ஞாயிறு, பிப்ரவரி 24, 2013

நம்மவர் செய்திகள்

ஜெர்மன் மொழியில்:Von Matthias Bode
தமிழில்: பிருந்தா பியா இராமலிங்கம் 

"நீங்கள் எங்களில்  ஒருவர்"

புகைப்படம்: www.plz-postleitzahl.de
ஜெர்மனியில் உள்ள ஒரு மாநிலம்தான் நீடர்சக்க்ஷேன்(Niedersachsen). இம்மாநிலத்தில் உள்ள ஒரு நகரத்தின் பெயர் ஹில்டஸ்ஹெய்ம்(Hildesheim). இந்நகரத்தில் இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்டு ஜெர்மனியில் தஞ்சம் புகுந்த சுமார் 20 வரையான இலங்கைத் தமிழ்க் குடும்பங்கள் வாழ்கிறார்கள்.இவர்கள் கரித்தாஸ்(Caritas) தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் ஹில்டஸ்ஹெய்மில் அமைந்திருக்கும் மரியாள் முதியோர் இல்லத்தில்(Pflegeheim Magdalenenhof) வாராந்தம் சந்தித்துத் தமது மொழி, கலைகள், கலாச்சாரம் போன்றவற்றை வளர்த்து வருகிறார்கள். "இவர்கள் மேற்படி முதியோர் இல்லத்தில் எத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை அறிய அங்கு சென்றிருந்தோம். அங்கு எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் விபரிக்க முடியாதைவை.
எங்கள் ஐரோப்பியக் காதுகளுக்கும், கண்களுக்கும் அது புதிய ரசனையைத் தந்தது. நீளமான மஞ்சள் நிற ஆடைகளை அணிந்த சில தமிழ்ச் சிறுமிகள் ஐரோப்பிய இசையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு இசைக்கு ஏற்பத் தமது கால்களையும், கைகளையும் மட்டுமே கருவிகளாகக் கொண்டு அழகாக அபிநயம் பிடித்து நடனம் ஆடினர். இந்தக் குழந்தைகள் கீழைத்தேய நாடுகளில் இருந்து ஜெர்மனிக்கு வந்து சேர்ந்த பெற்றோர்களின் பிள்ளைகளாக இருந்த போதிலும் தமது கலைகளை மறக்காதவர்களாக வாழ்கிறார்கள் என்பதைக் காணக் கூடியதாக இருந்தது. இங்கு வாழும் தமிழ்க் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் தமது தாய் மொழியாகிய தமிழைப் பேசக் கூடியவர்களாக உள்ளனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தமிழை எழுதக் கூடியவர்களாக உள்ளனர்".
ஜெர்மனியில் தமிழர்கள் வாழும் நகரங்களில் வாரம் ஒரு முறை தமிழில் ஆராதனைகள் நடைபெறும் வசதிகள் கூட உள்ளன. ஆனால் இவர்கள் தங்கள் கலை, கலாச்சாரம் போன்றவைகளை வளர்ப்தற்கான வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன எனக் கூறுகிறார்கள். எனவே பாடல், நடனம் இவைகளை விடவும் தமது மொழியை வளர்ப்பதற்கு உதவிகள் வேண்டும் என்கின்றனர். தாய்மொழியில் குழந்தை புலமை பெற்றால் அது அந்தக் குழந்தையின் குடும்பத்திற்கும், அக்குழந்தை வாழும் நாட்டிற்கும் மிகுந்த நன்மை பயக்கும் என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. இவர்களின் தாய்மொழியைக் கற்பதும் அவ்வளவு எளிதான விடயமல்ல ஏனென்றால் இவர்களது தாய் மொழியில் மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன.
நாங்கள் இவர்களைச் சந்திப்பதற்காக சென்றபோது பார்வையாளர்கள் வரிசையில் அமர்வதற்காக தனது நடை வண்டியோடு உள்ளே நுழைந்த 77 வயதான ஜெர்மன் முதியவர் திரு. ரெய்ன்ஹோல்ட் மான்ஹொப் (Reinhold Mahnkopp) அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர் மௌடலேனன்ஹொவ் (Magdalenenhof) முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார். அத்துடன் மேற்படி முதியோர் இல்லத்தின் நிர்வாகக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். இவர் கூறுகிறார் "எனது ஆர்வம் முழுவதும் இவர்களுடன்தான்; இவர்களின் விளையாட்டுக்கள், நடனம் போன்றவற்றை ரசிப்பதுதான் எனது பொழுபோக்கு. தற்போதும் இவர்களின் நடனத்தை ரசிப்பதற்குத்தான் இங்கு வந்துள்ளேன்" என்றார். 
இதேபோல் பார்வையாளர்கள் வரிசையில் இருந்த மரியாள் முதியோர் இல்லத்தின் இயக்குனர் மைக்கல் சக்மான்(Michael Sackmann) அவர்களிடம் பேசியபோது அவர் கூறினார் "ஒரு முதியோர் இல்லம் கூட சமுதாயப் பணிகளை முன்னெடுக்க முடியும். தமிழ்ப் பிள்ளைகள் தமது கலை மற்றும் கலாச்சரத்தை வளர்ப்பதற்கு எமது முதியோர் இல்லமும் உதவ முடியும். விருந்தினர்கள் வராத வீடும் ஒரு வீடா? ஒரு வீடு என்பது எப்போதும் விருந்தினர்களின் வருகையை எதிர்பார்த்துத் திறந்தே இருக்க வேண்டும். விருந்தினர்கள் சந்திப்பால் வீட்டில் இருப்பவர்களுக்கும் விருந்தினருக்கும் இடையில் நட்புப் பிணைப்பும், புன்னகை அலையும் ஏற்படுகிறது. இவ்வாறு இருக்கையில் விருந்தாளிகளாக வரும் குழந்தைகளை யாராவது வரவேண்டாம் எனக் கூறுவார்களா? எனக் கேள்வி எழுப்பினார். 
இங்கு வருகை தந்த பெற்றோர்களில் இலங்கையில் இருந்து வன்முறைகளால் பாதிக்கப்பட்டு ஜெர்மனியில் அகதியாக அடைக்கலம் புகுந்த செல்லத்தம்பி சிவகுமார் என்பவரிடம் பேசினோம். தான் எத்தகைய சூழ்நிலையில், எவ்வாறு ஜேர்மனியில் தஞ்சம் புக வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை விபரித்த சிவகுமார் தான் இந்து சமயத்தைச் சேர்ந்தவர் என்றும் தனது மனைவியும் 3 பிள்ளைகளும் கத்தோலிக்கர் என 'வித்தியாசமான கலவை' கொண்டது தன் குடும்பம் என்றும் கூறினார். அவர் வசித்து வரும் ஹில்டெஸ்ஹைம்(Hildesheim) நகரத்தில் 20 தமிழ்க் குடுமபங்கள் வசித்து வருவதாகவும் அவர்களில் ஆறு குடும்பங்கள் மட்டுமே கத்தோலிக்கர் எனவும் ஏனையோர் இந்துக்களாக இருப்பினும் கிருஸ்துமஸ், ஆங்கிலப் புதுவருடம் போன்றவற்றை இரு சமயத்தவரும் பொதுவாகக் கொண்டாடி மகிழ்வதாகவும் கூறுகிறார்.
மேலும் இங்கு வாழும் கிறீஸ்தவ தமிழ் மக்களுக்காக மாதத்தில் ஒரு தடவை தமிழில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப் படுகிறது என்றும் கூறினார். அவரது வீட்டிற்கும் சென்றோம். அங்கு அவரது மனைவி கத்தரின் அவர்கள் வழிபாடு நடத்துவதற்காக ஒரு மரியாள் பலிபீடத்தை அமைத்திருப்பதைக் கண்டோம். அப்பலிபீடத்தில் கன்னி மரியாள் ஒரு சில மலர்களாலும், சில மெழுகு வர்த்திகளாலும் அழகுற அலங்கரிக்கப் பட்டிருந்தார். இந்து மதக் கோயில்களையும், வழிபாட்டு முறைகளையும் அக்காட்சி எமக்கு நினைவூட்டியது.


இவரது குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் மகன் என மூன்று பிள்ளைகள். மகனின் பெயர் கௌசிகன் மற்றும் பெண் பிள்ளைகளின் பெயர்கள் முறையே கரீனா மற்றும் கவீனா ஆகும். ஒரு பெண் கதீட்ரல் பாடகர் குழுவில் பாடிக்கொண்டிருக்கிறார். மகன் கௌசிகன் சிவகுமார் என்பவர் அகஸ்டின் கத்தோலிக்க பள்ளியில் திறமையாகப் பயின்று வருவது தந்தைக்குப் பெருமை ஆகும். அவர் இல்லையெனில் சமூகத்தில் ஒருங்கிணைவது சிரமமாக இருந்திருக்கும் எனப் பெற்றோர் நம்புகின்றனர்.  இலங்கையில் ஒரு பயிற்றப்பட்ட தாதியாகப் பணி புரிந்த சிவகுமார் ஜெர்மனியில் தற்போது ஒரு 'சமையலறை உதவியாளர்'.இருப்பினும் "வாழ்க்கை நன்றாகவே உள்ளது" என்கிறார். "எனது தகுதி இந்நாட்டில் அங்கீகரிக்கப் பட்டிருந்தால் நான் இன்னும் வாழ்வில் உயர்ந்திருப்பேன்" என்று கூறும் அவரது பேச்சில் இனம்புரியாத ஏக்கம் சூழ்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.அவரது குழந்தைகள் மிகவும் சரளமாக ஜெர்மன் மொழியைப் பேசுகின்றனர். அவரால் எம்மோடு ஜெர்மன் மொழியைச் சரளமாகப் பேச முடியவில்லை. அவரது முன்னேற்றத்திற்கு மொழி ஒரு பெரும் தடையாக உள்ளதை உணர முடிகிறது.
அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவப் பணியில் உள்ள திருமதி. எரிக்கா முல்லர் (Erika Müller) என்பவருடனும் பேசினோம். "இவர்கள் வர்ணத் தோல் கொண்டவர்கள் தான் ஆனால் எனது விருப்பத்திற்குரிய மக்கள்". "உங்கள் நிறம் எதுவாகவும் இருக்கட்டும். ஆனால் நீங்கள் எங்களில் ஒருவர்" என்றார் மிகுந்த வாஞ்சையுடன்.
"இப்போது தமிழர்கள் தாய் நாட்டிற்கு உதவ வேண்டும்"  
எவரும் தங்கள் தாயகத்தை மறக்கக் கூடாது. இலங்கையில் துப்பாக்கிகளின் சத்தம் ஓய்ந்து, உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளே ஆகின்றன.  போரின்  விளைவுகளை தமிழர் பகுதிகளில் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.. இலங்கை வடகிழக்கு பகுதியில் வறுமை நிலவுகிறது, யுத்தத்தின் போது பெற்றோர்களை இழந்த குழந்தைகள்ஏராளம், பல பேர் காயமுற்றனர்.பலர் கொல்லப் பட்டனர்.போரின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை.
"இப்போது ஹில்டஸ்ஹெய்ம்
(Hildesheim) நகரத்தில் வாழும் தமிழர்கள் இலங்கையில் உள்ள தங்கள் நாட்டு மக்களுக்கு குறிப்பாகஆதரவு அற்ற  குழந்தைகளுக்கு உதவ விரும்புகின்றனர்" என்கிறார் உதவும் குழுவின் தொடர்பு அதிகாரியாகிய எரிக்கா முல்லர்(Erika Müller) என்பவர். இலங்கையில் நிலைமை மாறியுள்ளது. இலங்கையில் துன்பப் படுபவர்களுக்கு இங்குள்ள தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவுவதற்கு ஒரு தமிழ் கலாச்சார சங்கம் உருவாக்க நாங்கள் முயல்கிறோம் என்றார். இதற்குரிய கட்டமைப்பை நாங்கள் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்படுத்தப்படும் அமைப்பு ஜெர்மானியச் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இருக்க வேண்டும் அத்துடன் அது கணக்கு, வழக்குகளை திறமையாகப் பேணும் திறமை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இயங்கும் ஒரு அமைப்பு மிகவும் சிறப்பாக இலங்கை மக்களுக்கு உதவ முடியும் எனத் தனது நம்பிக்கையினை வெளியிட்டார்.
நன்றி:KirchenZeitung 20. januar 2013

3 கருத்துகள்:

seelan சொன்னது…

I am happy to reading.

Balan சொன்னது…

Thanks for Anthimaalai.

Seetha சொன்னது…

Following like this help to people. Thanks Thasan.

கருத்துரையிடுக