செவ்வாய், டிசம்பர் 27, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பாத்தூண் மரிஇ யவனைப் பசி என்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. (227) 

பொருள்: பலரோடும் பகுத்துண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீய நோய் அணுகுதல் இல்லை.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

எவ்வளவு சொன்னாலும் அதனால் எந்த ஒரு பயனும் விளையாது என்று தெரிய வருமேயானால் அதன் பின்னர் 'ஒரு சொல்லைக் கூட' விரயம் செய்யாதே.

நாடுகாண் பயணம் - எக்குவடோர்



நாட்டின் பெயர்:
எக்குவடோர்(Ecuador) 


வேறு பெயர்கள்:
ஈகுவடோர் அல்லது எக்வடோர் அல்லது எக்குவடோர் குடியரசு(Republic of Ecuador) அல்லது ஸ்பானிய மொழியில் ரெபூப்லிகா டெல் எக்வடோர்(Republica del Ecuador)


அமைவிடம்:
தென் அமெரிக்கா / தென் மேற்கு அமெரிக்கா


எல்லைகள்:
வடக்கு- கொலம்பியா  
கிழக்கு, தெற்கு - பெரு 
மேற்கு - பசுபிக் சமுத்திரம் 


அலுவலக மொழி:
ஸ்பானிய மொழி 


ஏனைய மொழிகள்:
அமெர் இந்திய மொழிகள் குறிப்பாக குவேகுவா(Quechua) 


இனங்கள்:
மெஸ்டிசோ 65%
அமெர் இந்தியர்கள் 25%
ஸ்பானியர்கள் 7%
கறுப்பர்கள் 3%


சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கர் 95%
ஏனையோர் 5%


கல்வியறிவு:
91%


ஆயுட்காலம்:
ஆண்கள் 72 வருடங்கள் 
பெண்கள் 78 வருடங்கள் 


தலைநகரம்:
கீட்டோ (Quito)


ஆட்சிமுறை:
கூட்டாட்சிக் குடியரசு


ஜனாதிபதி:
ரபேயேல் கோரெயா(Rafael Correa) *இது 27.12.2011 அன்று உள்ள நிலவரமாகும். 


துணை ஜனாதிபதி:
லெனின் மொரினோ(Lenin Moreno)


ஸ்பெயின் நாட்டிடமிருந்து விடுதலை:
24.05.1822


கிரான் கொலம்பியாவிடமிருந்து விடுதலை:
13.05.1830


பரப்பளவு:
272, 046 சதுர கிலோ மீட்டர்கள் 


சனத்தொகை:
15,007,343 (2011 மதிப்பீடு)


நாணயம்:
அமெரிக்க டாலர் (USD)


இணையத் தளக் குறியீடு:
.ec


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 593 


வேலையில்லாத் திண்டாட்டம்:
14%


வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோர்:
33%


இயற்கை வளங்கள்:
பெற்றோலியம், மீன், மரம், நீர் மின்சாரம்.


விவசாய உற்பத்திகள்:
வாழை, காப்பி, கொக்கோ, அரிசி, உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, கால்நடைகள்(ஆடு,மாடு,பன்றி), கோழி இறைச்சி, முட்டை, மீன், இறால்.


தொழில்கள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள்:
பெற்றோலியம், உணவு பதனிடல், மரவேலை, இரசாயன உற்பத்திகள்.


ஏற்றுமதிகள்:
பெற்றோலியம், வாழைப் பழம், பூக்கள், இறால், மீன், கொக்கோ, காப்பி, மரம். 


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:

  • பூகம்பம், மண் சரிவு, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்களால் அடிக்கடி பாதிக்கப் படும் நாடு.
  • பூமியைக் குறுக்கும் நெடுக்குமாக பிரிப்பதற்கு வரையப் பட்டுள்ள கோடுகளில் பூமத்திய ரேகை(equator) எனும் கோடு இந்நாட்டில் ஆரம்பிப்பதால், ஆரம்பத்தில் இந்நாடு 'ஈக்குவேட்டர்' என அழைக்கப் பட்டு பின்னர் அப்பெயர் மருவி 'எக்குவடோர்' என இந்நாட்டின் பெயராக மாறி இருக்கலாம் எனக் கருதப் படுகிறது.
  • உலகின் ஆதிக் குடிகளாகிய இன்கா இன மக்கள் இந்நாட்டிலும் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.
  • தற்காலத்தில் இந்த இன்கா இன மக்கள் காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
  • அமேசான் ஆற்றின் கரையோரப் பகுதிகளின்(ஆற்றுப் படுகை) உரிமைக்காக பல வருடங்கள் 'பெரு' நாட்டுடன் சண்டையிட்டுத் தோல்வி கண்ட நாடு.
  • தற்காலத்திலும் அண்டை நாடுகளாகிய கொலம்பியா, பெரு ஆகிய நாடுகளுடன் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது.
  • மலைகள், நீர் வீழ்ச்சிகள், எரிமலைகள் நிறைந்த நாடு.
  • 1970 களில் இராணுவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு.
  • வெளிநாட்டுக் கடன் சுமை தாங்க முடியாமல் கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் தனது நாணயத்தை இல்லாதொழித்து அமெரிக்க டாலருக்கு மாறியுள்ள நாடு.
  • நாடு ஏழை நாடாக இருந்தாலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு. இந்நாட்டில் 61 பல்கலைக் கழகங்கள் உள்ளன. நாட்டின் கல்வியறிவு 91% என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. 

திங்கள், டிசம்பர் 26, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (226) 

பொருள்: ஏழைகளின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் தன் பொருளைச் சேமித்து வைக்கும் இடமாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

முட்டாளிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிவதில்லை; ஆனால் உலகிற்குத் தெரிகிறது. அறிவாளியிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிகிறது; ஆனால் உலகிற்குத் தெரிவதில்லை.

கிறிஸ்துமஸ் மரத்தின் பின்னால்..,

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்


இம்மரத்தை (Evergreen Coniferous Tree) கிறிஸ்துமஸ் பண்டிகையில் அலங்கரித்து மகிழும் வழக்கம் 16 ஆம் நூற்றாண்டில் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான 'லித்துவேனியாவிலும்', ஜேர்மனியிலும் ஆரம்பித்தது என்று நம்பப்படுகிறது. தற்காலத்தில் இம்மரமானது மணிகள், எடை குறைந்த வர்ண உருண்டைகள், நகைகள், இனிப்புகள், மலர்கள், வண்ண அலங்காரங்கள், சிறிய தேவதைகளின் திரு உருவங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப் படுகின்றது. இம்மரத்தின் உச்சியில் ஒரு உலோகத்தால்/ரப்பரால் ஆன ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு தேவதையின் உருவம் வைக்கப்படும். இது தேவ குமாரனாம் இயேசு பெத்லகேமில் பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தை அல்லது தேவதைகளை(இலங்கைத் தமிழில் 'சம்மனசுகள்') நினைவூட்டுவதற்கான சின்னமாகும்.



இம்மரத்தை ஆரம்ப காலங்களில் படைவீரர்கள் அல்லது தேவாலயங்களில் கீதம் பாடுவோர் (இவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் 'சாரணர்கள்' போல் இயங்கி வந்தனர்) போன்ற பிரிவினர் அலங்கரித்து, மரத்தைச் சுற்றி ஆடுதல், பாடுதல் போன்ற களிப்பூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பர், அதன் பின்னர் இது மெல்ல, மெல்ல தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும், அதன்பின் மரபு ரீதியாக கிறீஸ்தவ மக்களின் வீடுகளில் 'பாலன் பிறப்பு' அலங்காரங்களோடு சேர்த்து இடம்பிடித்திருக்கும், பல நூற்றாண்டுகள் கழிந்த நிலையில் 'கத்தோலிக்கர்' தவிர்ந்த ஏனைய கிறீஸ்தவர்கள் மத்தியில் 'பாலன் பிறப்பு' அலங்காரம் விடைபெற்று கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்தல், அதன் கீழ் கிறிஸ்துமஸ் பரிசுகளை வைத்தல், மரத்தைச் சுற்றி ஆடிப் பாடுதல் போன்ற நடைமுறைகள் இடம்பிடித்திருக்கலாம் (அறிமுகமாகியிருக்கலாம்) என்கிறார் ஐரோப்பாவின் மூத்த சமூகவியல் ஆய்வாளரான ஜெர்மனியைச் சேர்ந்த திருமதி.இங்கபோ வெபர் கெல்லமான் (Ingeborg Weber Kellermann).


மேலும் சமயத் தலைவர்களின் கருத்துப்படி ஐரோப்பாவில் கிறிஸ்துமஸ் மரம் அறிமுகப்படுத்தப் படுவதற்கு கிறீஸ்தவ மதத் துறவியாகிய புனித.பொனிபாஸ் (St.Boniface) என்பவர் காரணமாக இருந்துள்ளார். இம்மரம் அறிமுகப் படுத்தப்பட்ட காலத்தில் தற்போதுள்ளதைப் போல் செயற்கை அலங்காரப் பொருட்கள் தொங்கவிடப் படவில்லை என்பதுடன், அவைகளுக்குப் பதிலாக அப்பிள் பழங்கள், கடலைகள், பேரீச்சம் பழங்கள், போன்ற உண்ணத்தக்க பழவகைகளும், கடதாசிப் பூக்களும் தொங்கவிடப்பட்டன. கொண்டாட்ட முடிவில் இப்பழங்களை உண்ணுவதும் வழக்கமாக இருந்தது.


ஐரோப்பாவின் பல நாடுகள் கிறிஸ்துமஸ் மரத்தை 15 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்த ஆரம்பித்தபோதும், டென்மார்க்கில் முதல் முதலாக 1808 ஆம் ஆண்டிலேயே டேனிஷ் மக்கள் இம்மரத்தை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் உபயோகிக்க ஆரம்பித்தனர்.

இலங்கையில், மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தக் கிறிஸ்துமஸ் மரத்திற்குப் பதிலாக 'சவுக்கு மரம்' என அழைக்கப்படும்'கஷோரினா' (Casuarina) மரத்தை உபயோகிக்கும் வழக்கம் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப் பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது.இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்திலேயே கிறிஸ்துமஸ் கொண்டாடப் பட்டதாயினும் அது மக்களிடம் வரவேற்புப் பெற்ற ஒரு பிரபலாமான கொண்டாட்டமாக இருக்கவில்லை. இதேபோல் இந்தியாவிலும் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் 'கிறிஸ்துமஸ் மரமும்' மிகவும் பிரபலம் அடைந்து இன்றவரை அவை மக்களின் வாழ்க்கையின் பின்னிப் பிணைந்த ஒரு அம்சமாக மாறியுள்ளன என்றால் மிகையில்லை.