ஞாயிறு, மே 18, 2014

காபியும் டீயும் உடலுக்கு நல்லதா?

காலையில் சிலர் காபி கோப்பையில்தான் கண் விழிப்பார்கள். இன்னும் சிலரோ டீ வாசனை மூக்கைத் துளைத்தால்தான் படுக்கையில் இருந்தே எழுவார்கள்.

இப்படி காபி, டீயுடன் அன்றைய நாளைத் தொடங்கும் சுவைப் பிரியர்களின் மனதில் கூட எப்போதாவது எட்டிப்பார்க்கும் கேள்வி, 'எது நல்லது? காபியா? டீயா?' முதலில் 'டீ'க்கு வருவோம். டீ குடித்தால் சில புற்றுநோய்களும், இதயநோய்களும் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள்.

அதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க டீ உதவுகிறது. ஒரு கப் டீயில் காபியை விட குறைவான 'காபீன்' இருக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உயர் ரத்தஅழுத்தம் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு கப் டீயுடன் நிறுத்திக் கொள்வது நல்லது.

இப்படிப்பட்டவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிடக் கூடும். சிலர் டீயை கொதிக்க கொதிக்க அப்படியே தொண்டைக்குள் இறக்குவார்கள். இப்படியே தொடர்ந்தால் தொண்டையில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறது, சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று.

காபி விஷயத்தைக் கவனிப்போம். டீயை விடவும் காபியில் 'காபீன்' அதிகம் இருப்பதால் டீயை விட சிறப்பாகவும், வேகமாகவும் அதிக செயல்திறனை உணரமுடிகிறது. டீ குடிப்பவர்களுக்கு ஏற்படும் சுறுசுறுப்பை விட இது அதிகம்.

குறிப்பாக டிகாஷன் காபிக்கு நகர்ப்புறத்தில் பிரியர்கள் அதிகம். வடிகட்டப்பட்ட 'பிளாக் காபி’க்கு அல்சை மர்ஸ், பெருங்குடல் புற்றுநோய், டைப் 2 சர்க்கரை நோய் ஆகியவற்றை தடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாம். சிலர் கையில் எப்போதும் காபி கோப்பை புகைந்து கொண்டிருக்கும்.

இப்படிப்பட்டவர்கள் பின்னாளில் மனக்கவலை சார்ந்த நோய்களுக்கு உள்ளாகக்கூடும். எனவே காபியானாலும் அளவோடு குடித்து ஆரோக்கியம் காக்கலாம். காபிக்கு அடிமையாகிவிட்டதை உணர்ந்து திடுமென அதை நிறுத்த முயல்பவர்கள் ஒரேயடியாக சோர்ந்து போவார்கள். கவனம் செலுத்துதலில் குறைபாடு ஏற்படக்கூடும். காபியோ, டீயோ, கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம். 
நன்றி: மாலைமலர்

2 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

பயனுள்ள பகிர்வு.

Yarlpavanan சொன்னது…

சிறந்த உளநல வழிகாட்டல்

கருத்துரையிடுக