வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !


வாய்க்கு ருசியாக காரமாகவோ, புளிப்பாகவோ எதையும் சாப்பிட முடியாத நிலை, கொஞ்சம் சாப்பிட்டால் கூட புளித்த ஏப்பம் என இன்றைக்கு பெரும்பான்மையோரை வாட்டி எடுக்கிறது அல்சர். 

சாப்பிட வேண்டிய நேரத்தில் சரியாக சாப்பிடாமல் விடுவதும், பாஸ்ட் புட், எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள்,காபி, டீ போன்றவற்றை உள்ளே தள்ளுவதும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன. அதேபோல் அதிக டென்சன், மன அழுத்தம் போன்றவையும் அல்சர் ஏற்பட காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நம் வயிற்றுக்குள் குடலை பாதுகாக்கும் திரை போன்ற அதைப்பு பாதிக்கப்படுவதாலோ, அதில் புண்கள் உருவானாலோ வலியும், எரிச்சலும் ஏற்படுகிறது இதுவே அல்சர் எனப்படுகிறது. இந்த புண்களினால் சிறிது உணவு உட்கொண்டாலும் அது தொண்டைக்குழியிலேயே நிற்பது போல உணர்வு ஏற்படும். நெஞ்சு எரிச்சலும், புளித்த ஏப்பமும் அடிக்கடி வந்து தொந்தரவை ஏற்படுத்தும்.

சாதாரண தலைவலி, காய்ச்சல் என்றால் தாங்களாகவே மருந்தகங்களுக்கு சென்று எதையாவது மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர். இவ்வாறு அடிக்கடி மாத்திரை சாப்பிடுவது ஆபத்து என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் வலிநிவாரணி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் போன்ற மாத்திரைகள் உட்கொள்வதும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன. ஏனெனில் ஆன்டிபயாடிக் உட்கொள்ளும் போது மருத்துவர்கள் தரும் பி.காம்பளக்ஸ் மாத்திரைகளை உட்கொள்வதும் அவசியம். தவிர்க்கும் பட்சத்தில் மருந்தின் வீரியத்தினால் வயிற்றில் புண்கள் ஏற்படுகின்றன.

ஒரு சிலருக்கு பரம்பரை காரணமாகவும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், அதிக உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம் காரணமாகவும் அல்சர் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டென்சன் ஏற்படும் போது அமிலம் அதிகமாக சுரக்கிறது. இதுவும் அல்சர் ஏற்பட முக்கிய காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

எந்த காரணம் கொண்டு உணவுகளை தவிர்க்க கூடாது. மேலும் அல்சர் உள்ளவர்கள் எளிதில் ஜீரணமாகும் வகையில் உணவுகளை உட்கொள்ளவேண்டும். அல்சர் வந்தவர்களுக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது. மூன்று வேளையும் மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். 

எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும்.நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கவேண்டும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரியில் கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம்.

அல்சர் வந்தவர்கள் ஸ்ட்ராங்கான காபி, டீயை குடிக்கக் கூடாது. அதேபோல் அதிகமான இனிப்புகள், பொரித்த உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி- இவற்றை அறவே தவிர்க்கவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

உணவு உட்கொண்ட உடனே படுக்கைக்கு செல்லக்கூடாது. ஏனெனில் அது நெஞ்சு எரிச்சல் ஏற்பட வழிவகுக்கும். எனவே மூன்று மணிநேரம் கழித்தே உறங்கவேண்டும். நள்ளிரவு நேரத்தில் எண்ணெய் பலகாரங்களை உட்கொள்வது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள்.
நன்றி: இதயபூமி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக