சனி, ஜனவரி 29, 2011

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 12

ஆக்கம். இ.சொ.லிங்கதாசன் 
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.
கடந்த அத்தியாயத்தில் "மேற்கத்திய நாடுகளில் போதுமான மருத்துவ வசதிகள் இருந்தும், உடல் ஊனமுள்ள குழந்தைகள் அதிகம் பிறப்பது ஏன்? என்றொரு கேள்வியை வாசகர்களிடம் கேட்டிருந்தேன். ஒரு சில வாசகர்கள் தமது பதில்களை 'ஊகத்தின்' அடிப்படையில் எழுதியிருந்தார்கள். அவற்றில் பெரும்பாலானவை ஏற்புடையதாக இல்லாதிருப்பினும், பதிலளித்த வாசகர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.


மீண்டும் 'கருத்தடை முறைகளில்' ஏற்படும் குறைபாடுகளுக்கே வருகிறேன். மேற்கத்திய நாடுகளில் பதின்ம வயதிலேயே (Teenage) இளையோர் தமது மனதுக்குப் பிடித்த ஒரு இணையை (Mate) காதலனாகவோ அன்றேல் காதலியாகவோ தேர்வு செய்து அவருடன் நெருங்கிப் பழகுதல் ஒரு சாதாரண விடயம் ஆகும். இத்தகைய இளையோரில் பெரும்பாலானவர்கள் தமது திருமணத்திற்கு முன்பே தனது காதலன்/காதலியுடன் சேர்ந்து வாழ்வதும், பாலுறவில் ஈடுபடுவதும் சர்வ சாதாரணமான விடயமாகும். இத்தகைய சோடிகளில் பெரும்பாலானவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. தமது சுதந்திரம் பறிபோய்விடும் என்ற எண்ணமும், பொருளாதார நெருக்கடி பற்றிய பய உணர்வுமே காரணமாகும். அத்துடன் இப்பராயத்தினரில் பலர் ஏதாவதொரு துறையில் கல்வி கற்றுக் கொண்டிருப்பவர்களாக இருப்பர். அவர்களில் பெண்கள் ஒரு குழந்தைக்குத் தாயாகுமிடத்து அவர்களது கல்வி பின்தள்ளப் படும் அல்லது இடைநிறுத்தப் படும் ஏதுநிலை உள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் 'கர்ப்பத்தடை' முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.


இவ்வாறு பதின்ம வயதிலேயே கர்ப்பத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்களின் உடல் ஆரோக்கியம் குறிப்பிட்ட வயதிற்குள் குறைவடைவதுடன், அவர்களது கருப்பையின் ஆரோக்கியம் மிகவும் குறைவடைகிறது. எவ்வாறு எமது உள்ளுறுப்புகளில் நிகழும் செயற்பாடுகளுக்கும், இயக்கத்திற்கும் கூட 'மூளை' பொறுப்பாகிறதோ அதேபோன்று பெண்களின் கருப்பையின் செயற்பாட்டிற்கும், சினைப்பையின் (Ovary) ஒழுங்கான இயக்கத்திற்கும் மூளை காரணமாகிறது. இதைப் பெரும்பாலான பெண்கள் தமது வாழ்நாளில் உணர்வதேயில்லை. நான் மேலே குறிப்பிடட்ட 'மேற்கத்திய' நாடுகளில் உள்ள பெண்கள் சிறு வயதிலேயே கர்ப்பத்தடை மாத்திரைகளை உபயோகிக்க ஆரம்பிப்பதால் தமது கர்ப்பப் பையைப் பலவீனமடையச் செய்வதுடன், சினைப் பையின்(கரு முட்டை உருவாகுமிடம்) செயற்பாட்டில் உள்ள சமநிலையைத்  (regulation) தமது அறியாமையான சில செயற்பாடுகளால் குழப்பி விடுகின்றனர். இதனால் கருப்பையின், சினைப்பையின் செயற்பாடுகள் ஒரு ஒழுங்கில் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் அவர்கள் பல உடலியல் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். உதாரணமாக , உடல் பருமனாதல், ஒழுங்கீனமான மாதவிலக்கு, எதிர்பாராத நேரத்தில், காரணமில்லாமலே பெண்ணுறுப்பிலிருந்து குருதிக் கசிவு, தலைவலி, தலைப்பாரம், தலைச் சுற்று, உடல் பலவீனமாதல், வாந்தி போன்ற இன்னோரன்ன கோளாறுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக