புதன், நவம்பர் 26, 2014

ஈழத்து முன்னோடி எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள் காலமானார்

இலங்கையின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவரும் , அவுஸ்திரேலியாவில் வசித்து வந்தவருமான  'எஸ்.பொ' என அழைக்கப்படும் எஸ். பொன்னுத்துரை அவர்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் இன்று (26 – கார்த்திகை – 2014 ) அன்று காலமானார்.
Es Po 
அன்னார் யூன் 4ம் திகதி , 1932, நல்லூர், யாழ்ப்பாணத்தில் பிறந்தார் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார்.
நைஜீரியாவில் ஆங்கிலத்துறையில் தலைவராக பணியாற்றிய இவர் மட்டக்களப்பில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றினார். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, பத்தி எழுத்து, விமர்சனம் முதலிய துறைகளிலும் ஆளுமையுடன் செயலாற்றினார்.
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார்.

இளம்வயதில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டார். பின்னர் அவர்களுடன் முரண்பட்டுத் தனித்துவமாகச் செயற்பட்டார்.

அவுஸ்த்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" சர்வதேச இதழின் கௌரவ ஆசிரியராக விளங்கியவர். 'செம்பென் ஒஸ்மான' என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய 'ஹால' என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் 'நுகுகி வா தியங்கோ' என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

 பிறமொழிப் படைப்புகள் சிலவற்றைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர்.
''வீ" - ''அவா" - ''ஆண்மை" ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் ''தீ" - ''சடங்கு" - ''மாயினி" நாவல்களுட்பட பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவரது சிறுகதைகள் யாவும் தொகுக்கப்பட்டு ''எஸ். பொ. கதைகள்" என்ற தொகுதியாக வெளிவந்துள்ளது.


இவரது சில சிறுகதைகளும் ''தீ" - ''சடங்கு" நாவல்களும் ''வரலாற்றில் வாழ்தல்" என்ற அதிக பக்கங்கள் கொண்ட சுய வரலாற்று நூலும் பல சர்ச்சைகளையேற்படுத்திக் கவனத்தில் கொள்ளப்பட்டவை.

சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தினை ஆரம்பித்துப் பல படைப்பாளிகளின் நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய இனி ஒரு விதி செய்வோம் என்ற நூலும் வெளிவந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 க்கான 'வாழ்நாள் இயல் விருது' வழங்கப்பட்டது.
 ஈழத்தின் 'ஜெயகாந்தன் எனவும், 'இலக்கியச் சண்டியர்' எனவும் அனைவராலும் அழைக்கப் பட்ட திரு.ச.பொன்னுத்துரை அவர்களின் மறைவிற்கு அந்திமாலை ஆசிரிய பீடத்தின் அஞ்சலிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக