செவ்வாய், அக்டோபர் 19, 2010

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 5


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்

என்னது! கனடாவில் நெல்விளைகிறதா? என்றேன் நான் ஆச்சரியம் தாங்க மாட்டாதவனாக,   அவர் தொடர்ந்தார், கனடா உட்பட வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளில் நெல் விளைகிறது. ஆனால் ஆசிய நாடுகளைப் போல் பெருமளவில் அல்ல. இந்நாடுகளில் கோடைகாலம் மூன்று மாதங்களுக்குக் குறைவாக இருப்பதாலும், இரவில் குளிர் அதிகமாக இருப்பதாலும் குறிப்பிடத்தக்க அளவில் நெல் விளைவிக்கப் படவில்லை. அத்துடன் மேற்கத்தைய நாட்டவர்களின் உணவுகள் பெரும்பாலும் 'கோதுமை' சார்ந்ததாக இருப்பதாலும், கோதுமையும் அது போன்ற ஏனைய தானியங்களும் குளிரைத் தாங்கி வளரும் என்பதாலும் இவர்கள் கோதுமையை அதிகளவில் விளைவிக்கிறார்கள். அத்துடன் இவர்களிடம் 'அரிசிக்கு' போதுமான சந்தை இல்லாத காரணத்தினால் இவர்கள் நெற்செய்கையில் போதிய ஆர்வம் காட்டவுமில்லை என்று முடித்தார் திரு.பழனிச்சாமி அவர்கள்.
அப்படியானால் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலோ, கனடாவிலோ 'பாசுமதி' அரிசி விளைகிறதா என்றேன் விடாப்பிடியாக. அவர் தொடர்ந்தார், உங்களுக்கு ஒரு விடயத்தைத் தெளிவாகக் கூறவேண்டியிருக்கிறது. 'பாசுமதி' அரிசி என்பது இந்தியாவின் பூர்வீகத் தானியங்களில் ஒன்று. இந்த பாசுமதி நெல் வகையானது இந்திய சீதோஷ்ண நிலையிலேயே நன்றாக விளையும் தன்மை கொண்டது, இருப்பினும் இந்திய மண்வகைகள், காலநிலை போன்றவற்றைக் கொண்ட பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் பாசுமதி நெல் விளைகிறது. ஆனால் 'பாசுமதி' அரிசியின் தாயகம் என்றால் அது இந்தியாதான், அதுமட்டுமல்ல உலகத்தோர் அனைவரும் உச்சரிக்கும் 'பாசுமதி' என்ற பெயர்கூட இந்தியாவின் தொன்மையான மொழியாகிய சம்ஸ்கிருத மொழிச் சொல்லாகும். சமஸ்கிருதத்தில் 'பாசுமதி' என்றால் 'வாசனை மிக்கது' என்று அர்த்தம். என்று ஒரு குட்டிப் பிரசங்கத்தையே நிகழ்த்தினார் அந்தப் பெரிய அனுபவசாலி.
சரி இன்றைய உலகில் மிகவும் விலைகூடிய அரிசி என்று 'பாசுமதியைத்தான்' கூறுவீர்களா? என்றேன் அவரிடமிருந்து மேலதிகமாக அறிவைப் பெறும் நோக்கத்துடன்.
அவர் தொடர்ந்தார் , "இன்றைய இருபதாம் நூற்றாண்டில் உலகில் ஏறக்குறைய 40000 அரிசியினங்கள் அல்லது நெல் இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பிரேசில், மெக்சிக்கோ நாடுகளில், காடுகளில் இயற்கையாகவே விளையும்
'காட்டு அரிசி'(wild rice)
'காட்டு அரிசி'(wild rice) என்றழைக்கப் படும் அரிசியே உலகில் விலைகூடிய அரிசியாகும், காரணம் ஒரு கிலோ பாசுமதி அரிசியின் சர்வதேசச் சந்தை விலை ஏறக்குறைய 3 அமெரிக்க டொலர்களாகும், ஆனால் நான் ஏற்கனவே குறிப்பிட்ட 'காட்டு அரிசியின்' விலை ஒரு கிலோவுக்கு இன்றைய சர்வதேசச் சந்தை நிலவரப்படி, ஏறக்குறைய 20 அமெரிக்க டொலர்களாகும்" என்றார்.
உங்களுடைய தகவல்கள் என்னைத் திகைப்பும், அளவுக்குமீறிய ஆச்சரியமும் கொள்ள வைக்கின்றன என்றேன் நான். "எதனால்? என்றார் அவர், "உலகில் அரிசியில் நாற்பதினாயிரம் வகைகள் என்ற தகவல் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது, அதேபோல் ஒரு கிலோ 'காட்டு அரிசியின்' விலை இலங்கை ரூபாயில் 2200 என்ற தகவல் என்னைத் திகைப்படையச் செய்கிறது" என்றேன். "இதில் எந்தவித திகைப்பும் கொள்ளத் தேவையில்லை, உலகில் எந்தப் பொருள் அருமைத் தன்மையாகக் கிடைக்கிறதோ அது மிகவும் விலை கூடியதாக இருப்பது இயற்கைதானே? தங்கத்தைவிட மிக அருமையாகக் கிடைக்கும் 'பிளாட்டினத்தின்' விலை அதிகம் தானே? என்று தனது கருத்திற்கு வலு சேர்த்தார்.

(அடுத்த வாரமும் தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக