புதன், செப்டம்பர் 22, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ் - சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 1




ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 
"அமெரிக்காவைக் கண்டுபிடித்த காவிய நாயகன்",  "இந்தியாவை மேற்குப்பக்கக் கடலாலும் சென்றடையலாம் என்று கண்டுபிடித்த தலைசிறந்த சிந்தனையாளன்", "அமெரிக்கா என்ற தலைசிறந்த தேசம் உருவாகக் காரணமான சிற்பி",  "ஐரோப்பியர்களைத் தலைநிமிர வைத்த போற்றுதலுக்குரிய தலைசிறந்த கடலோடி" இவ்வாறு நூற்றுக் கணக்கில் நீண்டுகொண்டே செல்கிறது அவரைப்பற்றிய புகழாரம். சரி இவ்வாறெல்லாம் புகழ்மாலை சூட்டப்படும் அந்தக் கொலம்பஸ் யார்? இத்தகைய புகழைப் பெற அவர் செய்த சாதனைதான் என்ன? அவரது வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?


பதினான்காம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பியர்களுடைய 'பொற்காலம்' ஆரம்பமாகிறது என்று சொல்லலாம். ஏனெனில் 14 ஆம் நூற்றாண்டுவரை சிறு,சிறு தொழில்களும், தமது அண்டை நாடுகளுடன் சிறு,சிறு யுத்தங்களும் செய்துகொண்டு வாழ்ந்த ஐரோப்பியர்கள், 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் நாடு காண் கடல் பயணங்களையும், நாடுபிடிக்கும் கடல் பயணங்களையும் ஆரம்பித்தனர்.


நம் கட்டுரையின் நாயகன் கிறிஸ்தோபர் கொலம்பஸ் 25 ஆகஸ்ட் தொடங்கி 31 ஒக்டோபருக்கு இடைப்பட்ட காலத்தில் 1451 ஆம் ஆண்டில் அப்போதைய ஜினோவா குடியரசில் (தற்போதைய இத்தாலியின் ஒரு நகரம்) பிறந்தார். (இவரது பிறந்த திகதி பற்றிய ஊகத்தின் அடிப்படையிலான பதிவுகளே கிடைக்கப் பெற்றுள்ளது) இவர் பிறந்த ஆண்டு பற்றி மட்டுமே சரியான வரலாற்றுத் தகவல்கள் கிடைத்துள்ளன. கொலம்பஸின் தந்தையாரின் பெயர் டொமினிக்கோ கொலம்போ என்பதாகும், அவர் ஒரு நெசவுத் தொழிலாளியாவார். தாயாரின் பெயர் சுசானா போன்டனா ரோசா என்பதாகும். இவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். இவர்களில் மூத்தவரே கொலம்பஸ் ஆவார்.


கொலம்பஸ் தனது தாய் மொழியைக் கற்றதுமில்லை, பேசியதுமில்லை, பள்ளிப் படிப்பிலும் போதிய ஆர்வம் காட்டியதுமில்லை, ஆனால் அவர் தனது 10 ஆவது வயதில் செய்த ஒரு சாகசமே அவரது எதிர்காலச் சாதனைக்குக் கட்டியம் கூறியது.   


(அடுத்த வாரமும் தொடரும்)  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக