ஞாயிறு, டிசம்பர் 25, 2011

கிறிஸ்துமஸ் சிறப்புக் கவிதை

n

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

நினைவில் வைத்திருங்கள்:-
மகிழ்ச்சி என்பது நீங்கள் யார்? உங்களிடம் என்ன இருக்கிறது? என்பதைப் பொறுத்ததல்ல. அது எப்படிப்பட்ட தருணமாயினும்உங்கள் மனதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று. அதை விடவும் சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் என்றும் சில நடைமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப் பட வேண்டியவை.


1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும். 


2. பல சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமை சாப்பிட்டபின் புகை பிடிப்பதால் உண்டாகிறது.


3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு(பொருமல்) ஆளாக்கும் நிலையை(Bloated with air) உருவாக்குகிறது. 
எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 


4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இலையில்(தேயிலையில்) ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்(Don’t Loosen Your Belt). ஏனெனில் அது குடலை வளைத்து சமிபாட்டைத் தடுக்க வாய்ப்பு உண்டு.

6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.


7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர், ஏன் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு.("உண்டபின் நூறடி உலாவிப் பின் உறங்கு" எனும் பழமொழியைப் போல) சர்க்கரை நோய்(டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.
சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.


8. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையிலும் பல நவீன மூட நம்பிக்கைகள் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நன்றி: Tamilfirez.blogspot.com

சனி, டிசம்பர் 24, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை 
மாற்றுவார் ஆற்றலின் பின். (225) 

பொருள்: தவம் செய்வோர் பசியைத் தாங்கிக் கொள்ளும் வலிமையுடையவர். அவ்வலிமையானது பசியைத் தம் ஈகைத் திறத்தால் நீக்குவோருடைய வலிமைக்குப் பிற்பட்டதேயாகும். 

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

அறிவாளி தன்னுடைய வாழ்க்கையில் சிறப்பாக இருக்கத் தேர்ந்தெடுப்பது அடக்கத்தைத்தான். அது காய்களையும், பழங்களையும் தாங்கி நிற்கும் ஒரு மரக்கிளை எப்போதும் தரையை நோக்கித் தாழ்ந்திருப்பதை ஒத்திருக்கும்.

தாரமும் குருவும் பகுதி - 5.6

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 5.6 

அல்லைப்பிட்டி 1977
'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' செய்வது போல் அல்லைப்பிட்டி, மண்கும்பானின் மணல் வளம் சுமாராக 14 வருடங்கள் கொள்ளையடிக்கப் பட்டபின்னர் அல்லைப்பிட்டி, மண்கும்பான் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும், கல்விமான்களும் கொஞ்சம் விழித்துக் கொண்டனர். இவர்கள் ஒன்று சேர்ந்து இம் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என 1984 இல் முடிவெடுத்தனர்.
இதன் முதலாவது கட்டமாக ஒரு 'கண்டன ஊர்வலம்' ஒன்று இவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டது. இந்த ஊர்வலத்தை அல்லைப்பிட்டி, மண்கும்பானைச் சேர்ந்த துடிப்புள்ள, துணிச்சலுள்ள இளைஞர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் இளைஞர்கள் மட்டும் சேர்ந்து ஊர்வலம் நடாத்துவதாயின் ஆகக் கூடுதலாக 30 வரையான இளைஞர்களை மட்டுமே சேர்க்க முடியும். சமூக ஆர்வலர்களையும் சேர்த்துக் கொள்வதாயின் மொத்தம் ஒரு 50 பேரை மட்டுமே சேர்க்க முடியும். ஆகவே இவர்கள் கடுமையாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது அல்லைப்பிட்டி மண்கும்பான் ஆகிய இரண்டு கிராமங்களிலும் உள்ள மூன்று பாடசாலைகளிலும் பயிலும் மாணவர்களையும், ஆசிரியப் பெருமக்களையும் சேர்த்தால் ஊர்வலத்திற்கு ஆகக் குறைந்தது 700 பேரையாவது சேர்க்க முடியும். இந்தத் திட்டத்தின்படி செயற்பட்ட அவர்கள் அல்லைப்பிட்டியிலுள்ள இந்துப் பாடசாலை, கிறீஸ்தவப் பாடசாலை, மண்கும்பானிலுள்ள இந்துப் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளையும் நிர்வகித்த அதிபர்களை அணுகி வெற்றி கண்டனர். 
இதில் பாடசாலைகளின் பெயர்களை 'இந்துப் பாடசாலை', கிறீஸ்தவப் பாடசாலை என நான் குறிப்பிட்டதற்குக் காரணம் எங்களது காலத்தில் பாடசாலைகளின் பெயர்களை மக்கள் அவ்வாறே அழைத்தனர். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அல்லைப்பிட்டிப் பராசக்தி வித்தியாலயத்தை கிராம மக்கள் 'சைவப் பள்ளிக்கூடம்' எனவும், அல்லைப்பிட்டி ரோமன் கத்தோலிக்கப் பாடசாலையை மக்கள் 'வேதப் பள்ளிக்கூடம்' எனவும், மண்கும்பானில் இருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை மக்கள் 'மண்கும்பான் பள்ளிக்கூடம்' எனவும் அழைத்தனர். கிராமத்தில் எந்தவொரு விடயத்தையும் மக்கள் சமயம் சார்ந்தோ அல்லது 'சாதி' சார்ந்த கண்ணோட்டத்துடனோதான் பார்த்தனர் என்பதற்கு இதைவிடவும் பல உதாரணங்கள் கூற முடியும்.
இரண்டு கிராமங்களின் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள்(மாணவியரும் அடக்கம்), ஆசிரியர்கள் என பல தரப்பட்ட பிரிவினரின் ஒத்துழைப்புடன் 1984 ஆம் ஆண்டு வைகாசி மாதம் இந்த ஊர்வலம் ஒழுங்கு செய்யப் பட்டது. இந்த ஊர்வலத்தில் வந்தவர்களின் பிரதான கோஷங்கள் "நமது வளம் மண் வளம், மண் வளத்தை அழிக்காதே" "நமது வளம் நீர் வளம், நீர் வளத்தை அழிக்காதே" என்பதாக இருந்தது. இந்த ஊர்வலம் மண்கும்பான் சிவகாமி அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து அல்லைப்பிட்டியில் இருக்கும் கிறீஸ்தவத் தேவாலயமாகிய 'உத்தரிய மாதா ஆலயத்தில்' நிறைவு பெறுமாறு ஒழுங்கமைக்கப் பட்டது. 
வழமையாக மிகவும் நிசப்தத்துடன் காணப்படும் இவ்விரு கிராமங்களும் வரலாற்றில் முதல் தடவையாக 700 க்கு மேற்பட்டவர்களின் கண்டன ஊர்வலத்தைக் கண்டு அதிர்ந்தது மட்டுமின்றி, ஆச்சரியமும் கொண்டன. ஊர்வலத்தில் வந்தவர்களின் கோஷம் வானத்தைத் தொட்டது. இவர்களின் கோஷம் மனச் சாட்சியுள்ள ஒவ்வொரு மனிதனின் இதயக் கதவையும் தட்டியிருக்கும் என்று நீங்கள் நம்பினால் ஐயோ! பாவம் நீங்கள். இந்த ஊர்வலம் நிறைவு பெறும் இடமாகிய 'உத்தரிய அன்னை தேவாலயத்தில்' ஊர்வலத்தின் முடிவில் ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மண்கும்பானிலிருந்து மணலை ஏற்றியபடி மேற்படி ஆலய முன்றலில் செல்லும் வீதியூடாக ஒரு டிராக்டர் உறுமிக் கொண்டு வந்தது. உணர்ச்சிப் பிழம்பாக நின்ற ஊர்வலக் கூட்டம் டிராக்டரை சுற்றி வளைத்துக் கொண்டது. அந்த டிராக்டரில் ஒரு லோடு மணல் இருந்தது. அந்த டிராக்டரின் சாரதியை அடித்து, உதைக்கும் ஆத்திரத்தில் கூட்டத்தினர் அவரை நெருங்கினர். நிலைமையின் பாதகத் தன்மையை உணர்ந்துகொண்ட டிராக்டரின் சாரதி, நடிகர் திலகத்தை மிஞ்சும் விதத்தில் "நான் ஒரு ஏழை, நான் கூலிக்காகவே இந்த டிராக்டரை ஓட்டுகிறேன், இதில் வரும் வருமானத்தை வைத்துத்தான் என் பொண்டாட்டி, பிள்ளைகளைக் காப்பாற்றி வருகிறேன்" என்று உருக்கமான வசனங்களை உதிர்த்தார். அவ்வளவுதான் கோபத்தில் நின்றோர் எல்லாம் 'குணக் குன்றுகளாக' மாறினர். "களிறோடு சண்டையிடு, கட்டெறும்பை விட்டுவிடு" எனப் புற நானூற்றுத் தமிழர்களாக மாறி அவரை மன்னித்து, "திரும்பிப் பார்க்காமல் ஓடிப்போ, நீ அல்லைப்பிட்டிக்கு/மண்கும்பானுக்கு மணல் ஏற்ற வருவது இன்றே கடைசியாக இருக்கட்டும்" என்று கூறி விட்டு விட்டனர்.
இந்த ஊர்வலம் இரண்டு கிராம மக்களின் ஒற்றுமை உணர்வையும், பொது விடயத்தில் அவகளது கருத்தொருமித்த 'எதிர்வினையையும்' புலப்படுத்தியது ஆயினும் அதில் பல குறைபாடுகளும் இருந்தன.அவையாவன.

  1. இந்த ஊர்வலத்தினால் அதற்குப் பின்னான காலப் பகுதியில் எந்தவித மாற்றமும் எற்படவில்ல. 'மணல் ஏற்றுதல்' என்ற சமூக விரோதச் செயல்1986 சித்திரை மாதம் பண்ணை வீதிப் போக்குவரத்து தடைபடும்வரை தொடர்ந்து நிகழ்ந்தது.
  2. இந்த ஊர்வலம் முடிவில் ஒரு மனுவோ, கோரிக்கையோ அரச அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப் படவில்லை.
  3. ஊர்வலத்தில் கலந்து கொண்ட 700 பேரைத் தவிர ஏனைய கிராம மக்கள் இந்த விடயத்தை தங்களையும் பாதிக்கும் ஒரு 'சமூகப் பிரச்சனை' என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவேயில்லை.
  4. இந்த ஊர்வலமானது ஊரின் மணல் வளத்தை அபகரித்த விஷமிகளின் மனங்களில் எந்தவித மாற்றத்தையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. "திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்று மக்களும் வாளாவிருந்து விட்டனர்.
இவ்வாறு குறைபாடுகளைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் 1945 ஆம் ஆண்டில் வீசப்பட்ட அணுக் குண்டுகளால் இப்போதும் ஜப்பானில் உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதுபோல், அல்லைப்பிட்டியிலும், மண்கும்பானிலும் 'மணற் கொள்ளையின்' தாக்கம் இன்றுவரை தென்படுகிறது. 'மணற் பாங்கான' நிலம் உள்ள கிராமங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் எங்கள் இரண்டு கிராமங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் இரண்டு இணையங்களில் அல்லைப்பிட்டி, மண்கும்பான் கிராமப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பற்றிய புகைப் படங்களையும், காணொளிகளையும் பார்த்தபோது இதயம் வலித்தது. முப்பது வருடத்திற்கு முந்திய தலைமுறையும், சமூக விரோதிகளும் செய்த தவறுக்கான விலையை தற்போது அங்கு வாழும் அப்பாவி, சராசரி மக்கள் செலுத்துகின்றனர்.

(இன்னும் சொல்வேன்)   

வெள்ளி, டிசம்பர் 23, 2011

மனுகுல மீட்புக்காய்….

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்



பெத்தலகேம் நகரில் ஒரு மீட்பர்
இத்தரையில் உதிப்பார் என்று பல
உத்தம அறிகுறிகள் அன்று தோன்றியதாம்.
அத்தியாயத்தின் கதவு அமைதியாய்த் திறந்தது.
நாட்டு வழிப் பாதையில் சூசை
காட்டிய வழியில் கர்ப்பிணி மரியாள்
கட்டி முத்தான யேசுபாலன் உதிக்க
எட்டிய அடிதளர எழுந்தது பிரசவவலி.




திருவான தேவ கருணை இரட்சகர்
அருமை மாளிகை அந்தப்புரம் போல
ஒரு மகிமையான மாட்டுத் தொழுவத்தில்
கருவறை விட்டு பூமியில் உதித்தார்!
காரிருள் குளிர் போர்வை விரிக்க
அரிய மனுகுல மீட்பர்  பிறந்ததாய்
ஊர்த்துன்ப மேகம் கலைந்து மக்கள்
வாரி அள்ளும் துன்பமும் கரையட்டும்.
யேசுபாலன் உதயம் போல தமிழருக்கு
தேசு மிகு உதயம் பிறக்கட்டும்!
வாசமுடன் தமிழர் தமிழ் மொழியென
தேசமெலாம் பெயரேற வாழ்வுயரட்டும்!
பாலன் பிறந்தார் மனுகுல மீட்புக்காய்!
காலம் பிறக்கட்டும் இலங்கையர் அமைதிக்காய்!
பாலம் அமையட்டும் நாட்டு ஒற்றுமைக்காய்!
நாலும்  சிறந்து நாடு சிறக்கட்டும்!

அனைத்து அன்புள்ளங்களிற்கும் இனிய 

கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துள்.