சனி, பிப்ரவரி 18, 2012

தாரமும் குருவும் பகுதி - 6.3

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 6.3
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
தினமும் டீச்சருடன் 'வாயாடித் தனமாக' பேசிக்கொண்டு சென்று வந்ததால் பள்ளிக்கூடம் செல்லும் பாதையைச் சரியாகக் கவனித்து, ஞாபகத்தில் வைக்கத் தவறி விட்டேன் என்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது. நான் நடந்துகொண்டிருக்கும் பாதை எனக்கு முன்பின் பரிச்சயமில்லாத பாதையாகத் தென்பட்டது. இனம்புரியாத 'பயம்' என்னைக் கவ்விக் கொண்டது. எவ்வளவு தூரம் நடந்தும் பள்ளிக்கூடம் தென்படாததால் அழத் தொடங்கினேன்.
ஆம், என் வாழ்வில் முதல் தடவையாக, எனது 'பதினொரு தலைமுறையினர்' வாழ்ந்த கிராமத்தில் நான் தொலைந்து போனேன்.
தெருவில் போவோர், வருவோரிடம் பள்ளிக்கூடத்தை அடைவதற்கு எந்த வழியால் செல்ல வேண்டும்? என்று கேட்டிருந்தாலே யாராவது ஒருவர் முன்வந்து உதவியிருப்பார்கள். ஆனால் வீதியால் செல்வோர்களில் பெரும்பாலானவர்கள் 'பிள்ளை பிடிகாரர்கள்' என்றல்லவா எனக்குச் சொல்லி வளர்த்திருக்கிறார்கள். "பக்கத்துக் கிராமத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மூன்று பிள்ளைகளை, பிள்ளை பிடிகாரர்கள்(பிள்ளைகளைப் பிடித்துச் செல்வோர்) பிடித்துச் சென்று விட்டார்களாம்", அவர்கள் பிள்ளைகளை கையில் இனிப்பு(மிட்டாய்) வைத்துக் கொண்டு அழைப்பார்களாம், அவர்கள் தரும் இனிப்பை உண்கிற பிள்ளைகள் மயங்கி சரிந்து விடுவார்களாம், அந்தப் பிள்ளைகளை அவர்கள் உடனடியாகக் காரில் ஏற்றி, கண்காணாத தேசத்திற்குக் கொண்டு சென்று 'புதையல்' எடுக்கும்போது 'மனிதக் குழந்தைப் பலி' கொடுப்பார்களாம், அல்லது அவர்களது வீட்டில் காயும் கருவாட்டைக் காவல் காக்கும்(காகம், பருந்து போன்ற பறவைகளிடம் இருந்து) வேலையில் அமர்த்தி விடுவார்களாம். அங்கு கொண்டு செல்லப்படும் பிள்ளைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு தடவை வெறும் சோறும், தண்ணீரும் தருவார்களாம். ஒரு மீனை(கருவாட்டை) பறவை தூக்கிச் சென்று விட்டால் 'இரும்புக் கம்பியினால்' அடிப்பார்களாம். என்றெல்லாம் சொல்லி பிள்ளைகளைப் பயமுறுத்தி வளர்க்கும் சமுதாயம் அல்லவா எனது சமுதாயம்?. தசாப்தங்கள் ஓடிவிட்டன, கம்பியூட்டர் காலம் வந்துவிட்டது. ஆனாலும் இந்த 'அம்மாக்கள்' மாறியதாகத் தெரியவில்லை. பிள்ளை உணவருந்தாமல் அடம் பிடித்தாலோ, குழப்படி செய்தாலோ "உன்னைப் பிள்ளை பிடிகாரரிடம்(பிள்ளை பிடிக்கிறவனிடம்) பிடித்துக் கொடுத்து விடுவேன்" என்பதும், "உன்னை உம்மாண்டியிடம்(பூச்சாண்டியிடம்) பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டுவதும் தொடரத்தான் செய்கிறது.
இப்படி நிலைமை இருக்கையில் எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது நிலைமை எப்படி இருந்திருக்கும்? கையில் சாக்குப் பையுடன் வரும் 'தாத்தாக்களைப்' பார்த்து நான் அலறியடித்து ஓடிய சம்பவங்களும் நடந்துள்ளது. அப்படியிருக்கையில் தெருவில் செல்வோரிடம் பாலர் பள்ளிக்குச் செல்வதற்கு வழி கேட்கும் 'துணிவு' எனக்கு வருமா? எனது நிலைமை வங்காள மொழி எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந் எழுதிய "காணாமல் போன குழந்தை' எனும் கதையில் வரும் 'குழந்தையை' ஒத்ததாக இருந்தது. நான் தேம்பித், தேம்பி அழுதபடி சென்றதையும் யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள் காரணம் எனக்கு சத்தமாக அழவும் தெரியாது.
மெல்ல, மெல்ல நடந்து, அழுதபடியே மனித நடமாட்டம் மிகவும் குறைவான ஒரு 'பனங் கூடல்' வழியாக(பனந் தோப்பு) நடந்தேன். அப்போது அந்த பனங் கூடல் வழியாக நடந்து வந்துகொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டதும் நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அது வேறு யாருமில்லை நான் ஏற்கனவே ஒரு தடவை குறிப்பிட்ட எனது 'சித்தப்பா'தான் அது. என்மீதும், என் சகோதரர்கள்மீதும் அதிக பாசம் வைத்திருக்கின்ற, ஆனால் தினமும் குடித்துவிட்டு வந்து எனது சித்தியை அடித்து, உதைக்கின்ற என் சித்தப்பா அந்தக் கணத்தில் மட்டும் என் கண்களுக்கு "ஆபத் பாந்தவனாக, அநாத ரட்சகனாக, கண்ண பரமாத்மாவாகத்" தெரிந்தார். அவரைக் கண்டதும் ஆனந்தம் உண்டாகியது என்னமோ உண்மைதான். ஆனாலும் நான் அழுகையை நிறுத்தவில்லை. என்னை வியப்புடன் நோக்கிய சித்தப்பா "ராசன், ஏனப்பு அழுகிற? இஞ்ச என்னத்துக்கப்பு வந்தனி? என்று பரிவோடு எனது தலையைத் தடவியபடியே கேட்டார். நான் விக்கி விக்கி அழுதுகொண்டே "சித்தப்பா, டீச்சர் என்ன விட்டுட்டு போயிட்டா, நான் பள்ளிக்குடம் போக வேணும்" என்றேன். நிலைமையை உணர்ந்து கொண்ட அவர் என்னைப் பள்ளிக்கூடத்தை நோக்கி அழைத்துச் சென்றார்.

நான் குறிப்பிடும் இந்தச் 'சித்தப்பா' என்மீது எவ்வளவு பாசமாக இருந்தாலும், எனக்கு அவர்மீது துளியளவும் பாசம் ஏற்பட்டதில்லை. அவருக்கு என்மீது மிகுந்த பாசம் இருந்ததற்குக் காரணங்கள் இரண்டு. அவருக்கு ஆண் பிள்ளைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவருக்கு இரண்டும் பெண் பிள்ளைகள்(பின் நாளில் அது மூன்றானது), மட்டும்தான். நான் அவரது ஒன்றுவிட்ட சகோதரனின் மகன் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு தடவையும் அவருக்கு(என் சித்திக்கு) குழந்தை பிறக்கும்போது சித்தியும், சித்தப்பாவும் ஒரு ஆண் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருந்து ஏமாந்து போனார்களாம். இதனாலேயே சித்திக்கும், சித்தப்பாவுக்கும் என்மீதும், என் அண்ணனின் மீதும் என் தம்பியின் மீதும் மிகுந்த பாசமாம். ஆனால் எனக்கோ இந்தச் சித்தப்பாவைக் கண்டதும், என்னையறியாமலே ஒருவித பயம் என்னைப் பற்றிக் கொள்ளும். என் கண்முன்னால் அவர் என் சித்தியை அடித்து, உதைக்கின்ற காட்சிகள் படம்போல விரியும். இனம் புரியாத 'திகில்' என்னை ஆட்கொள்ளும்.
இவ்வாறு தனது மனைவியைக் குடித்துவிட்டோ அல்லது குடிக்காமலோ தினமும் அடித்து உதைக்கின்ற 'ஆண் சிங்கங்களைப்' பற்றி பிறிதொரு தருணத்தில் எழுத இருக்கிறேன். இருப்பினும் அந்தக் 'கனவான்களுக்கு'????? நமது வேதங்களும், இதிகாசங்களும் உரைத்த ஒரு சில வாசகங்களை நினைவூட்ட விரும்புகிறேன்.
########################################

  • பெண்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் குடும்பம் மாத்திரமின்றி, சமுதாயமும் சபிக்கப் படுகிறது.
  • தனது பத்தினியை(மனைவியை) அடித்து, உதைத்துத் துன்புறுத்தும் ஒரு ஆடவன், ஆயிரம் அன்ன சத்திரங்கள் கட்டி, பதினாயிரம் ஏழைகளுக்கு உணவளித்தாலும் 'நரகக் குழியில்' வீழ்வது உறுதி.
  • தன்னை விடவும் வலிமை குறைந்தவளாகிய தனது தாரத்தை அடித்து, உதைப்பவனை நோக்கித் தேவர்களின் கோபப் பார்வை திரும்புகிறது.
  • கண்ணகி அழுதாள் மதுரை எரிந்தது; சீதை அழுதாள் இலங்காபுரி அழிந்தது; பாஞ்சாலி(திரௌபதி) அழுதாள் அஸ்தினாபுரமே அழிந்தது.
இதிகாசங்களும், புராணங்களும் உண்மையா? என்று கேட்காதீர்கள். அவை நமக்குக் கூறும் செய்தியை, படிப்பினையை மட்டும் பாருங்கள்.
############################################
இவ்வாறு எனது சித்தியைக் காலம் முழுவதும் கண்ணீர் சிந்த வைத்த சித்தப்பாவின் ஞாபகம் வந்தபோதே நான் வெரித்தாஸ் வானொலியில் ஒரு தடவை கேட்ட நகைச்சுவைத் துணுக்கை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. மேற்படி 'ஜோக்கை' மேலே உங்களுக்காக தந்துள்ளேன்.அது தவிர வேறு சமயத்தைக் கிண்டலடிக்கும் நோக்கம் எனக்குத் துளியளவும் கிடையாது.
*எனது இந்தத் தொடரில் வரும் உரையாடல்கள் 'இலங்கைத் தமிழில்' உள்ளன என்பதைத் தமிழக வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(இன்னும் சொல்வேன்)    

2 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

மிக சுவையாக எழுதியுள்ளீர்கள். படிப்பினையைத் தேவையானவர்கள் எடுக்கட்டும். நன்றி. வாழ்த்துகள்.

vinothiny dk சொன்னது…

உண்மைதான் .இந்த பாழ்பட்ட குடியினால் அழிந்து போன குடும்பங்கள் நம்மவர் மத்தியில் ஏராளம். தொடர் நன்றாக இருந்தது .

கருத்துரையிடுக