சனி, நவம்பர் 19, 2011

தாரமும் குருவும் - பகுதி 5.2

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
 அல்லைப்பிட்டி 1977
இத்தொடரில் இரண்டு வாரங்களுக்கு முன்பாக 'அலைப்பிட்டி', 'மண்கும்பான்' ஆகிய இரு கிராமங்களின் மணல் வளத்தை யாழ்ப்பாணத்திலிருந்து வந்த மணல் வியாபாரிகள் கவர்ந்து சென்றதாக எழுதியிருந்தேன். அவ்வாறு அவர்கள் இக் கிராமங்களின் மணல் வளத்தைக் களவாடிச் சென்றபோது அவர்களுக்குத் தெரியாது இத்துரோகச் செயலின் மூலம் இவ்விரு கிராம மக்களின் எதிர்காலமே பாழாக்கப் படுகிறது என்ற விடயம். பகலில் கந்தையாத் தாத்தாவின் காணியில் அவரது அனுமதியுடன் அவருக்குப் பணம் கொடுத்த பின்னர் மணலை ஏற்றிச் சென்ற இந்த மணல் திருடர்கள் இரவில் பொன்னையாத் தாத்தாவின் காணியில் அவரது அனுமதி இல்லாமலும், அவருக்குப் பணம் தராமலும் மணலை ஏற்றினர் என்று முன்பு ஒரு தடவை குறிப்பிட்டேன் அல்லவா? ஊர் மக்கள் இது ஒரு 'மணல் திருட்டு' என்று மட்டும் நினைத்து வாளாவிருந்து விட்டனர். ஆனால் இதன்மூலம் அல்லைப்பிட்டி, மண்கும்பான் கிராம மக்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்று அப்போது யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. கந்தையா, பொன்னையாத் தாத்தாக்களைப் பொறுத்தவரை ஒரு காணியில் இருந்து மணல் ஏற்றப் பட்டால், அடுத்த ஆண்டு ஆரம்பிப்பதற்கு முன்பாக அதே இடத்தில் மணல் மீண்டும் விளைந்து விடும் (உருவாகி விடும்) என்பது அந்த அப்பாவி மனிதர்களின் நம்பிக்கை. இலங்கை ஆங்கிலேய ஆட்சிக்குள் இருந்த காலத்தில் பிறந்த, பாடசாலையில் ஓரிரண்டு ஆண்டுகள் மட்டுமே கல்வி கற்ற அவர்களுக்கு ஒரு 50 கிராம் எடையுள்ள கல்லானது சிறு சிறு துண்டுகளாக உடைந்து மணலாக மாறுவதற்கு ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும் என்ற அறிவியல் உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லையே!
அதே போல் யாழ்ப்பாணத்தில் அல்லைப்பிட்டி மண்ணுக்கு(மணலுக்கு) மிகவும் மவுசு(மதிப்பு) உள்ளது என்பதைக் கண்டுகொண்ட 'மணல்' வியாபாரிகளும் என்ன விலை கொடுத்தேனும் அல்லைப்பிட்டி, மண்கும்பான் மணலை வாங்கிக் காசு சம்பாதிப்பதில் குறியாக இருந்தனர். அவர்கள் உருவாக்கிய மூட நம்பிக்கைகளில் ஒன்றுதான் 'மணல்' என்பது அள்ள, அள்ள குறையாத, வெட்ட, வெட்ட விளைகின்ற ஒரு 'இயற்கை வளம்' என்பது. அவர்களை மூடர்கள் என்பதா? ஒரு சில நூறு ரூபாய்களுக்காக தமது மண் வளத்தை விற்ற அப்பாவிக் காணி உரிமையாளர்களை 'மூடர்கள்' என்பதா?
தீவகக் கிராமங்களிலேயே 'அல்லைப்பிட்டி' மற்றும் 'மண்கும்பான்' ஆகிய கிராமங்களுக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. அதாவது இவ்விரு கிராமங்களிலும்தான் குடி தண்ணீர்க் கிணறுகள் அதிகம். அல்லைப்பிட்டியின் அயல் கிராமமாகிய 'மண்டைதீவாக' இருக்கட்டும், மண்கும்பான் கிராமத்திற்கு அடுத்த படியாக வரும் வேலணை தொடக்கம் ஊர்காவற்றுறை வரையிலான சிறு பட்டினங்கள் வரை பெரும்பாலான கிணறுகளில் 'உவர் நீர்தான்' கிடைக்கும் அல்லைப்பிட்டியிலும், மண்கும்பானிலும் நன்னீர்க் கிணறுகளுக்குப்(குடி தண்ணீர்க் கிணறுகள்) பஞ்சமேயில்லை என்று கூறும் அளவுக்குக் 'குடி தண்ணீர்ப் பஞ்சம்' இல்லாத கிராமங்களாக இவ்விரு கிராமங்களும் 1970 கள் வரையில் திகழ்ந்தன. அத்துடன் இக்கிராமங்களில் ஏனைய தீவகக் கிராமங்களைக் காட்டிலும் அதிகமாக தோட்டக் காணிகளில் காய்கறிகள் பயிர் செய்யப் பட்டன. இதற்கும் அக்கிராமங்களின் நீர் வளமே காரணமாகும். ஏனைய தீவகக் கிராமங்களில் உள்ள தோட்டங்களில் அதிக அளவில் 'புகையிலை' பயிர் செய்யப் பட்டது. ஆனால் அல்லைப்பிட்டியிலும்,   மண்கும்பானிலும் புகையிலையுடன் கூடவே மிளகாய், வெங்காயம், தக்காளி, வெண்டிக்காய்(வெண்டைக்காய்), கத்தரிக்காய், பயிற்றங்காய், பாகற்காய், புடலங்காய் முதலான காய்கறிவகைகள் பயிரிடப் பட்டன. இதற்குக் காரணம் இக்கிராமங்களில் தோட்டக் காணிகளில் இருந்த நன்னீர் வளம் ஆகும்.
அது மாத்திரமன்றி தீவகத்தின் பெரும்பாலான கிராமங்களில் மண்ணுக்கு அடியில் இருந்த உவர் நீர் செறிவு காரணமாக அங்கு பனை, தென்னை மரங்களில் ஓலைகள் காற்பங்கு கருகிய நிலையில் காணப்படும். இதனை கிராமத்துப் பாஷையில் "உப்புக்காற்றினால் பனையும், தென்னையும் 'சோடை' அடித்துக் கிடக்கிறது" என்று கூறுவார்கள். ஆனால் அல்லைப்பிட்டி, மண்கும்பான் கிராமங்களில் இந்நிலை மிகவும் குறைவு. இவ்விரு கிராமங்களிலும் பனை, தென்னை ஆகிய பயன்தரு விருட்சங்கள் எப்போதும் பசுமையாக, செழிப்பாகக் காணப்படும். இதற்கும் நன்னீர் ஊற்றே காரணம் என்பது நான் கூறி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. இதுபோல் இவ்விரு கிராமங்களிலும் குடியிருப்புக் காணிகளில் ஒரு நந்தவனத்தையோ,  பழ மரத்தையோ நட்டு வளர்த்தல் மிகவும் இலகுவாகும். இவ்விரு கிராமங்களிலும் பெரும்பாலான குடியிருப்புக் காணிகளில் மாமரங்கள் நின்றன. பெரும்பாலான குடியிருப்புக் காணிகளில் கிணற்றிற்கு அருகில் வாழைகள் நின்றன. அல்லைப்பிட்டியில் ஒரு வீட்டில் பாக்கு மரம்(கமுக மரம்) நின்றதையும், இன்னொரு வீட்டுக் காணியில் வெற்றிலைச் செடி நின்றதையும் நான் அறிவேன். தூய்மையான குடி தண்ணீர் இல்லாத நிலங்களில் இவ்விரு பயிர்களும் வளர மாட்டா என்பதை விவசாயிகள் அறிவார்கள். இவை எல்லாவற்றிகும் மேலாக தனது தோட்டக் காணியில் பரீட்சார்த்த முயற்சியாக 'திராட்சைத் தோட்டத்தை' உருவாக்கி அதில் வெற்றி கண்ட சாதனையாளரான 'மண்கும்பானைச்' சேர்ந்த ஒரு விவசாயியையும் நான் அறிவேன்.
இவ்வாறு 1970 கள் வரையில் செழிப்போடு திகழ்ந்த இவ்விரு கிராமங்களின் மக்களுக்கும் 'மணல் திருடர்களின்' வருகையுடனும் 'மணல் வியாபாரத்துடனும்' கெட்ட காலம் ஆரம்பித்தது. அல்லைப்பிட்டி, மண்கும்பான் கிராமங்களின் மணல் வளத்தை மாற்றான் அகழ்ந்து செல்ல, கிராமத்தின் கிணறுகளில் நீர்வளம் குன்றி, மெல்ல, மெல்ல ஒவ்வொரு கிணற்று நீரும் உப்புக் கரிக்க ஆரம்பித்தது.
(தொடரும்)

4 கருத்துகள்:

Seelan சொன்னது…

Very good All the best and thanks your time.

vinothiny pathmanathan dk சொன்னது…

நன்னீர் என்பது எல்லா ஊர்களுக்கும் கிடைத்துவிடுவதில்லை .உதாரணமாக என் ஊரிலிருந்து தண்ணீர் எடுக்க அரைக்கட்டை செல்ல வேண்டும் .நல்ல தண்ணீர் எடுப்பது என்பது எங்கள் ஊர் பெண்களுக்கு உள்ள அன்றாட வேலைப்பளுவில் ஒன்றாகவே இருந்து கொண்டுவருகிறது.அதுவும் இப்போது அநேகமான வீடுகளில் வயோதிபர்களே தனித்து வாழ்ந்து வருவதனால் இந்த நல்ல தண்ணீர் பிரச்சனை ஒரு சவாலாகக் கூட மாறி இருக்கிறது.. அப்படிப்பட்ட வளங்கள் நிறைந்திருந்த உங்கள் ஊர்களின் வளங்களை களவாடிச் சென்று இன்றைய அந்த ஊர்களின் நிலைக்கு காரணமாக இருப்பவர்களை நினைத்தால் வேதனை தான் மிஞ்சும்.எனவே உங்கள் ஆக்கம் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள் .

இ. சொ. லிங்கதாசன், டென்மார்க். சொன்னது…

உங்கள் இருவரது கருத்துக்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள். எனது மனதில் பதிந்து வைத்த சில தகவல்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மன நிறைவு ஏற்படுகிறது. அதேபோல் உங்களைப் போன்றவர்கள் நேரத்தைச் செலவு செய்து கருத்துரைகள் எழுதும்போது இன்னும் எழுத வேண்டும் என்ற உற்சாகம் பிறக்கிறது.இத்தொடரின் ஒரு சில பகுதிகள் மட்டுமே உங்களுக்கு 'சலிப்பை' ஏற்படுத்தும். உங்கள் ஆர்வம்+தேடல் ஆகியவை உயிர்ப்புடன் இருக்கும் பட்சத்தில் இத்தொடர் உங்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தாமல் ஒரு கிராமத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
பிரபஞ்ச சக்திகளின் அருள் உங்களுக்கு நிறைவாகக் கிடைக்கட்டும்.

Malar சொன்னது…

All the best to anthimaalai

கருத்துரையிடுக