திங்கள், மே 26, 2014

வாய் துர்நாற்றமும் தடுக்கும் முறைகளும்:

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நம் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் (plaque)  நம் வாயில் சேர்ந்து கொண்டே இருப்பது, உணவு உண்ட பின் வாயை சரியாகக் கழுவாமல் இருப்பது போன்றவை முக்கிய காரணங்கள். பல்லில் ஏற்படும் சிதைவு, பற்குழிகள் ஈறுகளில் வரும் நோய்கள் போன்றவை மற்ற காரணங்கள்.
மிகவும் அரிதாக நுரையீரல் அல்லது இரைப்பையில் ஏற்படும் தொற்றுக் கிருமிகளால் வாய் துர் நாற்றம் ஏற்பட கூடும். பூண்டு சேர்த்து செய்யப்படும் உணவுகளை உண்பதும் ஒரு காரணம். பூண்டு, வெங்காயம் இவைகளை உண்டவுடன் இவற்றில் இருக்கும் மிகக் கடுமையான வாசனை இரத்த ஓட்டத்துடன் கலந்து நுரையீரல் வழியாக மூச்சுக் காற்றுடன் வெளியே வருகிறது. ஆல்கஹால் மற்றும் புகையிலை மெல்லுவதும் கூட வாய் துர் நாற்றம் வர காரணம்.
சில உடல் உபாதைகள் சைனஸ் அல்லது டயாபடிஸ் (வாயிலிருந்து ஒருவித இராசாயன வாசனை வரும் இவர்களுக்கு) இருப்பவர்களும் இந்த வாய் துர் நாற்றத்திற்கு ஆளாகிறார்கள்.
எப்படி இந்த துர் நாற்றத்தைத் தவிர்க்கலாம்?
  • வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்: ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் விளக்கவும். பல் மருத்துவரிடம் சென்று மாதத்திற்கு ஒரு முறை பற்களை floss  செய்து கொள்ளவும். floss என்பது பிளாஸ்டிக்கினால் ஆன மெல்லிய இழை. இதன் மூலம் பற்களின் நடுவில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத் துணுக்குகளை நீக்கலாம். வீட்டிலேயே நாமே செய்து கொள்ளலாம். அதே போல ஈறு களின் ஓரங்களில் இருக்கும் பாக்டீரியாக்களையும் அகற்றலாம். ஒவ்வொரு முறை சாப்பிட்டப் பிறகும் வாயை நன்றாக கொப்பளிக்கவும்.
  • நாக்கு வழித்தல்: பற்களை சுத்தம் செய்வது போலவே நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாத நாக்கினில் இருக்கும் கிருமிகளும் கூட துர் நாற்றத்தை ஏற்படுத்தும். இப்போதெல்லாம் டூத் ப்ரஷிலேயே பின் புறம் நாக்கு வழிக்க வசதியாக டங் கிளீனர் வைத்துள்ளனர். தனியாகக் கிடைக்கும் டங் கிளீனரை உபயோகப் படுத்துவது நல்லது.
  • வாய் உலராமல் பார்த்துக் கொள்ளுங்கள்: வாய் நீண்ட நேரம் நீர் குடிக்காமல் இருந்தால் உலர்ந்து போகும். நம் வாயில் ஊறும் உமிழ் நீர் நம் வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நாம் சாப்பிடும் போது உணவுத் துணுக்குகள் உமிழ் நீருடன் கலந்து உணவு குழாய்க்குள் செல்லுகிறது. வாயில் கிருமிகள் தங்காவண்ணம் உமிழ் நீர்  தடுக்கிறது. ஆனாலும் இரவு தூங்கும் போது உமிழ் நீர் ஊறுவது குறைகிறது. காலையில் எழுந்திருக்கும் போது மிகக் குறைந்த அளவு உமிழ் நீர் வாயில் இருப்பதால் வாய் உலர்ந்து போகிறது. அதனால் காலையில் வாய் துர் நாற்றம் உண்டாகிறது. இதற்கு வாய் உலராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது சிறிது சிறிது நீர் குடித்துக் கொண்டே இருப்பது நல்லது. காபி, தேநீர் போன்ற பானங்கள் வாயை உலரச் செய்யும். இவைகளைக் குடித்தபின் தண்ணீர் குடிப்பது, வாய் உலர்ந்து போகாமல் தடுக்க உதவும்.
  • சுத்தமான நீரினால் வாயைக் கொப்பளியுங்கள்: சாப்பிட்டு முடித்தவுடன் நிறைய நீரை வாயில் விட்டுக் கொண்டு வாயை மூடிய படியே வாயினுள் எல்லா பக்கங்களிலும் நீரை சுழற்றுங்கள். பிறகு வெளியே கொப்பளித்து விடுங்கள்.  இதனால் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்டுள்ள உணவுத் துணுக்குகள் நீருடன் வெளியே வந்து விடும். பல முறை இதனைச் செய்யுங்கள். காபி, தேநீர் குடித்த பின் வாயைக் கொப்பளிப்பது, அல்லது தண்ணீர் குடிப்பது பற்களின் நிறம் மாறாமல் இருக்கவும், பேசும்போது நாம் குடித்த பானத்தின் வாசனை வராமல் இருக்கவும் உதவும்.
  • சூயிங் கம்: மூலிகைகளினால் ஆன சூயிங் கம் மெல்லலாம். வாய் துர் நாற்றம் இதனால் போகாது என்றாலும், மற்றவருடன் பேசும் போது நம் வாயை மணக்கச் செய்யும்.
  • காரட் போன்றவற்றை நன்கு கடித்து சாப்பிடலாம். நொறுக்குத் தீனியாக வேர்கடலை, குறைந்த கொழுப்பு சத்து கொண்ட சீஸ் முதலியவற்றை சாப்பிடலாம். இவை பற்களின் மஞ்சள் கறை படிவதைத் தடுப்பதுடன், வாய் துர் நாற்றத்தைத் தடுக்கவும் உதவும். இவற்றை கடித்து சாப்பிடுவதால் பற்களும் பலமாக ஆகின்றன.
  • எதை சாப்பிட்டாலும் உடனே வாயை சுத்தம் செய்வது மிக மிக நல்லது. ஒவ்வொரு முறை சாப்பிட்டவுடனேயும் – சிற்றுண்டியோ, சாப்பாடோ, முறுக்கு, ஸ்வீட் போன்ற பலகார வகைகளோ – வாயைக் கொப்பளிப்பதை பழக்கப் படுத்திக் கொள்ளவும். வாய் கொப்பளிக்கக் கூடிய சூழ்நிலை இல்லை என்றால் தண்ணீர் குடித்து வாயை உணவுத் துகள்கள் தங்காமல் பாதுகாத்துக் கொள்ளவும்.
  • கட்டுப் பல் : தினமும் உங்கள் பல் செட்டை சுத்தம் செய்யுங்கள்.
  • டூத் பிரஷ்: 3 அல்லது 4 மாதத்திற்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்றவும். மிருதுவான பிரஷையே பயன் படுத்தவும்.
இவை எல்லாம் உங்கள் வாய் நாற்றத்தைக் குறைக்க உதவலாம். ஆனாலும் பல் மருத்துவரிடம் சென்று என்ன பிரச்சினை என்பதை அறிந்து வைத்தியம் செய்து கொள்ளுவது நல்லது. அவ்வப்போது பற்களை சுத்தம் செய்து கொண்டு வருவது சாலச் சிறந்தது.
நன்றி:  a2ztaminadunews.com & ranjaninarayanan.wordpress.com

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறந்த உளநல வழிகாட்டல்

கருத்துரையிடுக