் ஒருவர் வெல்ல மற்றவர் தோற்றுக்கொண்டே இருப்பார். இது ஒருவித (துஷ்பிரயோக நிலைக்குச் சமமாகும்) மிகைப்படுத்துதலுக்குச் சமம்.

மூன்றாவது சதுரம்: “நானும் தோற்பேன் நீயும் தோற்க வேண்டும்” – என்னும் மிகவும் மோசமான மனோபாவத்தைக் குறிக்கிறது. “தனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை. அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்” – என்னும் பழிவாங்கும் மனோநிலையைக் குறிக்கிறது.

இந்த நிலையை யார் அடைவர் என்றால், இந்த உறவில்...., 
(தொடரும்)
  இந்தத் தொடரின் பகுதி 5 ஐ அடுத்த வாரம் செவ்வாய்க் கிழமை (05.08.2014) உங்கள் அந்திமாலையில் வாசியுங்கள்.

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

கருத்துரையிடுக