செவ்வாய், செப்டம்பர் 09, 2014

'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்

ஆக்கம்:ம.திருவள்ளுவர், தேவகோட்டை, சிவகங்கை, தமிழ்நாடு
பாகம் 8.(கடந்த 26.08.2014 அன்று உங்கள் அந்திமாலையில் வெளியாகிய பதிவின் தொடர்ச்சி)
 
இலக்கை அடைய வைக்கும் எளிய சதுரம்
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கனவிருக்கிறது. அல்லது இருப்பது அவசியம். கனவென்பது வேறல்ல அது ஒரு தொலைநோக்கு. ஆமாம் அது ஒரு தொலைக்காட்சி. நாளை நடக்க இருப்பதை இன்றே மனதில் காணும் காட்சி. இதைத்தான் ஆங்கிலத்தில் “ Vision “ என்றும் “Picture” என்றும் “Dream” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
“ Begin with the end in mind “ என்று ஒரு மேலாண்மை கோட்பாடு கூறுகிறது. “முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு ஒரு செயலை தொடங்க வேண்டும்” என்பது இதன் பொருள். அந்த இறுதிக்கட்டத்திற்குப் பெயர் தான் “ Vision”. இந்த “ Vision” ஐ அடைவதற்கு ஒருவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், பல்வேறு படிநிலைகளைக் கடக்க வேண்டும், பல நாட்கள் காத்திருக்க வேண்டும்.

கனவை நினைவாக்குதல் என்பது கடைசி நிலை. அந்த கடைசி நிலையை அடைய வேண்டுமென்றால் பல இடைநிலைகளைக் கடந்தாக வேண்டும். அந்த இடைநிலைகளை மைல்கற்களால் அடையாளம் காட்டலாம். அந்த மைல்கற்களே “இலக்குகள்” எனப்படும்.

“இலக்கில்லா வாழ்க்கை கிழக்கில்லா வானுக்குச் சமம்” – என்பேன். இலக்குகள் தான் மனிதனை சிறிது சிறிதாக முன்னேறச் சொல்வது. இலக்கு இருக்கும் போதுதான் மனித மனம் ஓரிடத்தில் குவிகிறது.
இல்லையென்றால் அது சிதறிப் போகிறது. கவனம் சிதறிவிட்டால் மனிதனால் உயரங்களை எட்ட முடியாது. இலக்கே இல்லாமல் இருவரால் தான் இருக்க முடியும். ஒருவர் மெய்ஞானி மற்றொருவர் அஞ்ஞானி. எல்லாம் அறிந்த ஞானியருக்கு இலக்குகள் எதுவும் தேவையில்லை, அவர்கள் இலக்குகளை கடந்த நிலையை எய்தியிருப்பார்கள். அவர்கள் மனமற்றதன்மையை அடைந்திருப்பார்கள். அதே போன்று ஏதும் அறியாது அறியாமையில் முடங்கி கிடப்போரிடமும் இலக்குகள் இருக்காது. இந்த இரண்டு நிலைக்கும் இடையில் ஆட்பட்டு மனித நிலையில் வாழ்வோர்க்கு இலக்குகள் தான் ஏணிப்படிகள். அப்படிப்பட்ட இலக்குகளை அடைவதற்கு நான்கு முறைகொண்ட ஒரு சுழற்சி வட்டத்தை இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

மேலிருக்கும் சதுரத்தை உற்று கவனியுங்கள்

குறித்த இலக்கை குறித்த நேரத்தில் அடைவதற்கு முறையான ஒரு வழிமுறையை கடை பிடித்தல் அவசியம். இல்லையென்றால் அந்த இலக்கை அடைவது கடினம்.

அந்த வழிமுறைநான்கு நிலைகளைக் கொண்டது

1. திட்டமிடுதல் - Plan
2. செயல்படுதல் - Do
3. சரிபார்த்தல் - Check
4. சரிசெய்தல் - Act

முதலாவதாக “திட்டமிடுதலை” பார்ப்போம். நம்மில் எத்தனைபேர் திட்டமிடுகிறோம்? நம்மில் எத்தனைபேரிடம் இலக்கிருக்கிறது? நம்மில் எத்தனை பேரிடம் கனவிருக்கிறது? (சற்றே உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இவை). ஒருவரிடம் உள்ள கனவுதான் அவர்கள் வாழ்க்கைக்கு பொருள் சேர்க்கிறது. கனவுகளே இல்லாத இலக்குகள் முழுமை பெறாது. அதேபோன்று இலக்குகள் ஈடேற வேண்டுமென்றால் திட்டம் அவசியம்.
எது திட்டம்?

எது - அது?
எவர் - அவர்?
எப்பொருள் - அப்பொருள்?
எவ்விடம் - அவ்விடம்?
எப்பொழுது - அப்பொழுது?
எம்முறை - அம்முறை?
எவ்வளவு - அவ்வளவு?

-
என்று தீர்மானித்துக் கொள்வதையே “திட்டம்” என்கிறோம். செய்யவிருக்கும் செயல் எது? அந்தச் செயலை யார்யாரைக் கொண்டு செய்யப் போகிறோம்? அந்தச் செயலைச் செய்து முடிக்க எவ்வளவு பொருள் தேவைப்படுகிறது? அந்தச் செயல் செய்வதற்கு பொருத்தமான இடம் எது? அந்தச் செயலை மேற்கொள்வதற்கு உரிய நேரம் எது? அந்தச் செயலை எந்த முறையில் செய்ய விரும்புகிறோம்? செய்ய விரும்பும் அந்தச் செயலின் அளவு (Size of the project) எவ்வளவு? – என்பதையெல்லாம் தீர்மானிப்பதற்குப் பெயர்தான் திட்டமிடுதல் ஆகும்.

வீட்டின் வரவு செலவுத் திட்டம், ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பதற்கான திட்டம், ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதற்கான திட்டம், ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்கான திட்டம் – என செய்ய விரும்பும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் திட்டமிடமுடியும். அதை காலத்தின் அடிப்படையிலும் வரையறைசெய்யலாம். ஒரு வாரத்திட்டம், ஒரு மாத கால திட்டம், ஓர் ஆண்டுத் திட்டம், மூவாண்டுத் திட்டம், ஐந்தாண்டு திட்டம், பத்தாண்டு திட்டம், 20 ஆண்டு காலத் திட்டம் என குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களாகவும் செயலுக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.
இரண்டாவதாக நாம் மேற்கொள்ள வேண்டியது “செயல்படுதல்”. செயல்படுதல் என்பது நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல....(தொடரும்)
தொடரும்) 
இந்தத் தொடரின் பகுதி 9 ஐ அடுத்த வாரம் செவ்வாய்க் கிழமை (16.09.2014) உங்கள் அந்திமாலையில் வாசியுங்கள்.  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக