ஞாயிறு, அக்டோபர் 24, 2010

முதற்பரிசு மூன்றுகோடி - அத்தியாயம் 6

ஆக்கம். இ.சொ.லிங்கதாசன் 
சிங்கப்பூர் வழிகாட்டுகிறது


உலகில் ஒரு மிகச்சிறிய நாட்டில், சுமார் 50 லட்சம் மக்கள் அவர்களது நாட்டில், நிலத்திற்கடியில் ஒரு சொட்டுக் குடிநீர்கூட இல்லாத சூழலிலும், தமது திறமைகளைப் பலவழிகளிலும் பயன்படுத்தித் தண்ணீரைப் பெற்று வாழ்க்கை நடத்துகின்றனர், அந்நாடு எது? என்ற கேள்வியுடன் கடந்த வாரக் கட்டுரைத் தொடரை நிறைவு செய்திருந்தேன். உங்களில் பலர் அல்லது ஒரு சிலரேனும் விடையைக் கண்டு பிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் கேட்டிருந்த கேள்விக்குச் சரியான விடை சிங்கப்பூர் என்பதுதான்.
சரி, சிங்கப்பூரில் நிலத்திற்கடியில் ஒருசொட்டுக் குடிநீர்கூட இல்லாத சூழலில் அங்கு வாழும் சுமார் 50 லட்சம் மக்கள் குடிநீருக்கு என்ன செய்கின்றனர்? அவர்கள் பருகும் குடிநீர் அவர்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது? இக்கேள்விகளுக்கான விடைகளையே இவ்வாரமும், எதிர்வரும் வாரத்திலும் பார்க்க இருக்கிறோம்.


சிங்கப்பூர் மக்கள் குடிநீரை எங்கிருந்து பெறுகிறார்கள் என்று ஆய்வு செய்வதற்கு, சிங்கப்பூர் என்ற நாட்டைப் பற்றியும், அந்நாட்டின் வரலாறு பற்றியும் ஓரளவு நாம் தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகும். நமது 'அந்திமாலையில்' ஒவ்வொரு வாரமும் 'நாடுகாண் பயணம்' என்ற தலைப்பில், ஒவ்வொரு நாட்டைப் பற்றிய தகவல்களையும், ஓரளவு விரிவாகப் பார்த்து வருகிறோம். அந்த நாடுகளின் வரிசையில் 'சிங்கப்பூரும்' நிச்சயமாக இடம்பெறும் என்ற காரணத்தால் இக்கட்டுரையில், சிங்கப்பூரைப் பற்றி விரிவாகக் கூறாது, மிகவும் சுருக்கமாக ஆராயவுள்ளேன்.


சிங்கப்பூர் பற்றி நம் ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிலுள்ள குறிப்பிட்ட தொகையினரான தமிழர்களுக்கும் தெரிந்ததெல்லாம், சிங்கப்பூர் ஒரு பணக்கார நாடு, அது ஒரு மிகச்சிறிய நாடு, அது ஒரு சுற்றுலா நாடு, அங்கு சுத்தமான தங்கநகை வாங்கலாம், அங்கு தமிழர்கள் வாழ்கின்றனர், அங்கு இந்தியக் கலாச்சாரப் பொருட்களிலிருந்து, கைவினைப் பொருட்கள்வரை வாங்கலாம் போன்ற தகவல்களே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இதில் சிங்கப்பூரின் வரலாறோ, அதன் புவியியல் அமைவிடம் பற்றியோ பலரும் அறிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு.


நான் பாடசாலையில் படித்த காலத்தில், பெரியவர்கள் பேசுவதை ஆர்வமாகக் கேட்கும் பருவத்தில், அவர்கள் பேச்சிலிருந்து நான் புரிந்துகொண்டதெல்லாம், "சிங்கப்பூர் என்பது எமது யாழ்ப்பாண நகரத்தை ஒத்த அளவு நிலப்பரப்பைக் கொண்ட ஒரு சிறிய நாடு என்பதாகும்" இதில் "யாழ்ப்பாண நகரத்தை ஒத்த அளவு நிலப்பரப்பு" என்ற கருத்து ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஏனெனில் யாழ்ப்பாண நகரின் நிலப்பரப்பு 20,2 சதுர கிலோமீற்றர்களாகும், ஆனால் சிங்கப்பூரின் நிலப்பரப்பு 710,2 சதுர கிலோமீற்றர்கள். சிலவேளை புவியியல் 'அறியாமை' காரணமாக யாழ்மக்களில் சிலர் "சிங்கப்பூர், யாழ்ப்பாண மாவட்டம் அளவேயான நிலப்பரப்பைக் கொண்டது" எனக் கூறியிருப்பின் அது ஓரளவுக்கேனும், ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாகும். ஏனெனில் யாழ்ப்பாண மாவட்டத்தின் நிலப்பரப்பு 1025 சதுர கிலோமீற்றர்கள். இது சிங்கப்பூரின் நிலப்பரப்பிலிருந்து 314,8 சதுர கிலோமீற்றர்கள் அதிகமானதாகும். சிங்கப்பூர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் பரப்பளவைப் பற்றித் துல்லியமாகத் தெரியாத எவரேனும் சிங்கப்பூர் நாடு, யாழ்ப்பாண மாவட்டம் அளவேயான நிலப்பரப்பைக் கொண்டது என்று கூறினால் அதை ஓரளவேனும் ஏற்றுக் கொள்ளலாம்.
(அடுத்த வாரமும் தொடரும்)    
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

1 கருத்து:

seetha சொன்னது…

நல்லது அறிவு வரக்கூடிய விசியம் உங்கள் நேர த்துக்கு மிகவும் நன்றி
மேன்மேலும் உங்கள் அறிவான ஆக்கங்களை எதிர்பாக்கிறோம்

கருத்துரையிடுக