திங்கள், மார்ச் 11, 2013

பற்களை பாதுகாப்பது எப்படி?

நம் அன்றாட வாழ்வில் பல் துலக்குதல் ஓர் அத்தியாவசியமான அங்கமாகிவிட்ட காலமிது. காலையில் கண் விழித்ததும் நாம் ஒவ்வொருவரும் செய்ய நினைக்கும் முதல் காரியம் பல் துலக்குதலே. துலக்கி முடிக்கும் வரை நாம் வாயில் எச்சில் கூட்டி விழுங்கவும் தோன்றாது, துப்பவும் தோன்றாது படும் அவதி ஓர் தனி விதம்.

துலக்கிய பின் தோன்றும் புத்துணர்வும், தூய்மை உணர்வும் ஓர் தனி இன்பமே. எனவே பல் துலக்குதல் காலைக் கடன்களில் ஒன்றாகவேக் கருதப்பட்டு, அனைவராலும் சாதி, மத பேதமின்றி, அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆகையினால் நாம் இந்த நல்ல பழக்கத்தினை சரியாக அறிந்துக் கொண்டு, சரிவர கடைப்பிடித்தலை கடமையாகக் கொள்வது கட்டாயம் தானே.

பல் துலக்குதலின் முக்கியத்துவம்:

முதற் கோணல் முற்றும் கோணல் என்பது பழமொழி. நாம் காலையில் செய்யும் இம் முதல் காரியமே சரியாக அமைந்தால் அன்றைய அனைத்து காரியங்களுமே சரியாக நடக்கக் கூடுமன்றோ... பல் துலக்குதலின் சரியான வழிமுறையினையும், நுட்பத்தினையும் நாம் அறிந்துகொண்டு, நல்ல பலனடைந்து, நம் வழித்தோன்றல்களுக்கும் இந்த நல்ல பழக்கத்தினை படிப்பித்து, பலனடைய வைப்பது நமது கடமை. பல் துலக்குதல் வாயின் சுகாதாரத்தை பாதுகாப்பது மட்டுமில்லாமல், பற்சிதைவையும், ஈறுகளில் உண்டாகும் நோய்களையும், மற்றும் வாய் துர்நாற்றத்தையும் தவிர்க்க வல்லது.

நாம் ஏன் பல் துலக்க வேண்டும்?

பல் துலக்குதல் என்பது நம் வாயிலும் பற்களிலும் உள்ள அழுக்கை நீக்கத்தான். இந்த அழுக்கை ஆங்கிலத்தில் plaque என்றும் tartar என்றும் கூறுவர். இந்த அழுக்கானது, பல் ஈறுகளிலிருந்து நீக்கப்படாத உணவுத் துகளும், கிருமிக் கூட்டங்களும் கலந்த ஓர் கலவையே. பல் துலக்கிய இரண்டு அல்லது மூன்று மணிகளுக்குள்ளே இந்த அழுக்கு (plaque) பல் ஈறுகளில் படியத் துவங்கும். இவைகள் பல்லை மட்டுமல்லாமல் பல் ஈறுகளுக்கும் பாதிப்புகளை அதிகமாக்குவதோடு, பற்களை இழப்பதற்கும் காரணமாகிவிடுகிறது. எனவே பற்களை இருமுறை துலக்குதலும், உணவு உண்டபின் ஒவ்வொரு முறையும் மிக நன்றாக வாய் கொப்பளித்தலும் மிக மிக இன்றியமையாத ஒன்றாகும். இதற்குத் தண்­ரையோ, கொப்பளிக்கும் திரவத்தையோ உபயோகிக்கலாம்.

எப்படி சரியாக பல்லைத் துலக்குவது?

பல் துலக்குவதற்கு ஒரே ஒரு சரியான முறைதான் உள்ளது என்ற நிலை இல்லை. அந்நுட்பம் ஒவ்வொருவரின் வாய், தாடையில் பற்கள் அமைந்துள்ள தன்மையினைப் பொருத்து மாறுபடும். பரவலாக, பல் மருத்துவர் பலராலும் பயன்பாட்டுக்குப் பரிந்துரைக்கப்படும் அழுக்கினை (plaque) நீக்கும் வழியினை இங்கு பார்ப்போம்.

பெரியவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறை:

பல் துலக்கியின் (plaque) குச்சுகள் 45 டிகிரி கோணத்தில் ஈறுகளின் மேல் சாய்த்துப் பிடித்து, ஒவ்வொரு முறையும் மூன்று பற்களின் மேல், முன்னும், பின்னும் நகர்த்தி, சிறிது அதிர்வுடன் கூடிய சுழற்றும் முறையிலும் தேய்க்க வேண்டும். இம்முறையை கடைவாய் பற்களில் துவக்கி முன் பற்கள் வரை, மூன்று, மூன்று பற்களாக முன்னேற வேண்டும். மேல் தாடையின் வலது, இடது, உள், வெளிப் பக்கங்களிலும், அதே போல் கீழ் தாடையிலும் வலது, இடது, உள், வெளிப் பக்கங்களிலும் தேய்க்க வேண்டும். இச் சுழற்சியினை சுமார் 15 முதல் 20 முறைகள் ஒவ்வோர் இடத்திலும் மேற்கொள்ள வேண்டும்.

முன் பற்களுக்கு மட்டும் பல் துலக்கியை செங்குத்தாக பிடித்து 45 டிகிரி கோணத்தில் மேலும் கீழும் நகர்த்தி, உள்ளும் வெளியும் தேய்த்து விட வேண்டும். கடைவாய் பற்களின், மெல்லும் மற்றும் கடிக்கும் பகுதிகளில் பல்துலக்கியின் குச்சுகளால் நன்றாக அழுத்திப் பிடித்து முன்னும் பின்னுமாகத் தேய்த்து விட வேண்டும். பற்களைத்தான் செம்மையாகத் தேய்த்து முடித்தாயிற்றே என்று முடித்து விடாமல் மறவாது நமது நாக்கின் புற பகுதிகளில் பல் துலக்கியால் முன்னும் பின்னும் அசைத்து நகர்த்தித் தேய்த்தால், வாய் துர்நாற்றம் வீசக் காரணமான கிருமிகளை அகற்றி விட முடியும்.

சிறியவர்களுக்கான முறை:

சிறார்களை பல் மற்றும் ஈறுகளில் பல் துலக்கியின் குச்சுகளால் வட்ட வடிவில் சுழற்சி முறையில் தேய்க்க அறிவுறுத்த வேண்டும். உங்களுக்குத் தெரியுமா, பச்சிளம், பல் முளைக்காத பாலகர்களுக்கும் பக்குவமாக ஈறுகளை விரல்களால் தேய்த்து விடுதல் சாலச் சிறந்த முறை. குழந்தைகளை பாசப் பரிவுடன் ஒரு கையில் ஏந்திக்கொண்டு மறு கையில், ஆள்காட்டி விரலில் ஈரத் துணி சுற்றி ஈறுகளில் இதமாக முழுதாகத் தடவி துடைத்து விட வேண்டும்.

எத்தகைய பல்துலக்கிகளை உபயோகித்தல் நல்லது?

மிருதுவான, கூர்முனை இல்லாத, வட்ட வழுவழுப்பான முனைகள் கொண்ட நைலான் குச்சுகளுடன் கூடிய பல் துலக்கியால் பல் துலக்குவது நல்லது. கூர் முனை குச்சுகளைத் தவிர்க்க வேண்டும். கடினமான மற்றும் விரைப்பான குச்சுகள் கொண்ட பல் துலக்கிகள் பல்லின் எனாமல் மற்றும் ஈறுகளை சேதப்படுத்தி விடக்கூடும். அவைகளைத் தவிர்த்தல் நலமே.

எவ்வித பற்பசைகளை உபயோகிக்கலாம்?

பற்சிதைவைத் தடுக்கும் தன்மை வாய்ந்த புளூரைடு கொண்ட பற்பசைகளை உபயோகித்தல் நல்லது. சிறுவர்களுக்கு ஒரு பட்டாணியின் அளவிலான பற்பசையினை உபயோகித்தலே போதுமானது. ஏனெனில் சில சிறுவர்கள் அதிக பற்பசை வைத்தால் துலக்கும்போது விழுங்கிவிட வாய்ப்புண்டு. இது அவர்களுக்கு உடலில் அதிக அளவிலான புளூரைடு நிறைந்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பளிக்கும்.

பற்களை எப்படி பாதுகாப்பது?

பற்களை குண்டூசி மற்றும் குச்சிகளை வைத்து குத்தக் கூடாது. அப்படி குத்துவதால்... மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக