செவ்வாய், செப்டம்பர் 23, 2014

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
 

தன்மானம், தன்னறிவு, தன்னடக்கம் ஆகிய மூன்று பண்புகளும் வெற்றியாளனின் வாழ்வில் தலை சிறந்த ஆற்றல்கள்.

திங்கள், செப்டம்பர் 22, 2014

'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்

ஆக்கம்:ம.திருவள்ளுவர், தேவகோட்டை, சிவகங்கை, தமிழ்நாடு
பாகம் 10.(கடந்த 15.09.2014 அன்று உங்கள் அந்திமாலையில் வெளியாகிய பதிவின் தொடர்ச்சி)
 
இப்படியாக இந்த நான்கு நிலைகளைக் கொண்ட வட்டத்தை, நாம் எடுத்துக்கொண்ட இலக்கு நிறைவேறும் வரை அடிக்கடி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் சரிபார்த்து, நிலைமை சரிசெய்யப்பட வேண்டும். அப்படி இடைவிடாமல் பரிசோதனை செய்து கொண்டால் திட்டத்திற்கும் – செயல்பாட்டிற்கும் இடைவெளி நேராமல். குறித்தபடி இலக்குகளை எட்ட முடியும்…. அது தானே நமது நோக்கமும் கூட.
 
ஊக்கத்திலிருந்து ஞானத்திற்கு
டீக்கடை பெஞ்ச்சிலும் சரி பாராளுமன்றத்திலும் சரி பேசப்படும் செய்திகளை கூர்ந்து நோக்கினால் ஒன்று தெளிவாகப் புலப்படும். நம் நாட்டின் நிலவரம் சரியில்லை என்பதுதான் அது! ஒரு புறம் அரசியல்வாதிகளின் போக்கு சரியில்லை என்கிறார்கள். மறுபுறம் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சரியில்லை என்கிறார்கள். மற்றொருபுறம் பொதுமக்கள் விழிப்புணர்வின்றி செயல்படுவதாக குற்றம் சுமத்துகிறார்கள். மேலும் பல விவாத மேடைகளில் பெற்றோர்களும் பிள்ளைகளும் குற்றம் சுமத்தப்படுகிறார்கள். இளைஞர்களும் யுவதிகளும் பழிக்கப்படுகிறார்கள்.

ஒட்டு மொத்தமாகச் சொல்வதென்றால் நம்மை நாமே குறைகூறிக் கொண்டிருக்கின்றோம்! என்னுடைய கேள்வி என்னவென்றால் “நாம் எல்லோருக்குமே குறைகள் தெளிவாகத் தென்படுகின்ற போதும் நம்மால் ஏன் அவற்றை நிறை செய்ய முடியவில்லை?” என்பதுதான்!

மகான்களும் பெரிய தலைவர்களும் காலம்காலமாக சரியான செய்திகளை நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இருந்தும் நம் மக்களின் வாழ்வில் ஏன் விரும்பத்தகுந்த மாற்றங்கள் விரைவாக நிகழவில்லை என்பது நியாயமான ஆதங்கமாகவே இருந்து வருகிறது.

இதற்கான காரணத்தையும், நாம் செய்ய வேண்டிய காரியத்தையும் இந்த படிநிலைகள் தெளிவாக்கவிருக்கின்றன. வாசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றம் காண்பீர்கள்.

மாற்றத்தை விரும்பும் யாரும் கீழ்க்காணும் நான்கு நிலைகளை கடந்தே ஆகவேண்டும். இந்த நிலைகளை காணாதவர்களால் – கடக்காதவர்களால், மாற்றத்தை காண முடியாது. ஆனால் ஒருவர் எவ்வளவு விரைவில் இந்த நான்கு நிலைகளுக்கு ஆட்படுகிறாரோ, அத்தனை விரைவில் அவரது ஏற்றம் தரும் மாற்றம் நிகழ்ந்தே தீரும்.

அந்த நான்கு நிலைகள்:

1. அறிதல் 2. புரிதல் 3. உணர்தல் 4. தெளிதல்

முதலில் அறிதலைப் பார்ப்போம்

எந்த ஒரு புதிய தகவலோ கருத்தோ செய்தியோ பொருளோ ஒருவருக்கு வெளியிலிருந்துதான் முதலில் அறிமுகமாகின்றது. ஒரு மனிதர் மூலமாகவோ. காட்சி மூலமாகவோ. சம்பவத்தின் முலமாகவோ. செய்தித்தாள், புத்தகம், தொலைக்காட்சி, கடிதம், இணையதளம், வானொலி, கருத்தரங்கம் என எண்ணற்ற ஊடகங்களின் வாயிலாகவே ஒன்றை நாம் அறிய நேருகிறது. சுருக்கமாகச் சொன்னால் அறிதல் என்பது வெளியிலிருந்து பெறப்படுவது. இப்படி வெளியிலிருந்து பெறப்படும் ஒன்றால் மனித மனதில் மாறுதல் உடனடியாக நிகழ்ந்துவிடுவதில்லை. ஏனென்றால் யாரோ சொன்னதலிருந்தும் எங்கோ கேட்டதிலிருந்தும் நமக்குள் ஏற்படும் தாக்கங்கள் அழுத்தமாகவோ ஆழமாகவோ பதிவதில்லை. எனவே இந்நிலையில் மாற்றங்கள் நிகழ்வது அரிதுÐ

இரண்டாம் படியாகிய “புரிதலை” எடுத்துக் கொள்வோம்.

மேற்கண்ட பல வழிகளின் மூலம் நாம் பெற்ற அறிவை நமக்குள் சுழலவிட்டுச் சிந்தித்துப் பார்ப்பதையே நாம் “புரிதல்” என்கிறோம். “எண்ணிப் பார்த்தல்” என்றும், “யோசித்தல்” என்றும், “அலசி ஆராய்தல்” என்றும், நடைமுறையில் கூறப்படுவதையே “சிந்தித்தல்” என்கிறோம். ஒரு கணிப்பொறியைப் பற்றி நாம் அறிந்து கொண்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த கணிப்பொறி எனக்கு எந்தெந்த வகையில் பயன்படும்? அது இப்போது எனக்கு தேவையா? அதை வாங்கிக் கொள்ள எவ்வளவு பணம் தேவை? அதை வாங்குவதால் உடனடி இலாபம் உண்டா? என சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவதையே “புரிதல்” என்கிறோம்.

சுருக்கமாக சொன்னால் “புரிதல்” என்பது உள்ளுக்குள் நிகழ்வது. ஒரு நபரின் மனதுக்குள் நிகழ்வது. ஒரு மாற்றத்தை உருவாக்குவதில் புரிதல் என்பது இரண்டாம் நிலையை வகிக்கிறது. ஒன்றை அறிந்த நிலையைக் கடந்து, புரிந்த நிலைக்கு வரும் போது ஓரளவு மாற்றங்கள் நிகழக்கூடும். ஆனாலும் மாற்றம் கட்டாயம் நிகழ்ந்துவிடும் என்று சொல்வதற்கு இல்லை. ஏனென்றால் அன்றாட வாழ்வில் எத்தனையோ கருத்துக்களை புரிந்து கொண்டவர்கள் கூட நடைமுறையில் மாறுவதில்லை!

புகைப்பது தவறு புகைப்பதால் புற்று நோய் வரும் சாத்தியக் கூறு அதிகம் என்பதை புரிந்து ஏற்றுக் கொள்பவர்களால் கூட புகைப்பதை நிறுத்த முடிவதில்லை என்பது கண்கூடு. எனவேதான் புரிதலையும் கடந்து, அதற்கு நாம் அடுத்த நிலையை நோக்கி நகர வேண்டும்.

மூன்றாம் படியாகிய “உணர்தல்” பற்றி அறிவோம்.

ஒன்றை அறிந்து கொண்டு அதைப் புரிந்து கொண்ட பின்னர் அதைச் செயல் வடிவில் செய்து பார்த்து, அதனால் கிடைக்கும் அனுபவத்திலிருந்து பெறப்படுவதையே உணர்தல் என்கிறோம்.

சர்க்கரை என்று பிறர் சொல்லக் கேட்பது “அறிதல்” ஆகும். இதை உண்டால் இனிய சுவை கிடைக்கும் என்று சிந்தித்தால் அதை “புரிதல்” என்கிறோம்.

அந்த சர்க்கரையை எடுத்து நாவில் வைத்து ருசித்துப் பார்த்தால் கிடைக்கும் அனுபவத்தையே “உணர்தல்” என்கிறோம். அதே போன்று ஒரு கருத்தை (அ) கோட்பாட்டை நடைமுறைப் படுத்திட அதனால் கிடைக்கும் அனுபவம் நமக்குள் அழுத்தமான பதிவை ஏற்படுத்தும். ஒரு சிலரால் நடைமுறைப்படுத்தி பார்க்காமலே கூட கற்பனையாலேயே அடுத்து வரவிருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு கணிப்பொறியை அறிந்து கொள்வதோடு விட்டுவிடாமல் அதனைப் பற்றிய புரிதலோடு அதை இயக்கத்தைப் பார்த்து அதன் முழுப் பரிமாணத்தையும் அனுபவித்து உணர்ந்து கொள்ளும் போது அது ஏற்படுத்தும் தாக்கம் நிரந்தரமாக இருக்கும். எனவே நமக்குள் உணர்தல் ஏற்பட்டுவிட்டால் அதுவே மிகப்பெரிய உந்துசக்தியாகிவிடும். எனவே மாற்றமானது எளிதில் நடந்துவிடும்.

நான்காவது படியாகிய “தெளிதல்” என்பது ஞானத்தைக் குறிப்பதாகும்.

ஒன்றை மீண்டும் மீண்டும் கற்பனையில் ஆழ்ந்தோ நடைமுறைப் படுத்தியோ நம் அனுபவம் முழுமையானதாகும். இத்தகைய தெளிவு ஏற்படும் போது யானை நமக்கு யானையாகவே தெரியும். அப்படியில்லாமல் ஒருமுறை உணர்ந்த நிலையிலோ (அ) புரிந்த நிலையிலோ (அ) அறிந்து கொண்ட நிலையிலோ நின்றுவிட்டால் யானையின் சில பகுதிகளை மட்டும் பார்த்தவர்களாக இருப்போம். அதுமட்டுமல்ல... வாழ்நாள் முழுவதும் அந்தப் பகுதி மட்டுமே யானை என்றும் அடம் பிடிப்போம். முழுமையைக் காணும் முயற்சியின்றி உண்மையை உணராமலே வாழ்ந்து முடித்துவிடக் கூடும்.

முழுமைபெறாத இத்தகைய நிலையில் மாற்றங்கள் நிகழ்வதில்லை. திருவள்ளுவர், புத்தர், விவேகானந்தர், ஏசுநாதர், நபிகள்நாயகம் போன்ற சான்றோர்களும் காந்தி, ஆப்ரகாம்லிங்கன், மார்டின் லூதர்கிங், காரல் மார்க்ஸ், லெனின், சர்ச்சில் போன்ற உலகம் போற்றும் அரசியல் தலைவர்களும், தாகூர், பாரதியார், வேர்ட்ஸ் வொர்த், ஷெல்லி, கீட்ஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா போன்ற இலக்கிய – தத்துவஞானிகளும், ஐன்ஸ்டீன், நியூட்டன், எடிசன், ஆர்க்கிமிடிஸ், சர்.சி.வி.ராமன், மேரிகியூரி, இராமானுஜம் போன்ற அறிவியல் – கணித மேதைகளும் கொலம்பஸ், வாஸ்கோட காமா போன்ற புவியியல் கண்டுப்பிடிப்பாளர்களும். ஹென்றி போர்டு, ஜி.டி நாயுடு போன்ற தொழில்நுட்ப வர்த்தக மேதைகளும் இத்தகைய தெளிவைப் பெற்றிருந்தார்கள். இன்றும் சிலர் இந்நிலையை (தெளிவு பெற்ற நிலையை) அடைந்திருக்கிறார்கள் என்றாலும் நம்மில் பலர் அறிந்தும், ஆனால் புரியாமலும், புரிந்தும் ஆனால் உணராமலும், உணர்ந்தும் ஆனால் தெளிவு பெறாமலும் பல்வேறு நிலைகளில் இருந்து வருகிறார்கள். எல்லோருமே உயர்ந்த நிலையாகிய தெளிவினை அடைய வேண்டும். அப்போதுதான் மாற்றங்கள் உடனுக்குடன் நிகழும்! உன்னதம் நிலை பெறும்! இந்த நான்கு நிலைகளும் ஒருவரை அறியாமையிலிருந்து ஞானத்தை நோக்கி இட்டுச் செல்வதற்கான நான்கு படிக்கட்டுகள். இதனை உணர்வோம், தெளிவோம், ஏற்றமிகு மாற்றத்தை விரைவில் காண்போம்!
 
(முற்றும்)
 
கடந்த பத்து வாரங்களாக உங்கள் 'அந்திமாலையில்' வெளியாகிய மேற்படி தன்னம்பிக்கை மற்றும் தனி மனித  ஆளுமைத் தொடரரைத் தவறாமல் வாசித்த வாசகர்களுக்கும், ஆதரவு அளித்த அன்புள்ளங்களுக்கும், கருத்திட்டவர்களுக்கும், மேற்படி தொடரை எழுதி எமக்கு ஆதரவு நல்கிய சிந்தனைத் தொடர் எழுத்தாளர் திரு.ம.திருவள்ளுவர் அவர்களுக்கும் அந்திமாலை ஆசிரிய பீடத்தின் உளமார்ந்த நன்றிகள்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் 
வன்கண்ண தோநின் துணை. (1222)
 
பொருள்: மயங்கிய மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் வருந்துகிறாயே, நின் துணையும் என் காதலரைப் போல இரக்கம் இல்லாததோ? 

இன்றைய பழமொழி

மூத்தோர் சொல்
 

சொற்பக் கவலை அதிகம் பேசும்.
பெருங்கவலை மௌனமாக இருக்கும்.

ஞாயிறு, செப்டம்பர் 21, 2014

செல்போன் கதிர்வீச்சில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு!

செல்போன் தொழில் நுட்ப சாதனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் தேவைகள் மட்டும் அல்லாமல் இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தான் போகின்றன என்கின்றது ஆய்வு முடிவுகள். செல்போன்களை எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டாலே பல பாதிப்புகளை தவிர்க்கலாம்.
ஆம்! குழந்தைகள் பெரியவர்களைவிட செல்போன்களை மிக எளிதாக பயன்படுத்துவதை பார்த்து பெருமை கொள்ளும் பெற்றோர்கள் நிச்சயம் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு வெகு அதிகமாக குழந்தைகளை பாதிக்கும்.
முடிந்த வரை லேண்ட்லைனை பயன்படுத்துவது நல்லது என்று தான் சொல்ல வேண்டும். அப்படியே செல்போனை பயன்படுத்தினாலும் முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவது நல்லது. சில கிராமப்புற பகுதிகளில் சரியாக நெட்வொர்க் கிடைப்பதில்லை. இது போன்று சரியாக சிக்னல் கிடைக்காத பகுதிகளில் செல்போன் பயன்படுத்தும் போது, கதிர்வீச்சின் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அதோடு தூங்கும் போது செல்போனை பக்கத்திலேயே வைத்து கொண்டு தூங்குபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். இந்த பழக்கத்தினை ஆரம்ப காலத்திலேயே தவிர்த்து கொள்வது சரியான ஒன்று. மற்றவர்களுக்கு பேசும் போது, எதிர் முனையில் பேசுபவர்கள் அழைப்பை எடுத்த பின், காதில் வைத்து பேசுவது நல்லது. ஏனெனில் பேசும் போது ஏற்படும் கதிர்வீச்சைவிட, ரிங்டோன் போகும் பொழுது 14 மடங்கு அதிகம் கதிரவீச்சுகள் வெளிப்படுகிறது. முக்கியமாக வைப்ரேட் மோடில் செல்போனை வைத்திருப்பதைத் தவிர்க்கவும். இது போன்று வைப்ரேட் மோடில் வைத்து, சட்டை பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் அதிகம் தாக்குகின்றன.
பொதுவாக வலது காதில் வைத்து மொபைல் பேசும் போது மூளை நேரடியாக பாதிக்கும்.இதனால் இடது பக்க காதில் வைத்து பேசினால் இதன் பாதிப்பை குறைக்கலாம்.பயணங்களில் பொழுதுபோக்காக நிறைய பேர் கேம்கள் விளையாடுவது வழக்கம். இப்படி பயணங்களில் உற்றுப் பார்த்து ஒரு வேலையை செய்வதன் மூலம் கண்கள் எளிதாக
பாதிக்கப்படும். இப்படி விளையாட்டாகவும், கவன குறைவாகவும் செய்யும் சில வேலைகளை குறைத்தாலே செல்போன்கள் மூலம் ஏற்படும் பெரிய பாதிப்புகளை ஓரளவு குறைக்க முடியும்.
நன்றி:  thakavalpalakai.blogspot.com

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும் 
வேலைநீ வாழி பொழுது. (1221)

பொருள்: மாலைப் பொழுதே! நீ காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக்காலமே ஆவாய். உண்மையில் நீ மாலைப் பொழுது அல்ல.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
 

பிறர் துன்பத்தைக் கண்டு இரங்குவது மனித இயல்பு. அதை நீக்குவது தெய்வப் பண்பு. நீங்கள் மனிதனாகவே இருப்பதும், தெய்வ நிலை அடைவதும் உங்கள் கையில்.