சனி, டிசம்பர் 10, 2011

ஒரு பெருங்”குடி” மகனும் பெப்சி கோலாவும்


ஆக்கம்:செ.சஞ்சயன், நோர்வே
சில வருடங்களுக்கு முன் எனது தொழில் நிமித்தமாக ”ஸ்லோவாக்கியா” என்னும் நாட்டிற்கு செல்ல நேர்ந்தது. எப்போதும் தனியே பயணம் செய்ய விரும்புபவன் நான். அப்பொழுது தானே நான் விரும்பியபடி ஊர் சுற்றலாம். இம்முறை என்னுடன்  ஒரு மேலதிகாரியும் சேர்ந்து கொண்டார். அவருடன் அதிகம் பழக்கமிருக்கவில்லை.  இருப்பினும் அவரைப் பற்றி மற்றவர்கள் மூலமாக சற்று அறிந்திருந்தேன்.


நெருங்கிப் பழக மாட்டார், புகைத்தலை வெறுப்பவர், தனது கருத்தே சரி என்று நிரூபிக்க தலைகீழாகவும் நிற்கக் கூடியவர், ”வைன்” என்னும் பழரசத்தை மிகவும் விரும்பியும், ரசித்தும் உண்பார், புகைப்படக்கலையில் ஆர்வமுள்ளவர், அவரிடம் பொறுமை இருக்கிறதா என்பதை பூதக்கண்ணாடி வைத்துத் தான் தேட வேண்டும்  என்றெல்லாம் அறியக் கிடைத்தது. புகைப்படக்கலையை விட வேறு ஒன்றிலும் எமக்குள் ஒற்றுமையில்லை. தவிர எனக்கு  பெப்சி கோலாவை விட வேறு எந்த குடிவகைகளிலும் பெரீய பரீட்சயம் இல்லை. ஆண்டுக்கொருமுறை பழரசம் குடிப்பேன். அதுவும் ரசித்துக், நிறம், பதம் பார்த்து எல்லாம் குடிப்பது கிடையாது. தண்ணி குடிப்பது போல குடித்த கிளாசை கீழே (அதாம்பா மேசையில) வைத்தால் அடுத்த கிளாஸ் குடிக்க ஒருவருடமாகும்.. அப்பேர் பட்ட பெருங்”குடி” மகன் நான்.

எமக்கிடப்பட்ட வேலை அங்கு எமது கம்பனியின் கிளைக் ஒரு கந்தேரை ஆரம்பிக்க வேண்டும் என்பதாகும். நான் கணணி சம்பந்தமான வேலைகளையும் அவர் வேலையாட்களை தேர்வு செய்யவுமே போய்க் கொண்டிருக்கிறோம். இரண்டு மகள்களும் முத்தத்தால் வெற்றித் திலகமிட்டு அனுப்ப எனது பயணம் ‌தொடங்கியது.

மனிதர் என்னை விமான நிலையத்தில் கண்டதும் கையில் காபியுடன் வந்து காலை வணக்கம், நான் நேற்றிரவே வந்து அருகில் இருந்த விடுதியில் தங்கியிருந்தேன் என்றார். நான் மனதுக்குள  உங்க பணமா கம்பனி பணம் தானே என்று சொல்லிக் கொண்டேன். நாம் முதலில் ஓஸ்லோ போக வேண்டும், பின்பு ஹங்கேரி போய் அங்கிருந்து புகையிரதத்தில் ஸ்லோவாக்கியா போக வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது எமக்கு.

விமானத்தில் அமர்ந்ததுமே நான் பல நாடுகளுக்கு போயிருக்கிறேன் ஆனால் ஸ்லோவாக்கியா போகவில்லை என்றார். நான் ஒரு மாதத்துக்கு முன் போயிருந்தேன் என்றேன். ஆகா என்று தலையாட்டினார். பின்பு உங்கள் ஊரில் என்ன பிரச்சனை, ஏன் யுத்தம் நடக்கிறது, அதைத் தீர்க்க முடியாதா? என்றார்.  நானும் மிக இலகுவாகாகத் தீர்க்கலாம் என்றேன். மனிதர் நிமிர்ந்து உட்கார்ந்து எப்படி என்றார்? இரு பகுதியினரும் கேட்பதை கொடுத்துவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்றேன். மனிதருக்கு நக்கல் புரிந்திருக்க வேண்டும் நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு அமைதியாகினார்.

ஓஸ்லோவில் Duty free கடைக்குள் அவரின் பின்னால் அலைந்து திரிந்தேன். வைன் போத்தல்களின் பக்கம் போக மனிதர் ஒவ்வொரு போத்தலாக எடுத்துப் பார்த்து, கண்ணைச்சுருக்கி போத்தலில் எழுதியிருந்ததை வாசித்தார்.  அதில் என்ன அப்படி இருக்கிறது என்று எனது வாய் உளரியது தான் தாமதம் மனிதர் வைன் விரிவுரையாளராகவே மாறி ஒரு சிறிய வைன் சொற்பொழிவையே ஆற்றினார். எனக்கு கண்ணைக் கட்டியது. நான் வைன் குடிப்பதில்லை என்றபடி நகர்ந்து கொண்டேன். விலையான வைன் போத்தல் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டார்.

விமானத்தில் அமர்ந்ததும் நீ ஏன் வைன் குடிப்பதில்லை என்றார். நான் குடித்திருந்தால் எனது பாடசாலை அதிபரும், எனது அப்பாவும் சேர்ந்து என்னை உயிரோடு புதைத்திருப்பார்கள் என்றேன். அப்ப உனது அப்பாவும் குடிப்பதில்லையா என்றார். சற்று யோசித்தேன். அப்பா ஒரு போத்தலை கீழே வைக்காமலே தொண்டைக்குள் இறக்கிக் கொள்ளும் வல்லமை படைத்தவர் என்றால், அப்பாவுக்கு ஒரு சட்டம் உனக்கு ஒரு கட்டமா என மனித உரிமை பற்றி பேசத் தொடங்கிவிடுவார் என்பதால் இல்லை என்று தலையாட்டினேன். மனிதர் திருப்திப் பட்டவர் போல தலையாட்டினார்.

முதல் நாள் வேலை முடிந்த போது வா போய் சாப்பிடுவோம் என்றார். பிராட்டிஸ்லாவா என்னும் சிறிய நகரத்தை இரண்டு தரம் சுற்றி வந்து ஒரு உணவகத்தை தேர்ந்தெடுத்தார். போய் குந்தியதும் உபசரிப்பாளன் வந்தான் வைன் லிஸ்ட் எடுத்து வா என்று கட்டளையிட்டார். நான் ஒரு பெப்சி கேட்டேன். அவரின் வைன் லிஸ்ட் வந்தது. எதையே காட்டி என்னமோ கேட்டார். அவனும் ஆகா ஓகோ என்று  என்னமோ சொல்ல இவரும் தலையாட்ட அவனும் ஒரு கிளாஸ் இல் அதைக் கொண்டு வந்தான். எனக்கு சிவப்பு வைன் என்பது மட்டும் புரிந்தது. வந்ததும் மூக்கைச் சுற்றி இரு தடவை ஆட்டினார். ஆட்டும் போதே முகத்தில் மகிழ்ச்சி ‌மறைந்தது. டக் என்று மேசையில் வைத்தார். கிளாஸ்ஐ தொட்டுப் பார்த்தார். முகம் இன்னும் கறுத்தது. சற்றுப் பொறுத்து மீகிளாஸ் மீண்டும் தொட்டுப் பார்த்தார்.  உபசரிப்பாளனிடம் உனது மனேஜரை அழைத்த வா என்றார். மனேஜர் ஓடோடி வந்தார். சம்பாசனை தொடங்கியது. 

”இது என்ன?” என்றார் நம்மவர்
”வைன்”
”இப்படியா அதை பரிமாறுவது?”

பின்ன என்ன பிளேட்டிலா ஊத்தித் தாறது என்று நான் நினைத்துக் கொண்டேன்.

மனேஜரும் ”ஏதும் பிழை இருந்தால் சொல்லுங்கள் நான் வேறு வைன் தருகிறேன்” என்றார்.
”இந்த வைன் குடிக்கும் பதத்தில் இல்லை. ரெட் வைன் குடிப்பதானால் 6 தொடக்கும் 8 பாகையில் வெப்பம் இருக்க வேண்டும் என்றார்.

எனது காதுக்குள் வடிவேலு ”ஆகா கிளம்பீட்டாய்ங்க” என்று சொல்வது கேட்டது.

மனேஜர் வைன்ஐ தொட்டுப் பார்த்து ”குளிர்கிறதே” என்றார்.
”ஆம்,” குளிர்கிறது ஆனால் 4 பாகை இருக்கும்” என்றார் நம்மவர்
எனக்கு பசிக்க ஆரம்பித்திருந்தது
”இதை விட பதமான குளிரில் கொண்டுவா” என்று கிளாசை மனேஜரிடம் நீட்ட அவரும் அதை பயபக்தியாக வாங்கிப் போய் சற்று நேரத்தில் திரும்பிவந்தார்.
அதை அவர் வாயில் வைத்ததுமே அவரின் முகம் போன போக்கில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று புரிந்தது. மேசையில் காசை வைத்தார். ஜக்கட்டைப் போட்டார், என்னையும் பார்த்தார். நானும் எழுந்து கொண்டேன்.
எமக்குப் பின்னால் மனேஜர் கெஞ்சுவது கேட்டுக் கொண்டிருந்தது.

இன்னுமொரு  உயர் ஜாதி ஹோட்டலுக்குள் புகுந்து  கொண்டார். அவனுக்கு வைன் பற்றி இவரை விட அதிகமாகத் தெரிந்திருந்தது. மனிதர் அவனுடன் ஐக்கியமாகிவிட்டார். அவன் ஊத்த இவர் குடிக்க, இவர் குடிக்க அவன் ஊத்த இன்று வைன் ஆறாக ஓடி இறங்கிக் கொண்டிருந்தது அவரின் வயிற்றுக்குள். நான் ஆட்டுத்துடையும் பெப்சியுடனும் திருப்திப் பட அவரின் பில் 100 டாலர்களைத் தாண்டியது. ஹோட்டலுக்கு வந்ததும் வா பாருக்கு போவோம் என்றார். அய்யா சாமீ ... ஆளை விட்டால் காணும் என்று எனது அறைக்கதவை இறுக்கமாய் பூட்டிக் கொண்டேன். எனது கனவிலும் மனிதர் வைன் குடித்துக் கொண்டிருந்தார்.

அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் வைன், வைன் என மனிதர் மூழ்கித் திரிந்தார். ஆனால் வேலை நேரத்தில் வேலையில் மிக அவதானமாய் இருந்தார்.

இறுதி நாள் எல்லோருக்கும் விருந்து நடந்தது. 13 பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம் மனிதர் உபசரிப்பாளனுடன் உணவகத்துக்கு கீழ் இருந்த வைன் சேகரிக்கும் இடத்திற்குப் போய் மிகவும் சிறந்த வைன் எடுத்து வந்தார். அப்படி எல்லொரையும் வைன் சேகரிக்கும் இடத்திற்குப் போக அனுமதிக்க மாட்டார்களாம். ஆனால் தான் போய் வந்ததாக பெருமைப்பட்டார். நானும் வளமை போல தலையாட்டினேன்.

அங்கு வந்திருந்த எல்லொரும் (என்னைத் தவிர) அவர் தெரிவு செய்த வைன்ஐ பற்றி புகழ்ந்து தள்ள மனிதர் பல  வைன் சொற்பொழிவுகளை ஆற்றினார். எனக்கு வைன் குடிக்காமவே தலை சுற்றிக் கொண்டிருந்தது.

இது ஸ்லோவாக்கிய நாட்டு வைன்னுக்கு சமர்ப்பணம்.

2 கருத்துகள்:

ajan சொன்னது…

நல்ல சுவையான கட்டுரை.

எஸ் சக்திவேல் சொன்னது…

அண்ணே நீங்கள் குடிப்பதில்லையா? தண்ணியடிக்காமலே தலை சுத்துதே?

கருத்துரையிடுக