திங்கள், டிசம்பர் 26, 2011

கிறிஸ்துமஸ் மரத்தின் பின்னால்..,

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்


இம்மரத்தை (Evergreen Coniferous Tree) கிறிஸ்துமஸ் பண்டிகையில் அலங்கரித்து மகிழும் வழக்கம் 16 ஆம் நூற்றாண்டில் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான 'லித்துவேனியாவிலும்', ஜேர்மனியிலும் ஆரம்பித்தது என்று நம்பப்படுகிறது. தற்காலத்தில் இம்மரமானது மணிகள், எடை குறைந்த வர்ண உருண்டைகள், நகைகள், இனிப்புகள், மலர்கள், வண்ண அலங்காரங்கள், சிறிய தேவதைகளின் திரு உருவங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப் படுகின்றது. இம்மரத்தின் உச்சியில் ஒரு உலோகத்தால்/ரப்பரால் ஆன ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு தேவதையின் உருவம் வைக்கப்படும். இது தேவ குமாரனாம் இயேசு பெத்லகேமில் பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தை அல்லது தேவதைகளை(இலங்கைத் தமிழில் 'சம்மனசுகள்') நினைவூட்டுவதற்கான சின்னமாகும்.



இம்மரத்தை ஆரம்ப காலங்களில் படைவீரர்கள் அல்லது தேவாலயங்களில் கீதம் பாடுவோர் (இவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் 'சாரணர்கள்' போல் இயங்கி வந்தனர்) போன்ற பிரிவினர் அலங்கரித்து, மரத்தைச் சுற்றி ஆடுதல், பாடுதல் போன்ற களிப்பூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பர், அதன் பின்னர் இது மெல்ல, மெல்ல தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும், அதன்பின் மரபு ரீதியாக கிறீஸ்தவ மக்களின் வீடுகளில் 'பாலன் பிறப்பு' அலங்காரங்களோடு சேர்த்து இடம்பிடித்திருக்கும், பல நூற்றாண்டுகள் கழிந்த நிலையில் 'கத்தோலிக்கர்' தவிர்ந்த ஏனைய கிறீஸ்தவர்கள் மத்தியில் 'பாலன் பிறப்பு' அலங்காரம் விடைபெற்று கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்தல், அதன் கீழ் கிறிஸ்துமஸ் பரிசுகளை வைத்தல், மரத்தைச் சுற்றி ஆடிப் பாடுதல் போன்ற நடைமுறைகள் இடம்பிடித்திருக்கலாம் (அறிமுகமாகியிருக்கலாம்) என்கிறார் ஐரோப்பாவின் மூத்த சமூகவியல் ஆய்வாளரான ஜெர்மனியைச் சேர்ந்த திருமதி.இங்கபோ வெபர் கெல்லமான் (Ingeborg Weber Kellermann).


மேலும் சமயத் தலைவர்களின் கருத்துப்படி ஐரோப்பாவில் கிறிஸ்துமஸ் மரம் அறிமுகப்படுத்தப் படுவதற்கு கிறீஸ்தவ மதத் துறவியாகிய புனித.பொனிபாஸ் (St.Boniface) என்பவர் காரணமாக இருந்துள்ளார். இம்மரம் அறிமுகப் படுத்தப்பட்ட காலத்தில் தற்போதுள்ளதைப் போல் செயற்கை அலங்காரப் பொருட்கள் தொங்கவிடப் படவில்லை என்பதுடன், அவைகளுக்குப் பதிலாக அப்பிள் பழங்கள், கடலைகள், பேரீச்சம் பழங்கள், போன்ற உண்ணத்தக்க பழவகைகளும், கடதாசிப் பூக்களும் தொங்கவிடப்பட்டன. கொண்டாட்ட முடிவில் இப்பழங்களை உண்ணுவதும் வழக்கமாக இருந்தது.


ஐரோப்பாவின் பல நாடுகள் கிறிஸ்துமஸ் மரத்தை 15 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்த ஆரம்பித்தபோதும், டென்மார்க்கில் முதல் முதலாக 1808 ஆம் ஆண்டிலேயே டேனிஷ் மக்கள் இம்மரத்தை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் உபயோகிக்க ஆரம்பித்தனர்.

இலங்கையில், மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தக் கிறிஸ்துமஸ் மரத்திற்குப் பதிலாக 'சவுக்கு மரம்' என அழைக்கப்படும்'கஷோரினா' (Casuarina) மரத்தை உபயோகிக்கும் வழக்கம் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப் பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது.இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்திலேயே கிறிஸ்துமஸ் கொண்டாடப் பட்டதாயினும் அது மக்களிடம் வரவேற்புப் பெற்ற ஒரு பிரபலாமான கொண்டாட்டமாக இருக்கவில்லை. இதேபோல் இந்தியாவிலும் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் 'கிறிஸ்துமஸ் மரமும்' மிகவும் பிரபலம் அடைந்து இன்றவரை அவை மக்களின் வாழ்க்கையின் பின்னிப் பிணைந்த ஒரு அம்சமாக மாறியுள்ளன என்றால் மிகையில்லை.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

தகவல் அறிந்தோம். நன்றி. வாழ்த்துகள்.

கருத்துரையிடுக