ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

வித்தக அடமானம்


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
ஒருவருக்கு வாய்க்கும் சுத்த வித்துவத் திறமை என்பது ஒரு அரும் பெரும் சொத்து. இதை வைத்திருப்பவர்கள் பரிசுத்தத்திற்கு உரியவர்கள்.
அரசியல், கணக்கியல், பேச்சு, மருத்துவம், ஆசிரியத்துவம், கலைகள் பலவென பல்வகைத் திறமையாளர்கள் அவற்றை உத்தமமாகப் பேண வேண்டியவர்களாகிறார்கள். இந்த உத்தமத் திறமையாளர்கள் நாற்றமெடுக்கும் வகையில் தம் அசுர குணங்கள் தலை விரித்தாட அனுமதி கொடுத்துத் தமது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகின்றனர்.
இவர்கள் சிறிதே தமது பாதையைத் திரும்பிப் பார்த்துச் சரி செய்வார்களேயானால் இவர்கள் பாதையில் கதிரொளி பல வண்ணங்களில் பிரகாசித்திட மாட்டாதோ!
இந்தியாவில் சரபோஜி மன்னர் காலத்தில் நரசய்யர் எனும் சங்கீத வித்துவான் சங்கராபரண இராகத்தைப் பாடும் பெரும் வல்லமை கொண்டவராயிருந்தார். இதனால் இவர் மன்னரால் பரிசு பெற்று ”சங்கராபரண நரசய்யர்”  என்றும் அழைக்கப் பட்டார். ஒரு தடவை இவருக்கப் பண நெருக்கடி வந்த போது, 'இராமபத்திர மூப்பனார்' என்ற பெருநிதி படைத்த சங்கீத ரசிகரிடம் பணம் கடனாகக் கேட்டார்.
மூப்பனார் கடன் பணத்திற்கு அடமானம் கேட்டார். சங்கராபரணம் எனும் இராகமான ஆபரணம் தான் தன்னிடம் அடமானம் வைக்க உள்ளது என்றாராம். 
”பணம் திருப்பிக் கொடுக்கும் வரை சங்கராபரணத்தை எங்கும் பாடுவதில்லை” யென்று கடன் பத்திரம் எழுதப் பட்டது.
சங்கராபரணம் அடமானமானது.
அப்போது கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் உயர்ந்த உத்தியோகத்திலிருந்த வாலெஸ் அப்புராயர் என்பவர் கும்பகோணத்தில் ரெட்டியார் என்ற தன் நண்பர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றார். 
2-3 நாட்கள் விசேடமாக நடக்கும் செல்வந்தர் வீட்டுத் திருமணமாதலால் பல வித்துவான்களிற்கும் அழைப்பு அனுப்பப் பட்டது.
சங்கராபரணம் நரசய்யரும் அழைக்கப்பட்டிருந்தார்.
வாலெஸ் அப்புராயர் நரசய்யருடைய சங்கராபரண இசையைக் கேட்க விரும்பிப் பாடும்படி கேட்டார். அதைப்பாட இயலாது என்றார் நரசய்யர். காரணம் கேட்ட போது, நரசய்யர் விவரத்தைக் கூறினாராம்.
வாலெஸ் அப்புராயர் கடன் பணத்தையும், அதன் வட்டியையும் இராமபத்திர மூப்பனாரிடம் சேரச் செய்தார். மூப்பனார் இத்தனை நாள் சங்கராபரணத்தைத் தடை செய்ததற்கீடான பணத்தை வாலெஸ் அப்புராயரிடம் கொடுத்து நரசய்யரிடம் சேர்க்கும் படி வேண்டினாராம் இராமபத்திர மூப்பனார்.
என்னிடம் பணமாகக் கேட்காது, கடனாகக் கேட்டதாலேயே அடமானப்பத்திரம் எழுதி வாங்கினேன் என்றாராம்.
நரசய்யரின் நேர்மையை நல்ல குணத்தை மெச்சினாராம்.
அடுத்த நாள் திருமண மண்டபத்தில் விடுதலை பெற்ற சங்கராபரண இராக மழை  பொழிந்து அனைவரும் மெய் மறந்தனராம். அதோடு அப்புராயரின் ஆஸ்தான வித்துவானாக நரசய்யர் ஆக்கப் பட்டாராம்.
இது அந்தக் காலம். நேர்மை, நாணயம், மதிக்கப்பட்டது.
இன்று ஒரு வித்தகன் குறிப்பிட்ட வட்டத்துள் மட்டும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட மேடைகளில் தான் ஏறவேண்டும் குறித்தபடி "சிஞ்சிஞ்சா" போட வேண்டுமென எத்தனை கண்ணுக்குத்  தெரியாத பல நூல் வேலிகள்!
அங்கீகார எல்லைகள் தான் எத்தனை!
வித்தகனுக்குச் சுதந்திர நில எல்லையே அல்லாத இந்த நிலை! வித்தகமும் இன்று அடமானப் பொருளாகி விட்டதோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.
 
(இது முன்னைய ஒரு அனுபவம் காரணமாக -  இலண்டன் தமிழ் வானொலி இலக்கிய நேரத்திற்காக எழுதப்பட்ட ஆக்கம் – 2007ல்.)

5 கருத்துகள்:

Kanthan, Denmark சொன்னது…

Very interesting...

vetha (kovaikkavi) சொன்னது…

ஓ!....நீண்ட இடைவெளியின் பின் எனது ஒரு ஆக்கம் அந்தி மாலையில்.
ஆனால் எமது நேயர்கள் எல்லாம் வாசிக்கிறார்களோ தெரியவில்லை.
இதை எழுதும் போது வானொலியில் சங்கராபரணம் பாடல் ஒன்று ஒலிபரப்பாகிறது.
அந்த இனிமையுடன் அந்திமாலைக்கு நன்றி கூறுகிறேன். இறையாசி நிறையட்டும்.

Ramanan சொன்னது…

yes. i like to reading like this article, very good advice for all people,

vetha (kovaikkavi) சொன்னது…

many many thanks to Kanthan DK, Ramanan also God bless you all.

Kumar சொன்னது…

A wonderfull story. this story mad me happy and i surprised by the wrieting style.

கருத்துரையிடுக