எல்லோருக்கும் வணக்கம், உலக அதிசயங்கள் எவை எவை என்பது பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் நம்மில் பலருக்கு உலக அதிசயங்களை முதன் முதலில் பட்டியலிட்டவர் யார் ?என்ற கேள்விக்கு விடை தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. கிரேக்க நாட்டை (தற்போதைய கிரீஸ்) சேர்ந்த சில சுற்றுலா பயணிகள்தான் உலகில் முதன் முதலில் உலக அதிசயங்ககளைப் பட்டியலிட்டவர்கள் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? நண்பர்களே வாருங்கள் இது பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்...,!
அரேபியர்களின் நாகரீங்கள் மற்றும் அவர்களின் பெருமைகள் பற்றி உலகம் ஏற்கனவே அறிந்திருந்தாலும் கூட அலெக்ஸாண்டரின் பெர்சிய படையெடுப்பிற்கு பிறகுதான் அரேபியர்களின் பெருமைகள் அதிக அளவில் வெளியுலகத்திற்கு தெரிய ஆரம்பித்தது என்று சொன்னால் மிகையில்லை. கி.மு. 323-ஆம் ஆண்டு அலெக்ஸாண்டரின் மறைவுக்கு பின்னர் கிரேக்கத்தில் தோன்றிய புகழ் பெற்ற நாகரீகம் ஹெல்லினிஸ்டிக் நாகரீகம் (Hellenistic Civilization; கி.மு.323-146) ஆகும். ஹெல்லினிஸ்டிக் நாகரீகத்தை சேர்ந்த நாடோடி மக்களில் சிலருக்கு அலெக்ஸாண்டரின் பெர்சிய படையெடுப்பின் மூலம் அரேபியர்களின் வியக்கத்தகு கட்டடங்கள் பற்றி தெரியவந்தது இதனால் அவற்றை நேரில் பார்க்கும் ஆர்வம் கொண்டு மத்தியதரைக்கடலை சுற்றி அமைந்துள்ள நகரங்களுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.
பயணத்தின் போது அவர்கள் கண்டு வியந்த இடங்கள் மற்றும் கட்டிடங்களை தங்களிடமிருந்த கைக்குறியேடுகளில் குறித்து வைத்துக் கொண்டனர், அவற்றில் சில முக்கியமான இடங்களையும் கட்டிடங்களையும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டி அவற்றை பார்க்க வேண்டிய இடங்கள் (Things to be seen) அல்லது பார்வை (Sights)என்கின்ற தலைப்பில் பட்டியலிட்டனர். எண்ணிக்கையானாலும் சரி இடங்களானாலும் சரி ஒவ்வொரு பயணிகளின் பட்டியலும் இன்னொரு பயணிகளின் பட்டியலிலிருந்து வேறுபட்டது என்று தான் சொல்லவேண்டும். இது தான் உலக அதிசயப்பட்டியல் உருவாவதற்கான முன்னோடி சிந்தனை ஆகும்.
கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் புகழ் பெற்று விளங்கிய அண்டிபாட்டர் (Andipater) என்ற கவிஞரின் கைகளில் இந்த பட்டியல் அடங்கிய குறிப்புகள் ஒரு நாள் தற்செயலாக கிடைக்க, ஆர்வமடைந்த அவர் அந்த இடங்களை நேரில் சென்று பார்த்துவிடும் முடிவுகொண்டு குறிப்பேடுகளில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டார். பயணமுடிவில் கி.மு. 140-ஆம் ஆண்டு அவர் எழுதிய கவிதை ஒன்றில் ‘அதிசயங்கள்-7’ என்ற தலைப்பில் கிசாவின் பெரிய பிரமிட் (எகிப்து, கி.மு-2680), பபிலோனின் தொங்கு தோட்டம் (Iraq, கி.மு.600),ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை (Greece, கி.மு-433), ஆர்ட்டெமிஸ் கோயில் (Turkey,கி.மு.350(பழையது) & கி.பி.550(புதியது), மௌசோல்லொஸின் மௌசோலியம் (Turkey,கி.மு.350) ரோடொஸின் கொலோசஸ் (Greece, கி.மு.280), அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம் (Egypt, கி.மு.300) ஆகிய ஏழு இடங்களின் கட்டுமானம் பற்றி வியந்து குறிப்பிட்டார். நாளடைவில் ‘அதிசயங்கள்-7’ என்பதற்கு முன்னால் ‘உலகம்’ என்ற சொல் ஒட்டிக்கொண்டு ‘உலக அதிசயங்கள்-7’ என்று அழைக்கப்பட்டது, இதுதான் ஆதாரப்பூர்வமான முதல் உலக ஏழு அதிசயபட்டியல் ஆகும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgycp8_Dy9YmAByXQYol7AEzubVaPUDToaHgQxjNIuagU4hAXs4bNudYrnETAZ0zewNtZNuBNIaJE4J9ao394flCljx9N1rYsmbqR3TCUau9ghrF_chv-Ufvfy8qcFAYu-gkxD4MCJ8gAk/s320/Temple_of_Artemis-old-4.jpg)
அண்டிபாட்டருக்கு முன்பு ஹீரோடோதஸ் (Herodotus, கி.மு.484-425) என்ற துருக்கியை சேர்ந்த வரலாற்று ஆசிரியரும், கல்லிமாக்ஸஸ் (Callimachus, கி.மு.310-240) என்ற லிபியாவை சேர்ந்த கவிஞர் ஒருவரும் இத்தகைய பட்டியலை எழுதிவைத்திருந்தார்கள் என்று சில குறிப்புகள் கிடைக்கப் பெற்றிருந்தாலும் கூட இதுவரையில் உறுதியான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை மேலும் இவர்கள் எந்தெந்த இடங்களை பட்டியலிட்டார்கள் என்ற தகவலும் இல்லை. கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதிவரை ஆண்டிபாட்டர் பட்டியலிட்ட ஏழு அதிசயங்கள் தான் உலக அதிசயங்களாக வழக்கத்தில் இருந்தது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsYEFcyeYBCtbS7dNiPHLZw24DOsET7dD7LlwIV-lTpKFosf1n1MsaWIi0OZ3Hfq0GsmoM5yu_9lbkGsMLg3EUAp9oqET1eSOyf1tQYxCbepURULkNEOhyphenhyphen7Md7r_NTAwNrgVIdItz0jYI/s320/Rhodes-old-5.jpg)
ஆண்டிபாட்டர் உலக அதிசயங்களை ஏழோடு நிறுத்திக்கொண்டதற்கு ஒரு காரணம் உண்டு. மனித உடலில் உள்ள உயிர்த்துளைகள் ஏழு, வானவில்லின் நிறங்கள் ஏழு, இசையை உண்டாக்கும் ஸ்வரங்கள் ஏழு இப்படி இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்திலும் ஏழு என்பது முக்கிய எண்ணாக இருப்பதால் ஏழு என்ற எண்ணை ஒரு மந்திரச்சொல்லாகவே கிரேக்கர்கள் கருதினார்கள். இதன் காரணமாகவே அதிசயங்களும் ஏழாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று ஏழுடன் நிறுத்திவிட்டார் ஆண்டிபாட்டர். அன்றிலிருந்து இன்றுவரை உலக அதிசயங்கள் ஏழாகத்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பதினாறாம் நூற்றாண்டு வரை ஆண்டிபாட்டர் பட்டியலிட்ட அதிசயங்கள் தான் உலக அதிசயங்களாக வழக்கத்தில் இருந்தன. எகிப்து பிரமிடைத் தவிர ஏனையவை அழிந்துவிட்டதால் பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகு சில எழுத்தாளர்கள் உலக அதிசயங்கள் என்று வேறு சில இடங்களை பரிந்துரை செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் கோபான் ப்ரீவர் (Cobhan Brewer) என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எழுத்தாளர் 1870-ஆம் ஆண்டு வேற்றுமொழி சொல்களுக்கான விளக்கம், பழமொழி விளக்கம், விடுகதை விளக்கம், மற்றும் சில வரலாற்று புள்ளிவிபரங்கள் அடங்கிய Brewers Dictionary of Phrase & Fable என்ற அகராதி (Dictionary) ஒன்றை வெளியிட்டார்.
ப்ரீவரின் அந்த அகராதியில் இடைக்காலத்தில் கட்டப்பட்ட சில கட்டிடங்களும் நவீன காலத்தில் கட்டப்பட்ட சில கட்டிடங்களும் (ஸ்டோன் ஹெஞ் (England), சிச்சென் இட்சாபிரமிட் (Mexico), கொலோசியம் (Italy, Rome), சீனப் பெருஞ்சுவர் (China) , பைசா நகர் சாய்ந்த கோபுரம், தாஜ் மஹால் (India), எம்பயர் ஸ்டேட் கட்டிடம் (America), ஈபெல் கோபுரம் (France))புதிதாக உலக அதிசயங்களுக்கான தகுதியான கட்டிடங்களாக பரிந்துரை செய்யப்பட்டன இதில் தான் முதன் முதலாக இந்தியாவின் தாஜ்மஹால் உலக அதிசயங்களுக்கான பட்டியலுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து சில நூற்றாண்டுகளாக அதிகாரபூர்வமற்ற உலக அதிசயபட்டியல் வழக்கத்தில் இருந்தது.
இந்நிலையில் 1999-ஆம் ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த பெர்னார்ட் வெபர் என்ற திரைப்பட இயக்குனர் அதிகாரப்பூர்வமான புதிய ஏழு உலக அதிசயங்களை கொண்ட பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்காக அவர் நியூ 7 வொண்டர்ஸ் என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தினார். 2001-ஆம் ஆண்டு புதிய பட்டியல் தயாரிக்கும் பணிக்கான இணையதளம் துவங்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து புதிய உலக அதிசயங்களுக்காக போட்டியிடும் நினைவுச் சின்னங்களுக்கான விண்ணப்பங்கள் 2005-ஆம் ஆண்டு நவம்பர்-24,வரை பெற்றுக்கொள்ளப்பட்டது, உலகம் முழுவதிலும் இருந்து 177-நினைவு சின்னங்கள் பரிசீலனைக்கு வந்ததாகவும் அவற்றில்21-தளங்களை மட்டும் உலகின் தலைசிறந்த கட்டிடக்கலை வல்லுனர்களை கொண்டு போட்டிக்கு தகுதியானவை என்று தேர்ந்தெடுத்ததாகவும் நியூ 7 வொண்டர்ஸ் அறக்கட்டளை ஜனவரி 1, 2006-ல் அறிவித்தது.
இந்த 21-தளங்களில் உலகின் பண்டைய உலகஅதிசயபட்டியலில் இடம் பிடித்திருந்த எகிப்து பிரமிடும் ஒன்று, எகிப்திய மக்கள் பிரமிடை ஓட்டெடுப்பிற்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்ததால் பிரமிடு மதிப்புமிக்க தளமாக கருதப்பட்டு ஓட்டெடுப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து எஞ்சியிருந்த 20-தளங்கள் மட்டும் மக்களின் ஓட்டெடுப்பிற்காக விடப்பட்டது. 2007-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஓட்டெடுப்பு முடித்துக்கொள்ளப்பட்டு 2007-ஆம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள லிஸ்பன் நகரில் வெற்றி பெற்ற புதிய ஏழு உலக அதிசயங்களாக சிச்சென் இட்சா (Mexico),மீட்பர் கிறிஸ்து சிலை (Brazil), கொலோசியம் (Rome), சீனப் பெருஞ்சுவர் (China), மாச்சு பிச்சு(Peru), பெட்ரா (Jordan), தாஜ் மஹால் (India) ஆகியவை அறிவிக்கப்பட்டது.
பதிவுகள் குறித்த உங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நண்பர்களே மறக்காமல் உங்கள் வாக்குகளை கீழே உள்ள ஒட்டுப் பட்டைகளில் பதிவு செய்துவிட்டுச் செல்லுங்கள் உங்களது ஓட்டுக்கள் இப்பதிவு அதிக நண்பர்களை சென்றடைய உதவிடும் என்பதை மறக்க வேண்டாம். நன்றி மீண்டுமொரு சிறந்த தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் வணக்கம்.
நன்றி: வரலாற்றுசுவடுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக