வியாழன், ஜனவரி 15, 2015
புதன், ஜனவரி 07, 2015
தாத்தா !
ஆக்கம்:சக்தி காண்டீபன், ரணாஸ், டென்மார்க்.
கார்த்திகை மாதம். சேவல் கூவியது. மணி காலை 5.45 ஆகிவிட்டது. மண்ணின் வாசம் மழையுடன் கலந்து வீசியது. வீதியில் வெதுப்பக வண்டி ரீங்காரமிட்டு கொண்டு சென்றது. 75 வயதான சொக்கர் எனும் சொக்கலிங்கம் ஐயா வழக்கம்போல் சேவலோடு போட்டா போட்டி போட்டுக்கொண்டு எழும்பினார். சேவலின் சப்தத்தால் அல்ல, ஏனெனில் ஆண்டவன் கிருபையால் 60 வயதிலிருந்தே அவருக்கு காது கேட்பது படிப்படியாக குறைந்து வந்து கொண்டு இருக்கின்றது. இன்னும் ஒரு வருடமோ, இரண்டு வருடமோதான், பிறகு அவருக்கு காது, சுத்தமாய்க் கேட்காது. தினமும் 5.45 மணிக்கு எழும்பி எழும்பி, அது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது அவருக்கு. இப்போது, சொக்கர் ஐயாதான் அவர் வீட்டாருக்கு அலாரம்.
காலைக்கடன் முடித்து, திவ்யமாக ஒரு குளியல் போட்டார். சலவை செய்த வேட்டி ஒன்றை எடுத்துக்கட்டினார். எதேச்சையாக கண்ணாடியில் தன்னைப் பார்க்கையில் மெலிந்த தேகமும், தேங்காய்ப்பூப்போல் வென்மையான கேசமும், கண்களில் விழுந்த பூவும், தனக்கும் பல் இருக்கின்றது என்று பெயருக்கு இருக்கின்ற 10-12 பற்களும் சொக்கர் தன் வாழ்வின் கடைசி அத்யாயத்தில் நிற்பதை அவருக்குக் காட்டியது.
பின்னர் தன் தோட்டத்தில் அன்று பூத்திருந்த செவ்வரத்தை, நித்தியகல்யாணி மலர்களை பறித்து, அலம்பி, வீட்டிற்கு அருகாமையில் உள்ள கோவிலுக்கு சென்று இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தன் அனைத்து பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் நன்றாக இருக்கவேண்டுமென மனமாற வேண்டிக்கொண்டார். அதுவும் நாளை மறுநாள் வெளிநாட்டில் உள்ள பேத்தி, முதன்முதலில் இலங்கைக்கு வருகின்றாள்! அவர்கள் நல்லபடியாக வந்துசேரும்படி வேண்டினார்.
கண்களை மூடி வேண்டிக்கொள்கையில், வழக்கம்போல் மங்களத்தின் முகமும் வந்துபோகத்தான் செய்தது.
மங்களம்; தனது 13ஆவது வயதிலேயே சொக்கருக்கு வாக்கப்பட்டு, இவர் குறை, நிறைகளை அனுசரித்து வாழ்ந்து, வம்சத்தையும் வளர்த்து, பூவோடும் பொட்டோடும் மங்களகரமாய் 5 வருடத்திற்கு முன்பு போய் சேர்ந்த புண்ணியவதி.
என்னதான் சொக்கர் தன் இளமைக் காலங்களில் ஆணாதிக்கம் பிடித்தவராக இருந்தாலும், முதுமைக்காலம் நெருங்க நெருங்க, மங்களம், ஒரு தாரமாக மட்டுமின்றி, தனக்கு ஒரு தாயாகவும், நல்ல ஒரு சினேகிதியானதையும் அவர் உணர்ந்தார். ஆண்மகனாயிற்றே, அதனால் உள்ளுக்குள் எண்ணியிருந்தாலும், இதுவரை அவர் இதை வாய்விட்டு சொன்னதில்லை. அது மங்களத்திற்கு அவசியமும் இல்லை. ஏனெனில், அவளுக்குத் தெரியும்.
இளமையிலும், தகப்பனாகவும் மட்டும் இருக்கையில் " இவளை என்ன கேட்பது?" என்று தன் விருப்பம்போல் எதிலும் முடிவெடுத்தவர்தான். ஆனால், வயது போகப்போகவும், பிள்ளைகள் திருமணம் செய்து, மாமனார் ஆனபோதும், ”அவளின் அவிப்பிராயத்தையும் கேட்டால் என்ன?" என்று தோன்றியது. இது தன்முடிவின்மீது நம்பிக்கை குறைந்ததால் என்று
சொல்லமுடியாது. ஆனால் தன் முடிவுகள் அனைத்தும் அறிவு சார்ந்ததாகவே இருந்தமை, சில நேரங்களில் காலை வாரிவிட்டதை அவர் உணர்ந்தார். சில உணர்வு ரீதியான தொலைநோக்கு பார்வையும், அனைவரிடமும் அனுசரித்துப் போகும் நெளிவுசுளிவுத் திறமைகளும், பெண் என்ற வகையில் மங்களத்திடம் அபாரமாகவே இருந்தது, அவை அவருக்கு பல சமயங்களில் உதவியாகவும் இருந்தது.
தானே ஒருகட்டத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய தனது சகோதர்களைக்கூட திரும்ப ஒன்றாய் அரவனைத்துக்கொண்டவள் மங்களம். இன்றும் சொக்கரைத் தேடி அவரது சகோதர்கள் வந்து போகிறார்கள் என்றால், அது அன்று மங்களத்தின் அன்புக்கு அவர்கள் கொடுத்த அங்கீகாரம்.
பிள்ளைகளை திருமணம் செய்துகொடுத்து, பேரப்பிள்ளைகளையும் கண்டபின், பிள்ளைகளின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் சொக்கர் வேலையில் இருந்தும் ஓய்வு பெற்றார். அப்போதுதான் தன் சாய்மணை நார்க்காலியில் அமர்ந்திருந்து மங்களத்துடன் மெல்ல மெல்ல மனம் விட்டு பேசலானார். இதுவரை அவர்கள் உரையாடியதெல்லாம் ஏதாவது ஒரு தேவையைப் பொறுத்தே இருந்தது. வரவு, செலவுக்கணக்குகள் பற்றியோ, பிள்ளைகளின் படிப்பு, வளர்ப்பு பற்றியோ வேறு ஏதும் கடமைகள் பற்றியோ இருக்கும்.
ஆனால், இப்போது அவரிடம் எந்தக் கடமையும் இல்லை.
பிள்ளைகள் வளர்ந்து ஒவ்வொருவராக மெல்ல மெல்ல இவரின் பொறுப்புகளை வாங்கிக்கொண்டார்கள். இனி பேச என்ன உள்ளது என்று எண்ணுகையில், எதேச்சையாக தங்களைப்பற்றியே பேசத்தொடங்கினார்கள். மங்களமும் அவர் அருகில் தரையில் அமர்ந்து, அரிசி பொடைத்தவண்ணமோ, மிளகாய்களுக்கு காம்புகளை கிள்ளிய வண்ணமோ, அவருக்கு வெத்திலை மடித்துக் கொடுத்தவண்ணமோ, கதைப்பாள்.
மெல்ல மெல்ல இருவரும் தாங்கள் இதுநாள்வரை வாழ்ந்த வாழ்க்கையை அசைபோடத்தொடங்கினார்கள். இருவரும் ஒருவரையொருவர் கிண்டல் செய்துகொண்டனர். ஆனால் அப்போதுகூட சொக்கரின் மனம் புண்படாதவண்ணம் மங்களம் பார்த்துக்கொண்டாள்.
தான் மங்களத்திற்கு நல்ல கணவராக இருந்தாரே தவிர, நல்ல நண்பனாக இருக்கவில்லையோ என்ற கவலை இப்போதும் அவர் மனதை வாட்டியது. என்ன செய்ய, சொக்கரின் காலத்தில் அவர்கள் பழக்கவழக்கங்கள் அப்படி. ஆண்கள் பெண்களிடம் நிறைய பேசமாட்டார்கள். அதுவும் கோபத்தைத்தவிர, வேறு எந்த உணர்வையையும் வெளிப்படையாகக் காட்டமாட்டார்கள்.
இந்தப்பழக்கம் எல்லா உறவுகளையும் தள்ளிவைத்தே பழகவிடும். இந்தப்பழக்கம் காரணமாக பிள்ளைகள்கூட தள்ளி நின்றேதான் அன்பைச் செலுத்துவார்கள். பிள்ளைகளின் அன்பை சொக்கர் ஒருபோதும் சந்தேகப்பட்டதும் இல்லை, குறைத்து எடைபோட்டதில்லை. தன்மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பையும், தனக்கு ஒன்டென்றால் அவர்கள் பதறுவதையும் அவன் நன்கு அறிவார். ஆனால், பிள்ளைகள் தன்னிடம் காட்டும் அன்பிற்கும், அவர்கள் மங்களத்திடம் காட்டும் அன்பிற்கும் வேறுபாடு உள்ளதை உணர்ந்தார்.
மங்களத்திடம் பிள்ளைகள் காட்டும் அன்பு, ஒரு உரிமையும், சுகந்திரமும் கலந்த அன்பு. அதுவே அவர்கள் தன்னிடம் காட்டும் அன்பு, ஒரு மரியாதையும், கட்டப்பாடும் கலந்த அன்பாக இருந்தது. மனதின் ஓரத்தில் அவருக்கு மங்களத்தின்மீது லேசாக பொறாமையும் வரத்தான் செய்தது. தன்னை இப்படி வளர்த்துவிட்ட தன் பெற்றோரின் மீதும் சமுதாயத்தின் மீதும் இப்போதெல்லாம் அடிக்கடி சினம் வந்தது. விதிவிலக்காக வாழ்பவர்களைப் பற்றி அவர் சிந்திக்கத் தயாராக இல்லை. தன் தலைமுறையைச் சேர்ந்த பெரும்பாலானோர் தன்னைப்போல்தான் வாழ்கிறார்கள் என்பதுதான் பரிதாபம்.
ஏனோ சின்ன வயதில் பிள்ளைகளுடன் இருக்கும் நெருக்கத்தை அவர்கள் வளர, வளர தகப்பன்மார் மறைத்துக்கொள்கின்றனர். மறைக்கச் சொல்லி அவரின் சுற்றம் வலியுறுத்துகிறது. கண்டிப்பான முகமூடி ஒன்றை அணிந்தே எப்போதும் இருப்பார்கள். பிள்ளைகள் இல்லாத சமயம் மங்களத்திடம் மட்டும் அவர்களைப்பற்றி வாஞ்சையோடு விசாரிப்பார். ஏனெனில் யாரேனும் ஒரு பெற்றாருக்கென்றாலும் பிள்ளைகள் பயப்படவேண்டும் என்று கற்பிக்கப்படும். இதில் பூச்சாண்டி பட்டம் வாங்குவதென்னவோ இந்த தகப்பன்மார்கள்தான். " அப்படி செய்தால் அப்பாவிடம் சொல்லுவேன், இப்படி செய்யாவிட்டால் அப்பாவிடம் சொல்லுவேன் - அப்பா வந்தால் என்ன நடக்கும் என்று தெரியும்தானே?" என பிள்ளைகள் மிரட்டப்படுவார்கள். உண்மையில் அப்பா வந்தால் என்ன நடக்குமென்று யாருக்குமே தெரியாது, ஏன்? சொக்கருக்கேகூடத் தெரியாது.
தன் பிள்ளைகளை அவர் கை நீட்டி அடித்ததில்லை. அதற்கான அவசியமும் அவருக்கு வரவில்லை. சொக்கரின் கடைக்கண் பார்வைபோதும், அனைத்து விவாதங்களையும் பிள்ளைகள் நிறுத்திக்கொள்வார்கள். அவர் பேச்சுக்கு மறுபேச்சும் இருக்காது. இந்த பயம் கலந்த மரியாதை, மங்களத்திற்கும் சொக்கருக்கும் பிள்ளைகளை நல்லபடி வளர்ப்பதற்கும், பிள்ளைகள் ஊருக்குள் நல்ல பெயர் எடுப்பதற்கும் வழிவகுத்தது. பிள்ளைகளுக்கு தேவையானவற்றை, அவர்கள் நல்வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் அவர்களைக் கேட்காமல், அவரே பார்த்துப் பார்த்து செய்தார். அதற்கேற்றார்ப் போல் அவர்களும் இப்போது கண்ணுக்கு நிறைவாய்த்தான் வாழ்ந்தார்கள்.
பொதுவாகவே சொக்கரிடம் பிள்ளைகள் ஏதேனும் மேல்முறையீடு செய்வதாக இருந்தால்கூட நேரடியாக சொல்லமாட்டார்கள். முதலில் அவர்கள் அதை மங்களத்தின் காதில் போடுவார்கள். மங்களத்திற்க்கும் அவர்கள் சொல்வதில் உடன்பாடு இருந்தால் மட்டுமே, அந்த முறையீடு சொக்கரிடம் வரும். இல்லையேல், அந்த முறையீடு மங்களத்தைத் தாண்டி வராது. இப்படி ஒரு சூட்சுமம் இருந்ததே மங்களத்தின் கடைசிக் காலத்தில் தான் சொக்கருக்கு தெரியவந்தது.
இப்போது சிந்திக்கும்போது, தன் பிள்ளைகள் எது எதெற்கெல்லாம் ஆசைப்பட்டார்களோ? அவை கிடைக்காது என்று தன் பிடிவாதத்திற்கு பயந்து மங்களம் மறுக்க, அவர்கள் எப்படி எல்லாம் துயரப்பட்டார்களோ?
இவை எல்லாம் எதனாலே? பிள்ளைகள் மனம் விட்டு தங்கள் தகப்பனிடம் தாங்களே நேரடியாக விவாதிக்க முடியாத ஒரு மாயையை, சூழலை நாம் அவர்கள்மீது திணித்ததால். இது தன் பிள்ளைகளோடு மட்டும் நின்றுவிடவில்லை என்பதையும் அவர் உணர்ந்தார். கூட்டுக்குடும்பமாக வாழும்போது சில பழக்கவழக்கங்கள் அடுத்த தலைமுறைக்கும் சொல்லிக்கொடுக்காமலே வந்தவிடுகிறது. தன் பேரப்பிள்ளைகளும் தன் பிள்ளைகளைப் போலவே, தாய்மாரிடன் கிசுகிசுப்பதை அவர் பார்த்திருக்கிறார். பிள்ளைகள் மட்டுமன்றி பேரப்பிள்ளைகளும் அவரிடத்திலும் தம் தகப்பனமாருடனும் ஒரு மரியாதை கலந்த அன்போடே பழகுகிறார்கள். தனது பேரப்பள்ளைகள் தன்மீது வைத்துள்ள அன்பு, அவரின் பிள்ளைகள் வைத்திருக்கும் அன்பைப்போலவே தூய்மையானது, மரியாதை நிரம்பியது. தாத்தாவிற்கு எந்தவகையிலும் தொந்தரவு இருக்கக்கூடாது என்பதில் வலு கவனமாக இருந்தார்கள். "குடிக்க ஏதும் கொண்டுவரவா தாத்தா?" "சாப்பிட வாங்க தாத்தா" "ஏதாவது வேணுமா தாத்தா?", "போய்ட்டு வாறன் தாத்தா" இவைகள்தான், இதுவரை பேரப்பிள்ளைகள் சொக்கரிடம் சொன்ன வார்த்தைகள். வேலைக்குப் போன காலத்திலும், மங்களம் இருந்த காலத்திலும், அவருக்கு இதை கவனிக்க நேரம் அமயவில்லை. இப்போதுதான் அவரிடம் நேரம் மலையாய் குவிந்து கிடக்கிறதே? அதனால் அனைத்தையும் கவனித்தார்.
சொக்கருக்கு உள்ளூர ”இப்படி இருக்கவேண்டாம். இப்படி இருந்துவிட்டு, பிறகு என்னைப்போல் நெருங்கிவரத்தெரியாமல் அல்லாடவேண்டாம்” என்று சொல்லத் தோன்றிய போதும், வாய்விட்டு அவர் அதைச் சொன்னதில்லை. எப்படி சொல்லமுடியும். ஐந்தில் வழையாதது, ஐம்பதிலேயே வழையாது, இனி எழுபதிலா வரையப்போகிறது? ஆனால், சொக்கர் வழைய ஆசைப்பட்டார் என்பது உண்மை. தன் பேரப்பிள்ளைகளாவது தன்னுடன் உரிமையுடன் அன்பு செலுத்தவேண்டும், தன்னை எதிர்த்து கேள்விகேட்கவேண்டும், தன்னுடன் சண்டைபிடிக்கவேண்டும் பின்பு சமாதானமாக வேண்டும் என்றெல்லாம் விரும்பினார். இந்த மரியாதை என்ற திரையைத் தாண்டிவர, அதை கிழித்தெறிய அவர் ஆசைப்பட்டார். அதற்கு தான்தான் முதலில் மாறவேண்டும் எனபதையும் அவர் உணராமல் இல்லை. அது எப்படி என்றுதான் அவருக்கு இன்னமும் புலப்படவில்லை. அம்பாளை மறுபடி ஒருமுறை கும்பிட்டுவிட்டு, விட்டை நோக்கி நடந்தார்.
'உதயன்' செய்தித்தாள் இவருக்காகவே காத்திருந்தது. மருமகள் போட்ட தேநீருடன், தன் சாய்மனை நாற்காலியில் அமர்ந்து கொண்டு அன்றைய தின செய்திகளை வாசிக்கத்தொடங்கினார். சொக்கரின் சராசரி நாள் இப்படித்தான் இருக்கும். கோவிலுக்குப் போவார், செய்தித்தாளை வாசிப்பார். சாப்பிடுவார், சிலநேரங்களில் ஒரு குட்டித்தூக்கம் போடுவார். பின்பு வருபவர்களும் தின்ணையில் இருந்து உரையாடுவார். பின்பு இரவு சாப்பாடு, மறுபடியும் தூக்கம். ஏற்ற இறக்கங்கள் இல்லாமலே போய்க்கொண்டிருந்தது அவரின் வாழ்க்கை. அடுத்த சில நாட்களும் அப்படியே போனது.
நேற்று நள்ளிரவு தாண்டிக்கூட தூங்கமுடியாமல் பேத்தியைப் பார்க்கப் போகும் ஆர்வத்தில் இருந்தவர், பிறகு எப்படி தூங்கினார் என்று அவருக்கே தெரியவில்லை. அடுத்தநாள் வீடே ஆரவாரப்பட்ட சப்தத்தில்தான் சொக்கரே எழும்பினார். இன்றுதான் வெளிநாட்டிலிருந்து பிள்ளைகள் வருகிறார்கள் என்பது அவருக்கு ஞாபகம் வந்தது. மதியதிற்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடுவார்கள். அன்று கொஞ்சம் உற்சாகத்துடன் கோவிலுக்குச் சென்றார். மங்களத்தின் இறுதிச்சடங்கிற்கு பிறகு, இன்றுதான் மறுபடியும் தன் மகனையும் மருமகளையும் நேரில் பார்க்கப்போகின்றார். குறிப்பாக தன் பேத்தியை இப்போதுதான் முதல்முறையாக நேரில் பார்க்கப்போகின்றார். தாயின் ஞாபகமாக பேத்திக்கும் 'மங்களா' என்றே அவரது மகன் பெயர் சூட்டி இருந்தான்.
கோவில் முடிந்து வீட்டிற்கு வந்ததில் இருந்து இருப்புக்கொள்ளாமல் அங்கும் இங்குமாக திரிந்தார். 'உதயனால்கூட' அவரின் மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை. அவர் கண்கள் செய்தித்தாளுக்கும் வாசலுக்கும் நடுவே பந்தாடப்பட்டது. இதை கவனிக்க தவறாத சொக்கரின் மகள், தனக்குள்தானே சிரித்துக்கொண்டாள்.தூரத்தில் வாகனம் ஒன்று வரும் ஓசை கேட்டது. தன்னால் இயன்ற வரையும் காதை கூர்மையாக்கிக்கொண்டு அந்த ஒலியை கவனித்தார். ஒலி நெருங்கி, நெருங்கி வர, வர, சொக்கருக்கு படபடப்பு கூடிக்கொண்டே போனது.
வாசலில் வாகனம் வந்து நின்றபோது மகிழ்ச்சியில் இயதமே நின்றுவிடும் போல் இருந்தது சொக்கருக்கு. அதன்பின் நடந்ததெல்லாமே ஒரே சமயத்தில் அதிவேகமாகவும், மிக மெதுவாகவும் நடப்பதுபோல் தோன்றியது சொக்கருக்கு. கதவுகள் திறக்கப்பட்டன, பெட்டிகள் இறக்கப்பட்டன, ஓட்டுனருடன் சேர்த்து நான்கு ஜோடி பாதங்கள் இறங்கின, கைகள் குலுக்கப்பட்டது, கட்டிப்பிடிக்கப்பட்டது, சிரித்தார்கள், அழுதார்கள், கதைத்தார்கள், நகைத்தார்கள், பரிசு கொடுத்தார்கள், வாங்கினார்கள். இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நான்கு வயதான பேத்தி மங்களாவின் கண்கள் மட்டும் ஒவ்வொருத்தரையும் நன்கு கூர்ந்து கவனித்தது, எடைபோட்டது, முடிவெடுத்தது. தாத்தாவிற்கு பேத்தியை அறிமுகப்படுத்தினார்கள். தன்னையும் அந்த சின்ன கண்கள் எடைபோட்டதை அவர் கவனித்தார். என்னதான் தாத்தாவகவே இருந்தாலும் நேரில் காணும்வரை யாருமே அந்நியன்தான் என்பதை அவர் அறிவார். பயனக்கழைப்பு காரணமாக அன்றைய நாள் வெகு வேகமாகவே முடிந்தது.
மறுநாள் காலை சொக்கர் வழக்கம்போல் கோவிலுக்கு போய் வந்தார். வாசலை நெருங்கையில் "ஹாய் தாத்தா" என்ற ஒலி கேட்டு திரும்பினார். திண்ணையில் வீட்டு நாயோடு நின்றிருந்தாள் 'மங்களா'. வேறு யாரையும் காணவில்லை. எங்கே நாயை தொட்டுவிடுவாளோ என்ற பயந்து " நாயை தொடாதே பிள்ளை" என்றார் சொக்கர். அவர் சற்றும் எதிர்பாராத வகையில் மங்களா " ஏன் தொடக்கூடாது தாத்தா?" என்று கேட்டாள். அவரை எதிர்த்து கேள்வி கேட்கப்பட்டது இதுவே முதல் தடவை. எதிர்த்து கேள்வி கேட்கின்றாளே என்ற எண்ணத்தையும் தாண்டி அவருக்குள் ஏதோ ஒருவித ஆனந்தம் பரவியது. ஒரு நிமிடம் அப்படியே உறைந்துதான் போனார். தன்னை சமாதனப்படுத்திக்கொண்டு "நாய் ஊத்தை புள்ள, பிறகு உனக்கு காய்ச்சல் வரும், தொடாத" என்றார். "நீங்க நாயை குளிப்பாட்டேல்லையா?" மங்களா கேட்டாள். "சீ, சீ, நாயை குளிப்பாட்டுறதா? அதெல்லாம் நாங்கள் செய்யிரேல்ல". சொக்கர் சொன்னார். "இது உங்கட வீட்டு நாய்தானே?" "ஓம்" "அப்ப நீங்கள் தானே குளிப்பாட்ட வேணும்?" " ஏய் மங்களா! என்னது, தாத்தாவை எதிர்த்து கதைத்துக்கொண்டிருக்கிறாய்?" என்று கேட்ட வண்ணம் வந்தான் மகன். அவளை மேற்கொண்டு கதைக்கவிடாமல் உள்ளே அனுப்பினான். " அதொண்டும் இல்ல அப்பா, வெளிநாட்டில பிள்ளைகள் எல்லாத்துக்கும் ஏன், எதுக்கு என்டு கேப்பினம். அதையே இவள் இங்கையும் செய்யுறாள்". " அதுக்கென்ன, சின்னப் புள்ள தானே. நீ ஒண்டும் அவாவை ஏசாத." "சரி அப்பா". இந்த 'சரி அப்பா' என்ற வார்த்தைதானே இவ்வளவு அவலங்களுக்கும் காரணம் என்று பெருமூச்சு விட்டார். இனி மங்களாவும் தன்னிடமிருந்து தள்ளியே நிற்பாளோ என்று பயந்தார். ஆனால் மங்களா இரண்டடி மேகம்போல் மிதந்தாள், கேள்வி மழையாய்ப் பொழிந்தாள். சொன்ன ஒவ்வொரு பதிலிலிருந்தும் புதுக் கேள்வி பிறந்தது. " அது அப்படித்தான்" என்ற பதிலை அவள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பொறுமையாக அவளின் கேள்விகள் அனைத்திற்கும் இதற்காகவே காத்திருந்தவர்போல் பதில் சொன்ன சொக்கரைப் பார்த்து பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வியந்தனர். அவருக்குள் இதுநாள்வரை இருந்த ஏக்கம்தான் இப்போது வெளிப்படுகின்றது என்பதை அவர்கள் மெல்ல மெல்ல உணர்ந்தார்கள். மங்களாவைத் தாத்தா கோவிலுக்கு கூட்டிச் செல்வார். அவளின் கோபத்தைப் பார்ப்பதற்காகவே அவளை சீண்டுவார். அவளின் உடைந்த தமிழ் உச்சரிப்பைக் கேட்டு சிரிப்பார். மங்களாவுடன் தாத்தா பழகும் விதம் மற்ற பேரப்பிள்ளைகளுக்கும் அவரிடம் இன்னும் நெருங்கிப் பழகும் ஆர்வத்தைக் கொடுத்தது. இதுவரை அவர்களின் நடுவே இருந்த மரியாதை என்ற திரை மறையவில்லை, மாறாக அந்தத் திரையில் 'உரிமை' என்ற ஒரு சின்ன ஜன்னல் உருவாகியது. தங்கள் தாத்தாவை உரிமையுடன் நெருங்கினார்கள். அவரும் பாலைவனத்தில்
நீரைக்கண்டவனைப்போல் அவர்களை வாரி சேர்த்துக்கொண்டார். மங்களாமூலம் அவர் அடைந்த மகிழ்ச்சி மட்டற்றது. ஆனால் தனது மற்ற பேரப்பிள்ளைகள்அருகிலேயே இருந்தும் கூட விலகியே இருந்தது கொடுமை. அதை வாய்விட்டு சொல்லமுடியாமல் அவர் பட்ட வேதனைகளை இனியும் அவர் அனுபவிக்கத் தயாராக இல்லை. தன்னைப்போல் தன் பிள்ளைகளும் காலம் சென்றபின் ஏங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தன் தந்தை தனக்குக் கற்றுத்தர தவறிவிட்டார், அதே தவறை சொக்கர் செய்யத்தயாராக இல்லை. மாற்றத்துக்கான முதலடியை நானே எடுத்து வைக்கிறேன். கொஞ்சம் கரடுமுரடான பாதைதான், ஆனால் தொடர்ந்து நடைபோட்டால், ஒரு ஒற்றையடிப் பாதை உருவாகாதா?அது தன் பள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருக்காதா? தான் மரணப்படுக்கையில் கிடக்கும்போது, தனது பிள்ளைகள் அனைவர்மீதும் தான் எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றேன் என்று அறிந்திருக்கவேண்டும். அவர்கள் தங்களின் அப்பாவை நல்லபடிதான் பார்த்துக்கோண்டோம் என்ற மனநிறைவுடன்தான் அவர்கள் தன்னை வழியனுப்பி வைக்கவேண்டும்.
தனக்கு இந்த ஒன்றே போதும். காது இன்னமும் கேட்கும்போதே, கண்கள் இன்னமும் பார்க்கும்போதே தனது கனவு நனவானதை எண்ணி மகிழ்ந்தார். ஏற்ற இறக்கமில்லாமல் சீராய், நேராய் சுவாரஷ்யம் இன்றிப் போய்க்கொண்டிருந்த அவரின் வாழ்க்கைக் கோட்டில், இப்போது இதயத்துடிப்பாய் ஓர் சலனம். .....ஆனால் அதுதானே வாழ்வின் அறிகுறி?
வியாழன், ஜனவரி 01, 2015
வியாழன், டிசம்பர் 25, 2014
வெள்ளி, டிசம்பர் 12, 2014
மனிதரை மதியுங்கள்!
ஆஸ்திரேலியாவில் ஒரு நகரில் மருத்துவமனையின் முதியோர்நல சிகிச்சை பிரிவில் ஒரு முதியவர் காலமானார். அவரிடம் மதிப்பான எதுவும் இல்லை என்றுதான் நினைத்தார்கள். பின்பு செவிலியர் அவர் விட்டுசென்ற சொற்பமான பொருட்களை சோதனையிட்டால் கிடைத்தது ஒரு 'கவிதை'. அதன் தரமும் பொருளும் கவனத்தை ஈர்த்ததால் மருத்துவமனை செவிலியர் அனைவருக்கும் நகலெடுத்து கொடுத்தனர்.
பின்பு அதை மெல்போர்னுக்கு எடுத்து வந்த ஒரு செவிலியர், இளையோர் அனைவருக்குமான அந்த முதியவரின் சொத்தான கவிதையை மனநலம் சார்ந்த ஒரு பத்திரிக்கையின் கிருஸ்துமஸ் பதிப்பில் வெளியிட்டார். ஒரு காணொளி கோவையும் இந்த எளிய, ஆனால் தெளிவான கவிதையை வைத்து தயாரிக்கப்பட்டது.
இந்த முதியவர், உலகிற்கு பொருளேதும் விட்டு செல்லவில்லை என்றாலும் ‘பெயரிலி’ கவிஞனாக இணையத்தில் உலகை வலம் வருகிறார்.
முன்னுரையும் கவிதையும் தமிழாக்கம்: Dr.Surya CR
எரிச்சலூட்டும் முதியவனா?!---
என்ன பார்க்கிறீர் செவிலியரே? என்ன பார்க்கிறீர்?
என்னை பார்க்கும்போது என்ன நினைக்கிறீர்?
மண்டையில் ஏதுமில்லா - எரிச்சலூட்டும்
முதியவன் என்றா?
எங்கோ வெறிக்கும் கண்களுடன்..
எக்குதப்பான தடுமாற்றங்களுடன்..
வாயில் வழியவிடும் உணவுடன்..
வாய்மொழியற்ற பார்வையுடன்..
உங்களை, நீங்கள் செய்வதை கவனிக்காமல்..
எங்கோ ஒரு வெளியில் -
எல்லாம் இழந்துகொண்டிருக்கும் நிலையில்..
‘உன்னால் முடியும் செய் பார்க்கலாம்’ – என
உரக்க நீங்கள் என்னிடம் சொல்லும்போதும்..
எதிர்ப்போ இல்லையோ..
எனக்கு உங்களது சேவைகளாய் -
உணவூட்டி உடல்துடைத்து..
என் நாளை நிரப்பிக்கொண்டிருக்கும் நீங்கள் -
என்னை பார்த்து அப்படித்தான் எண்ணியிருப்பீர்கள்!
அப்படி என்றால்..
நீங்கள் உண்மையில் என்னை பார்க்கவில்லை..
கண்ணை திறவுங்கள் தாதியரே!
உங்கள் சொற்படியே நடந்துகொண்டு..
நீங்கள் தருவதையே சாப்பிட்டுக்கொண்டு..
இதோ அசைவின்றி அமர்ந்துகொண்டு
நான் யாரென சொல்கிறேன்.. கேளுங்கள்!
பெற்றோரும் உடன்பிறந்த
சகோதர சகோதரிகளுடன்
அன்பால் இணைந்த
பத்து வயது குழந்தையாகவும்...
பின்பு சிறகு முளைத்து பறக்கும் மனதுடன்
காதலை கண்டுகொண்டு கனவுகளுடன்
எனது பதினாறிலும் இருந்தேன்!
இருபதில் இணையை தேடிகொண்டேன்!
இதயம் துள்ளிக்குதிக்க
இன்றும் இனிமையாய் ஒலிக்கிறது
நான் எடுத்துக்கொண்ட கல்யாண உறுதிமொழிகள்...
என்துணை தேடும் மகவுகளுடன்
மனமகிழும் வீடும் அமைந்து இருந்தது
அதோ என் இருபத்தைந்தில்..
முப்பது வயது மனிதனாக
வேகமாய் வளரும் குழந்தைகளின்
நெருங்கிய பாசப்பிணைப்பை உணர்ந்தேன்!
நாற்பதில் இளைஞரான என் மகன்கள்
வளர்ந்துவிட்டதால் விட்டு சென்றார்கள்..
நான் கலங்கி போகாமல்
பார்த்துக்கொண்டதென்னவோ
எனது அருகிலேயே இருந்த துணைவிதான்..
ஐம்பது வயது ஆனது.. மீண்டும் குழந்தைகள்
என் காலை சுற்றி விளையாடின..
ஆனால் எனக்கும் எனது இணைக்கும்
குழந்தைகளை பற்றிதான் தெரியுமே!
எனக்கு இருண்ட காலம் உதித்தது..
என் மனைவி மறைந்துபோனாள்..
எதிரே என் காலத்தை பார்க்கிறேன்..
நெஞ்சை உலுக்குகிறது உதறல் எடுக்கிறது..
என் மகவுகளின் கவனிப்புகளெல்லாம்
அவர்களின் மகவுகளுக்கே!
எனது வருடங்களை..
அதிலிருந்த அன்பை நினைத்துப்பார்க்கிறேன்!
இப்போது நான் முதியவன்...
இயற்கை கொடூரமானது –
அது எள்ளிநகையாடி
முட்டாளாக்கும் முதுமையை திணிக்கிறது..
வனப்பையும் வீரியத்தையும்
உதிர்கிறது என் உடம்பு
இதோ கல்லான இதுகூட
இதயமாய் இருந்ததுதான் ஒருகாலத்தில்..
ஆனால் பிணம்போன்ற இந்த உடலில்
உள்ளேயொரு இளைஞனாக இன்றும்
இழைந்துகொண்டேதான் இருக்கிறேன்!
உழைத்து ஓய்ந்துவரும் இதயம்
வீங்கி ஏங்குகிறது...
அந்த மகிழ்ச்சிகளும் வலிகளும்
நீங்காமல் நிலைக்கிறது..
வாழ்க்கையை அனுபவித்து
மீண்டும் வாழ நினைக்கிறது..
கடந்த வருடங்கள் என்னவோ சிலதுதான்..
ஆனால் விரைந்து கழிந்து போனதே..
எதுவும் நிலைத்திருக்க முடியாது என்ற
எளிய அறிவை இங்கு ஏற்கவைக்கிறது..
ஆகவே கண்களை திறவுங்கள் மக்களே
திறந்து பாருங்கள்..
இங்கே எரிச்சலூட்டும் முதியவனில்லை
உற்று நோக்குங்கள்..
பாருங்கள்...
நான்! _________________________________
அடுத்தமுறை வயதானவரை பார்க்கும் போது இந்த கவிதையை நினைவுகொள்ளுங்கள். உள்ளே இருக்கும் இளமையான ஆத்மாவை வெளிதோற்றத்தை வைத்து உதாசீனம் செய்துவிடாதீர்கள். நாமெல்லோரும் ஒருநாள் அப்படி இருக்கப் போவது உறுதி. இல்லையா?
உலகின் மிகவும் அழகான சிறந்த விஷயங்களை பார்க்கவோ, கையால் தொடவோ முடியாது; மனதிலிருந்து உணர்ந்து பார்க்கவே முடியும்!
இதை பகிர்ந்துகொள்ளுங்கள் (மூலம் பில்லிஸ் மக்கோர்மாக்; தழுவல் டேவ் கிரிஃபித்)
இந்த முதியவர், உலகிற்கு பொருளேதும் விட்டு செல்லவில்லை என்றாலும் ‘பெயரிலி’ கவிஞனாக இணையத்தில் உலகை வலம் வருகிறார்.
முன்னுரையும் கவிதையும் தமிழாக்கம்: Dr.Surya CR
எரிச்சலூட்டும் முதியவனா?!---
என்ன பார்க்கிறீர் செவிலியரே? என்ன பார்க்கிறீர்?
என்னை பார்க்கும்போது என்ன நினைக்கிறீர்?
மண்டையில் ஏதுமில்லா - எரிச்சலூட்டும்
முதியவன் என்றா?
எங்கோ வெறிக்கும் கண்களுடன்..
எக்குதப்பான தடுமாற்றங்களுடன்..
வாயில் வழியவிடும் உணவுடன்..
வாய்மொழியற்ற பார்வையுடன்..
உங்களை, நீங்கள் செய்வதை கவனிக்காமல்..
எங்கோ ஒரு வெளியில் -
எல்லாம் இழந்துகொண்டிருக்கும் நிலையில்..
‘உன்னால் முடியும் செய் பார்க்கலாம்’ – என
உரக்க நீங்கள் என்னிடம் சொல்லும்போதும்..
எதிர்ப்போ இல்லையோ..
எனக்கு உங்களது சேவைகளாய் -
உணவூட்டி உடல்துடைத்து..
என் நாளை நிரப்பிக்கொண்டிருக்கும் நீங்கள் -
என்னை பார்த்து அப்படித்தான் எண்ணியிருப்பீர்கள்!
அப்படி என்றால்..
நீங்கள் உண்மையில் என்னை பார்க்கவில்லை..
கண்ணை திறவுங்கள் தாதியரே!
உங்கள் சொற்படியே நடந்துகொண்டு..
நீங்கள் தருவதையே சாப்பிட்டுக்கொண்டு..
இதோ அசைவின்றி அமர்ந்துகொண்டு
நான் யாரென சொல்கிறேன்.. கேளுங்கள்!
பெற்றோரும் உடன்பிறந்த
சகோதர சகோதரிகளுடன்
அன்பால் இணைந்த
பத்து வயது குழந்தையாகவும்...
பின்பு சிறகு முளைத்து பறக்கும் மனதுடன்
காதலை கண்டுகொண்டு கனவுகளுடன்
எனது பதினாறிலும் இருந்தேன்!
இருபதில் இணையை தேடிகொண்டேன்!
இதயம் துள்ளிக்குதிக்க
இன்றும் இனிமையாய் ஒலிக்கிறது
நான் எடுத்துக்கொண்ட கல்யாண உறுதிமொழிகள்...
என்துணை தேடும் மகவுகளுடன்
மனமகிழும் வீடும் அமைந்து இருந்தது
அதோ என் இருபத்தைந்தில்..
முப்பது வயது மனிதனாக
வேகமாய் வளரும் குழந்தைகளின்
நெருங்கிய பாசப்பிணைப்பை உணர்ந்தேன்!
நாற்பதில் இளைஞரான என் மகன்கள்
வளர்ந்துவிட்டதால் விட்டு சென்றார்கள்..
நான் கலங்கி போகாமல்
பார்த்துக்கொண்டதென்னவோ
எனது அருகிலேயே இருந்த துணைவிதான்..
ஐம்பது வயது ஆனது.. மீண்டும் குழந்தைகள்
என் காலை சுற்றி விளையாடின..
ஆனால் எனக்கும் எனது இணைக்கும்
குழந்தைகளை பற்றிதான் தெரியுமே!
எனக்கு இருண்ட காலம் உதித்தது..
என் மனைவி மறைந்துபோனாள்..
எதிரே என் காலத்தை பார்க்கிறேன்..
நெஞ்சை உலுக்குகிறது உதறல் எடுக்கிறது..
என் மகவுகளின் கவனிப்புகளெல்லாம்
அவர்களின் மகவுகளுக்கே!
எனது வருடங்களை..
அதிலிருந்த அன்பை நினைத்துப்பார்க்கிறேன்!
இப்போது நான் முதியவன்...
இயற்கை கொடூரமானது –
அது எள்ளிநகையாடி
முட்டாளாக்கும் முதுமையை திணிக்கிறது..
வனப்பையும் வீரியத்தையும்
உதிர்கிறது என் உடம்பு
இதோ கல்லான இதுகூட
இதயமாய் இருந்ததுதான் ஒருகாலத்தில்..
ஆனால் பிணம்போன்ற இந்த உடலில்
உள்ளேயொரு இளைஞனாக இன்றும்
இழைந்துகொண்டேதான் இருக்கிறேன்!
உழைத்து ஓய்ந்துவரும் இதயம்
வீங்கி ஏங்குகிறது...
அந்த மகிழ்ச்சிகளும் வலிகளும்
நீங்காமல் நிலைக்கிறது..
வாழ்க்கையை அனுபவித்து
மீண்டும் வாழ நினைக்கிறது..
கடந்த வருடங்கள் என்னவோ சிலதுதான்..
ஆனால் விரைந்து கழிந்து போனதே..
எதுவும் நிலைத்திருக்க முடியாது என்ற
எளிய அறிவை இங்கு ஏற்கவைக்கிறது..
ஆகவே கண்களை திறவுங்கள் மக்களே
திறந்து பாருங்கள்..
இங்கே எரிச்சலூட்டும் முதியவனில்லை
உற்று நோக்குங்கள்..
பாருங்கள்...
நான்! _________________________________
அடுத்தமுறை வயதானவரை பார்க்கும் போது இந்த கவிதையை நினைவுகொள்ளுங்கள். உள்ளே இருக்கும் இளமையான ஆத்மாவை வெளிதோற்றத்தை வைத்து உதாசீனம் செய்துவிடாதீர்கள். நாமெல்லோரும் ஒருநாள் அப்படி இருக்கப் போவது உறுதி. இல்லையா?
உலகின் மிகவும் அழகான சிறந்த விஷயங்களை பார்க்கவோ, கையால் தொடவோ முடியாது; மனதிலிருந்து உணர்ந்து பார்க்கவே முடியும்!
இதை பகிர்ந்துகொள்ளுங்கள் (மூலம் பில்லிஸ் மக்கோர்மாக்; தழுவல் டேவ் கிரிஃபித்)
வெள்ளி, நவம்பர் 28, 2014
மாதத்தில் ஒருநாள் மௌனம் கடைப்பிடிக்கும் நாடு எது?
உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குக...ிறது.
ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர்.
பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.
1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். 2013ல் மார்ச் 12ம் தேதி இந்த மௌன தினம் வருகிறது. ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கபடுகிறது. காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை எந்த போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும். யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.
2. பாலியில் உள்ள ஹிந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான். பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன. புராணங்களில் வரும் மார்கண்டேய, அகஸ்திய, பரத்வாஜ ரிஷிகளை பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், இந்த ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.
3. பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை 'வேஷ்டி' தான். எந்த ஒரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது. இந்தியாவில் கூட சில கோவில்களில்தான் பாரம்பரிய உடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற). ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்து தான் செல்ல வேண்டும்.
4. பாலியின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana என்ற கோட்பாட்டின் படி தான் அமைந்துள்ளது. அதைதான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். Parahyangan - Pawongan - Palemahan என்று பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.
5. Trikala Sandhya என்பது சூரிய நமஸ்காரம். அணைத்து பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். அதே போல மூன்று வேலையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்லவேண்டும். பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள். இந்தியாவில் சூரிய நமஸ்காரதிர்க்கு எதிர்ப்பு தான் வருகிறது. 5 வேலை நமாஸ் செய்ய சொல்வார்கள் போல.
6. பாலி கோவில் பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. முஸ்லிம் மத நாடான இந்தோனேசியாவில் அனைத்து மத கோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசே கொடுக்கிறது. ஆனால் இந்தியா மத சார்பற்ற நாடு, இருந்தாலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஹஜ் செல்ல பணத்தை வாரி இறைக்கின்றது. நமக்கு மட்டும் சொந்த தயாரிப்பில் அல்வாவை தருகிறது
7. இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது.
8. உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய இடம் வகிக்கிறது, பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் தான் இருக்கின்றது. பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீ தேவி, பூதேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்கு தான் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகு தான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள். 9ஆவது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதிமுறைகளை ஹிந்து பெரியோர்கள் கற்றுகொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு Subak System என்று பெயர். இங்கே நீர் பாசனம் முழுவதும் கோவில் பூசாரிகளின் கட்டுபாட்டில் தான் இருக்கும். உலக வங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது. இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.
9. பாலி ஹிந்துக்கள் பூஜை செய்யும் பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது இல்லை. இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலை சுவடியையே (Lontar) பயன்படுத்துகிறார்கள். ராமாணயம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.ராமாணய ஓலைசுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடைபெறும். 10. அனைத்து திருவிழாகளிலும் பாலி நடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள். ஹிந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க ஹிந்து கலாச்சாரம், நடனம், இசை என்று இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை.
நன்றி:அன்புச் செல்வி
புதன், நவம்பர் 26, 2014
ஈழத்து முன்னோடி எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள் காலமானார்
இலங்கையின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவரும் , அவுஸ்திரேலியாவில் வசித்து வந்தவருமான 'எஸ்.பொ' என அழைக்கப்படும் எஸ். பொன்னுத்துரை அவர்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் இன்று (26 – கார்த்திகை – 2014 ) அன்று காலமானார்.
அன்னார் யூன் 4ம் திகதி , 1932, நல்லூர், யாழ்ப்பாணத்தில் பிறந்தார் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார்.
நைஜீரியாவில் ஆங்கிலத்துறையில் தலைவராக பணியாற்றிய இவர் மட்டக்களப்பில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றினார். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, பத்தி எழுத்து, விமர்சனம் முதலிய துறைகளிலும் ஆளுமையுடன் செயலாற்றினார்.
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார்.
இளம்வயதில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டார். பின்னர் அவர்களுடன் முரண்பட்டுத் தனித்துவமாகச் செயற்பட்டார்.
அவுஸ்த்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" சர்வதேச இதழின் கௌரவ ஆசிரியராக விளங்கியவர். 'செம்பென் ஒஸ்மான' என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய 'ஹால' என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் 'நுகுகி வா தியங்கோ' என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.
பிறமொழிப் படைப்புகள் சிலவற்றைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர்.
''வீ" - ''அவா" - ''ஆண்மை" ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் ''தீ" - ''சடங்கு" - ''மாயினி" நாவல்களுட்பட பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவரது சிறுகதைகள் யாவும் தொகுக்கப்பட்டு ''எஸ். பொ. கதைகள்" என்ற தொகுதியாக வெளிவந்துள்ளது.
இவரது சில சிறுகதைகளும் ''தீ" - ''சடங்கு" நாவல்களும் ''வரலாற்றில் வாழ்தல்" என்ற அதிக பக்கங்கள் கொண்ட சுய வரலாற்று நூலும் பல சர்ச்சைகளையேற்படுத்திக் கவனத்தில் கொள்ளப்பட்டவை.
சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தினை ஆரம்பித்துப் பல படைப்பாளிகளின் நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய இனி ஒரு விதி செய்வோம் என்ற நூலும் வெளிவந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 க்கான 'வாழ்நாள் இயல் விருது' வழங்கப்பட்டது.
ஈழத்தின் 'ஜெயகாந்தன் எனவும், 'இலக்கியச் சண்டியர்' எனவும் அனைவராலும் அழைக்கப் பட்ட திரு.ச.பொன்னுத்துரை அவர்களின் மறைவிற்கு அந்திமாலை ஆசிரிய பீடத்தின் அஞ்சலிகள்.
நைஜீரியாவில் ஆங்கிலத்துறையில் தலைவராக பணியாற்றிய இவர் மட்டக்களப்பில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றினார். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, பத்தி எழுத்து, விமர்சனம் முதலிய துறைகளிலும் ஆளுமையுடன் செயலாற்றினார்.
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார்.
இளம்வயதில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டார். பின்னர் அவர்களுடன் முரண்பட்டுத் தனித்துவமாகச் செயற்பட்டார்.
அவுஸ்த்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" சர்வதேச இதழின் கௌரவ ஆசிரியராக விளங்கியவர். 'செம்பென் ஒஸ்மான' என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய 'ஹால' என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் 'நுகுகி வா தியங்கோ' என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.
பிறமொழிப் படைப்புகள் சிலவற்றைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர்.
''வீ" - ''அவா" - ''ஆண்மை" ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் ''தீ" - ''சடங்கு" - ''மாயினி" நாவல்களுட்பட பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவரது சிறுகதைகள் யாவும் தொகுக்கப்பட்டு ''எஸ். பொ. கதைகள்" என்ற தொகுதியாக வெளிவந்துள்ளது.
இவரது சில சிறுகதைகளும் ''தீ" - ''சடங்கு" நாவல்களும் ''வரலாற்றில் வாழ்தல்" என்ற அதிக பக்கங்கள் கொண்ட சுய வரலாற்று நூலும் பல சர்ச்சைகளையேற்படுத்திக் கவனத்தில் கொள்ளப்பட்டவை.
சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தினை ஆரம்பித்துப் பல படைப்பாளிகளின் நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய இனி ஒரு விதி செய்வோம் என்ற நூலும் வெளிவந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 க்கான 'வாழ்நாள் இயல் விருது' வழங்கப்பட்டது.
ஈழத்தின் 'ஜெயகாந்தன் எனவும், 'இலக்கியச் சண்டியர்' எனவும் அனைவராலும் அழைக்கப் பட்ட திரு.ச.பொன்னுத்துரை அவர்களின் மறைவிற்கு அந்திமாலை ஆசிரிய பீடத்தின் அஞ்சலிகள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







