வியாழன், டிசம்பர் 08, 2011

தொலைத்தவை எத்தனையோ - 3


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்


கூப்பிடு தூரத்தில் தான் எனது தந்தையின் தாய் தந்தையர், கண்ணாடியப்பா – ஆச்சி, என் மாமிமார் சித்தப்பா பெரியப்பாவை வாழ்ந்தோம்.
மாமிமார் (கடந்த முறை பகுதி 2ல் படங்கள் போட்டிருந்தேன்.) சங்கீதம் படித்தனர். சங்கீதப் பரீட்சையெல்லாம் எழுதினார்கள். பரீட்சை பற்றி கிறேட் வன், ரூ (grade one two) என்று அவர்கள் பேசியது என் காதில் விழுந்துள்ளது. நான் சிறு பிள்ளை (5, 6 வயதிருக்கும்.) அதன் விவரங்கள் புரியவில்லை.
இவர்கள் அரசகுமாரிகள் போலத்தான் வாழ்ந்தார்கள்
சாம்பசிவம் வாத்தியார் என்பவர் சனிக்கிழமைகளில் சைக்கிளில் வீட்டிற்கு வந்து சஙகீதம் சொல்லித் தருவார். என்ன வேலையிருந்தாலும், அம்மா கூப்பிட்டாலும் கேட்காமல் சனிக்கிழமையானால் மாமி வீட்டிற்கு ஓடி விடுவேன். ஒரே வீட்டையே ஆச்சி வீடு, அப்பு வீடு, மாமி வீடு என்று நினைத்த நேரம் நினைத்த மாதிரி பேசுவோம்,
வாத்தியார் வர மாமிமார் வெளி விறாந்தையில் உயரமான திண்ணையில் பாய் கொண்டு வந்து விரிப்பார்கள். பாயின் ஒரு நுனியில் வாத்தியார் இருப்பார். மறு நுனியில் இரண்டு மாமிமாரும் சப்பாணி கொட்டி இருப்பினம். மாமியின் ஆர்மோனியப் பெட்டியுடன் தான் வகுப்பு நடக்கும். நான் மிகச் சிறு பிள்ளை,  ஒரு ஓரமாகச் சப்பாணி கொட்டி முழுப்பாடமும் இமை வெட்டாது கேட்டு ரசிப்பேன்.
வெள்ளிக் கிழமை இருட்டிய மாலை நேரங்களில் ”வா! பேபி! (baby) தேவாரம் படிப்போம்!” என்று மாமி வீட்டில் வந்து தன் வீட்டிற்குக் கூட்டிப் போவா. மாமி ஆர்மோனியம் வாசிக்க நாமிருவரும் மாமியோடு பாடுவோம். சிலவேளைகளில் என் தம்பி, தங்கைகளும் என்னோடு வருவார்கள். மாமி எழுந்து போக நாங்களும் ஆர்மோனியம் வாசிப்போம். இப்படியே என் உடம்பில் இசை ஊறியது. 
நாவலர் பாடசாலையிலும் மங்களேஸ்வரி ஆசிரியர் சங்கீத ஆசிரியையாக இருந்தார். அங்கு படித்தவை மிக பயனள்ளவை மறக்க முடியாதவை.
நான் 5ம் வகுப்பில் (9 வயது) ஸ்கொலர்சிப் சோதனையில் சித்தியடைந்த போது (தந்தையார் என்ன வேலை என்றால் எப்போதுமே அப்பா கமக்காரன் என்றே போடுவார். (ஆட்கள் தான் வயல் செய்வது.) எங்களையும் போடச் சொல்லுவார். அதனால் எனக்கு ஸ்கொலர்சிப் பரீட்சை எழுத முடிந்தது. ஏனப்பா இப்படி செய்கிறீர்கள் என்று அப்பாவோடு வாதாடியது ஒரு புறமான கதை. தான் ஒரு கமக்காரன் என்று கூறுவதை அவர் பெருமையாகக் கருதினார்.)
10வயதில் ஸரான்லிக் கல்லுரியில் விடுதியில் இருந்து படித்தேன்.
எல்லாப் பாடங்களுடன் சங்கீதம், நடனமும் பாடங்களாக இருந்தது.
நடனத்திற்கு பிரபல நடன ஆசிரியர் கொக்குவில் சுப்பையா ஆசிரியர். சங்கீத ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை (சுப்பிரமணியமோ..என்னமோ). நடனம் கும்பலோடு கோவிந்தாவாக பழக்குவார். பாடசாலையில் விழாக்களின் போது பிரபலங்களுக்கு பயிற்சிகளே பெரும்பாலும் நடக்கும். நாங்கள் அமர்ந்து பார்த்து ரசிப்போம்.
சங்கீதமும் தவணைப் பரீட்சை நடக்கும்.
இப்படி ஒரு தடவை பரீட்சையின் போது எல்லோரும் தனித்தனியாகப் பாடினோம். புள்ளிகள் வழங்கினார்கள். எனது முறை வந்த போது
” எழுந்தாளே பூங்கோதை,
தீயிலிருந்து எழுந்தாளே சீதை…” எனும் கீர்த்தனம் பாடினேன்.
எனக்கே கூடிய புள்ளி கிடைத்தது. நான் நன்கு பாடியது, கூடிய புள்ளி எடுத்தது சங்கீத, நடன வாத்திமாருக்கு ஒரே ஆச்சரியம்! இந்தப் பாடலை அவர்கள் சொல்லித் தரவும் இல்லை. பின்பு கேட்டார்கள் ” எங்கு வேதா இந்தப் பாடலைப் பழகினீர்?” என்று.
அத்தனையும் என் மாமிமார் வகுப்பில் கேட்டது என்று கூறினேன்.
இசையில் எனக்கு இவ்வளவு ஆர்வம் வந்ததற்கு இந்தச் சிறு வயது அனுபவமும் ஒரு காரணமுமாகும்.
இந்திய இசை விழாக்களிற்கு எனது ஒரு சித்தப்பா திருமணம் புரியும் வரை வருடந் தோறும் செல்வார். வந்து கதை கதையாகக் கூறுவார். இந்தச் சித்தப்பா நாவலர் பாடசாலையில் பயிற்றப் பட்ட ஆசிரியராகிப் பின் பாடசாலை அதிபரும் ஆகி ஓய்வு பெற்றார். இன்று கனடாவில் வசிக்கிறார்.
பெரிய மாமி காலமாகிவிட்டார். சின்ன மாமி சுகயீகமாகி கனடாவில் வசிக்கிறார் பேசவும் முடியாது.
நினைவில் தான் பேச முடியும்.
அந்த இனிய காலங்கள் என் வாழ்விற்கு இனிப்பூட்டிய காலம்.
என் வளர்ச்சிக்கு வேலியான காலம்.
பாசம், நேசமான இனித் திரும்பி வராத காலம்.
அப்படியே காலமும் நாமும் இருந்திருக்கக் கூடதோ என்று ஏங்கும் காலம்.
இவை தொலைத்த காலங்கள் தானே!
அது ஒரு நிலாக் காலம்! 
அது ஒரு கனாக் காலம்!
புது தேன் சிந்திய காலம்!

3 கருத்துகள்:

vinothiny pathmanathan dk சொன்னது…

கடந்த காலங்கள் எப்போதுமே தேன் சிந்தும் இனிய நினைவுகள் தாம் .

பெயரில்லா சொன்னது…

Thank you very much vino.God bless you.

பெயரில்லா சொன்னது…

And Thank you very much Anthimaalai.

கருத்துரையிடுக