வெள்ளி, அக்டோபர் 29, 2010

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 6


உலகில் எந்தப் பொருள் அருமைத் தன்மையாகக் கிடைக்கிறதோ, அப்பொருள் மிகவும் விலைகூடியதாக இருப்பது இயற்கைதானே? தங்கத்தைவிட மிக அருமையாகக் கிடைக்கும், 'பிளாட்டினத்தின்' விலை அதிகம்தானே? என்று தனது கருத்திற்கு வலுச் சேர்த்தார் திரு.பழனிச்சாமி அவர்கள்.
ஆம், நீங்கள் சொல்வது மிகவும் சரி, தங்கத்தைவிட மிக அருமையாக
கிடைப்பதால்தான் 'பிளாட்டினத்தின்' விலை தங்கத்தைவிட மிக அதிகம்
என்று, ஊரில் பாடசாலையில் படிக்கும்போது எங்கள் 'விஞ்ஞான ஆசிரியர்' கூறி இருக்கிறார், அது மட்டுமல்லாமல், நான் டென்மார்க் நாட்டிற்கு வந்த புதிதில், பெரும்பாலான டேனிஷ் பெண்களின் கழுத்திலோ, காதிலோ தங்க நகைகள் இல்லாததைக் கண்டு ஆச்சரியமடைந்தேன், பின்பு விசாரித்தபின்புதான் தெரியவந்தது, பெரும்பாலான பெண்கள் வெள்ளி நகைகளையும், குறிப்பிட்ட வீதத்தினர் இங்குள்ள தரம்குறைந்த(18 கரட்) தங்கத்தையும், பணக்காரப் பெண்கள் 'பிளாட்டினத்தாலான' நகைகளையும் அணிகிறார்கள் என்று" எனது அனுபவம், மற்றும் ஞாபகசக்தியுள்ள விடை அவர்க்குத் திருப்தியளித்ததுபோல் தோன்றினாலும், அவர் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்,


"நாங்கள் செட்டிநாட்டு உணவு வகைகளிலிருந்து அரிசிக்கு வந்தோம், இப்போது அரிசியிலிருந்து எங்கள் உரையாடல் நகைகளுக்குத் திரும்புகிறது, அரிசி பற்றிய உங்கள் சந்தேகம் அநேகமாகத் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்" என்றார் ஓர் பெருமிதத்துடன்.
ஆனால் நானோ அவரை மேலும் பேசவைக்க வேண்டும் என்ற ஆவலால் எனது புதிய சந்தேகமொன்றைக் கேள்வியாகத் தொடுத்தேன்.

"இல்லையில்லை அரிசி பற்றி எனக்கு இன்னும் சில சந்தேகங்கள் உள்ளன, தாங்கள் தயவுசெய்து அவற்றைத் தீர்த்து வைக்கவேண்டும்" என்றேன். "சரி கேளுங்கள் முடிந்தால் தீர்த்து வைக்கிறேன்" என்றார். "சரி கவிஞர்கள் பாடல்கள் எழுதும்போது தனியே 'சோறு' என்று எழுதாமல் ஏன் குறிப்பிட்டு(specific) 'நெல்லுச் சோறு' என்று எழுதுகிறார்கள்? உதாரணமாக; கண்ணதாசன் அவர்கள் "நித்தம் நித்தம் நெல்லுச்சோறு, நெய்மணக்கும் கத்திரிக்கா" என்றும், கங்கை அமரன் அவர்கள் "நிதமும் நெல்லுச் சோறாக்கி, நெத்திலி மீனும் கொழம்பாக்கி, மச்சான் வந்தா ஆக்கிக்கொடுப்பேன்" என்று எழுதும் போதும், 'நெல்லுச்சோறு' என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதைக் கவனித்தீர்களா? நெல்லுச்சோறு என்ற வார்த்தை 'சந்தத்திற்காக அல்லது எதுகை மோனைக்காக' பயன்படுத்தப் பட்டுள்ளதா? "எங்களூரில்(இலங்கையில்) நெல்லுச்சோறு என்ற பதம் உபயோகிக்கப் படுவதில்லை, ஏனென்றால் நெல்லில் இருந்து உமியை நீக்கியவுடன் கிடைக்கும் அரிசியில் பொங்கல்(ஈழத்தில் 'புக்கை' என்றும் அழைப்பர்), அல்லது கஞ்சி மட்டுமே சமைப்பார்கள்" என்று கேள்விக்குமேல் கேள்விகளைக் கேட்டு எனது சந்தேகங்களை அவர்முன் சமர்ப்பித்தேன்.
நீங்கள் கேட்டது மிகவும் பொருத்தமான, நியாயமான கேள்விகள், இதற்கு பதிலளிப்பதற்கு ஈழத்தவர்கள், மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணவுகளில் 'தானியங்களின்' முக்கியத்துவம் பற்றிக் கூற வேண்டும்" என்றார்...

(அடுத்த வாரமும் தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக