ஞாயிறு, ஜூலை 10, 2011

தாரமும் குருவும் . பகுதி - 4.4

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 4.4
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நான் எழுதிய இத்தொடரின் பகுதி 4.2 இல் மேற்படி பாலர் பாடசாலையின் ஆசிரியையைப் பற்றிக் கூறுவதாக உறுதியளித்திருந்தேன். சரி, அவரது பெயரைக் கூற வேண்டும் அல்லவா? அதை மட்டும் நான் உங்களிடம் கூறப் போவதில்லை. காரணம் இருக்கிறது. ஏனெனில் அவரது வாழ்க்கையில் ஒரு சிறிய காலப் பகுதிக்குள் (ஏழு வருடங்களுக்குள்) வீசிய புயலைப் பற்றியும், எதிர்வரும் அத்தியாயங்களில் குறிப்பிடவேண்டியிருப்பதால் (புயல் என்று கூறுவதைவிட அவரது வாழ்க்கையைத் தூக்கிச் சுழற்றியடித்த 'ஆழிப்பேரலை' (சுனாமி) என்று கூறுவதே பொருத்தமாகும்) அவரது உண்மையான பெயரைக் குறிப்பிடுவதைத் தவிர்த்து விடுகிறேன்.அகர முதல எழுத்தை என் நாவிலும், மனத்திலும் ஆழமாகப் பதியவைத்த அந்தக் 'கலைவாணியின்' பெயரை உங்களிடம் கூறமுடியாத ஒரு நிலையில் நான் உள்ளேன். இப்போதைக்கு அவருடைய பெயர் 'கமலினி' என்று வைத்துக் கொள்வோம். 
எங்கள் கிராமத்தில் வாழ்ந்த அழகிகளில் அவர்தான் 'ஐஸ்வர்யாராய்' என்பேன் நான். அழகில் இக்காலத்து அசின், திரிஷா, நயன்தாராக்களெல்லாம் அவரிடம் 'பிச்சை வாங்கவேண்டும்'. சில எழுத்தாளர்கள் தங்களது 'இறந்த காலத்து' ஆசிரியைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது "கல்விக்கு அதிபதியான கலைமகள் போல் இருப்பார்", "கலைவாணி போல் முக வசீகரம்" என்றெல்லாம் குறிப்பிடுவதை அவதானித்திருக்கிறேன். ஆனாலும் 'கேரளத்து ஓவியர் ரவி வர்மா' வரைந்த எமது இந்துக் கடவுளர்களின் உருவங்களில் என்னை மிகவும் கவர்ந்தது செல்வத்திற்கு அதிபதியாகிய 'லட்சுமியின்' உருவம்தான். வாசகர்களில் இந்துக்கள் உங்கள் வீடுகளில் 'லட்சுமியின்' படம் இருந்தால் ஒரு தடவை நன்றாகப் பார்வையிடுங்கள் 'ரவி வர்மா' ஏனைய கடவுளர்களை வரைந்ததை விடவும், லட்சுமியை மிக மிக அழகாக வரைந்திருப்பார். லட்சுமியின் உருவத்தை வரைவதற்கு அதிக காலம் 'மினக்கெட்டிருப்பார் (மெனக்கெட்டு இருப்பார்) என்பது எனது அபிப்பிராயம் மெய்கண்டான் காலண்டரில் சரஸ்வதியின் படத்தையும், லட்சுமியின் படத்தையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி வரைந்திருப்பார்கள் என்பது வேறு விடயம்.
அதேபோல் செந்தாமரைப் பூவிலிருந்து நேரடியாக இறங்கிவந்து கிராமத்துப் பாலர் பாடசாலையில் பாடம் கற்பித்த ஒரு மகாலட்சுமிதான் எங்கள் 'கமலினி டீச்சர்' என்பது எனது அபிப்பிராயம். இது சிறிது முரண்பாடான கருத்தாக இருப்பினும் என் மனதின் கற்பனைச் சுதந்திரத்திற்கு எல்லைபோட என்னால் முடியாதே.
இவ்வாறு சிவப்பு நிறச் சேலையுடன் நடமாடும் 'லட்சுமியாக' அவரை நான் பிரமித்துப் பார்த்தாலும்கூட, நான் வளர்ந்தபின்னர் பாடசாலையில் சரஸ்வதிப் பூசை நடைபெறும் காலங்களில் யாராவது ஒரு மாணவன் அல்லது மாணவி பின்வரும் காளமேகப் புலவரின் பாடலைப் பாடுவார்கள்:


வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு 
வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள்-வெள்ளை 
அரியாசனத்தில் அரசரோடு என்னைச் 
சரியாசனம் வைத்த தாய். 

அவர்கள் மேற்படி பாடலைப் பாடும்போதெல்லாம் எனது நினைவில் என் பாலர் வகுப்பு ஆசிரியையாகிய கமலினி டீச்சர் அல்லது எனது மூன்றாம் வகுப்பு ஆசிரியை திருமதி.ந.வள்ளிநாயகி வந்து போவார்கள். சரி பாலர் வகுப்பு ஆசிரியை நினைவில் வருவதற்குக் காரணம் இருக்கிறது, ஆனால் வேறெந்த ஆசிரியரும் நினைவுக்கு வராமல் விசேடமாக மூன்றாம் வகுப்பு ஆசிரியை நினைவில் வருவதற்குக் காரணம் என்னவென்றா கேட்கிறீர்கள்?
நான் மூன்றாம் வகுப்பில் படிக்கும்போதே என்னை ஒரு 'பேச்சாளனாக' உருவாக்கி அழகுபார்த்தவர் இந்த 'வள்ளிநாயகி டீச்சர்'. இன்றுவரை நூற்றுக் கணக்கான மேடைகளில் (கூட்டங்களில், கலை நிகழ்ச்சிகளில், விழாக்களில், பட்டி மன்றங்களில்) பேசியிருப்பேன். ஐம்பது பேர் கலந்து கொண்ட விழா தொடக்கம், ஐயாயிரம் பேர் கலந்துகொண்ட விழா வரையில் பேசியிருப்பேன். ஒவ்வொரு தடவையும் 'ஒலிவாங்கியைக்' கையில் எடுக்கும்போதும் கமலினி டீச்சரையும், வள்ளிநாயகி டீச்சரையும் நன்றியுடன் நினைத்துக் கொள்வேன். விசேடமாக 'வள்ளி நாயகி டீச்சருக்கு' ஆத்மார்த்த ரீதியாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வேன். எந்தவித பொருளாதார பின்புலமும் இல்லாத ஒரு ஏழையின் பிள்ளையை ஒரு பேச்சாளனாக உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் எல்லா டீச்சர்களுக்கும் வருமா என்ன?
(இன்னும் சொல்வேன்)

11 கருத்துகள்:

Anu, USA சொன்னது…

She must be the perfect teacher. By the way it's interesting to read this true story with many info.

PALAN SWEDEN சொன்னது…

Super.

Chandran Swiss சொன்னது…

atumijana thoddar. parradukkal.

Arun Germany சொன்னது…

பள்ளிக்கூட நினைவு வருகிறது .

seetha சொன்னது…

ஆக்கத்தை தொடர்ந்து எழுதுங்கோ தாசன், நீங்கள் உங்கள் பாடசாலை நினைவை நினைத்து
எழுதுவதால் எங்களுக்கும் எம்மை படிப்பித்த அறிவு தந்த அந்த தெய்வங்களை நினைவு வரவைக்கிறிர்கள்
உங்களை படிபித்த அந்த கமலினி டீச்சர் அழகில் இலஷ்சுமி ஆனபடியால் தான் அவா நிறைய அடைந்து வாழவேண்டி இருந்தது கடவுள் அழகையும் மகிழ்சியையும் ஓரிடத்தில் கொடுப்பதில்லை

Ramanan DK சொன்னது…

படித்த பண்பும் அறிவும் அப்படித் தெரிகிறது . பாராட்டுகள் ,,,, பாராட்டுகள் .

Jananthan. DK சொன்னது…

இன்றுதான் உங்கள் தொடர் படித்தேன். மிகவும் சிறப்பாக உள்ளது . வாழ்த்துகள்.

vinothiny pathmanathan dk சொன்னது…

உங்கள் தொடரை படிக்கும் போது எனக்கு !"அ" எழுத சொல்லித் தந்த விமலா டீச்சர் இன் நினைவு வருகிறது . எனக்கு அவரை நினைக்கும் போது
அவர் எனக்கு எழுத்துக்களை மட்டும் கற்பிக்கவில்லை ,அதனுடன் தன் அன்பையும் சேர்த்து ,எனக்கு தமிழை ஊட்டி வளர்த்திருக்கிறார் . எனது ஆரம்பப் பள்ளியில் நான் அவரின் நெறியாள்கையில் பல நாடகங்களில் நடித்திருக்கிறேன். பல பேச்சுக்களில் கலந்து பரிசும் பெற்றிருக்கிறேன் ,பல தேவாரங்களை மனனமாக்கி பாடி பலரின் பாரட்டுக்களையும் பெற்றிருக்கிறேன். இன்று தமிழின் மீதும் தமிழ் மொழியின் மீதும் நான் கொண்ட எல்லையில்லாக் காதல் ,இதற்கெலாம் காரணாமாக இருந்த விமலா டீச்சர் என் மனதிலும் நினைவிலும் நிறைந்திருப்பவர். என்ன இன்று அவர் உயிருடன் இல்லை .நல்லவர்களை தான் இறைவன் நீண்ட நாட்கள் விட்டுவைப்பதிலையே .நன்றி தாசன் அவரின் இனிய நினைவுகளை மீண்டும் ஒருமுறை எனக்குள் கொண்டு வந்தமைக்கு. உங்கள் தொடர் மிக அருமையாக இருக்கிறது . அடுத்த தொகுப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .

Kavitha Denmark சொன்னது…

பாடசாலை நினைவுகள் மறகமுடியாத பசுமையான நினைவுகள் .

Amir UK சொன்னது…

There is so mucu better.

இ.சொ.லிங்கதாசன்.,டென்மார்க் சொன்னது…

கருத்துரை வழங்கி ஊக்குவித்த அனைத்து வாசகர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

கருத்துரையிடுக