வெள்ளி, அக்டோபர் 15, 2010

மண்ணும், மரமும், மனிதனும் - அத்தியாயம் 3

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
எமது கிழக்குச் சீமையின் நாயகி தன் அண்ணனுக்கும், மண்ணுக்கும், மாமரத்துக்கும் விடைகூறி 'வாழ்க்கைப்பட்டு' புகுந்த வீட்டிற்குச் சென்ற நெகிழ்வான காட்சியைக் கடந்த வாரம் பார்த்தோம். அதில் மண்ணுக்கு அடுத்த படியாக அவள் 'மாமரத்திற்கு' விடையளித்தமைக்கான காரணங்களையும் சிறிது ஆய்வு செய்வோம். முக்கனிகளில் ஒன்று 'மாம்பழம்', தமிழ் மக்களின் வீடுகளுக்கருகில் அல்லது காணிகளில் மண் வளமுள்ள பெரும்பாலான நிலங்களில் இந்த மாமரம், பரிவோடு வளர்க்கப்படுகிறது.(தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த சில மரங்களைப் பற்றி எதிர் வரும் அத்தியாயங்களில் பார்க்கவுள்ளோம்) இம்முக்கனிகளில் வாழையானது, கிணற்றுக்கு அருகில் அல்லது தோட்டங்களில் வளர்க்கப் படுவது. பலாமரமானது தமிழ் மக்கள் வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் வளருகின்ற ஒரு மரமல்ல. ஆகவே மாமரம் மட்டுமே எந்த மண்ணாக இருப்பினும், எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரும் ஒரு கனிதரும் மரமாகும். 
இம்மாமரத்தைத் தமிழ் மக்கள், தாம் குடியிருக்கும் வீட்டிற்கு மிக அருகிலேயே தமது செல்லப் பிராணிகளுக்கு இணையாகப் பாசத்தோடு வளர்ப்பர்(இதில் நான் குறிப்பிடுவது புலம்பெயர்ந்த தமிழ் மக்களையல்ல என்பதை அறிவீர்கள்) இவ்வாறு மாமரம் வீட்டிற்கு அருகில் வளருகின்ற சூழலில், வளருகின்ற குழந்தையானது, தான் வளர்கின்ற காலப்பகுதியில் அம்மரத்தோடு ஒரு பாச உணர்ச்சியை வளர்த்துக் கொள்கின்றது, மாமரத்தின் ஒவ்வொரு பருவகாலமும் அக்குழந்தையானது ஆண்குழந்தையாக இருப்பினும், பெண்குழந்தையாக இருப்பினும் ரசிக்கின்ற அல்லது மகிழ்கின்ற பருவமாக அமைகிறது. சாதாரண நாட்களில் குழந்தையானது 'ஊஞ்சல்' கட்டி ஆட உகந்த மரமாக' இம்மாமரமே விளங்குகிறது. அதே மாமரம் பூக்கின்ற காலத்தில் சிறந்த நறுமணத்தினால் அயலிலுள்ள அத்தனை பேருக்கும் அறிவித்தல் விடுக்கிறது, "இன்னும் சில நாட்களில் உங்களுக்கு நான் என் 'கைமாறாகக்' காய்கள் தரவுள்ளேன்". என்கிறது.

மாம்பூவின் மணத்தில், மயங்கிநிற்கும் பிள்ளைக்குப் பெற்றோர்கள் கூறுகின்றனர் "மாமரம் காய்க்கப் போகிறது, மாமரத்தில் ஏறி விளையாடுவதைக் குறைத்துக்கொள், மாம்பிஞ்சுகளைப் பறிக்கக் கூடாது, அது மாமரத்திற்கு வலிக்கும்" என்றெல்லாம் கூறி மாமரத்தை ஒரு உயிருள்ள, உணர்வுள்ள பிராணி என்பது போன்றதொரு பிம்பத்தைக் குழந்தையின் மனதில் ஏற்படுத்தி விடுகின்றனர். மாமரத்திற்கு வலிக்கும் என்பதை உணர்கின்ற அதே குழந்தை, மாம்பிஞ்சுகளைப் பறித்தல் கூடாது என்கிற கட்டளையை உதாசீனம் செய்து விடுகிறது.


(அடுத்த வாரமும் தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக