வியாழன், டிசம்பர் 29, 2011

தொலைத்தவை எத்தனையோ - 4

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்

(இது ஒரு தொடர் இடுகை)
அப்போது எனக்கு எட்டரை- ஒன்பது வயதிருக்கும். 
நாவலர் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு படித்தேன். பாடசாலை ஓரு மணியளவில் விடும். வீடு வந்து ஆடை மாற்றி உணவு உண்ட பின் ஒரு ஆயிரம் மீட்டருக்கு உள்ளாக இருக்கும் பாக்கியம் ஆசிரியை வீட்டிற்கு, தம்பி, தங்கைகளுடன் படிக்கப் போவோம்.
நாங்கள், பெரியப்பா வீட்டுப் பிள்ளைகள், இன்னும் பாக்கியம் ஆசிரியையின்  பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் என்று, வயது, வகுப்பிற்கு ஏற்றபடி சேர்ந்து படிப்போம். பாக்கியம் ஆசிரியை எமது நாவலர் பாடசாலையில் ஆசிரியை, எமக்கு உறவினரும் கூட.
பாடசாலைக்குரிய வீட்டு வேலைகள், வேறாகவும் படிப்போம். விளையாடுவோம். மாலை ஐந்து, ஆறு மணி வரை நின்று வீடு வருவோம்.
நானும் குவீனும், தாமரையும் ஒன்றாகப் படிப்போம். படிக்கும் நேரம் தவிர எப்போதும் குவீனும், தாமரையும் சேர்ந்து குசுகுசுப்பார்கள். சேர்ந்து விளையாடுவார்கள்.  ஏனோ என்னை ஒதுக்கி விடுவார்கள். (நான் அவர்களிலும்  ஒரு வயது சிறியவள்.)
நான் போராடும் குணம் கொண்டவளில்லை. என் பாட்டில் சுற்றியுள்ள மல்லிகைப் பந்தலை,  முற்றத்துப் பூக்கன்றுகளை ரசிப்பேன். மற்ற பிள்ளைகளுடன் பாக்கியம் ஆசிரியை வீட்டுக் கோழிக் குஞ்சுகள் நிறமடித்திருப்பதை ரசித்து பருந்து தூக்க வர, கூச்சலிட்டு விரட்டுவோம். அடி பெருத்த தென்னை மரங்களில் ஏறி விளையாடுவோம். இப்படிப் பொழுது போகும்.
பாக்கியம் ஆசிரியையும், அவரது தங்கையும் இதைக் கவனித்து, சேர்ந்து படிப்பவர்கள் சேர்ந்து விளையாடவும் வேண்டும் என்று, குவீனையும், தாமரையையும் நன்கு ஏசினார்கள் ” நீங்கள் இப்படி பேபியை ஒதுக்கக் கூடாது” என்று.  (எனது வீட்டுப் பெயர், பிறந்ததிலிருந்து பெற்றவர், ஊரார் அறிந்திருப்பது Baby தான்.)
எனக்கு அது மகிழ்வாக இருந்தது. மாற்றம் வருமென எதிர்பார்த்தேன், காத்திருந்தேன். ஆனால் அது தொடர் கதையாகவே இருந்தது. இதை வேறு யாரிடமும் நான் முறைப்பாடு செய்யவில்லை. ஆனால் நிச்சயம் அம்மாவிடம் இலேசாகக் கூறியிருப்பேன்.  அம்மா,அப்பா ” சமாளித்து நட!”  என்றிருப்பார்கள். (இது எனக்குச் சரியாக நினைவில்லை)
ஒரு சிவராத்திரி வந்தது. அதற்கு நித்திரை விழிப்பது 'சிவ புண்ணியம்' என்பர். அங்கு வரும் பிள்ளைகள் நாங்கள் அதைக் குதூகலமாகக் களிக்க, பாட்டு நாடகம் என்று தயாரிக்கப் பட்டது.
பாக்கியம் ஆசிரியை கோவலன் கண்ணகி நாடகம் போட எங்களைத் தயாரித்தார். எனக்கு கோவலன் வேடம் தரப்பட்டது.
தாமரை மாதவியாக (சபையில் நடனமாட வேண்டும்). குவீனி மாதவிக்கு சாமரம் வீசும் சேடிப் பெண்ணாக. (அவரவர் தரமறிந்து வேடங்கள் தரப்பட்டுள்ளதை என் குழந்தை மனம் அறியவில்லைப் போலும்.)
(மிகுதி அடுத்த அங்கத்தில் தொடரும்)

5 கருத்துகள்:

K.Pavithra, Chennai சொன்னது…

Romba romba nalla irukku

Sahana, 8005 Zurich (Switzerland) சொன்னது…

I like it very much

Anu, USA சொன்னது…

Very interesting. Looking forward to reading the next part, madame

பெயரில்லா சொன்னது…

after new year I will upload, It is ready...
Thank you Pavithra,Sahana,Anu..and others..inclusive anthimaalai.God bless you all.

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

கருத்துரையிடுக