ஞாயிறு, செப்டம்பர் 02, 2018

80 ஆவது அகவை வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா!
இலங்கை, திருகோணமலை மாவட்டம், 'அன்பு வழிபுரத்தில்' வசிக்கும் திருமதி இராமலிங்கம் சுந்தரா தேவி அவர்களின் 80 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ( 02.09.2018) சென்னையில் வசிக்கும் அவரது மூத்த மகன் கவிஞர். இரா.கெளரிநாதன் அவர்கள் புனைந்த வாழ்த்து மடல் :
 

அன்புள்ள அம்மாவுக்கு
அகவை எண்பதைக் காணும் 
அன்புள்ள அம்மாவிற்கு! 
முட்டும் விழி நீரை 
மையாய் விட்டு 
உங்கள் பாதம் தொட்டெழுதும் மடலிது.
அகவை எண்பதை - நீங்கள் 
காணும் நன்னாளில்
உங்கள் முதற் பிள்ளை; 
புலர் காலைப் பொழுதெழுந்து 
உங்கள் கால்கள் தொட்டு வணங்கிக்
கட்டியணைத்து முத்தமிட்டு 
"என்றும் என் அன்பிற்கினிய 
அம்மாவுக்கு எண்பதாவது
பிறந்த நாள் வாழ்த்துக்கள்"
என்றே நான் சொல்ல 
அருகே இல்லையென்ற 
உங்கள் மன வலியை
என் இதயம் உணரும். 
அந்த உணர்வினில்
மனம் கனத்து 
கண்கள் குளமாகி
விழி நீர் உருண்டு 
கன்னங்கள் தாண்டி - நிலம் 
பட்டுத் தெறிக்கும் - என் 
நெஞ்சக் கூட்டின் வெம்மை 
பெரு மூச்சாய்ப் பிறக்கும்.
சட்டென்ற கோபம் 
உங்கள் ஒரு குணம்
அதையும் பட்டென்று
மறப்பீர்கள் மறுகணம்.
நேர்மை, உண்மை, அன்பு, அறம்
இந்த நான்கும் தான்
நான் வணங்கும் என் 
தெய்வத்தாய் சுந்தரம்.
இருப்பதைக் கொண்டு 
சிறப்புடன் வாழக் கற்பித்த 
வாழ்வியற் புத்தகம் நீங்கள்.
மறந்திட முடியா என் 'தாய்'
கவிதையின் மையக் கரு நீங்கள்.
அறுபதுக்கு மேல் 
அகவை ஒவ்வொன்றும் 
ஆண்டவன் தரும் 'வெகுமதி' 
இருபதாவது தடவையும் 
ஆண்டவனிடம் வெகுமதி  
பெறும் எங்கள் அன்பின் 
சுந்தரி நீங்கள்.
உங்கள் பூட்டப் பிள்ளைகளின் 
நீராட்டு விழாவிலும் 
பூத்தூவி வாழ்த்த நீங்கள் 
இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும் 
என்று இறைவனை வேண்டி 
வாழ்த்தும் : 
அன்புத் தலைமகன்: ராசா / கெளரிநாதன் 
மருமகள்: கலா 
பேரன்: பிரியன் 
பேர்த்தி: யாழினி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக