வியாழன், டிசம்பர் 30, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா கொடியவனா? - அத்தியாயம் 11

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
அப்படகிலிருந்த அத்தனை மீனவர்களையும்விட, அம்மீனவனை கொலம்பஸ்சிற்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் அவன் மட்டுமே கொலம்பஸ்ஸின் 'இத்தாலிய' மொழியைப் பேசினான். இது கொலம்பஸிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கொலம்பஸ்சிற்கு அருகில் வந்து அமர்ந்து கொண்ட அவன் மெதுவாக கொலம்பஸ்ஸின் தலையைத் தடவியபடியே ஆரம்பித்தான். "உன் பெயர் என்ன? நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் தெரியுமா? அவனது முதலாவது கேள்விக்கு மெல்லிய குரலில் "கிறிஸ்தோபர் கொலம்பஸ்" என்று பதிலளித்தவன் இரண்டாவது கேள்விக்கு என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் தடுமாறினான்.


அந்த மீனவனே பரிவான குரலில் கூறினான் "நாங்கள் இப்போது ஜெனோவாவிற்குச் செல்கிறோம், உன்னை உன் பெற்றோரிடம் ஒப்படைக்கப் போகிறோம்" இந்த வார்த்தைகளைக் கேட்ட கொலம்பஸின் முகம் மலர்ந்தது. "உண்மையாகவா" என்று சிறிது ஐயத்தோடு கேட்டான். "உண்மையாகவேதான், இதோபார் எங்கள் படகு உனது தேசத்தை நோக்கித்தான் செல்கிறது, அங்கு தொலைவில் தெரிவது ஜெனோவாக் கடற்கரை, உனக்குத் தெரிகிறதா? என்று கேட்டான்.
அங்கு அந்த மீனவன் காட்டிய திசையில், கடலின் மறு பக்கத்தில் கறுப்பாகவும், சிறிதும் பெரிதுமாகவும் கட்டிடங்களும், சிறு குடிசைகளும் தெரிந்தன. ஆனால் அது தனது ஊர்தான் என்பதை அவன் உணர்ந்து கொள்ளக் கூடிய அளவில் அது அருகாமையில் இல்லாததால் அவனால் எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை. இருப்பினும் இந்த உரையாடலின் பின்னர் அவன் மனம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தது, இன்று காலைவரை இருள் படர்ந்திருந்த அவனது மனத் திரையில் இப்போது ஒளிக்கற்றைகள் தோன்ற ஆரம்பித்தன. அவனது மகிழ்ச்சி அவனது முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. "என்ன சந்தோசம்தானே? மீனவன் கடலலைகளின் இரைச்சலுக்கு மத்தியில் சத்தமாகக் கேட்டான்.


கடல் இரைச்சலுக்கு மத்தியில் பேசும்போது, சத்தமாக பேசுவது நடைமுறை என்பதைக் கொலம்பஸ் அறிந்தானில்லை, ஆதலால் அம்மீனவனின் இடி போன்ற குரல் அவனுக்கு அச்சத்தைத் தோற்றுவித்தது. ஆனாலும் சமாளித்துக்கொண்டு மெல்லிய குரலில் "ஆம்" என்று பதிலளித்தான். ஆனால் அவனது பதில் மீனவனின் காதில் எட்டாமலேயே காற்றில் கரைந்து போனது.
படகில் இருந்த மீனவர்கள் ஒருவரோடு ஒருவர் மிகவும் இரைச்சலாக ஏதேதோ பேசிக்கொண்டார்கள், அவர்களின் பேச்சின் நடுவே ஒரு மீனவன் உரத்த குரலில் ஏதோ ஒரு பிரெஞ்சு மொழிப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தான், அவர்களின் பேச்சின் இடையிடையே 'மீனவர் தலைவன்' படகு செல்ல வேண்டிய திசை பற்றியும், பாய்மரத்தையும், பாயையும் சுருக்க வேண்டிய விதம் பற்றியும் உரத்த குரலில் கட்டளைகளை பிரெஞ்சு மொழியில் பிறப்பித்துக் கொண்டிருந்தான். அவர்களின் உரத்த குரலிலான பேச்சுக்கள் கொலம்பசுக்கு சிறிது அச்சத்தை ஏற்படுத்தியது, இருப்பினும் சில மணி நேரங்களின் பின்னர் அவன் கண்ணில் தனது 'ஜெனோவா' கடற்கரை தென்படவும் பயமெல்லாம் பறந்து போனது, உள்ளத்தில் எல்லையில்லா ஆனந்தம் பிறந்தது. 
(தொடரும்)     
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

1 கருத்து:

rathy germany. சொன்னது…

wonderful.

கருத்துரையிடுக