வியாழன், மார்ச் 20, 2014

தமிழில் பேசும் ஒரு ஜேர்மனிய பெண்ணும் இணையத்தளங்களும்

ஆக்கம்: ஜீவகுமாரன், டென்மார்க் 
யாழ்ப்பாணத் தமிழில் பேசும் ஒரு ஜேர்மனிய பெண்ணும் …..
யாழ்ப்பாணத் தமிழில் பேசும் ஒரு ஜேர்மனிய பெண்ணும் இணையத்தளங்களும் முகநூல்களும் ஊடகங்களும்….

மிகவும் நல்ல விடயம் தான்!

மாற்றுக் கருத்துக்கே இடமில்லை!!

”ல, ள, ழ”வில் கொஞ்சம் இடித்தாலும் எயர்லங்கா பணிப்பெண்களின் தமிழை விடவே நல்லாகவே பேசுகின்றார்!!!

மேலாக தமிழை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற தனது பெருவிருப்பத்தையும் பதிவு செய்கின்றார்!!!!

ஆனால் அதனை ஒரு உலக அதிசயம் போல் முகநூல்கள் பெரிது படுத்தும் பொழுது கொஞ்சம் இடிக்கவே செய்கின்றது.
அதன் உச்சத்துக்குப் போய் ஒரு நபர் எழுதியிருந்தார் "தமிழர்கள் நாக்கைப்  பிடிங்கிக் கொண்டு சாக வேண்டும்" என்று.

அப்பாடா சாமி என்று இருந்தது!

அந்த பெண் மணியின் பேட்டியைப் பார்க்கும் பொழுது அவருக்கு ஏதோ ஒரு தமிழ் குடும்ப அல்லது அவரே ஒரு தமிழ் குடும்ப மருமகளாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்;றுகிறது. அவர் தமிழ் கற்றுக் கொள்ளத் தொடங்கிய காலத்தில் அவருக்கு பொருளாதார அல்லது அகதி அந்தஸ்துப் பிரச்சனைகள் எதுவும் இருந்ததாக தெரியவில்லை.

ஆனால் பொருளாதார… அரசியல் சிக்கல்கள்… புதிய கலாச்சார மோதல்களுக்கு முகம் கொடுத்து புதிய சூழலில் மொத்த இனமே எந்தெந்த நாடுகளில் குடியேறினமோ அந்தந்த நாட்டு மொழிகளில் சிறப்புற விளங்குவதை அந்த அந்தநாட்டு உள்துறை அமைச்சுகள் பதிவு செய்து இருக்கிறது.

ஆனாலும் யாராவது அந்த நாட்டைச் சார்ந்த ஒருவன் அல்லது ஒருத்தி தனது முகநூலில் இவ்வாறு எழுத மாட்டார்கள்.

அபூர்வராகம் படத்தில் ஒரு காட்சி வரும்.

அதில் குடிகார பாத்திரத்தில் வரும் நாகேஷ் சொல்வார் “ எனக்கு குதிரை ரேஸ்க்கு எல்லாம் போற கெட்ட பழக்கம் எல்லாம் இல்லை…. பத்துக் குதிரை ஓடினால் பத்தாயிரம் பேர் இருந்து பாக்கிறான்கள்… இந்த பத்தாயிரம் பேரும் ஓடினாலும் ஒரு குதிரையாவது உட்பார்ந்து பார்க்குமா”? என்று.

இதுதான் என் ஞாபகத்துக்கு வந்தது.

எப்பொழுதும் தன் தாய் மொழியில் சிறப்பாக விளங்கும் பிள்ளை பிற மொழிகளில் இன்னும் திறமையாக விளங்குவார்கள் என்பது விஞ்ஞானம்.

அதனை விட தமிழ் கல்வி என்பது வெறுமே உயிர் எழுத்தும், மெய் எழுத்தும், உயிர்மெய் எழுத்தும் கற்பித்தல் அல்ல. அதனையும் தாண்டி எங்கள் கலாச்சார விழுமியங்கள், எங்கள் சமய கோட்பாடுகள் அனைத்துமே அங்கு ஊட்டப்படுகிறது.

இதனை அறிந்து பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு தமிழ்க் கல்வி ஊட்ட வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்.

முகநூல்களில் அவசரப்பட்டு 'நாக்கை பிடிங்கி சாகும் கதை' எழுதினால் சொல்லப் புறப்பட்ட கருத்து பிழையாக விளங்கிக் கொள்ள இடமுண்டு. ஒட்டு மொத்த சமுதாயத்தாயத்தையே குற்றம் சாட்டுவது போல இருக்கும்.

எனவே புலம் பெயர்ந்த தமிழருக்கு இரு மொழியும் சரிக்கு சரி அவசியம்.

இதில் எதிலும் உயர்ச்சி தாழ்ச்சி இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக