ஞாயிறு, ஜனவரி 22, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பொருள்அற்றார் பூப்பர் ஒரு கால்; அருள்அற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது. (248)   

பொருள்: பொருளை இழந்தவர் பின்பு ஒரு சமயத்தில் அப்பொருளைப் பெற்றுச் சிறப்படைதல் கூடும். அருளை இழந்தவர் அழிந்தவரேயாவர். அவர்கள் எக்காலத்தும் அந்நிலை விட்டு நீங்கி உயர்வடைதல் இயலாது.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

விதியை மாற்றும் வல்லமை வியர்வைக்கு மட்டுமே உண்டு. உழைக்காமல் உண்பது நம் சொந்த வீட்டிலேயே திருடுவதற்கு ஒப்பானதாகும்.

குளிர் காலத்தில் ஏற்படும் பிரச்சினை

ஆக்கம்:  வினோ ரூபி, சென்னை இந்தியா 
குளிர் காலத்தில் ஏற்படும் காது, மூக்கு, தொண்டை பிரச்னையைத் தவிர்க்க என்ன சாப்பிடலாம் என சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. குளிர் காலத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்த காற்றே இருப்பதால் சுவாச பிரச்சனைகள் இருக்கும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களை சுவாச பிரச்னைகள் எளிதில் தாக்கும். மேலும் சரியான உணவுப்பழக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களையும் குளிர்கால நோய்கள் உடனடியாக தாக்கும். குளிர்காலத்தில் டான்சில் பிரச்னையை உண்டாக்கும் கிருமிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

*எனவே குளிர்ச்சியான உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்க்கவும். சாப்பிடுவதற்கு சிறிது நேரம் முன்பு வெளியில் வைத்திருந்து நன்றாக சுட வைத்து சாப்பிடவும். ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்ஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். பழங்கள் மற்றும் கீரை வகைகளை குறைவாக உணவில் சேர்க்கவும். குளிர் காலத்தில் ரத்தம் உறையும் தன்மை அதிகரிப்பதால் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதுவே சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் வருவதற்கு காரணம்.

*குளிர் காலத்தில் நோய்த்தொற்று ஏற்படும் நபர்கள் உணவு வகைகள் சூடாக எடுத்துக் கொள்வது அவசியம். மசாலா வகை உணவுகள் மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகள் தான் இந்த காலத்துக்கு ஏற்றது. பருப்பு வகைகள், முட்டை, மிளகு சேர்த்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். பாலில் குறைந்தளவு சர்க்கரை மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் குடிப்பதன் மூலம் தொண்டை சார்ந்த பிரச்னைகள் குறையும்.

*இதேபோல் நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி சத்து உள்ள பழங்கள், காய்கள் சாப்பிட வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி, தக்காளி, முட்டைக்கோஸ், கேரட் உள்ளிட்ட சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சனி, ஜனவரி 21, 2012

என்றும் நலமுடன் வாழ என்ன செய்ய வேண்டும்?


நம் கருத்தைப் பிறர் மீது திணிக்கக் கூடாது. பிறர் கூறும் நல்ல கருத்துக்களை கேட்க வேண்டும்.பிறர் நம்மை நம்பும் படி நாம் நடந்து கொள்ள வேண்டும். 

மனதில் சாந்தி இருக்கும் பொழுது தான் ஆனந்தம் ஏற்படுகிறது. பணம் இருந்தும் அடக்கமாய் இருப்பவன் உயர்ந்தவன். பலம் இருந்தும் பொறுமையாய் மேலும்

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (247)  

பொருள்: பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகில் இன்பமான வாழ்க்கை இல்லாதது போல, அருள் இல்லாதவர்க்கு மேல் உலகத்து வாழ்வும் இல்லையாம்.

இன்றைய சிந்தனைக்கு

எஸ்தோனியப் பழமொழி 

கஷ்டப்பட்டாவது பாதிப்பணக்காரன் ஆகி விடுங்கள். பிறகு தானாக உங்களை இந்த உலகம் முழுப்பணக்காரன் ஆக்கி விடும்.  

தாரமும் குருவும் பகுதி - 5.9


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 5.9
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
இந்த எட்டு மணி விமானம் பறக்கும் சத்தத்தைக் கேட்டதும் யாருக்குப் பயம் வருகிறதோ இல்லையோ, மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 'கலக்கம்' அடைந்து விடுவார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பாணையோ(Bread), ரொட்டியையோ(சப்பாத்தி), புட்டையோ(பிட்டு) அப்படியோ போட்டுவிட்டு பசியுடன் பாடசாலையை நோக்கி 'திகில்' பிடித்தவர்களாக தெறித்து ஓடுவார்கள். காலப் போக்கில் ஒரு சில மாணவர்களுக்குக் காலையில் எட்டு மணிக் கப்பல் சத்தத்தைக் கேட்டதும் வயிற்றைக் கலக்கியதும் உண்டு.
அன்றும் வழமை போல எட்டு மணிக் கப்பல் பறக்கும் சத்தம் கேட்டதும் நானும் கலக்கம் அடைந்தேன். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த காலை உணவை(அது கஞ்சியா, ரொட்டியா என்பது நினைவில் இல்லை) அப்படியே வைத்துவிட்டு கையில் சிலேட்டை எடுத்துக் கொண்டு டீச்சர் வீட்டை நோக்கி ஓடினேன். டீச்சர் வீடு ஏறக்குறைய முக்கால் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. எனது பேர்த்தியாருக்கும், டீச்சருக்கும் இடையிலான 'வரலாற்று முக்கியத்துவம்' வாய்ந்த??? ஒப்பந்தம் யாதெனில் எட்டுமணிக் கப்பல் பறக்கும்போது(அதாவது சரியாக எட்டு மணிக்கு) நான் டீச்சர் வீட்டு வாசலில் நிற்க வேண்டும். டீச்சர் என்னையும் அழைத்துக் கொண்டு பாலர் பள்ளிக்குச் செல்வார் என்பதே ஒப்பந்தமாகும். அன்று நான் சிறிது தாமதம் ஆகி விட்டேன் என்பது எனக்குப் புரிந்திருக்கவில்லை, இருப்பினும் டீச்சர் என்னை விட்டுவிட்டுப் போய் விடக் கூடாது என்ற எண்ணத்தில் டீச்சர் வீட்டை நோக்கித் தலை தெறிக்க ஓடினேன். டீச்சர் வீட்டுப் படலை அடியில்(Gate) ஒரு அரை நிமிடம் நின்றிருப்பேன். டீச்சரைக் காணவில்லை. டீச்சர் புறப்பட்டுப் போய் இருப்பாவோ? என்று ஒரு சந்தேகமும் எழுந்தது. அவர்களின் வீட்டு வாசலுக்கு சென்று பார்க்கும் அளவுக்கு எனக்குத் 'துணிச்சல்' இல்லை. காரணம் டீச்சரின் பெற்றோர் ஒரு கறுப்பு+வெள்ளை நிறம் கலந்த ஒரு நாய் வளர்த்து வந்தார்கள். டீச்சர் மற்றும் டீச்சரின் பெற்றோர்களைப் போலவே அவர்கள் வளர்த்த நாயும் யாருக்கும் 'கெடுதல் செய்யாத' நாய் எனப் பின்னாளில் அறிந்து கொண்டேன். இருப்பினும் அவர்கள் அடிக்கடி கூறுகின்ற "அந்த நாய் கடிக்காது" என்ற உண்மையை நான் நம்புவதற்குத் தயாராக இருக்கவில்லை. எனக்கென்னமோ "உலகில் உள்ள அத்தனை நாய்களும் மனிதர்களைக் கடிக்கும்" என்பது என் மனதில் சிறு வயதில் பதிந்த 'அகராதி' ஆக இருந்தது.
மெதுவாகத் தயங்கித், தயங்கி "டீச்சர், டீச்சர்" என அழைத்தபடியே அவர்களின் வளவிற்குள் இறங்கி நடந்து, அவர்களின் வீட்டு வாசலை அடைந்தேன். வீட்டு வாசலில் அவர்களின் செல்ல 'நாய்' முன்னங் கால்களைத் தலையணை ஆக்கித் தூங்கிக் கொண்டிருந்தது. எனது சத்தத்தைக் கேட்டு அது விழிப்படைந்து விடக் கூடாது என 'இனிச்ச புளியடி முருகன், சரிவுப் பிள்ளையார்('சருகுப் பிள்ளையார்' திரிபடைந்து சரிவுப் பிள்ளையார் ஆனார்) போன்ற தெய்வங்களை வேண்டினேன். இருவருமே என்னைக் கைவிட்டார்கள். 'நைட் ஷிப்ட்' கண் விழித்துக் கடமை ஆற்றிய களைப்பில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த 'நாயனார்' கண் விழித்ததும் இல்லாமல், தலையைத் தூக்கி என்னை நோக்கி ஒரு அலட்சியப் பார்வையை வீசினார். என்னையும் ஒரு வேற்றுக் கிரகத்தில் வசிக்கும் 'பிராணி' என்று அது நினைத்துக் கொண்டதோ தெரியாது. மீண்டும் சுவாரஸ்யமாக உறங்கத் தொடங்கியது. அந்த நாய் என்னைக் கடித்துக் குதறப் போகிறது எனப் பயந்தபடி நின்றிருந்த எனக்குப் பலத்த ஆச்சரியம். உண்மையிலேயே அந்த நாய் கடிக்காது என்ற உறுதி மனதில் ஏற்பட்டது.
நான் சத்தமாகக் கூப்பிட்டதைக் கேட்டு வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த 'அமைதியும்,அன்பும் மனித உரு எடுத்தது' போன்ற தோற்றமுடைய டீச்சரின் தாயார் கூறிய பதில் எனக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தந்து. "டீச்சர் இப்ப தானப்பு போறா, ஓடிப் போன எண்டால் பிடிச்சிடுவ" என்ற பதில் என்னைத் திகைப்படையச் செய்தது. ஏனெனில் ஒவ்வொரு நாளும் டீச்சருடனேயே பள்ளிக்கூடம் போய் வந்த எனக்கு, ஒன்றரைக் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளிக் கூடத்தை எவ்வாறு சென்றடைவது என்பது தெரிந்திருக்கவில்லை. நான் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் டீச்சரைக் கண்டு பிடிக்க முடியுமா? என்ற கேள்வி மனதில் கனத்தது. ஏனைய தீவகக் கிராமங்களோடு ஒப்பிடுகையில் 'அல்லைப் பிட்டியில்' ஒழுங்கைகள் குறைவு. இருப்பினும் தன்னந் தனியே மூன்றாம் வட்டாரத்தில் இருக்கும் பாலர் பள்ளியை சென்றடைவது 'வாஸ்கோட காமாவின் ஆபிரிக்கப் பயணம்' போல எனக்குத் திகிலை ஊட்டியது. இருப்பினும் ஓரளவு துணிவை வரவழைத்துக் கொண்டு ஓடத் தொடங்கினேன்.
(இன்னும் சொல்வேன்)