வியாழன், அக்டோபர் 31, 2013

ஹலோவீன், ஏன், எதற்கு?

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்
நாம் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த காலம் தொட்டே, அர்த்தம் தெரிந்தும், தெரியாமலும், உணர்ந்தும், உணராமலும், பல மேலைத்தேயக் கொண்டாட்டங்களைக் கொண்டாடி மகிழ்கிறோம். இவற்றில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, ஈஸ்டர் போன்றவை இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் உள்ள கிறீஸ்தவ மக்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவையாகும். இதற்குக் காரணமாக இலங்கையும், இந்தியாவும் மேற்கத்தைய நாட்டவர்களின் ஆட்சிக்குள் பல நூற்றாண்டுகள் உட்பட்டிருந்ததைக் கூறலாம்.
இதற்கடுத்தாற்போல், புலம்பெயர் மக்களிடையே இன்று பிரபலம் பெற்றுவரும் ஒரு கொண்டாட்டம் அல்லது விளையாட்டு ஒன்று உண்டென்றால் அது 'ஹலோவீன்' என்ற குழந்தைகளைக் குதூகலிக்க வைக்கும் விளையாட்டாகும்.
இது ஒரு மதச்சார்பற்ற விளையாட்டாக அமைந்திருப்பதால்,  நாம் குடி புகுந்துள்ள இந்தத் தேசங்களில், பெரும்பாலான பெற்றோர்கள் தயங்காமல் தமது பிள்ளைகளை கலந்து கொள்ள அனுமதிக்கின்றனர். "ரோமாபுரியில் ரோமானியனாக இரு"(Be a Roman, when you are in Rom) என்ற ஆங்கிலப் பழமொழி இங்கு மேற்கத்திய நாடுகளில் பிரபலம், அப்பழமொழிக்கு நிகரான பழமொழி ஒன்று நமது தமிழ் மக்கள் மத்தியில் உண்டு "ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு, ஊரே ஓடினால் ஒத்து ஓடு' என்பதுதான் அதுவாகும். அநேகமாக புலம்பெயர் தமிழ் சமூகத்தில் பெரும்பாலானோர் இக்கொள்கைக்கு அமைவாகவே வாழ்ந்து கொண்டிருப்பதாகவே, நான் கருதுகிறேன்.



நன்றி: http://thrillgeek.com
இந்தச் சிறுவர் சிறுமியரைக் கவர்ந்திழுக்கும் 'ஹலோவீன்' கொண்டாட்டத்தில், அல்லது விளையாட்டில் நமது முன்னோர்களின் 'பேய், பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள், மந்திர, தந்திர வித்தைகள், சூனியக் கிழவி, திகிலூட்டும் ஆவிகள் பற்றிய நம்பிக்கைகள் பிரதிபலிப்பதையும், இழையோடியிருப்பதையும் காண முடியும். இதில் நீங்கள் பின்வரும் விடயங்களை குழந்தைகள் மத்தியில் அவதானிக்க முடியும்:

  1. பலவிதமான பயமுறுத்தும் மாறுவேடங்கள் அணிவது.
  2. மற்றவர்களைப் பயமுறுத்தி விளையாடுவது.
  3. மாறுவேட விருந்துகளில் கலந்துகொள்வது.
  4. பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது.
  5. திகிலூட்டும் திரைப்படங்களைப் பார்ப்பது.
  6. நம்மூரில் கார்த்திகைத் தீபத்திற்கு(விளக்கீடு) வீட்டிற்கு வெளியே அல்லது வாயிலில் 'சொக்கப்பனை' எரிப்பதுபோல், இங்கும் பூசணிக்காயில் செய்த அல்லது குடைந்து உருவாக்கிய திகிலூட்டும் உருவத்திற்குள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அடுத்தவர்களைப் பயமுறுத்துவது போன்றவை.

மேலே கூறப்பட்ட விடயங்களில் ஈடுபடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான, சுவாரசியமான ஓர் விளையாட்டாக அமைந்ததில் வியப்பேதுமில்லை.
இவ்விளையாட்டின் வேர்கள் கிறீஸ்தவ சமயத்திலிருந்து வந்தாலும், இன்று உலகளாவிய ரீதியில் ஆங்கில மொழி, கலாச்சாரம் பின்பற்றப்படும் நாடுகளில் அனைத்து இன, மத மக்களாலும் குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கருத்தில்கொண்டு ஒவ்வொரு வருடத்திலும் வரும் ஒக்டோபர் 31 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
இக்கொண்டாடம் முதலில் அமெரிக்காவில் 18 ஆம் நூற்றாண்டில் 'அனைத்துத் துறவியர் தினமாகவும்'(All saint's day) பிற்பட்ட காலப் பகுதியில் 'அறுவடைத் திருவிழாவாகவும்' கொண்டாடப் பட்டது. குழந்தைகளை மகிழ்விப்பதற்காக 'சாத்தான்கள்' விரட்டியடிக்கப்படும்' ஒரு சமய மற்றும் கலை நிகழ்வாக இது மாற்றம்பெற்று, இன்று அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளில் குழந்தைகளின் முக்கியத்துவமான கொண்டாட்டமாகவும், விடுமுறைத் தினமாகவும் மாறிவிட்டது.
இவ்விளையாட்டை விளையாட குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது என்று கூறுகின்ற கிறீஸ்தவ மத அமைப்புகளும் உள்ளன. இவ்விளையாட்டு "சாத்தான்கள், பேய்கள் பற்றிய நம்பிக்கைகளைக்' குழந்தைகளின் மனதில் விதைக்கின்றன, சிறுவயதிலேயே அவர்களைப் பயந்த தன்மையுள்ளவர்களாக ஆக்குகின்றது" என்பது அவைகளின் வாதம். ஆனால் குழந்தைகள் சுவாரசியமாக விளையாடுகின்ற இந்த விளையாட்டில் பெரியவர்கள் ஏன் தலையிடவேண்டும்? என்பது எதிரணியினரின் வாதமாகும்.
ஆபிரிக்காக் கண்டத்தில் மத அமைப்புகளின் கண்டனங்களால் இவ்விளையாட்டு பெரிய அளவில் பிரபலம் பெறவில்லை, இருப்பினும் 'உலகமயமாக்கல்' என்ற சித்தாந்தத்தில் ஊறிப்போயிருக்கும், அமெரிக்காவின் நேச நாடுகளாகிய மேற்கத்திய நாடுகளில், மக்களின் அபிமானம் பெற்ற ஒரு கொண்டாட்டமாக இது திகழ்கிறது.

1 கருத்து:

நம்பள்கி சொன்னது…

ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

கருத்துரையிடுக